![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 178
![]() இதழ் 178 [ ஜூன் 2024 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
மூலப்பாடம்: கான்ஜி எழுத்துருக்களில் 音にきく たかしの浜の あだ波は かけじや袖の ぬれもこそすれ கனா எழுத்துருக்களில் おとにきく たかしのはまの あだなみは かけじやそでの ぬれもこそすれ ஆசிரியர் குறிப்பு: பெயர்: சேடிப்பெண் கீ காலம்: காலம் தெரியவில்லை. கி.பி. 1102ல் இவருக்கு சுமார் 70-72 வயது. பேரரசர் கோ-சுஜாக்குவின் பட்டத்தரசிக்கும் பின்னர் அவர்களின் மூத்த மகளுக்கும் அந்தரங்கப் பணிப்பெண் மற்றும் ஆலோசகராக இருந்தார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 31 பாடல்களும் இவரது பெயரிலேயே ஒரு தனிப்பாடல் திரட்டும் இடம்பெற்றிருக்கின்றன. பாடுபொருள்: காதலரின் சொற்களை நம்பாமை பாடலின் பொருள்: உன் காதல்மொழிகள் எல்லாம் கரைக்கு வந்து மீண்டுவிடும் இந்தக் கடலலைகளுக்கு ஒப்பானவை என்பதால் பின்னர் வருந்த விரும்பவில்லை. அழகானதொரு சிலேடைப்பாடல். இப்பாடல் இயற்றப்பட்ட பின்புலமும் மிகச் சுவையானது. முன்பு இத்தொடரின் சில பாடல்கள் அரண்மனைகளிலும் அரங்குகளிலும் நடைபெற்ற கவிதைப்போட்டிகளில் இயற்றப்பட்டவன் எனக் கண்டோமல்லவா? இதுவும் அத்தகையதொரு போட்டியில் இயற்றப்பட்டதுதான். இரு எதிர்பாலினக் கவிஞர்களை ஓர் இணையாக வகுத்து ஆளுக்கொரு காதல் கடிதத்தைக் கவிதையாகத் தீட்டவேண்டும். முதலாமவரின் கடிதத்துக்கு இரண்டாமவரின் கவிதை பதிலாக அமையவேண்டும். கி.பி. 1102ல் பேரரசர் ஹொரிகவாவின் அரண்மனையில் நடைபெற்ற இப்போட்டியின்போது ஓர் அணியாகப் பங்குபெற்றவர்கள் 70-72 வயது நிரம்பிய இப்பாடலாசிரியரும் இத்தொடரைத் தொகுத்த சதாய்யேவின் தாத்தா தொஷிததாவும். அப்போது தொஷிததாவுக்கு வயது 29. "இவ்வூரில் யாருக்கும் தெரியாமல் உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன். இக்கடற்கரைக்கு இரவில் வந்துபோகும் கடலலைகள் போல உன்னுடன் இரவுகளில் பேச விரும்புகிறேன்" என்பது தொஷிததாவின் கவிதை. இதற்கு மறுமொழியாக கீ எழுதிய பாடல் இரட்டைப் பொருள் பொதிந்தது. நேரடிப்பொருளானது "கடலலைக்கு மிக அருகில் நெருங்கினால் என் மேல்சட்டையின் கைப்பகுதி நனைந்துவிடும்; எனவே எச்சரிக்கையாக இருக்கிறேன்" என்பதாகும். இதன் மறைமுகப்பொருளானது "உன் சொற்களை முழுமையாக நம்பினால் பின்னர் நீ கைவிட்டபின் நான் அழுது அழுது என் மேல்சட்டையின் கைப்பகுதி நனைந்துவிடும்" என்பது. இடைக்கால ஜப்பானிய இலக்கியங்களில் சட்டையின் கைப்பகுதி நனைவது காதலரின் பிரிவால் வாடும்போது உகுக்கும் கண்ணீரை உணர்த்துவது என்றும் அரண்மனைக் காதல்கள் எல்லாம் குறுகிய வாழ்வை உடையவை என்றும் பார்த்தோமல்லவா? போட்டிப்பாடல் பாடியவர் தனது செயலுக்குக் கடலலையை உவமையாகக் காட்டியதால் இவரும் இப்பாடலில் அத்தகைய பிரிவைக் கடற்கரையில் உடையை நனைக்கும் அலையுடன் இணைத்துப் பாடியிருக்கிறார். ஜப்பானில் சில கடற்கரைகளில் ஓர் இயற்கை விநோதத்தைப் பார்க்கலாம். பகலில் உள்வாங்கியிருக்கும் கடலின் நீர் மாலை நேரத்துக்குப்பின் கரைவரை நிறையும். பின்னர் அடுத்தநாள் காலை திரும்பவும் உள்வாங்கிவிடும். அதனால்தான் தொஷிததாவின் கவிதையில் இரவில் கரைக்கு வரும் அலைகள் போல இரவில் உன்னுடன் பேசவிரும்புகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். வெண்பா: இரவினில் கூடும் திரையதைப் போன்றே அருகினில் பேசிடும் நும்மின் - பிரிவினில் கொள்ளும் வருத்தமது கைவிட எந்தன் மனமது கொள்ளும் தெளிவு (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |