![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 171
![]() இதழ் 171 [ செப்டம்பர் 2023 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
மூலப்பாடம்: காஞ்சி எழுத்துருக்களில் あひ見ての のちの心に くらぶれば 昔は物を 思はざりけり கனா எழுத்துருக்களில் あひみての のちのこころに くらぶれば むかしはものを おもはざりけり ஆசிரியர் குறிப்பு: பெயர்: புலவர் அட்சுததா காலம்: கி.பி. 906-943. பேரரசர் உதாவின் அரசவையில் அமைச்சராக இருந்த ஃபுஜிவாரா வம்சத்தைச் சேர்ந்த தொக்கிஹிரா என்பவரின் மூன்றாவது மகன் இவர். இசை வல்லுநரும் கூட. கட்டுமஸ்தான உடலமைப்பால் பல இளம்பெண்களைக் கவர்ந்த இவரது காதல் விளையாட்டுகள் "யமாதோவின் கதைகள்" மற்றும் அதன் சமகாலப் புதினங்களில் தலைகாட்டுகின்றன. ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 30 பாடல்கள் கொசென்ஷூ தொகுப்பிலும் இவரது தனிப்பாடல் திரட்டாகவும் இடம்பெற்றுள்ளன. காலத்தால் அழியாத 36 கவிஞர்கள் என ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் உள்ள காலத்தால் முற்பட்ட நிஷி ஹொங்கான்ஜி பட்டியலில் இடம்பெற்று இருப்பவர். 38 வயதிலேயே மரணத்தைத் தழுவினார். இத்தொடரின் 24வது செய்யுளான "செவ்விழையினும் உயர்ந்த செவ்விலை"யை இயற்றிய புலவர் மிச்சிஜானே ஃபுஜிவாரா வம்சத்தின் சதியால் இறந்த பிறகு ஆவியாகப் பல்வேறு அழிவுகளை ஏற்படுத்தினார் என்று பார்த்தோமல்லவா? இவரது மரணத்துக்கும் மிச்சிஜானேவின் ஆவிதான் காரணம் என்று மக்கள் நம்பினார்கள். பாடுபொருள்: பழைய நினைவுகளை மறக்கச் செய்யும் காதல் பாடலின் பொருள்: உன்னைப்போல் ஒரு பெண்ணைச் சந்திக்கத்தான் இத்தனை காலம் ஏங்கியிருந்தேன். நேற்று உன் அன்பில் மூழ்கியபின் என் கடந்தகால நினைவுகள் மனதைவிட்டு அகன்றுவிட்டன. ஜப்பானின் இடைக்கால வரலாற்றில் காதலிக்கும்போது சில வழக்கங்களைக் கடைபிடிக்கவேண்டும் எனப் பார்த்தோமல்லவா? அவற்றில் ஒன்றுதான் தலைவனும் தலைவியும் முதன்முதலில் ஓரிரவு கூடிக் களித்தபின் மறுநாள் காலை காதலைத் தெரிவித்துக் கடிதம் அனுப்புவது. அவ்வாறு அனுப்பாவிட்டால் அது கண்ணியமற்ற செயலாகக் கருதப்பட்டு வந்தது. அக்காலத்தில் பெண்கள்தான் பெரும்பாலும் இத்தகைய கடிதத்தை அனுப்பி வந்திருக்கிறார்கள். கூடலுக்குப்பின் ஆண்களின் காதல் குறையத் தொடங்கியதாலா என்று தெரியவில்லை. இப்பாடலைத் தன்னுடன் இருந்த பெண்ணுக்கு அட்சுததா கடிதமாக அனுப்பியிருக்கிறார். அட்சுததாவுக்குப் பல காதல்கள் இருந்ததாக "யமாதோவின் கதைகள்" குறிப்பிடுகிறது. இந்தப் பெண்ணின் வரவால் பழைய நினைவுகள் மனதைவிட்டு அகன்றுவிட்டன என்று மட்டுமே பாடலில் இருப்பதால் உரையாசிரியர்கள் இருவிதமாகப் பொருள் கொள்கிறார்கள். முந்தைய காதல்கள் யாவும் மறக்கப்பட்டுவிட்டன என்றும் இவர்போன்ற ஒரு பெண்ணைச் சந்திக்கக் காத்திருந்த காலத்தில் ஏற்பட்ட இன்னல்களை இக்காதல் மறக்கச் செய்துவிட்டது என்றும் கூறுகிறார்கள். இரண்டையும் இணைத்துப் பார்த்தால், இவர்போன்ற ஒரு பெண்ணைத்தான் தனது முந்தைய காதலிகளிடம் தேடித் தோற்றுப்போய் இன்னல்களை அனுபவித்தாரோ என்றும் தோன்றுகிறது. வெண்பா: உண்டு உயிர்த்ததுன் காதலைத் தேடியே கண்டு விதிர்த்ததும் சாயலது - வேண்டியே துன்பமிகு சோர்வுறு எண்ணமும் எல்லாம் மறக்கவே செய்ததுன் அன்பு (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |