http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 48

இதழ் 48
[ ஜூன் 16 - ஜூலை 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

வரலாறு.காம் அழைக்கிறது
எப்பாடு பட்டாகிலும்!
தண்ணியடிக்கும் கலை
திரும்பிப் பார்க்கிறோம் - 20
அவர் - இரண்டாம் பாகம்
செல்வம் தந்த மூதேவி
ஓடி விளையாடு கிளிமகளே! தமிழ் மகளே!
இதுவா? அதுவா?
இதழ் எண். 48 > இலக்கியச் சுவை
இதுவா? அதுவா?
இரா. கலைக்கோவன்


காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் கண்களில் இதுவா, அதுவா எனத் தேர்ந்தெடுக்க முடியாமல் தடுமாறிய தலைவன் ஒருவன் தென்பட்டான். அவ்வளவுதான், அவன் அலையாட்டத்தையே ஓர் அகப்பாடலாக்கிவிட்டார் (அகம். 123).

அழகான இல்லாள். இல்லத்தை ஆள்பவள். அதனால் இல்லாள். இல்லாதவள் அல்லள். அதனால்தான் அவள்மீது பித்தாகி இருந்தான் அவன். அவள் கருங்கூந்தலை வருடியவாறே அவளுடன் தங்கி மகிழ்வதினும் இன்பம் வேறில்லை என்றும் அவள் தரும் சுகமே வாழ்க்கையின் முழுப் பொருள் என்றும் வாழ்ந்திருந்தான் அவன். வாழ்க்கைக்கு வருடலும் வனப்பும் மட்டும் போதுமா? பொருளும் வேண்டுமே! இருப்பது கரைந்தால் வறுமை சூழுமே என்ற கவலையும் அவ்வப்போது அவனை வாட்டத்தான் செய்தது.

உண்ணாதிருப்பதால் வாடிய வயிறும் நீராடுதல் இல்லாமையால் தூசுபடிந்த உடலும் கொண்ட தவத்தினர் போல மலைகள் சூழ்ந்த சிறு வழிகளில் செல்லும் யானைக் கூட்டத்தால் அழகிழக்கும் குன்றம் தாண்டியல்லவா பொருளீட்டப் போகவேண்டும். அப்படிப் பொருளீட்டச் செல்லத் துணிந்தால் அவளையல்லவா பிரியவேண்டும்.

பொருளில்லையேல் வறுமை, அதை ஈட்டப் புறப்பட்டாலோ அவளைப் பிரிதல் என்னும் கொடுமை! 'வறுமையா? பிரிதலா? சொல் நெஞ்சமே, ஏதாவது ஒன்றுதானே அமையும். இதுவா, அதுவா? தேர்ந்துகொள்ள மாட்டாயா?' என்று தவித்தான் அவன். காரிக்கண்ணனாருக்கு அவன் தவிப்புப் புரிந்தது. 'இதுவா, அதுவா?' என்ற அந்தச் சூழலுக்கு அவருடைய கவிதை நெஞ்சம் உவமை தேடியது. தேடலில் வந்த விழுந்தது தெவிட்டாத தமிழ்நாட்டு வரலாறு.

சோழர்கள் பெரும்படையினர். பல திசைகளிலும் சென்று பகைவரை வென்று பொருள் கொணர்ந்து தாய்நாட்டு மக்களை வளமாக வாழவைத்த அப்படையினர் நிலவென மின்னும் கூரிய வேல்களையும் கரிய மேகங்களைப் போன்ற கேடயங்களையும் கொண்ட பேராண்மையினர். அவர்களை வாழ வைக்கும் ஆறு காவிரி. அது கடல் தீண்டும் துறையோ ஓடத்தைச் செலுத்தும் நீண்ட கோல் மறையும் அளவு ஆழம் கொண்டது. அந்த வளமான ஆழ்துறையின் கண்ணே, இறால் மீன்களை அள்ளி வந்து இறைக்கும் கடல், துறையாடும் காதலர்கள் களைந்து வீசிய மாலைகளை அள்ளிப் போகிறது. வருவதும் போவதுமாய் அதன் அலைகள் நிற்பதே இல்லை. கொணர்வதும் கொள்வதுமாய் நிகழும் இந்த அலையாட்டம் போலன்றோ, அந்தக் காதலன் நெஞ்சமும் பொருள் தேடிப் போவதா அல்லது அன்புப் பேதையுடன் இருப்பதா என்று அலைபாய்கிறது!

காரிக்கண்ணனார் காதல் கண்ணனார் மட்டுமல்லர்; வரலாற்றுக் கண்ணரும்கூட.




அகம் 123.

திணை : பாலை
ஆசிரியர் : காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார்


உண்ணாமையின் உயங்கிய மருங்கின்
ஆடாப் படிவத்து ஆன்றோர் போல,
வரை செறி சிறு நெறி நிரைபுடன் செல்லும்
கான யானை கவின் அழி குன்றம்
இறந்து, பொருள் தருதலும் ஆற்றாய்; சிறந்த
சில் ஐங் கூந்தல் நல் அகம் பொருந்தி
ஒழியின், வறுமை அஞ்சுதி; அழிதகவு
உடைமதி வாழிய, நெஞ்சே! நிலவு என
நெய் கனி நெடு வேல் எஃகின் இமைக்கும்
மழை மருள் பல் தோல் மா வண் சோழர்
கழை மாய் காவிரிக் கடல் மண்டு பெருந் துறை,
இறவொடு வந்து கோதையொடு பெயரும்
பெருங் கடல் ஓதம் போல,
ஒன்றில் கொள்ளாய், சென்று தரு பொருட்கே.



this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.