http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 114

இதழ் 114
[ டிசம்பர் 2014 ]


இந்த இதழில்..
In this Issue..

ஓவியம்
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 8
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 8
Makeup of Dancers from Sangam Age to Cholas
தலைச்சங்காடு தட்சிணபுரீசுவரர்
தேடலில் தெறித்தவை - 18
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 7
திருப்பணியை எதிர்நோக்கும் சோழர்காலத் திருக்கோயில்
இராமாயணக் காற்று
இதழ் எண். 114 > கலையும் ஆய்வும்
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 7
கோகுல் சேஷாத்ரி
கடல் கடைந்த வாலி

மேரு பர்வதத்தை மத்தாகவும் வாசுகி எனும் நாகத்தைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து கடைந்ததையும் அந்தக் கடைசலின் பயனாக அமிழ்தம் முதலான பல்வேறு தெய்விகப் பொருட்கள் கடலினின்றும் தோன்றியதையும் ஸ்ரீமத் பாகவதம், மகாபாரதம், விஷ்ணு புராணம் முதலான புராணங்களில் படித்திருக்கிறோம். இச்செய்தி ஆய்ச்சியர் கூற்று வாயிலாகச் சிலப்பதிகாரத்திலும் வெளிப்படுகிறது. (வடவரையை மத்தாக்கி வாசுகிய நாணாக்கி..)



ஆனால் இந்த தேவாசுரக் கடைசலினால் அமிழ்தம் உண்டாகவில்லையாம்! தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையமுடியாமல் அலுத்துக் களைத்துப் போயிருந்த நேரத்தில் பெருவீரனும் இந்திரன் மகனுமாகிய வாலி அங்கு போய்ச்சேர, அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி இரண்டு சாராரையும் விலக்கி விட்டு தனியொருவனாகக் வாலிதான் கடலையே கடைந்தானாம்! அதன் பிறகுதான் அமிழ்தமே தோன்றியதாம்! வேறு எந்தப் புராணங்களிலும் இடம்பெறாத இந்த அரிய செய்தியை அனுமன் வாய்மொழியாக நமக்கு அறிவிப்பவர் கம்ப நாட்டாழ்வார்.

கிஷ்கிந்தா காண்டம் நட்புகோட் படலத்தில் சுக்ரீவன் வசிக்கும் பூஞ்சோலைக்கு இராம இலக்குவணர்களைக் கொண்டு வந்து சேர்க்கிறான் அனுமன். அங்கு மனைவியின்றித் தனியனாக சுக்ரீவன் தன்னை வரவேற்று உபசரிப்பதைக் கவனிக்கும் இராமபிரான், சிரம பரிகாரங்கள் முடிந்தபின் சுக்ரீவனைப் பார்த்து ‘நீயும் என்போல் இல்லறத்திற்குரிய இனிய மனைவியைப் பிரிந்து துன்பப் படுகிறாயோ? என்று அன்புடன் வினவுகிறான்.

இதற்கு சுக்ரீவன் பதில் கூறினால் அத்துணை சிறப்பாக இருக்காது என்பதை உணரும் அனுமன், உடனே எழுந்து நின்று வணங்கி ‘நான் தங்களுக்கு ஒரு பழைய வரலாற்றைக் கூறவேண்டும்’ என்று கூறி சுக்ரீவனின் தமையனும் கிஷ்கிந்தையின் அரசனும் சிறந்த சிவபக்தனுமாகிய வாலியைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறான். கம்ப இராமாயணத்தில் வாலி எனும் பாத்திரம் அறிமுகமாவது இந்தப் பாடல்களின் வழிதான் என்பதால் அனுமன் வாய்மொழியாக வாலியின் பல்வேறு வீரச் செயல்களையும் அவனுக்கும் சுக்ரீவனுக்கும் பிரச்சனை மூண்ட வரலாற்றையும் இருபத்தொன்பது கவிகளில் விரிவாக எடுத்துரைக்கிறார் கம்பர். இப்பாடல்களுள் முதலாவதாக இடம் பெறுவது வாலி கடல் கடைந்த வரலாறுதான்!

'நாலு வேதம் ஆம் நவை இல் ஆர்கலி
வேலி அன்னவன், மலையின் மேல் உளான்,
சூலிதன் அருள் துறையின் முற்றினான்,
வாலி என்று உளான், வரம்பு இல் ஆற்றலான்; 37

'கழறு தேவரோடு, அவுணர் கண்ணின் நின்று,
உழலும் மந்தரத்து உருவு தேய, முன்,
அழலும் கோள் அரா அகடு தீ விட,
சுழலும் வேலையைக் கடையும் தோளினான்; 38

(கிஷ்கிந்தா காண்டம் - நட்புகோட் படலம்)

கம்பர் குறிப்பிடும் இப்புராணச் செய்தி வால்மீகி இராமாயணத்தில் இல்லை என்பதைக் குறிப்பிடும் உரையாசிரியர் திரு.வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார், இதே புராணச் செய்தி கம்பராமாயணத்தில் பிரிதோரிடத்திலும் ஒட்டக்கூத்தரின் உத்தர இராமாயணத்திலும் இடம்பெறுவதைச் சுட்டிக் காட்டுகிறார்.

“மற்று,அவன் முன்னோன் வாலி; இராவணன் வலிதன் வாலின்
இற்று உகக்கட்டி, எட்டுத் திசையினும் எழுந்துபாய்ந்த
வெற்றியன்;தேவர் வேண்ட, வேலையை, விலங்கல்மத்தில்
சுற்றிய நாகம்தேய, அமுது எழ, கடைந்த தோளான்.”

(சுந்தர காண்டம்)

“கடலைச் சுராசுரர்க் கமிழ்தெழக் கடைந்த வீரியன்”

(ஒட்டக்கூத்தர் - உத்தர காண்டம்)

கம்பர் இரு இடங்களிலும் ஒட்டக்கூத்தர் ஓரிடத்திலும் இதனைக் குறிப்பிடுவதிலிருந்து இப்புராண வரலாறு அக்காலத் தமிழகத்தில் பெருவழக்காக நிலவி வந்தது புலனாகின்றது.

கம்ப இராமாயணத்திலும் இதர பக்தி இலக்கியங்களிலும் வாலிக்குக் கொடுக்கப்படும் சிறப்பிடத்தையும் சோழர்கால இராமாயணச் சிற்பங்களில் வாலிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தையும் இணைத்து நோக்கும்போது வாலியெனும் வானர வீரனுக்கு இந்த மண்ணில் இருந்த செல்வாக்கு இனிதே புலனாகின்றது.

இந்த செல்வாக்கிற்கான காரணங்கள் என்ன? வாலிக்கும் தமிழகத்திற்கும் அப்படி என்ன தொடர்பு? என்பதே ஆய்வுப்பாதை எழுப்பும் அடுத்தடுத்த கேள்விகள்.this is txt file�
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.