http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 164

இதழ் 164
[ மே 2022 ]


இந்த இதழில்..
In this Issue..

கோலாட்டம்
கம்பன் மணியனான விக்கிரமசிங்க மூவேந்தவேளார்
நெடுங்களநாதர் கோயில் கல்வெட்டுகள்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 13 (வலிய காதல் வழிகிறதே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 12 (கொண்டல் விலக்காயோ கொண்டலே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 11 (என் நிலை உரைப்பார் யாரோ?)
இதழ் எண். 164 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 11 (என் நிலை உரைப்பார் யாரோ?)
ச. கமலக்கண்ணன்

பாடல் 11: என் நிலை உரைப்பார் யாரோ?

மூலப்பாடம்:

காஞ்சி எழுத்துருக்களில்
わたの原
八十島かけて
漕ぎ出でぬと
人には告げよ
あまのつり舟

கனா எழுத்துருக்களில்
わたのはら
やそしまかけて
こぎいでぬと
ひとにはつげよ
あまのつりぶね

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: அறிஞர் தக்காமுரா

காலம்: கி.பி. 802-853.

இத்தொகுப்பின் 7வது பாடலை இயற்றிய கவிஞர் நக்காமரோவைப் போலவே இவரும் சீனாவுக்குச் செல்லும் கலாச்சாரத் தூதுக்குழுவில் ஓர் அறிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சீன மொழியிலும் இவர் புலமை பெற்றிருந்தது இத்தேர்வுக்கு வழிகோலியது. இந்தத் தூதுக்குழுவுக்குத் தலைமை தாங்கியவர் ட்சுனேட்சுகு என்பவர். கி.பி 833ல் ட்சுனேட்சுகுவைத் தலைவராகக் கொண்டு பேரரசர் நின்ம்யோ அமைத்த குழுவில் 834ல் தக்காமுரா துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். எல்லாத்துறை அறிஞர்களும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு 836ல் சீனாவுக்குப் பயணம் துவங்குவதாகத் திட்டம். பயணம் துவங்க வேண்டிய நாளும் வந்தது. கித்தானோ என்ற இடத்திலிருந்த ஷிண்டோ மதக் கோயிலில் பயணம் வெற்றி பெறுவதற்கான வழிபாடுகளும் நடத்தி முடிக்கப்பட்டன. ஆனால் துறைமுகத்திலிருந்து கிளம்பிய தூதுக்குழு ஓரிரு நாட்களிலேயே திரும்பி வந்தன. மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தால் கப்பல் சேதமடைந்ததுதான் காரணம்.

அதன் பின்னர் குழு உறுப்பினர்கள் உற்சாகமிழந்து மீண்டும் சீனா செல்ல ஆர்வமின்றி இருந்தனர். தலைவர் ட்சுனேட்சுகு அனைவரையும் தேற்றி, உற்சாகப்படுத்தி மீண்டும் 838ல் தூதுக்குழுவின் பயணத்தைத் தொடங்கினார். இம்முறை நேரடியாகச் சீனாவுக்குச் செல்லாமல் கொரியாவுக்குச் சென்று அதிகத் தரம்வாய்ந்த கப்பலைப் பெற்றுக்கொண்டு சீனாவுக்குக் கிளம்பினர். 839ன் தொடக்கத்தில் குழு சீனாவை அடைந்தது. ஆனால் தக்காமுரா மட்டும் இல்லாமல். குழு உறுப்பினர்கள் எல்லோரையும் சமாதானப்படுத்திய தலைவரால் தக்காமுராவை மட்டும் எவ்வளவு முயன்றும் உடன் அழைத்துச் செல்லமுடியவில்லை. உடல்நிலை சரியில்லாததுபோல் நடித்து ஜப்பானிலேயே தங்கிவிட்டார். இதை அறிந்த முன்னாள் பேரரசர் சாகா கடுங்கோபம் கொண்டு இவரை ஒக்கி தீவுக்கு நாடுகடத்தினார். அப்போதுதான் நடுவழியில் யாராவது காப்பாற்ற மாட்டார்களா என ஏங்கி இப்பாடலை எழுதினார். அப்போது சாகா பேரரசராக இல்லாவிட்டாலும் தண்டனை விதிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருந்தார். சாகாவின் வரலாறு சுவாரசியமானது.

கி.பி 781 முதல் 806 வரை ஜப்பானை ஆண்ட பேரரசர் கன்முவின் இரண்டாவது மகன் சாகா. அரசர் இறந்தவுடன் அவரது முதல் மகன் ஹெய்செய் (1989 முதல் 2019 வரை ஜப்பானின் 125வது அரசராக இருந்த அகிஹிதோவைக் குறிக்கும் ஹெய்செய்க்கும் இவருக்கும் தொடர்பில்லை) அரியணை ஏறினார். ஆனால் அவர் நான்காவது ஆண்டிலேயே நோய்வாய்ப்பட்டார். இனிமேல் தான் பிழைக்கமாட்டோம் என நினைத்துத் தன் தம்பி சாகாவிடம் 809ல் பொறுப்பை ஒப்படைத்தார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் இவருக்கு உடல்நிலை சரியாயிற்று. ஆனால் சாகாவின் உடல்நிலை நலியத் தொடங்கியது. இதைப் பயன்படுத்தி ஆட்சியைத் திரும்பப் பெற விரும்பினார். சாகா அதற்குச் சம்மதிக்காமல் போகவே, அவரது மனைவி குசுகோவும் மைத்துனன் நகானாரியும் இணைந்து உள்நாட்டுக் கலவரத்தைத் தூண்டினார்கள். ஆனால் சாகா, தனது விசுவாசமிக்க படைத்தளபதி தமுராமரோ உதவியுடன் கலவரத்தை அடக்கினார். இந்தத் தமுராமரோ என்பவர் சாகாவின் மாற்றாந்தாய் ஹருகோவின் தந்தை ஆவார். குசுகோ விஷம் வைத்தும் நகானாரி மரணதண்டனை விதித்தும் கொல்லப்பட்டனர். 23 வயதில் அரசரான சாகா 37வது வயதில் அரசவாழ்வில் ஆர்வமிழந்து ஆட்சியைத் தனது தம்பி ஜுன்னாவிடம் ஒப்படைத்தார். 57வது வயதில் இறந்த சாகாவுக்கு 30 மனைவியர், 49 குழந்தைகள். இந்த 30 பேரில் தனது தந்தை கன்முவின் இன்னொரு மனைவி மதக்கோ எனும் மாற்றாந்தாயின் மகளான தகாட்சுவும் ஒருவர். இவரது மகள் செய்ஷி பின்னாளில் தனது சித்தப்பா பேரரசர் ஜுன்னாவை மணந்தார்.

பாடுபொருள்: சார்ந்தோருக்குத் துயரநிலையைத் தெரிவிக்கக் கோருதல்

பாடலின் பொருள்:

ஓ, மீனவப் படகுகளே! நான் தனிமையில் பெருங்கடலுக்குள் இருக்கும் தீவுக்கூட்டத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறேன் என்பதை ஊருக்குள் இருப்பவர்களிடம் தெரிவிப்பீர்களா?

சொல் அலங்காரங்கள் ஏதுமற்ற எளிமையான இப்பாடலின் பின்புலத்தை அறியாமல் இப்பாடலில் கையாளப்பட்டிருக்கும் சொற்களை மட்டும் வாசித்துப் பார்த்தால், இரண்டு விதமான பொருள்களைத் தரலாம். ஏதோ வீரதீரச் செயல் செய்யத் தனியாகக் கடலில் பயணம் செல்வதாக ஒரு பொருளும் பிரிவின் காரணமாகத் துயரக்கடலில் உழன்று கொண்டிருப்பதைக் காதலியிடம் சொல்லுமாறு இன்னொரு பொருளும் தொனிக்கும்.

இவர் பயணம் செய்த கப்பல் கிளம்பியது ஓசகாவின் நாம்பா துறைமுகத்திலிருந்து. தரைவழியே ஜப்பானைக் குறுக்காகக் கடந்து தொத்தோரிக்குச் சென்று அங்கிருந்து கப்பலில் சென்றால் விரைவாக அடைந்துவிடக்கூடிய ஒக்கி தீவுக்கூட்டத்துக்கு முழுக்க முழுக்கக் கடல்வழியே ஜப்பானின் தென்மேற்கு எல்லையைச் சுற்றிக்கொண்டு வந்துசேரச் சில மாதங்கள் ஆயின. எதற்காக இப்படிப்பட்ட பாதை தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது பேரரசர் சாகாவைத்தவிர யாருக்கும் தெரியவில்லை. எங்குக் கொண்டுசெல்லப்படுகிறார் என்பது தக்காமுராவுக்குத் தெரிவிக்கப்பட்டதா என்பதும் தெரியவில்லை. இந்தப்பாதை கீழே உள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது.



பின்கதை: இந்நிகழ்வுக்கு 2 ஆண்டுகளுக்குப் பின்னர் இவரது குற்றம் மன்னிக்கப்பட்டுச் சீனாவிலிருந்து வரும் வணிகக்கப்பல்களைச் சோதனையிடும் சுங்கச்சாவடியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

வெண்பா:

அலைகடல் மேவும் கயல்கொள் கலங்காள்
குலையா உறுதிகொள் நெஞ்சில் - கலையாத்
தனிமையும் சூழ்ந்து செலுத்தும் பரிசல்ப்
பயணம் உரையீரோ ஊர்க்கு

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

இக்கட்டுரை சொல்வனம் இதழில் 24-ஏப்ரல்-2022 அன்று வெளியானது.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.