![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [184 Issues] [1822 Articles] |
Issue No. 184
![]() இதழ் 184 [ மே 2025 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
ஆசிரியர்: www.glorioustamils.com; www.attraithingal.com வலையொலி/ podcast- அற்றைத்திங்கள்…. வலையொலியில் தமிழொலி சிற்பக்கலை எழுச்சியில் அப்பர் பதிகங்கள் திருத்தொண்டின் நெறியால் தமிழகமெங்கும் சிவ வழிபாடு செழிக்கப் பயணப்பட்ட திருநாவுக்கரசர், தலைமுறைகள் தாண்டியும் சைவம் நிலைத்து நிற்கவேண்டி மற்றுமொரு பணி செய்தார். அந்தப் பணி, தமிழகத்தில் ஏற்கனவே பரவியிருந்த புராணக் கதைகளின் சாரத்தைப் பதிகவடிவில் ஆவணப்படுத்தியது. புராணச் செய்திகள் செறிந்த பதிகங்களை அடியவர்கள் நெக்குருகிப் பாடப்பாட, அதுவரையில் செவிவழிப் பத்திமைச் செய்திகளாக மட்டுமே வலம்வந்தவை உருகவைக்கும் கதைகளாகவும், கதைமாந்தர் வாழ்வின் நிகழ்வுகள்- அல்லவை அழிய நல்லவை தழைக்கச் செய்யும் அறவுரைகளாகவும், பாட்டுடைத் தலைவன் பேராற்றலுடை இறைவனாகவும் சமயம் பரப்பிடப் பேருதவி புரிந்தன. அப்பர் தம் பதிகங்களால் புகழ்க்கூட்டிய புராணச் செய்திகளை, தாம் உருவாக்கிய கோயில்களில் சிற்பவடிவில் வழங்கி அடுத்த நிலைக்குக் கொண்டு சென்ற முதன்மைப் பெருமை பல்லவ மன்னர்களையே சாரும். அப்பர் பாடல்களைக் கொண்டுமட்டுமே பல்லவ அரசர் அச்சிற்பங்களை அமைத்தனர் என்பதற்கு நேரடிச் சான்றுகள் ஏதுமில்லை; அங்ஙனம், வியப்பில் கண்கள் மூடமறக்கும் தலைசிறந்த சிற்பங்களை வழங்கிய பல்லவர்களின் கலைவளர்த்த பெருமைகளையெல்லாம் அப்பரின் பதிகங்களுக்கு மட்டுமே தந்துவிடுவது முறையுமன்று. மகேந்திரர் காலத்தில் ஏற்பட்ட கோயில் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை வளர்ச்சி, தொடர்ந்த பல்லவ அரசர்களால் பேரெழுச்சி பெற்றநிலையை வரலாற்றறிஞர்கள் ஆய்வுவழி கண்கூடாக விளங்கவியலும். அவ்வகையில், பல்லவர்கள் உளியோவியங்களாகப் படைத்ததில் சாகாவரம் பெற்ற புராண முயலகனும், இறைவன் கையேந்திய சூலமும் மழுவும், பேரெழில் சிவவடிவமான வீணாதரரும், பத்திமைச் சிற்பங்களுக்கு அப்பர் வழங்கிய பெருங்கொடை என்பதை அவர் பாடல்கள்வழி பகிர்வதே இக்கட்டுரை. அப்பர் பாடல்களில் முயலகன் திருச்சிராப்பள்ளி கங்காதரர் தேவார முன்னவர்க்கு முன்னரே, சிவபெருமான் உடுத்திய உடை- புனைந்த அணிகலன்கள்- ஏந்திய பொருட்கள் உட்பட ஆடலில்வல்ல இறைவனின் திருவுருவத் தோற்றத்தைத் தம் சொற்களில் வழங்கியவர் காரைக்கால் அம்மையார். இறைவனின் திருவுருவங்களான இலிங்கோத்பவர், காலனையுதைத்தவர், காமனையெரித்தவர், இராவணன் செருக்கடக்கியவர், பிச்சைத் தேவர், திரிபுரமெரித்தவர், யானைத்தோல் போர்த்தவர், அர்ச்சுனனுடன் போர் புரிந்தவர் மற்றும் விடையேறுடையரையும் குறித்தார் அவர். தாருகாவன முனிவர்களின் ஆணவமடக்கி இறைவன் தன்னுடன் சேர்த்துக்கொண்ட புலி, மான், மழு, பாம்பு ஆகியவற்றைப் பாடும் அம்மை, தீயை- இடுகாட்டில் ஆடும் இறைவனின் மையக் குறியீடாக அமைத்தார். இத்தனையும் பாடிய அம்மையின் பாடல்களில் முயலகன் இடம்பெறவில்லை. திருமூலர் வரிகளில், அண்டப் பெருவெளியை அம்பலமாகக் கொண்டு ஆடுமிறைவனுக்கு ஆகாயமே உடல்; உயிர்களின் ஆணவ மலமே முயலகன்; எட்டுத் திசைகளே எட்டுக் கைகள், என்று முயலகனை ஆணவத்தின் அடையாளமாகக் காணமுடிகிறது. ஆகாசமாம் உடல் ஆங்கார் முயலகன் ஏகாசமாம் திசை யெட்டும் திருக்கைகள் (10. 09ஆம் தந்திரம்.15.13) நாவுக்கரசருடைய பாடல்களில்தான், முயலகன் செருக்கை அழித்தல்பொருட்டு இறைவன் அவனைக் காலால் அழுத்தி அடக்கிவைப்பது காட்டப்படுகிறது. திருக்கஞ்சனூர் பதிகத்தில் ‘தருக்கழிய முயலகன்மேல் தாள்வைத்து’ (06.90.09) அறத்தை நிலைநாட்டுகிறார் சிவபெருமான். திருவாரூரிலோ இன்னும் ஒரு படி மேலே சென்று, ‘பாதத்தால் முயலகனைப் பாதுகாத்துப் பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ’ (06.34.08) என்று பாதத்தால் முயலகனை அழுத்தியடக்கி உலகையே பாதுகாப்பதாக விதந்தோதுகிறார் அப்பர். சிவனார் திருவுருவை மிக அழகாகக் கண்முன் நிறுத்தும் மற்றொரு பாடலில், முடியில் வெண்திங்களும் இளநாகமும்; அடியில் சிலம்பும் கழலும்; அடியின்கீழ் முயலகனும்; வலக்கையில் மழுவும்; இடப்பாகத்தில் திருமாலும் கொண்டு, துடியேந்திய இறைவன் தோள்மேல் கங்காளம் தாங்கி நிற்கிறார். அடிகொண்டார் சிலம்பலம்பு கழலு மார்ப்ப அடங்காத முயலகனை அடிக்கீழ்க் கொண்டார் (06.96.03). இறைவன், அடங்காத முயலகனை அடிக்கீழ்க் கொண்ட மிகத்தெளிவான சுட்டல் மகேந்திரரைக் கவர்ந்திருக்க வேண்டும். முயலகனைச் சிற்பத்தில் முதன்முதல் கொணரும் திட்டத்தை அமைத்தவர் இடத்தையும் செவ்வனே தேர்வு செய்தார்போலும். தமிழ்நாட்டுக் கோயில் கட்டடக் கலை மற்றும் சிற்பக்கலை வரலாற்றில் பல முதல்களுக்குச் சொந்தக்காரரான மகேந்திரர், தம் சீயமங்கலக் குடைவரையில் (அவனிபாஜன பல்லவேஸ்வரம்) இடதுபதம் தூக்கிய முதல் ஆடவல்லானைச் சிற்பத்தில் அறிமுகப்படுத்தினார்; ஆனால் அங்கு முயலகனைச் சேர்க்கவில்லை. அச்சிற்பம், கார்க்கோடகன் என்ற பாம்பின் தீண்டலைத் தவிர்க்க சிவபெருமான் காலுயர்த்தி ஆடியதாகக் கூறும் சகளாதிகாரத்தின் மிகச்சிறந்த தழுவல் என்று விளக்குகிறார் டாக்டர் இரா. கலைக்கோவன். எனவேதான் அங்கு பாம்புண்டு, முயலகன் இல்லை. ஆடவல்லான், சீயமங்கலம் நன்றி: https://tamilnadu-favtourism.blogspot.com/2016/09/avanibhajana-pallaveshwaram-temple.html ஆனால், தம்முடைய திருச்சிராப்பள்ளிக் குடைவரையில் (லளிதாங்குர பல்லவேஸ்வரகிருஹம்), தமிழ்நாட்டின் முதல் கங்காதரரோடு சிற்பத்தில் முதல் முயலகனையும் இடம்பெறச் செய்தார் மகேந்திரர். நளினமான தோற்றத்திலும் கண்கவர் மிடுக்குடன் மயக்கும் கங்காதரர், வலக்காலை முயலகனின் தலைமேல் வைத்துள்ளார். முயலகனின் இடக்கை சிவனின் கால்களைப் பிடித்துள்ளது. 2. மழுவும் சூலமும் சிவபெருமான் பற்றிய குறிப்புகள் சங்கப்பாடல்களில் ஆங்காங்கே காணப்பட்டாலும், சங்ககால இறுதிக்கட்ட நூலான கலித்தொகையிலும் காப்பியக்காலச் சிலப்பதிகாரத்திலும் கூடுதல் செய்திகளைக் காணமுடிகிறது. தாருகாவனத்துப் புராணக்கதை எங்கும் கூறப்படவில்லையெனினும், முனிவர்கள் ஏவியவற்றைத் தம் கையிலேந்திய இறைவன் பத்திமைக்காலத்துக்கு முன்னரே வந்துவிடுகிறார். அவற்றில், சங்ககாலத்து மழுவும் சிலம்பு காட்டும் சூலமும் அப்பராலும் சம்பந்தராலும், தீயவற்றை அழிக்கும் இறைவனின் போர்க்கருவிகளாகப் பேரளவில் பேசப்படுகின்றன. காரைக்கால் அம்மையார், கொடுவெண் மழுவும் பிறையுந்ததும்பப் படுவெண்துடியும் பறையுங்கறங்கப் பரமனின் ஆடலோடு மழுவும் உடனசைவதைக் குறிக்கிறார் (11.002.20). வாகீசர் சிவன்கை மழுவை மேலும் தெளிவுபட விளக்குகிறார். அவர்- வலக்கையில் மழுவேந்தியவர்- ‘மலர்க்கூந்தல் உமையாள் காதல் மணவாளனே வலங்கை மழுவாளனே' (06.04.09) ஒளிரும் வெண்மழுவைப் பயன்படுத்துவதில் வல்லவர் - ‘வடிவிளங்கு வெண்மழுவாள் வல்லார்’ (06.21.04) என்கிறார். இறைவன் மழுவேந்திய காரணம்தான் என்ன என்று கேள்வியெழுந்தால், அதற்கும் விடையுண்டு அப்பரிடத்தில்- வானளாவும் அலைகடல் சூழ்ந்த உலகினைக் காக்கவேண்டி, கூரிய மழுவினை ஏந்தியுள்ளார் அவர். ……………வானத் திரைகடல் சூழுல கம்மிதனைக் காப்பது காரண மாகக் கொண் டான்கண்டி யூரிருந்த கூர்ப்புடை யொள்வாண் மழுவனை யாமண்டர் கூறுவதே (04.93.06) இறைவன் சூலமேந்தியவர் என்பதை இளங்கோவடிகள், காடுகாண் காதையில் மாங்காட்டு மறையோன் வாயிலாக நமக்குரைக்கிறார். கோவலனுக்கு மதுரை செல்லும் வழியுரைக்கும் மறையோன்- கொடும்பை நெடுங் குளக் கோட்டகம் புக்கால் பிறை முடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய அறை வாய்ச் சூலத்து அரு நெறி கவர்க்கும் (சிலப்பதிகாரம் மதுரைக்காண்டம், காடு காண் காதை, 71-73) என்கிறான். கொடும்பாளூரின் நெடுங்குளப் பகுதியை அடைந்தால், சடையில் பிறையேந்திய பெரியவனாகிய சிவனின் சூலம்போல வழி பிரியுமாம். இங்கு சூலத்தின் மூன்று பிரிவுகள் பற்றிக் குறிப்பில்லையே என்ற வினா எழலாம். தொடரும் வரிகளைப் படித்தால், வலப்பக்கம் சென்றால் கடக்கும் பகுதிகள்-இடப்பக்கம் செல்லும் பாதை- இவ்விரண்டையும் விடுத்து நேராகச் செல்கையில் அடையுமிடங்கள் என்று மூன்று பாதைகளைக் கூறி, புவியிடங்காட்டுகிறார் சிலம்பின் ஆசிரியர். மூன்று ஈட்டிகளையுடைய சூலத்தை அப்பரும் சம்பந்தரும் மூவிலைவேலென்று குறிப்பிடுகின்றனர். முத்தீயனையதோர் மூவிலை வேல்பிடித்தவரென்றும் முந்தி வாயதோர் மூவிலை வேல்பிடித்தவரென்றும் அப்பர் கூறுகிறார். இதே மூவிலை வேலுடைய மற்றொருவன் உண்டு. அவன் கூற்றுவன். காலனை உதைத்துச் சாய்த்த திருக்கடவூர் வீரட்டனாரைப் பாடும் நாவுக்கரசர் (04.107), மூவிலை வேலுடைக் காலனைத் தானலற வைத்த சேவடியானென்றும் மார்க்கண்டேயனுக்காய்ச் சூலமும் பாசமுங் கொண்டு தொடர்ந்தடர்ந் தோடிவந்த காலனைக் காய்ந்த பிரானென்றும் போற்றுகிறார். காலனைக் காய்ந்த பிரான், அவன் கொண்டிருந்த சூலமும் பாசமும் தன் கையிலெடுத்து அவனை உதைத்ததைப் பல்லவர் கற்றளிகள் நம்கண்முன் காட்டும். படம்- காலனை உதைத்தவர், காஞ்சி கைலாசநாதர் நன்றி: லலிதாராம், அரை நாள் பயணம்....அரை மனதுடன்...., வரலாறு.காம் இறைவன் கையில் ஏந்திய ஒளிபொருந்திய சூலம் எதனால் ஆனது? திருகழிப்பாலையில் இரும்பார்ந்த சூலமேந்தியவர், வீழிமிழலையில் பொன்னால் செய்த வடிவழகுடைய சூலம் வைத்திருக்கிறார். திருச்சோற்றுத்துறையிலோ, வண்ணச்சூலம் கைக்கொண்டிருக்கிறார். இறைவனை அளவில்லா நேசத்துடன் வணங்கும் அப்பருக்கு, சுட்ட உடல்களையெரித்த சாம்பலைப் பூசிய சிவன் பேரழகனாகத் தெரிய திருநள்ளாரில், ‘சுட்டங்கங் கொண்டு துதையப் பூசிய பெருமான், ‘சுந்தரனாய்ச் சூலங்கை யேந்தினான்’ என்று உருகுகிறார். சுற்றிய பூதப் படையும் சூலமும் மழுவும் மானுமேந்திய பெம்மான் ஒருவனே நம்மைக் காக்க வல்லவன் என்று தொடர்ந்துரைக்கும் அப்பர், சூலத்தின் சிறப்பைச் சைவக் குறியீடாக மாற்றியெழுதுகிறார். பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும் என்னாவி காப்பதற் கிச்சையுண் டேலிருங் கூற்றகல மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவுகொண்டல் துன்னார் கடந்தையுட் டூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே (04.109.01) திருப்பெண்ணாகடம் என்று வழங்கப்படும் கடந்தை தூங்கானைமாடக் கோயிலில், உலகோருக்குத் தாம் சைவ நெறியாளரென்று ஐயமின்றி அடையாளப்படுத்த மூவிலைச் சூலத்தைத் தன்மேல் பொறிக்கவேண்டி இறைவனிடம் விண்ணப்பிக்கிறார். சூலத்தோடு ‘இடவம் பொறித்தென்னை யேன்றுகொள்,’ என்று சைவர் அடையாளங்களைப் பாடலில் பொதிந்து வைக்கிறார். குடிகள் அச்சமின்றி அமைதியுடன் வாழ, அவர்களின் தலைவன் தலைசிறந்த வீரனாயிருத்தல் வேண்டுமன்றோ. பொற்சூலமும் போர்புரியும் ஆற்றலுடைய விடையும் வினைகளை வெல்லும் நாகமும் வெண்மழுவும் கொண்ட இறைவனைக் காட்டி அவர் வலிமையைப் பறைசாற்றுகிறார் அப்பர் (05.012.03). சங்ககால முருகனையும் கொற்றவையையும் விஞ்சிய ஆற்றலும் போர்த்திறமும் கொண்ட ஒருவராகச் சிவனை அட்டவீரட்டச் செயல்களோடு உடனுறை மழுவும் சூலமும் ஓங்கி நிற்கச் செய்தன. பல நூற்றாண்டுகளாக மெள்ள மெள்ள ஏற்பட்ட இம்மாற்றம் பேரியக்கமாக வளர்ந்தது அப்பருடைய காலக்கட்டத்திலெனில், அந்தப் பேரியக்கம் கோயில் சிற்பங்கள்வழி எழுச்சி பெற்றது முதல் மகேந்திரர் ஆட்சியில். நன்றி: ச.சுந்தரேசன், சீயமங்கலம் அவனிபாஜன பல்லவேஸ்வரம், வரலாறு.காம் சீயமங்கலத்தில் உமையுடன் நிற்கும் நந்தியணுக்கர் கோட்டத்தில் சிவனாரின் இடக்கைக்குப் பின்னால் சூலத்தைப் பதித்தார் மகேந்திரர். சத்ருமல்லர் இல்லையா அவர்? கூடுதலாக, இறைவனின் இரண்டு போர்க்கருவிகளுக்கும் உருகொடுத்து மழுவடியாராகவும் சூலதேவராகவும் வாயிற்காவலில் நி̀ற்கவும் வைத்தார். தளவானூர் சத்ருமல்லேசுவரர் குடைவரையில் தமிழகத்தின் முதல் மழுவடியாரையும் சீயமங்கலத்தில் முதல் சூலதேவரையும் அமைத்த பெருமை மகேந்திரருக்கே உரியதென்பதை நமக்குரைக்கிறார் டாக்டர் இரா. கலைக்கோவன். சூலதேவர், சீயமங்கலம் நன்றி: https://commons.wikimedia.org/wiki/File:Seeyamangalam_dvarapala1.JPG மகேந்திரரைத் தொடர்ந்த பல்லவர் கற்றளிகளில் சிவனாரின் வீரங்காட்டும் சிற்பங்களில் மழுவும் சூலமும் விளங்கிநிற்பதைக் காணமுடியும். வீரனொருவனால் கிட்டும் பாதுகாப்புணர்வு தரும் அமைதியோடு உடன்வரும் மற்றோருணர்வு அச்சம். மழுவும் சூலமுமேந்தித் தீயவரையழிக்கும் இறைவனின் செயல்கண்டு எளியோர் அஞ்சுவது இயல்புதானே? ஆனால், அஞ்சுவது யாதொன்றும் இல்லை என்றுரைத்த அப்பரும் சரி, மற்ற பத்திமை ஆசிரியர்களும் சரி, உமையின் அச்சத்தை அவ்வப்போது சுட்டுகின்றனர். விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகம் கை தரித்ததோர் கோல கால பயிரவனாகி வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண் திருமணிவாய் விள்ளச் சிரித்து அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே (04.73.06) விரித்தபல் சூலமும் வெடிபடு தமருகமும் வேழமுரித்து உடுத்திய ஆடையுமாய்க் காலபைரவர் தோற்றத்தில் நின்றவரைக் கண்டு உமையஞ்ச, திருமணிவாய் விள்ளச் சிரித்து அருள்செய்தாராம் இறைவன். கொவ்வைச் செவ்வாயில் குமிழ்சிரிப்பிற்காக மனிதப் பிறவியை வேண்டியவரல்லவா? திருமணிவாய் விள்ளச் சிரித்த ஒற்றை வரியில், சம்பந்தரின் உள்ளங்கவர் கள்வனையும் ஈர்த்து மாணிக்கவாசகரை ஆட்கொண்ட பெருமானையும் ஒருசேரக் காட்டிவிடுகிறார் நாவுக்கரசர். உமைக்கு மட்டுமல்ல அன்பர்கள் அனைவருக்கும் இனியவர் இறைவன் என்பதை வலியுறுத்த, மழுவமர் கையராகவும் எழுநுனை வேலராகவும் எலும்பணிந்த சிவபெருமான், தொழுதெழுந் தாடிப்பாடித் தோத்திரம் பலவுஞ் சொல்லி அழுமவர்க்கு அன்பரானவர் என்று அழுந்தச் சொல்லி வைக்கிறார் (04.56.04). 3. அப்பர் பாடல்களில் வீணாதரர் ‘அத்யந்தகாம பல்லவேசுவர கிருகத்தில்’ வீணாதரர் நன்றி: லலிதாராம், இராஜசிம்மர் கலைப்பட விருந்து (புகைப்படத்தொகுப்பு), வரலாறு.காம் சிவனின் அச்சமூட்டும் பேராற்றலைப் போற்றிய நாயன்மார், அவரை அன்புடை அணுக்கராக மெச்சியதோடு பன்முகக் கலைஞராகவும் மிடுக்குடை நளினத்துடன் காட்டத் தவறவில்லை. ஆடலில் வல்லவராகவும் கருவியிசைக் கலைஞராகவும் பண்ணோடு இசைப்பாடப் பயின்றவராகவும் பதிகங்களில் பெருமான் மிளிரக் காணலாம். அத்தகு மனங்கவர் வடிவங்களில் ஒன்றே வீணாதரர் படிமம். தோல், துளை, நரம்பு, கஞ்சக்கருவிகள் என்று நால்வகை இசைக் கருவிகளைச் சங்ககாலந்தொட்டே தமிழ்ப் படைப்பாளர்கள் பதிவு செய்ய, நரம்புக் கருவிகளுள் யாழுக்கு முதன்மையிடம் இருந்தது தெரிகிறது. சங்கப் பாடல்களில் குறிக்கப்பெறாத வீணை சிலப்பதிகாரத்தில் முதல் குறிப்பு பெறுகிறது. இதுகாறும் கிடைக்கப்பெற்ற இலக்கியங்களில், வீணையென்ற சொல்லை எழுத்துருவில் தமிழுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இளங்கோவடிகளே. இந்திரன் அவையில் ஊர்வசி நாரதரின் இசைக்கு ஆடாதாவளாக நிற்க, அகத்தியரின் சாபம் பெற்று மண்ணுலகில் மாதவியாகப் பிறப்பெடுக்கும் கதையைக் கடலாடு காதையில் கூறுமிடத்தில், ‘நாரதன் வீணை நயந்தெரி பாடலும்’ என்று கூறுகிறார் ஆசிரியர். இதற்கு உரையெழுதும் அடியார்க்கு நல்லார், ‘யாழாசிரியனாகிய நாரத முனிவன் யாழின் ஏழிசையிசையின்பமும் தெரியப்பாடும் பாடலும்,’ என்று வீணைக்கு யாழென்றே பொருள் தருகிறார். பத்திமைப் பதிகங்களில் வீணையை இறைவனுடைய ஆடலுக்குதவு கருவியாகவும் அவரே இசைக்கும் கருவியாகவும் முன்வைப்பவர் காரைக்கால் அம்மை. அம்மையின் இடுகாட்டு ஆடலிறைவன், சச்சரி, கொக்கரை, தக்கை, தகுணிச்சம், துந்துபி, தாளம், வீணை, மத்தளம், கரடிகை, தமருகம், குடமுழா, மொந்தை என்று பற்பல இசைக் கருவிகளை இசைத்த வண்ணம், ஒப்பற்றவராக ஒப்பில்லா நடனத்தை ஆடிக் காட்டுகிறார். ஏழாம் நூற்றாண்டுத் தமிழகத்தில் புழக்கத்திலிருந்த பல்வேறு இசைக்கருவிகளை ஆவணப்படுத்தும் அப்பரும் சம்பந்தரும் வீணைக்குச் சிறப்பிடம் தந்தனர். காப்பியக் காலம் தாண்டி பத்திமைக் காலத்துள் தமிழகம் நுழையும் காலக்கட்டத்தில், சங்ககாலந்தொட்டுச் சிறப்புடை நரம்புக் கருவியாக இருந்த யாழின் பயன்பாடு குறைந்து வீணை ஏற்றம் பெற்றதையே இலக்கியச் சான்றுகள் தெரிவிக்கின்றன. தலையாலங்காட்டுத் தலைவனை நாவுக்கரசர், ‘பண்டளவு நரம்போசைப் பயனை’ (06.079.09) என்று பாடியது இதை உணர்த்தவேபோலும். பண்டை நாள்தொட்டுத் தமிழ்மண்ணில் ஒலித்த யாழிசையின் பயனென்று யாழைச் சிறப்பித்தது, வீணைநோக்கி மாற்றம்பெறும் புதிய வழக்கத்தை மெல்லிழையெனக் கூறுவதாகத் தெரிகிறது. பின்னும், யாழ் கோயிலிசையின் பகுதியாகத் தொடர்ந்ததைச் சோழர்காலக் கல்வெட்டுத் தரவுகள்மூலம் தம் ‘சோழர் கால ஆடற்கலை’ நூலில் தெளிவுபடுத்துகிறார் டாக்டர் இரா. கலைக்கோவன். பதிக ஆசிரியர்கள் இறைவன் தாமே இசைப்பதாகக் கருவிகள் பலவற்றை இயம்பினாலும், அவர் கைளிலிடம்பெற்றுச் சிற்பங்களில் பெருமதிப்பு பெறுபவை தமருகமும் உடுக்கையும் வீணையுமே. கழுகுமலையில் மட்டுமே சிவபெருமான் மத்தளம் வாசிக்கிறார். தமருகம் இறைவன் திருக்கைகளில் ஏந்தும் பலவற்றுள் ஒன்றாயிருக்கிறது. வீணையோ, இறைவன் கைக்கொண்டிசைக்கும் முதன்மைக் கருவியாக மாறுவதைப் பதிகங்கள் உணர்த்த, சிற்பங்கள் உறுதி செய்கின்றன. இறைவன்மட்டுமே இசைத்ததா வீணையெனில், ‘குடமுழவம் வீணை தாளங் குறுநடைய சிறுபூதம் முழக்க’ (06.004.05) என்று சிறுபூதம் வீணை முழக்கியதையும் அப்பர் வரிகளால் அறியமுடிகிறது. சிவபெருமான்பால் அளவற்ற அன்பையும் அவர் அருளின்பால் நெகிழ்வையும் ஒவ்வொரு பதிகத்திலும் உணர்த்திய அப்பர், வீணாதரராகத் தம்மிறைவனை உருகியுருகிப் போற்றுவது படிப்போரை மயக்கும் கன்னல்சாறு. தகவல்களை ஒழுங்குமுறையில் கோத்துக் கோத்துத் தரும் அப்பருக்கேயுரிய பாங்கில் வீணையேந்திய சிவனாரைப் பதிகவழியில் பார்ப்போம். திருவதிகை வீரட்டானத்தில் ஒரு கையில் மான்குட்டியும் ஒரு கையில் மழுவுமேந்திப் பாம்பணிந்த இறைவன், மற்றொரு கையில் வீணையைக் கொண்டார்; திருமறைக்காட்டில் அங்கையுளனலும் தம்கையில் வீணையும் வைத்தார் என்று சிவன் கையில் முதலில் வீணையைத் தந்தார் நாவுக்கரசர். கையில் வீணையேந்திய பெம்மான் எந்தக் கையில் வைத்தார் என்ற ஐயத்திற்கு விடைவைத்தார் திருப்புறம்பயத்தில். ‘விரையேறு நீறணிந்தோ ராமைபூண்டு வெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்தி’ என்று குறிப்பாக வீணையேந்தியதைச் சொன்னார். ஆக, இடக்கையிலேந்தி வலக்கையால் மீட்ட ஆயத்தமாகிவிட்டார் இறைவன். இங்கு ஒரே பாடலில், அரையேறு மேகலையாள் பாகன்- அம்மையப்பர், ஆரிடத்தி லாட லமர்ந்த ஐயன் - இடுகாட்டில் ஆடுபவர், புரையேறு தாமேறியவர் - விடையேறுமிறைவன் என்ற மூன்று இறைத்தோற்றங்களையும் காணமுடிகிறது. இறைவன் இடக்கையிலேந்திய வீணை எப்படிப்பட்டது? மாசில் வீணையென்று வேறொரு சூழலில் சொன்னவர் வீணைதரும் ஒலியை ‘மழலை வீணையர்’- மழலையின் இன்மொழியையொத்ததென்று சுவைபடக் கூறினார். யாழிசையினும் மழலைச் சொல்லை மெச்சிய வள்ளுவரைத் தொடர்ந்து வாகீசர், வீணையின் இன்னொலியை மழலையின் இன்மொழியோடு பொருத்திப் பாடினார். பழந்தமிழ் இலக்கியங்களைச் சுவைத்துணர்ந்த அவருடைய திறனை இது வெளிப்படுத்துகிறது. மழலை வீணையை இடக்கையிலேந்தியாகிவிட்டது. வாசிப்பது எப்படி? முறையான பயிற்சியே ஒருவரைச் சிறந்த கலைஞராக்குகிறது. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பது தமிழால் சைவம் வளர்த்த நாவுக்கரசர் அறியாததா? அதனால்தான், பண்கள் நிறைந்தொலிக்கும் வீணையைச் சிவபெருமான் பயின்றதை அடுத்தநிலையில் பார்க்கிறோம்- 'பண்ணார்ந்த வீணை பயின்ற விரலானே,’ என்று வீணைபயின்ற இறைவனின் விரல்களை அன்புடன் எண்ணியவர் (04.006.06), திருவதிகை வீரட்டத்தில், வீணையைப் பயின்றவன் கோயிலைக் காணாது கண்கள் எங்ஙனம் துயில்கொள்ளுமென்று கசிந்துருகினார். நரம்புக்கருவியில் பயிற்சிபெற்ற கட்டத்தில் சிவபெருமானை, இசையோடியைந்து இனிமைதரும் வகையில் வீணை மீட்டக்கூடிய கையவன் (‘வீணையோ டிசைந்துமிகு பாடல் மிக்க கையவன்’) எனப் புகழ்ந்தார். அவர் அடுத்தநிலையடைந்து, வீணையில் வல்லவரானது திருமறைக்காட்டில். 'கைகிளரும் வீணை வலவன் கண்டாய் (06.23.02)’ என்று சிறுகுழந்தையின் துள்ளலோடும் பெற்றோரின் மகிழ்வோடும் கைத்தட்டி ஆரவாரித்தார் நம் அடியார். வீணையேந்திய சிவனாரைக் குறிக்கையிலும் அவருடைய மயக்கும் முறுவலைப் பேசத் தவறவில்லை அப்பர். ‘முற்றந் தோறுந் தெறித்ததொரு வீணையராய்ச் செல்வார் தம்வாய்ச் சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ’ என்று நோக்காதே மாயம் பேசிப்போன திருவலம்புரத்தானை எண்ணித் தவித்தார். நாவுக்கரசரின் பாடல்கள்வழி, வீணையைக் கையிலேந்தி- கருவியிசைப் பயின்று- நன்கு பழகி-இசையோடியைந்து வாசிக்கும் தகுதிபெற்று- அதில் வல்லவரானார் இறைவன். வல்லமை எய்தியபின், வீணையேந்திய திருவுருவைக் கொண்டே உலகோரின் தனிநாயகராகச் சிவனைக் காட்டினார் அப்பர். பெருங்கடல் மூடிப் பிரளயம் கொண்டு பிரமனும் கருங்கடல் வண்ணனும் இறக்க, அவர்கள் உடலையேந்தி கங்காளராக உலகை மீண்டும் தோன்றச் செய்ய நல்வீணை வாசிப்பாரென்று மும்மூர்த்திகளில் முதல்வனாகத் தம்மிறைவனை உயர்த்தி வைத்தார் (04.112.07). மூவர்க்கும் முதலான மூர்த்தியாகச் சைவத்தின் தலைமகனை உயர்த்தியவர், ‘தாமரையான் செங்கண்மால் தானே கண்டாய்’ (06.23.03) என்று, மூவுருவும் ஓருருவே அவ்வுருவும் சிவவடிவேயென்று அருதியிட்டுச் சொன்னது ஏழாம் நூற்றாண்டுப் பத்திமை வரலாற்றில் சைவம் உச்சம்தொட்டதைப் பறைசாற்றும் ஆவணப் பாடல். அப்பரின் பதிகங்கள் காட்டிய வீணையில்வல்ல சிவபெருமானுக்குச் சிற்பங்களில் சிறப்பிடம் தந்து காலங்கடந்து நிற்கச் செய்த முதற்பெருமை இரண்டாம் நரசிம்மரான இராஜசிம்மரையே சாரும். கடல்மாமல்லையில் தர்மராஜ ரதமென்று தவறான பெயரால் இன்றளவும் அழைக்கப்படும் ‘அத்யந்தகாம பல்லவேசுவர கிருகத்தில்’, அத்யந்தகாமன் என்ற பல்லவமன்னர் அமைத்ததுதான் தமிழகத்தின் முதல் வீணாதரர் சிற்பம். கடற்கரைக் கோயிலையும் காஞ்சி கயிலாயநாதர் கோயிலையும் கட்டிய இராஜசிம்மர்தான் மகாமல்லன் என்றும் விருதுப் பெயர்கொண்ட அத்யந்தகாமன். இராஜசிம்மரின் முதல் வீணாதரரும் அவருடைய மற்றொரு கலைப்பெட்டகமான காஞ்சி கயிலாசநாதர் கோயில் வீணைவல்லவரும் வெளிப்படுத்தும் அழகையும் மிடுக்கையும் கண்டால், நாயன்மார் நினைந்துருகிப் படம்பிடித்துக் காட்டிய நற்றமிழ் வடிவமே ஊக்கியாக இருந்திருக்கவேண்டுமென்று புரியும். கலைவல்ல பல்லவச்சிற்பிகள், அரசர்கள் படைக்கவிரும்பியதைச் செதுக்கிக் கல்லிலே கடவுளை உயிரூட்டிக் காட்டினர். பல்லவர்களைத் தொடர்ந்து, முற்சோழரையும் கவர்ந்தவர் வீணாதரர் என்பதையே கோயிற்சிற்பங்கள் மெய்ப்பிக்கின்றன. முதல் ஆதித்தரும், முதல் பராந்தகரும் பெருவிழைவுடன் வீணையேந்தியவரை நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும் படைத்தனர். வீணாதரர், குடந்தை நாகேசுவரர் “கும்பகோணம் நாகேசுவரர் கோயில் விமானத்தின் வீ̀ணாதரக்கோலம் இதுவரை கிடைத்திருக்கும் வீணாதர சிவமூர்த்தங்களிலேயே மிகச் சிறந்ததும், அழகு பொலிந்ததுமாகும்,” என்று தம் ‘சோழர் கால ஆடற்கலை’ நூலில் குறிப்பிடுகிறார் டாக்டர் இரா. கலைக்கோவன். அப்பர் தம் பாடல்களில் பதிவுசெய்த புராணச் செய்திகளனைத்தும் தமிழ்ச்சமூகத்தில் பல நூற்றாண்டுகளாகப் பரவியிருந்தவையே. செவிவழி வழக்கிலிருந்த செய்திகள் பண்ணமைப் பாடல்களாக ஒலிக்க ஒலிக்க, மக்கள் ஈர்க்கப்படுவது இயல்பு. அப்பாடல்களின் ஈர்ப்பால் வடிவம்பெற்ற சிற்பங்கள் அழியாநிலையில் சமயம் வளர்க்கும் சின்னங்களாகவும் வரலாற்று ஆவணங்களாகவும் திகழ்வது கோயில்களில்தான். இன்று நாம் செல்லும் கோயில்களும் அதிலுறையும் இறைவடிவங்களும் கண்கவர் சிற்பங்களும் நிற்பது இந்த நீண்ட நெடிய வரலாற்றைத் தாங்கித்தான். அவற்றை வழிபாட்டுத் தலங்களாக வணங்குவதும் வரலாற்றுப் பெட்டகங்களாகப் போற்றுவதும் நம் கைகளில். நன்றி: டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், திருச்சிராப்பள்ளி. துணைநூல்கள்- 1. இளங்கோவடிகள், சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்குநல்லாருரையும், பதிப்பு 1920 2. டாக்டர் இரா. கலைக்கோவன், சோழர் கால ஆடற்கலை 3. டாக்டர் இரா. கலைக்கோவன், பேரறிவாளர், வரலாறு.காம் 4. டாக்டர் இரா. கலைக்கோவன், மு. நளினி, மாமல்லபுரம் குடைவரைகள்- ஒப்பாய்வு 1,2,3,4 5. பேராசிரியர் கு. சுந்தரமூர்த்தி, சங்க இலக்கியங்களில் சமய நோக்கு |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |