http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 124

இதழ் 124
[ அக்டோபர் 2015 ]


இந்த இதழில்..
In this Issue..

வரலாறு வெள்ளி இதழ் வெளியீட்டு விழா - அழைப்பிதழ்
திருச்சிராப்பள்ளி மாவட்டக் கோயிற் கட்டடக்கலை (பொ. கா. 500-1300)
சிராப்பள்ளி தொட்டியம் சாலையில் சில கண்டுபிடிப்புகள்-7
அன்பில் ஆய்வும் புதிய கண்டுபிடிப்புகளும்
விஜயநகரக் கலைச்சிறப்பு மிக்க அய்யங்கார் குளம்
கான மயிலாட!
இதழ் எண். 124 > கலையும் ஆய்வும்
விஜயநகரக் கலைச்சிறப்பு மிக்க அய்யங்கார் குளம்
கி.ஸ்ரீதரன்
தமிழகத்தில் விஜயநகர மன்னர்கள் ஆட்சியின்போது கலையழகு மிக்க மண்டபங்கள், சிற்பங்களுடன் பல கோயில்கள் கட்டப்பட்டன. அத்தகைய கோயில்களில் ஒன்று சஞ்சீவிராயர் கோயிலாகும்.

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் 5 கி.மீ தொலைவில் பாலாற்றைத் தாண்டியதும் இவ்வூர் அமைந்துள்ளது.

இவ்வூரில் உள்ள ஏரியின் கரையில் திருக்கோயில் அமைந்துள்ளது. கருவறையில் ஆஞ்சநேயர் வணங்கும் கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இமயமலையிலிருந்து அனுமன் சஞ்சீவியைக் கொண்டுவரும்போது இங்கு சிறிது நேரம் தங்கியதால் "சஞ்சீவிராயர் கோயில்" என அழைக்கப்படுவதாகப் புராணங்கள் கூறுகின்றன.

விஜயநகர மன்னன் வேங்கடராயரின் (1586-1614) இராஜகுருவாக விளங்கிய லட்சுமி குமார தாத்தாச்சாரியாரால் 1597-ல் இக்கோயில் கட்டப்பட்டதை இக்கோயிலில் காணும் கல்வெட்டால் அறியமுடிகிறது. அநுமனுக்காக எடுக்கப்பட்ட தனிக்கோயில் என்ற சிறப்புடன் விளங்குகிறது. கோயிலுக்கு எதிரில் உள்ள ஏரி "தாதசமுத்திரம்" என்று குறிப்பிடப்படுகிறது. விஜயநகர காலக் கல்வெட்டுகளில் பொதுவாக ஏரிகளைச் "சமுத்திரம்" என்று குறிப்பிடுவதைக் காணலாம்.




தாத்தாச்சாரியார் புண்ணியகோடி விமானம் பொன்வேய்ந்தது பற்றிய கல்வெட்டு


லட்சுமி குமார தாத்தாச்சாரியாரால் அமைக்கப்பட்ட ஏரி "தாதசமுத்திரம்" என அழைக்கப்படுகிறது. மேலும் அவர் அநுமனைப் போற்றிப் பாடிய பாடல்கள் "ஹனுமத்விம்சிதி" கல்வெட்டுக்களாகக் கோயில் சுவரில் காணப்படுகிறது. மேலும் கல்வெட்டில் படைவீட்டு இராஜ்ஜியம் காலியூர்க் கோட்டத்து ஐயன்குளம் என்று இவ்வூர் குறிப்பிடப்படுகிறது. சகல விற்பன்னரான தாத்தாச்சாரியரால் அமைக்கப்பட்ட இவ்வூர் "அய்யங்கார்குளம்" என அழைக்கப்படுகிறது. மேலும் இக்கோயில் இறைவனான அனுமன் "திருவடிராயர்" எனப்போற்றி அழைக்கப்படுகிறார். அநுமனைச் சிறிய திருவடி என அழைப்பது வழக்கம். ஒவ்வொரு மாதப்பிறப்பு நாட்களிலும், அமாவாசை நாட்களிலும் இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற வணிகர்கள் தானம் அளித்த செய்தியும் காணப்படுகிறது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலின் புண்ணியகோடி விமானத்தைத் திருப்பணி செய்தும் பொன் வேய்ந்தும், மண்டபங்கள், பிரகாரம் மற்றும் உலா செல்ல வாகனங்களைத் தாத்தாச்சாரியார் அளித்ததாகவும் ஒரு கல்வெட்டு (கி.பி.1614) குறிப்பிடுகிறது. இதே செய்தியைக் காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் காணும் கல்வெட்டும் எடுத்துக் கூறுகிறது.


சஞ்சீவிராயர் கோயில் முகப்புத் தோற்றம்



கோயிலும் தாதசமுத்திரம் ஏரியும்



தோரணவாயில், நடைவாவிக் கிணறு



கிணறு தோற்றம்



கோயிற் கருவறை



ஹனுமத் விம்சதி கல்வெட்டு



நடைவாவிக் கிணறு, படிகள், ஏற்றம், தோற்றம்


கோயில் நுழைவு வாயிலுக்கு முன் மண்டபத்தூண்களில் திருமாலின் அழகிய சிற்பங்களைக் காணமுடிகிறது. இம்மண்டபத்திற்குமுன் ஒரேகல்லால் ஆன நான்கு தூண்களுடன் காட்சிதரும் ஊஞ்சல் மண்டபத்தையும் காணலாம். இதுபோன்ற மண்டபங்களைக் காஞ்சிபுரம், ஶ்ரீபெரும்புதூர், மாமல்லை போன்ற கோயில்களில் காணப்படுகின்றன.

கருவறையை அடுத்து மகாமண்டபம், முன்மண்டபம், அதனை அடுத்து தாதசமுத்திர ஏரியின் படிக்கட்டுகளுடன் அழகிய கட்டட அமைப்புகளுடன் திருக்கோயில் காட்சி தருகிறது. மகாமண்டபத்தை அடுத்துள்ள முன்மண்டப விதானத்தில் விஜயநகர ஓவியங்கள் முன்பு இருந்ததை ஆங்காங்கே காணப்படும் சிறுசிறு ஓவியப்பகுதிகள் எடுத்துக் கூறுகின்றன. ஒரு திருச்சுற்று, அதில் வழிபடப்பெறும் கருடாழ்வாரின் வடிவம் விஜயநகரக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

அய்யங்கார்குளம் கோயிலுக்கு எதிரே ஏரிக்கரையில் கிணறு ஒரு வித்தியாசமான வடிவமைப்புடன் காட்சி தருகிறது. இதனை "நடைவாவிக்கிணறு" என அழைக்கின்றனர். கிணற்றுக்கு நுழையும் இடத்தில் கல்லால் ஆன தோரணவாயில் அழகிய சிற்ப வேலைப்பாட்டுடன் காட்சி தருகிறது. மகர தோரணத்தின் நடுவே கஜலட்சுமி வடிவம். தூண்களில் இருபுறமும் யாளியின்மீது அமர்ந்த கோலத்தில் வீரர்கள். கீழ்ப்பகுதியில் கொடிப்பெண்கள் இருபுறமும் அலங்கரிக்க, மேற்புறத்தில் நடனமாடும் பெண்கள் கொடிகளிடையே புடைப்புச் சிற்பமாகக் காணப்படும் இத்தோரணவாயில் அரிய கலைப்படைப்பாய் விளங்குகிறது. விஜயநகர காலக் கலைச்சிறப்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

தோரணவாயிலில் நுழைந்தவுடன் படிக்கட்டுகள் கீழே செல்கின்றன. கீழே இறங்கினால் அங்கு மண்டபம் அமைந்துள்ளது. சித்திரை மாதம் நடைபெறும் திருவிழாவின்போது கிணற்றில் உள்ள நீரை இறைத்துவிட ஏதுவாக ஏற்றம் போன்ற அமைப்புகளுடன் காட்சி தருகிறது. கிணறு சதுரவடிவில் அழகிய கட்டடக்கலை அமைப்புடன் விளங்குகிறது.

ஏரிக்கரையில் இதுபோன்றே மற்றொரு கிணறும் காணப்படுகிறது. மரம், செடி முளைத்துள்ளதால் இதன் அமைப்பினைச் சரியாகக் காணமுடியவில்லை.

இக்கிணற்றில் காணும் கல்வெட்டு
1. னெல்லு
2. கார தெரு
3. செங்கல்
4. ராயரு தரு
5. மம்

எனக் குறிப்பிடுகிறது. 18-19ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதமுடிகிறது.

விஜயநகர காலக் கலைச்சிறப்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அய்யங்கார்குளம் சஞ்சீவிராயர் திருக்கோயில் விளங்குகிறது. மேலும் இங்கு ஏரிக்கரையில் காணப்படும் "நடைவாவிக் கிணறும்" கோயிற்கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இவற்றைப் போலவே பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் அமைந்துள்ள தாதசமுத்திரம் ஏரியையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.

அடிக்குறிப்பு:
1) A.R.E 1923 No 91-96
2) அய்யங்கார் குளம் கல்வெட்டு - க.ஈசுவரன், ஆவணம் இதழ் 11, 2000. பக்கம்-86.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.