![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 43
![]() இதழ் 43 [ ஜனவரி 16 - பிப்ரவரி 17, 2008 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர்க் கிள்ளுக்கோட்டைச் சாலையில் கீரனூரிலிருந்து ஏறத்தாழப் பத்தொன்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மலையடிப்பட்டி. திருச்சிராப்பள்ளித் தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் அசூர் வரை பயணித்து, அங்கிருந்து குறுக்குச் சாலை வழியாகவும் மலையடிப்பட்டி அடையலாம். மலையடிப்பட்டி, குன்றுகள் குவிந்த ஒரு குக்கிராமம். ஊரின் ஒதுக்குப்புறத்தே உள்ள இக்குன்றுகளுள் ஒன்றில்தான் ஒளிபதிவிஷ்ணு கிருகம் என்னும் விஷ்ணு குடைவரையும் ஆலத்தூர்த்தளி எனும் சிவன் குடைவரையும் உள்ளன. பிற்பல்லவர் காலக் குடைவரைகளான இவற்றை மீளாய்வு செய்யச் சென்ற நிலையில்தான் புதிய கல்வெட்டொன்று பார்வைக்குச் சிக்கியது.
மலையடிப்பட்டியில் குடைவரைகளுடன், படுக்கைகளுடன் அமைந்த இரண்டு குகைத்தளங்களும் உள்ளன. அவற்றுள் ஒன்றிலிருந்து, 'கறையூர் ஆலங்காரிக்குப் பிச்சும் பிராந்தும் அமனி' என, ஏழாம் நூற்றாண்டு எழுத்தமைதியில் அமைந்த தமிழ்க் கல்வெட்டொன்றை 1993ல் கண்டறிந்து வெளிப்படுத்தியிருந்தோம். அந்தக் கல்வெட்டுள்ள குகைத்தளக் கூரையில் இம்முறை கோட்டோவியம் போல் செதுக்கப்பட்டிருந்த ஆண் வடிவம் ஒன்றைக் கண்டறிந்தோம். நெல்வேலி மாவட்டம் ஆண்டிச்சிப்பாறைக் குடைவரைக் கருவறைச் சுவரில் உள்ளது போன்றே, இச்சிற்பமும் கோட்டுச் செதுக்கலாய் அமைந்திருந்தது. தோலாடை அணிந்த ஆடவரின் இடக்கையில் உருள்பெருந்தடி. அதைத் தோளில் சாய்த்தபடி வலக்கையை நீட்டியவாறு தலையில் சிறுமகுடத்துடன் காட்சியளிக்கிறார். வியப்பூட்டிய இந்தக் கோட்டுருவச் செதுக்கல் ஆய்வுக்குரியது. இந்தச் சிற்பச் செதுக்கலைப் பார்த்துவிட்டு வரும் வழியில்தான் பாறையொன்றின் மேற்பரப்பில் அந்தப் புதிய கல்வெட்டுப் பார்வைக்குக் கிடைத்தது. 'ஸ்ரீகைக்கட்டி' என்றமைந்துள்ள அந்தத் தமிழ்க் கல்வெட்டு, கி. பி. எட்டாம் நூற்றாண்டு எழுத்தமைதியில் உள்ளது. 'பணிவு', 'அடக்கம்' எனும் பண்புநலன்களைச் சுட்டும் இந்தச் சொல்லுக்குக் கையணி என்றும் பொருள் உண்டு. பணிவும் அடக்கமும் பண்புகளாய்ப் பெற்று வாழ்ந்த மன்னர் ஒருவருடைய விருதுப்பெயராக எடுத்துக்கொள்ளத்தக்க இந்தச் சொல், தமிழ்நாட்டுப் பழங் குடைவரைகளிலுள்ள சில சிற்பங்களின் பணிவான தோற்ற அமைதியோடு ஒப்பிட்டு நோக்கத்தக்கதாய் உள்ளமை குறிப்பிடத்தக்கது. மெய்யம் மகாதேவர் குடைவரை, குன்றாண்டார்கோயில் குடைவரை இவற்றிலுள்ள கருவறை வாயில் அடியவர் சிற்பங்களை இந்தப் பெயர் கொண்டு அழைக்கமுடியும். அவர்தம் தோற்றம் அத்தகையது. சீனிவாசநல்லூர்க் குரங்கநாதர் கோயிலிலும் இத்தகு சிற்பமொன்றைச் சோழர்ப் பணியாகக் காணமுடிகிறது. 'பல பாடி' என்றெல்லாம் விருதுப் பெயர்களைச் சூடிக்கொண்ட மன்னர்கள் வாழ்ந்த இந்த நாட்டில், ஆன்றவிந்தடங்கிய தன்மையைத் தெரிவிக்கக் 'கைக்கட்டி' என்ற பெயரில் ஒரு விருதினை ஏன் ஒரு மன்னர் பெற்றிருக்கக் கூடாது? இந்த விருதுக் கல்வெட்டு முத்தரையர் பகுதியான மலையடிப்பட்டியில் கிடைத்திருப்பதால், கல்வெட்டுக் குறிக்கும் 'கைக்கட்டி' முத்தரைய ஏந்தலாக இருக்க பெருவாய்ப்புண்டு. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |