http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 153

இதழ் 153
[ ஏப்ரல் 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

இராஜராஜரின் திருவிளக்குகள்
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 5
புள்ளமங்கை ஆலந்துறையார் தளப்பஞ்சரங்கள்
இறவாதான் ஈசுவரம்
மாமல்லபுரக் குடைவரைகள் - 4
இதழ் எண். 153 > கலையும் ஆய்வும்
புள்ளமங்கை ஆலந்துறையார் தளப்பஞ்சரங்கள்
இரா.கலைக்கோவன், மு.நளினி

ஒரு கட்டுமானத்தின் எழிலை மேம்படுத்தக் கலையறிஞர்கள் பல உத்திகளைக் கையாண்டுள்ளனர். அவற்றுள் ஒன்றுதான் பஞ்சரம். தமிழ்நாட்டுக் கோயில் கட்டுமானத்தின் பல பகுதிகளில் இடம்பெறும் பஞ்சரங்களுள் தளப்பஞ்சரம் சிறப்பானது. இது கட்டுமானத்தின் கீழ், மேல் தளங்களில் இடம்பெறுவதைப் பல்லவர் காலத்திருந்தே காணமுடிகிறது. மாமல்லபுரம் உலக்கணேசுவரம் கீழ்த்தளப் பஞ்சரங்களுக்கும் நல்லூர் மணவழகர் கோயில் மேற்றளப் பஞ்சரங்களுக்கும் சிறந்த சான்றுகளாகும். கட்டுமானத்திற்கு இணையற்ற கவர்ச்சியையும் கம்பீரத்தையும் தரும் இப்பஞ்சரங்கள் சோழர்களாலும் கைக்கொள்ளப்பட்டன. முதல் பராந்தகர் காலக் கற்றளியான புள்ளமங்கை ஆலந்துறையார் விமானம், முகமண்டபம் இரண்டும் பத்திகளுக்கு இடைப்பட்ட கீழ்த்தளத் தாய்ச்சுவரில் அழகிய தளப்பஞ்சரங்களைப் பெற்றுள்ளன. பல முற்சோழர் கோயில்கள் இத்தகு பஞ்சரங்களைக் காணமுடிந்தாலும் ஆலந்துறையார் பஞ்சரங்கள் சோழர் கலையாற்றலின் தனித்துவமான வெளிப்பாடுகளாகக் கண்களை நிறைக்கின்றன. 



ஆலந்துறையார் பஞ்சரங்கள்



புள்ளமங்கை ஆலந்துறையார் விமானத்திலும் முகமண்டபத்திலும் கர்ண, சாலைப்பத்திகளுக்கு இடைப்பட்ட தாய்ச்சுவரில் இப்பஞ்சரங்கள் உள்ளன. விமானம், முகமண்டப உபானத்தி லிருந்து கபோதம்வரை உயரும் இப்பஞ்சரங்கள் திசைக்கிரண்டென விமானத்தின் நான்கு திசைகளிலும் முகமண்டபத்தின் மூன்று திசைகளிலும் அமைந்து கட்டமைப்பின் எழிலைப் பன்மடங்காக்குகின்றன. 



தாங்குதளம்



உபானத்தின் மீது அடர்த்தியான தாமரைஜகதி, உருள்குமுதம், நான்கு பிரதிமுகங்களும் திருப்பங்களில் மகரவாய்களும் பெற்ற பிரதிவரி எனப் பிரதிபந்தத் தாங்குதளத்துடன் தொடங்கும் தளப்பஞ்சரத்தின் ஜகதி, குமுதம் இவற்றுக்கிடையே அழகிய மேல்நோக்குத் தாமரைவரி. பிரதிவரியில் ஒன்றையொன்று நோக்கியோ, எதிர்ப்பார்வையிலோ உள்ள சிம்ம, வேழயாளிகளின் செதுக்குத்திறம் சிறப்பானது. துளைக்கையைச் சுருட்டித் தலைமீதிருத்தி அங்காத்துள்ள மகரங்களின் தந்தங்கள் நன்கு வளைந்து நீண்டுள்ளன. பற்கள் நிறைந்துள்ள அவற்றின் வாயி லிருந்து ஒரு கால் மடக்கி, ஒரு கால் நீட்டி வெளிப்படும் வீரர்கள் கைகளில் வாளும் கேடயமும் ஏந்தியுள்ளனர். 



கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி அல்லது முத்துமாலை, தோள்வளைகள், முப்புரிநூல், உதரபந்தம், இடைக்கட்டுடனான சிற்றாடை பெற்று வல அல்லது இடஒருக்கணிப்பிலுள்ள அவர்களுள் சிலர் கேடயக் கையை மடக்கிய முழங்கால் மீது தாங்கலாக்கியுள்ளனர். தெற்கு மகரம் ஒன்றின் வாயிலிருந்து வீரர்களைப் போலவே ஆடை, அணிகளுடன் வெளிவரும் அழகிய பெண்ணின் வலக்கை மகரத்தின் மேல் தாடை தொட, இடக்கை தொடையில். சில மகரங்கள் தாவிவரும் வேழ, சிம்மயாளி மீதமர்ந்த வாள்வீரர்களைக் கொண்டுள்ளன. ஒரு வீரர் வாளுக்கு மாற்றாக உருள்தடி கொள்ள, ஒன்றில் வீரர் களற்ற தாவுசிம்மம். இப்பிரதிவரியும் மகரங்களும் தளப்பஞ்சரங் களுக்கு உயிரூட்டி அவற்றின் கம்பீரத்தையும் எழுச்சியையும் பன்மடங்காக்குகின்றன. 



வேதிகைத்தொகுதி



தாங்குதளத்தின் மேல் வளரும் வேதிகண்டம், கீழ்நோக்குத் தாமரைவரித் தழுவலுடன் வேதிகை பெற, அதன் பெரும்பாலான பாதங்களில் பூ அல்லது கொடிக்கருக்கு அலங்கரிப்பு. இந்த அழகூட்டல்கள் பஞ்சரத்திற்குப் பஞ்சரம் சிறு அளவிலேனும் மாறுபட்டு, எழிலார்ந்த செதுக்கல்களாய்க் கண்சிமிட்டுகின்றன. விமானக் கிழக்குமுகப் பஞ்சரங்களின் வேதிபாதங்கள் வெறுமையாக அமைய, முகமண்டபக் கிழக்குமுகப் பஞ்சரங்களின் பாதங்கள் கட்டுமானத்தில் மறைந்துள்ளன. 



செதுக்கல்கள் பெற்றுள்ள பிற பஞ்சரப் பாதங்களில் நான்கில் மட்டுமே சிற்பங்கள். விமான மேற்குப் பஞ்சரங்களில் தெற்கிலுள்ளதன் வலப்பாதத்தில் வாத்து. வடக்குப் பஞ்சரங்களில் கிழக்கிலுள்ளதன் இடப்பாதத்தில் மிரளும் யானையை அதன் மேலேறி வீரர் ஒருவர் அடக்கும் காட்சி. முன்கால்களைத் தூக்கித் துளைக்கையைச் சுருட்டி மேலேறுபவரைச் சாய்க்குமாறு முரண்டு பிடிக்கும் யானையின் மெய்ப்பாடுகள் அருமையாக வெளிப்பட, எச்சரிக்கையுடன் யானை முதுகின் மேல் தவழ்ந்தேறும் ஆடவரின் துணிவும் வீரமும் கண்களைக் கவர்கின்றன. 



முகமண்டப வடக்குப் பஞ்சரங்களில் மேற்கிலுள்ளதன் வலப்பாதத்தில் யானை கொண்டு நிறைவேற்றப்படும் மரணதண்டனைக் காட்சியும் கிழக்கிலுள்ளதன் இடப்பாதத்தில் மயில் சிற்பமும் உள்ளன. தண்டனைக்காட்சியில் யானை மேல், கையில் அங்குசத்துடன் யானைப்பாகர் இருக்க, யானையின் துளைக்கை தண்டனைக்குள்ளானவரைச் சுற்றி வளைத்துள்ளது. கால்கள் மேற்புறமும், தலையும் நீட்டிய கைகளும் கீழ்ப்புறமும் இருக்குமாறு துளைக்கையில் சிக்கியிருக்கும் ஆடவரின் அலறல் ஒலி நம் செவிகளைத் துளைக்கிறது. அத்தனை மெய்ப்படச் செதுக்கியிருக்கும் சிற்பத்திறனை வியக்காதிருக்கக்கூடவில்லை.



விரிந்து படரும் தோகையுடன் அழகிய கழுத்தை வளைத்து மேற்குமுகமாய்த் திருப்பியிருக்கும் மயில் அகவுமாறு போலக் காட்டியிருக்கிறார்கள். இக்காட்சியைக் காணும்போது குறுந்தொகையின், 'வேங்கை வியன்சினை ஏறி மயிலினம் அகவும் நாடன்' எனும் பாடலடிதான் நினைவில் நிழலிடுகிறது.



தூண்கள்



வேதிகையின் மேலுள்ள துணைக்கம்பின் மேல் வளரும் நான்முக அரைத்தூண்கள் தொங்கல், கட்டு, தாமரைக்கட்டு, கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை, வீரகண்டம் என அனைத்து மேலுறுப்புகளும் பெற்றுக் குளவும் அழகிய கொடிக்கருக்குப் பட்டையும் கொண்ட தரங்கப் போதிகைக் கைகளால் உத்திரம் உள்ளிட்ட கூரையுறுப்புகள் தாங்குகின்றன. நான்முகத் தூண்களின் தொங்கல்கள் பல்வேறு அமைப்பிலான பூச்சரங்கள், கொடிக்கருக்குகள், பதக்கங்கள் கொள்ள, கட்டுகளிலும் கொடிப் பின்னல்கள். தூண்களின் பாலி உள்ளிட்ட மேலுறுப்புகளும் பல்வேறு வகைப்பட்ட எழில்நிறை கருக்கணிகளால் நிறைக்கப்பட்டுள்ளன. பாலியின் கீழ்முகம் கொடியமைப்பில் மின்ன, விளிம்புகளில் பூப்பதக்கங்கள். 



கூரையுறுப்புகள்



பஞ்சரங்களின் வலபித் திருப்பங்களில் தோளளவான தாவுசிம்மங்கள். அவற்றுக்கு இடைப்பட்டும் பக்கங்களிலும் விலங்கு, பறவை, பூதம் உள்ளிட்ட உயிரினங்கள். போதிகைக்கு மேலான வலபிமடிப்புகளில் ஆலிலைக்கண்ணன், கைகளை ஊன்றி எட்டிப்பார்க்கும் பூதங்களின் முகங்கள், பதுங்கும், உறங்கும், அமர்நிலைகளில் புலி, சிம்மம், நந்தி, எருமை காட்சிதர, விமானக் கிழக்குப் பஞ்சரங்களில் இப்பகுதி வெறுமையாகவுள்ளது. முகமண்டபக் கிழக்குப் பஞ்சரங்களில் தெற்கில் அமர்நிலைக் காளையும் எருமையும் உள்ளன. விமான மேற்குமுகப் பஞ்சரங்களில் தெற்கில் இப்பகுதியில் ஒரு குரங்கு படுத்திருக்க, மற்றொரு குரங்கு அதனருகே அமர்ந்து பேன் பார்க்கும் காட்சி. 



9 பஞ்சரங்களில், மடிப்புகளுக்கு இடைப்பட்ட வலபியில் ஒவ்வொன்றிலும் இரு வாத்துகள். முகமண்டபக் கிழக்குப் பஞ்ச ரங்களில் தெற்கிலுள்ளது அப்பகுதியில் இரு பூதங்கள் கொண்டுள்ளது. சில பஞ்சரங்களில் இப்பகுதியில் சிற்பங்கள் உருவாகாமல் அல்லது சிதைந்துள்ளன. தாய்வாத்து தன் இரு குஞ்சுகளுடன் உள்ள அழகான காட்சி முகமண்டபத் தெற்குப்பஞ்சரத்தின் கிழக்குமுகத்தில். 



கூரையின் முன்னிழுப்பான கபோதம் முகப்பில் இணை நாசிகைகளும் பக்கங்களில் திசைக்கொரு நாசிகையும் எனச் சிம்மத்தலைப்புப் பெற்ற நான்கு கூடுவளைவுகளுடன் சந்திரமண்டலமும் எழிலார்ந்த கோணபட்டமும் கொண்டமைய, சில கூடுகளில் வாத்து, நடைபயிலும் பன்றிகள், கந்தருவமுகங்கள், பூதத்தலை உள்ளிட்ட செதுக்கல்களைக் காணமுடிகிறது. கூட்டைத் தழுவியுள்ள வளைவின் கொடிக்கருக்கு, தலைப்பாக உள்ள சிம்மத்தலையின் அகலத் திறந்த வாய்வழி வெளிப்பட்டு, இருபுறத்தும் கீழிறங்கி, வளைவும் நெளிவுமாய்ச் சிலவற்றிலும் படமெடுத்த பாம்புகளின் அணிவகுப்பெனச் சிலவற்றிலும் சிறக்க அமைந்துள்ளது. 



விமானத்தின் மேற்குமுகத்திலுள்ள வடபஞ்சரத்தின் முகப்புக் கபோதநாசிகைகளுள் தெற்குநாசிகையின் வளைவு பிற வளைவுகள் போல் கொடிக்கருக்குப் பெற்றிருந்தாலும் அக்கருக்கு வளைவுகளிடையே வலப்புறம் மூன்றும் இடப்புறம் மூன்றுமாய் அழகிய ஆடல், கருவிக்கலைஞர்களின் வடிவங்களைக் கொண் டுள்ளது. அறுவருமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வலப்புறம் கீழுள்ள பெண் சுவஸ்திகக் கரணத்தில் வலக்கையைக் கடகத்தில் இருத்தி, இடக்கையை அர்த்தரேசிதத்தில் வீசியுள்ளார். தமிழம் கொண்டையும் சிற்றாடையும் பெற்றுள்ள அவரது முகம் வலத்திருப்பமாய். சடைமகுடத்துடன் அவருக்கு மேலுள்ளவரும் சுவஸ்திகக் கரணக் காரிகையே. வலக்கை பதாகத்திலிருக்க, இடக் கை அர்த்தரேசிதத்தில். முகம் வலத்திருப்பத்தில். சடைமகுடராய் நேர்ப்பார்வையிலுள்ள வலஉச்சியர் இசைக்கலைஞராய்ச் செண்டுதாளத்துடன். 



இடப்புறத்தே மேலுள்ளவர் மண்டலநிலையில் இடக்கை வாசிக்கும் கலைஞர். வலக்கை கருவி இயக்க, கயிற்றுப்புரிகளுக்குள் இடக்கை கவித்துவம் காட்டுகிறது. இக்கலைஞரின் கீழுள்ளவர் சுவஸ்திகக் கரணத்தில் வலக்கையைக் கடகத்திலிருத்தி, இடக்கையை அர்த்தரேசிதத்தில் வீசியுள்ளார். சடைமகுடரான அவரது முகம் வலச்சாய்வாக உள்ளது. மண்டலத்திலுள்ள இறுதி ஆடலழகி வலக்கையில் பதாகம் காட்டி, இடக்கையை இடப்புறம் நீட்டியுள்ளார். அனைவரையும் இணைத்துப் பார்க்கச் சோழர் கால ஆடரங்கும் அங்கு ஆடிய தலைக்கோலியரும் இசைக்கலைஞர்களும் நினைவில் மின்னுகின்றனர். 



கபோதத்திற்கு மேலுள்ள பூமிதேசத்துண்டுகள் விமானக் கிழக்குமுகத்திலுள்ள தெற்குப்பஞ்சரம் தவிர்த்த ஏனைய அனைத்துப் பஞ்சரங்களிலும் முகப்பில் நான்கு யாளிகளும் திருப்பங் களில் மகரதலைகளும் கொண்டுள்ளன. தோகையுடனுள்ள நடு யாளிகள் ஒன்றையொன்று நோக்கியிருக்க, பின்னுள்ள இரண் டும் முன்னதன் பார்வையில் உள்ளன. விமானக் கிழக்குமுகத்தி லுள்ள தெற்குப் பஞ்சர பூமிதேசம் இருயாளிகள் மட்டுமே கொண்டு மகரத்தலையற்று அமைய, வடக்குப்பஞ்சர பூமிதேசத் தின் வடபுறத்தே மகரதலை இல்லை. 



பூமிதேசத்தையடுத்துள்ள வேதிகைத்தொகுதியின் பெரும்பாலான கண்டபாதங்களிலும் கிரீவசுவரைத் தழுவியுள்ள உறுப்புவேறுபாடற்ற நான்முக அரைத்தூண்களில் பலவற்றிலும் அழகிய கொடிக்கருக்குகள். இத்தூண்களின் புறத்தே பின்கால்களை ஊன்றி முன்கால்களை நன்கு மடக்கியவாறு வாய்திறந்து நிற்கும் தாவுயாளிகள். கிரீவசுவரின் நடுவிலுள்ள கோட்டத்தை அளவில் சிறிய சட்டத்தலை நான்முக அரைத்தூண்கள் அனைத்து மேலு றுப்புகளும் கொண்டு தழுவ, மேலே போதிகை, உத்திரம், வாஜனம், வெறுமையான வலபி உள்ளிட்ட கூரையுறுப்புகள். விமானத்தின் கிழக்குமுகத்திலுள்ள வடக்குப்பஞ்சர கிரீவகோட்டத் தூண்கள் மட்டும் செவ்வகப்பாதம் பெற்ற எண்முக அரைத்தூண்களாக உள்ளன. மேலே போதிகை, கூரையுறுப்புகள். சில அணைவுத்தூண்களில் அழகிய தொங்கல். 



கிரீவகோட்டங்களில் முற்சோழர் கலைமரபிற்கே உரிய எழிலார்ந்த நின்றநிலைச் சிற்பங்கள். அவற்றுள் ஐந்து சிவபெருமான், உமை என அமைய, நான்கு வானவர்களாகவும் எஞ்சிய ஐந்து வானவமகளிராகவும் உள்ளன. மகளிரில் மூவர் கவரிக்காரிகையர். இப்பதினான்கு சிற்பங்களுள் ஒன்று முழுஒருக்கணிப்பிலும் ஒன்று சுவஸ்திகக் காலமைப்பில் நேர்ப்பார்வையிலும் அமைய, ஏனைய பன்னிரண்டும் லேசான இட அல்லது வலஒருக்கணிப்பில். முப்புரம் எரித்தவராகவும் நந்தியணுக்கராகவும் உள்ள சிவபெருமான் இடுப்பிற்குக் கீழ்ப்பட்டு இடஒருக்கணிப்பிலும் உடலின் மேற்பகுதி வலஒருக்கணிப்பிலும் அமையக் காட்சிதருகிறார். விமானத்தின் தெற்கு, மேற்குப் பஞ்சரங்களிலும் முகமண்டபத்தின் வடக்குப்பஞ்சரத்திலும் இடம்பெற்றுள்ள உமை இரு இடங்களில் லேசான வலஒருக்கணிப்பிலும் தெற்கில் நேர்ப்பார்வையிலும் அருகில் நிற்கும் தோழியின் தலைமீது கையூன்றியவ ராய்க் காட்சியளிக்கிறார்.



கிரீவகோட்டத்தின் தலைப்பாய் விமானம், முகமண்டபக் கபோதத்தில் காட்டப் பட்டுள்ள பெருவளைவுக்கூடுகள் விமானக் கிழக்குமுகத்தில் இடம்பெறவில்லை. முகமண்டபக் கிழக்குமுகப் பஞ்சரங்களில் தெற்கில் காணப்படும் இவ்வளைவு வடபுறம் கட்டுமானத்தில் மறைந்துள்ளது. பதினான்கு பஞ்சரங்களில் இம்மூன்று தவிர்த்த ஏனைய பதினொன்றிலுமுள்ள பெருவளைவுக் கூடுகளில் சிற்பச்செதுக்கல்கள். விமான மேற்குமுகத் தெற்குப் பஞ்சரவளைவின் உட்பகுதியில் மட்டும் சிவபெருமான் திருக்கோலம். பிற 10 உட்குழிவுகளிலும் ஒருதளவிமானங்களின் ஆட்சி. அவற்றுள் 6, சாலை விமானங்களாகவும் 2, நாகரமாகவும் 1, திராவிடமாகவும் 1, வேசரமாகவும் உள்ளன. 



கொடிக்கருக்குகளுடன் திகழும் வளைவுகளின் கீர்த்திமுகத் தலைப்புப் பல பஞ்சரங்களில் உடைந்துள்ளது. விமானத்தின் தெற்குப்பஞ்சரம் ஒன்றிலும் மேற்குப் பஞ்சரங்களிலும் அவற்றை முழுமையாகக் காணலாம். கீர்த்திமுக வாய்வழி வெளிப்படும் கருக்கணித்தொங்கல் வளைவின் இருபுறத்தும் மகரங்களில் முடிகிறது. அங்காத்த மகரவாய்களிலிருந்து தாவுயாளிகள் வெளிப்படுகின்றன. தொங்கலின் இரு இழைகள் வளைவைத் தழுவியவாறு கீழ்வரை செல்கின்றன. அவ்விரு இழைகளின் நடுவிருக்குமாறு அழகிய தாவுயாளி. மேற்குப் பஞ்சரத் தலைப்புகளில் மகரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மகரவாய்களிலிருந்து வெளிப்படும் அடர்த்தியான கொடிக்கருக்குகள் வளைவை நிறைக்க, வளைய விளிம்புகளை அதன் உச்சியிலுள்ள சிறிய அளவிலான கீர்த்திமுகத்திலிருந்து வெளிப்படும் கொடித்தண்டுகள் தழுவுகின்றன. 



மேற்குப்பஞ்சர வளைவில், இடப்பாதம் வலத்தொடையிலிருக்குமாறு கால்களை மடித்தமர்ந்தவராய் யோகபட்டத்துடனுள்ள சிவபெருமானின் வலப்பாதம் உயர்தளத்தில். வலக்கை இருக்கையில் படர, இட முன் கையில் சுவடி. சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், இடைச்சிற்றாடையுடன் இடஒருக்கணிப்பிலுள்ள அவரது முகம் வலத்திருப்பமாய். வலப் பின் கை அருகிலுள்ள திண்டில். இடப் பின் கைப் பொருளை அறியக்கூடவில்லை. வளைவின் முதலடுக்கில் மதலைகள்.



பெருவளைவு விமானங்கள் அனைத்துமே நான்முக அரைத்தூண்கள் அணைத்த கீழ்த்தளச் சுவர், கூரையுறுப்புகள், பூமிதேசம், வேதிகைத்தொகுதி, கிரீவம், சிகரம், தூபியுடன் உள்ளன. சாலைவிமானங்களுள் ஒன்றின் கீழ்த்தளம் அகலமான சாலைப்பத்தி முன்னிழுப்புடன் திகழ, நாகர விமானம் ஒன்றின் கீழ்த்தளமும் சாலை முன்னிழுப்பு கொண்டுள்ளது. திராவிட விமானத்தின் கீழ்த்தளச் சுவரிலும் முகமண்டபக் கிழக்குமுகத் தெற்குப் பஞ்சர வளைவிலுள்ள சாலை விமானத்தின் கீழ்த்தளச் சுவரிலும் கோட்டங்கள். தமிழ்நாட்டில் பொ. கா. 10ஆம் நூற்றாண்டில் வழக்கிலிருந்த 4 வகை விமானங்களும் இங்குப் பெருவளைவுச் செதுக்கல்களாய் உள்ளமை, கட்டடக்கலை பயில விழைவாருக்குப் பெருந்துணையாகும். வளைவின் பக்கங்களில் மதலைகளும் சிலவற்றில் அவற்றின் மேலிருக்குமாறு நான்முக அரைத்தூண்களும் உள்ளன. ஒன்றில் மட்டும் இத்தூண்கள் மேல் கபோதம். 



கிரீவகோட்டச் சிற்பங்கள்



பஞ்சர கிரீவகோட்டங்களிலுள்ள 14 சிற்பங்களுள் மூன்று கரண்டமகுடம் கொள்ள, அவற்றுள் ஒன்று மகுடம் மீறிய நிலையில் சடைப்பாரமும் பெற்றுள்ளது. 6 சிற்பங்கள் சடைமகுடம் பெற, 4 தமிழம் கொண்டையுடன் மிளிர்கின்றன. உமையின் தமிழம் கொண்டை இரு இடங்களில் அழகிய பூமுகப்புப் பட்டை பெற்றுள்ளது. கழுத்தணிகளில் சரப்பளி (5), முத்துமாலை (5) விரும்பிக் கொள்ளப்பட்டுள்ளன. சில சிற்பங்களில் இரு அணிகளுமே உள்ளன. இரண்டு சிற்பங்கள் சவடி கொள்ள, ஒன்று பதக்கஆரமும் மற்றொன்று மெல்லிய கழுத்தணியும் பெற்றுள்ளன. 5 சிற்பங்கள் உதரபந்தம் கொள்ள, ஐந்தில் முப்புரிநூல். அவற்றுள் ஒன்றில் மடித்த துண்டு முப்புரிநூல் போலுள்ளது. 11 சிற்பங்களில் பனையோலைக் குண்டலங்களும் இரண்டில் பூட்டுக்குண்டலங்களும் இடம்பெற, முப்புரம் எரித்தவரின் வலச் செவியில் மகரகுண்டலம். பெரும்பாலான சிற்பங்கள் தோள், கை வளைகள் கொள்ள, தெற்குப்பஞ்சர உமை கடகவளைகளும் பூண்டுள்ளார்.



3 சிற்பங்களில் அரைக்கச்சு சிறக்க அமைய, நான்கு இடைக்கட்டு பெற்றுள்ளன. 8 சிற்பங்கள் சிற்றாடையும் 5 பட்டாடையும் கொள்ள, 1 சிற்பம் கணுக்கால்வரை ஆடையுடனுள்ளது. 2 சிற்பங் கள் கால்களைக் குறுக்கீடு செய்து சுவஸ்திகத்தில் உள்ளன. 14 சிற் பங்களில் 13 முழுவடிவமாய்ப் பாதங்கள்வரை அமைய, 1 முழங்கால் வரையினதாய் உள்ளது. கவரிப்பெண்கள் விமானக் கிழக்குமுகப் பஞ்சரக் கோட்டங்களிலும் முகமண்டபக் கிழக்குப் பஞ்சரக் கோட்டங்களில் வடக்கிலும் உள்ளனர். 



முகமண்டபத் தெற்குப் பஞ்சரங்கள்



தென்கிழக்குப் பஞ்சர கிரீவகோட்டத்தில் இடஒருக்கணிப்பிலுள்ள ஆடவரின் வலக்கை கடியவலம்பிதத்தில். அவரது இடக்கையிலுள்ளது மலராகலாம். தென்மேற்குப் பஞ்சர கிரீவ கோட்டத்தில் இடஒருக்கணிப்பிலுள்ள அழகியின் வலக்கை தொடையில் படர, இடக்கை இடச்செவியருகே. 





விமானத் தெற்குப் பஞ்சரங்கள்



தென்கிழக்குப் பஞ்சர கிரீவகோட்டத்தில் இடக்காலை வலக்கால் பின் குறுக்கீடு செய்து நிற்கும் உமையன்னையின் வலக்கை, வலப்புறத்துள்ள பெண்ணின் தலையில். அம்மையின் இடக்கை கடகமாய் நீலோத்பலம் ஏந்தியுள்ளது. நேர்ப்பார்வையில் ஒசிந்து நிற்கும் அவரது ஒயில்நிறை எழிற்கோலம் கண்களை நிறைக்கும் சிற்பச்செழுமையாகும். வலக்கையைப் பதாகத்திலிருத்திச் சிற்றாடையுடன் காட்சிதரும் தோழியின் இடக்கை தொடையில். தென்மேற்குப் பஞ்சர கிரீவகோட்டத்தில் லேசான இடஒருக்கணிப்பிலுள்ள இளம் ஆடவரின் வலக்கை கடகத்தில். விரல்கள் விரித்த அவரது இடக்கை தூணில் படர்ந்துள்ளது.





விமான மேற்குப் பஞ்சரங்கள்



மேற்கின் தெற்குப்பஞ்சர கிரீவகோட்டத்தில் வலஒருக் கணிப்பிலுள்ள ஆடவரின் இடக்கை கடியவலம்பிதமாக வலக் கையில் மலர். இக்கோட்டப் பெருவளைவில் யோகபட்டத் துடன் சிவபெருமான். மேற்கில் வடக்குப்பஞ்சர கிரீவகோட்டத்தில் வலக்காலை இடக்கால் பின் குறுக்கீடு செய்து தோழியுடன் நிற்கும் உமை. அவரது இடக்கை இடப்புறம் நிற்கும் தோழியின் தலைமீது. வலக்கை தோளருகே. இடத்தோளில் புரளும் சடையுடன் முகத்தை வலம் சாய்த்து ஒயிலுற நிற்கும் அம்மையின் எழில் இணையற்றது. முழுமையுறாத தோழியின் வலக்கை அவர் முகத்துக்குத் தாங்கலாக, இடக்கை இடுப்பில்.





விமான வடக்குப்பஞ்சரங்கள்



வடக்கில் மேற்குப்பஞ்சர கிரீவகோட்ட நந்தியணுக்கர் தாமரைத்தளத்தில் வலப்பாதமிருத்தி, இடமுழங்காலைச் சற்றே மடித்துப் பாதத்தைத் திரயச்ரமாக்கியுள்ளார். இடஒருக்கணிப்பிலுள்ள அவர் முகம் வலத்திருப்பமாக, வல முன் கை கடியவலம் பிதத்தில். இட முன் கை அருகிலுள்ள நந்தியின் தலைமீது. வலப் பின் கை தோளைத் தொட்டுக் கடகத்தில் அமைய, இடப் பின் கையும் கடகத்தில். இளமை பொலியும் முகத்துடன் எழிலராய்க் காட்சிதரும் சிவபெருமானின் தோற்றம் கண்களை நிறைக்கும் காவியமாகும். வடக்கின் கிழக்குப்பஞ்சர கிரீவகோட்டத்தில் இடஒருக்கணிப்பிலுள்ள ஆடவரின் வலக்கை சிதைந்துள்ளது. இடக்கை கடியவலம்பிதத்தில். 



முகமண்டப வடக்குப்பஞ்சரங்கள்



வடக்குப் பஞ்சரங்களில் மேற்கு கிரீவகோட்டத்தில் வலக்கால் ஊன்றி இடக்காலை முழங்காலளவில் மடித்து வலஒருக்கணிப்பில், முகத்தை இடந்திருப்பி நிற்கும் உமையின் தோற்றம். வலக்கை சிதைந்துள்ளது. நடுத்தொங்கலுடன் இடையாடை பெற்றுள்ள அவரது இடக்கை, கைகளை இடுப்பிலிருத்தி இடப்புறம் நிற்கும் தோழியின் தலையில். கிழக்கு கிரீவகோட்டத்தில் முயலகன் தலைமீது இடக்காலும் முதுகில் வலக்காலும் ஊன்றி யவராய் முப்புரம் எரித்த சிவபெருமான். இடஒருக்கணிப்பி லுள்ள அவர் வலக்கையில் அம்பு. இடக்கையில் வில். முகம் வலத்திருப்பமாய். 



முகமண்டபக் கிழக்குப்பஞ்சரங்கள்



கிழக்குப் பஞ்சரங்களில் வடக்கு கிரீவகோட்டத்தில் வலஒருக்கணிப்பில் இடக்கையை மார்பருகே இருத்தியுள்ள அழகி. அவரது வலக்கை கடியவலம்பிதத்தில். தெற்கு கிரீவகோட்ட அழகி இடஒருக்கணிப்பிலுள்ளார். இடத்தோளில் சடைத்திரள் புரள, வலக்கையை வயிற்றருகே ஏந்தலாய்க் கொண்டுள்ள அவர் இடக்கையில் கவரி.



விமானக் கிழக்குப்பஞ்சரங்கள்



தெற்குப்பஞ்சர கிரீவகோட்டத்தில் கருவறைக்காய் ஒருக்கணித்துள்ள அழகியின் வலக்கையில் கவரி. அவரது இடக்கை மறைந்துள்ளது. இடப்புறம் சடைத்தொங்கல். வடக்குக் கிரீவ கோட்டத்தில் கருவறைக்காய் வலஒருக்கணிப்பிலுள்ள அழகியின் இடக்கை கடியவலம்பிதத்தில். நடுத்தொங்கலுடன் ப டாடை பெற்றுள்ள அவரது வலக்கையில் கவரி. அம்மையின் வலப்புறம் தாமரையுடன் பூக்குடுவை. 











முடிவுரை



புள்ளமங்கை ஆலந்துறையார் கட்டுமானத்தின் கவர்ச்சி மிகு தோற்றத்திற்கு இத்தளப் பஞ்சரங்கள் முதன்மைக் காரணிகளாய் விளங்குகின்றன. அடிமுதல் முடிவரை எழிலே நோக்கமாய்ச் செதுக்கப்பட்டுள்ள இப்பஞ்சரங்கள் பொ. கா. 10ஆம் நூற்றாண்டில் செழித்திருந்த தமிழர் கலையாற்றலுக்கு இணையற்ற சான்றுகளாய் இலங்குகின்றன. 

 


இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.