![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 178
![]() இதழ் 178 [ ஜூன் 2024 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
மூலப்பாடம்: கான்ஜி எழுத்துருக்களில் 憂かりける 人を初瀬の 山おろしよ はげしかれとは 祈らぬものを கனா எழுத்துருக்களில் うかりける ひとをはつせの やまおろしよ はげしかれとは いのらぬものを ஆசிரியர் குறிப்பு: பெயர்: புலவர் தொஷியோரி காலம்: கி.பி 1055-1129. இத்தொடரின் 71வது பாடலை இயற்றிய ட்சுனேனொபுவின் மகன். கவிதைகளை நேசித்த பேரரசர் ஹொரிகவாவின் அரண்மனையில் அரசவைப் புலவராக இருந்தார். இவரது புலமையைக் கண்டு ஹொரிகவாவின் தந்தை பேரரசர் ஷிராகவா சமகாலத்திய பாடல்களைத் தொகுக்குமாறு கூறினார். அதற்கேற்ப இவர் தொகுத்ததுதான் கின்யோஷு தொகுப்பு. இது தவிரத் தன்னார்வத்தால் தொஷியோரி ஜுய்னோ என்றொரு தனிப்பாடல் திரட்டையும் தொகுத்தார். அதுவரை இயற்றப்பட்டு வந்த பாவகைகளிலிருந்து மாறிப் புதிய பாவகையை இவர் அறிமுகப்படுத்தியபோது சமகாலத்திய புலவரான மொத்தோதொஷியால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு அறிஞர்களிடையே விவாதப் பொருளானது. இருப்பினும் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பல பாடல்கள் அவ்வகையில் இயற்றப்பட்டன. ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 210 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பாடுபொருள்: கேட்ட வரம் கிடைக்காமல் வருந்துதல் பாடலின் பொருள்: என் காதலி என்னிடம் அன்பாக இருக்க உன்னிடம் வேண்டினேன். ஆனால் இந்த ஹட்சுசே மலையில் வீசும் குளிர்காற்று அதிகரித்துக்கொண்டே வருவதுபோல் அவளது வெறுப்புதான் அதிகரித்து வருகிறது. இன்றைய நரா மாகாணத்தில் ஹசேதெரா என்றொரு புகழ்பெற்ற கோயில் உள்ளது. இதில் புத்த மதத்தின் ஒரு பிரிவான ஷிங்கோன் பிரிவின் தலைவரான போதிசத்துவரின் 11தலைச் சிற்பம் உள்ளது. ஜப்பானில் போதிசத்துவர் இடுக்கண் வருங்கால் காக்கும் கடவுளாக நம்பப்பட்டவர். அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த பிற கோயில்களைவிட இக்கோயில் அற்புதங்களை நிகழ்த்தவல்லது என ஜப்பானியர்கள் நம்பினர். இப்பாடலின் ஆசிரியர் முன்பு தனது காதலியின் வெறுப்பைக் குறைக்கப் போதிசத்துவரிடம் வேண்டியிருக்கிறார். ஆனால் அது குறையாமல் வளர்ந்துகொண்டே வருவதைக்கண்டு அடுத்தமுறை இக்கோயிலுக்கு வந்தபோது இப்பாடலை இயற்றினார். வளர்ந்துகொண்டே வரும் காதலியின் கோபத்தை அதிகரித்துவரும் மலைக்காற்றுடன் ஒப்பிட்டுள்ளார். வெண்பா: மலையினில் வீசும் வளியின் எதிராய்ச் சிலையவள் சீற்றம் தணிய - நிலையுதல் வேண்டியே வந்தனன் உன்னிடம் ஆயினும் மாறிற்றே கேட்ட வரம் நிலையுதல் - நிலைமை சீரடைதல் (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |