http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[184 Issues]
[1822 Articles]
Home About US Temples Facebook
Issue No. 184

இதழ் 184
[ மே 2025 ]


இந்த இதழில்..
In this Issue..

Sanjusangen-do – Kyoto, Japan
Shinto (神道) – Japan’s Indigenous Religion
Buddhism in Japan
தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் – ஒப்பீடு 2
வடகுடிப் பஞ்சநதீசுவரர் கோயில் -2
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் - 6
ஜப்பானியப் பழங்குறுநூறு - 100 (மீண்டு(ம்) வருமோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 99 (துயர்சூழ் உலகில் தனிமை)
இதழ் எண். 184 > கலையும் ஆய்வும்
தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் – ஒப்பீடு 2
இரா.கலைக்கோவன், மு.நளினி

கருவறை

மண்டபக் குடைவரைகளில் திருமலை, ஆனையூர், தங்கல், மலையடிக்குறிச்சி, கழுகுமலை, வீரசிகாமணி எனும் ஆறு குடைவரைகள் மண்டபத்திற்குள் பிதுங்கி அமைந்த கருவறை கொண்டுள்ளன. பிற ஆறும் பின்சுவரோடு ஒட்டி அமைந்த கருவறை பெற்றுள்ளன. தாங்குதளம் கொண்ட கருவறைகளை ஐந்து குடைவரைகள் கொண்டிருந்தாலும் வீரசிகாமணியில் ஜகதி, குமுதம், கண்டம் மட்டுமே உறுப்புகளாகக் காட்டப்பட்டிருப்பதால் அத்தாங்குதளத்தை இன்ன வகையினது என அடையாளப்படுத்த முடியவில்லை.



சொக்கம்பட்டியில் மேற்குக் கருவறை பாதபந்தத் தாங்குதளம் பெற்றுள்ளது. ஆனால், கிழக்குக் கருவறையின் கீழ்த் தாங்குதளம் உருவாகவில்லை. திருமலைப்புரம், மூவரைவென்றான் கருவறைகள் பிரதிபந்தத் தாங்குதளம் கொண்டுள்ளன எனினும் இரண்டிலுமே பிரதிமுகங்கள் வடிவம் பெறவில்லை. மலையடிக்குறிச்சிக் கருவறை பாதபந்தத் தாங்குதளம் பெற்றுள்ளது. தென்தமிழ்நாட்டுக் குடைவரைகளில் கருவறைத் தாங்குதளத்திற்கு மேலமைந்த வேதிக்கண்டத்தை மலையடிக்குறிச்சி, மூவரைவென்றான் எனும் இரண்டு இடங்களில் மட்டுமே காணமுடிகிறது.



கருவறை முன்சுவர் அணைவுத்தூண்கள் பெரும்பாலும் உறுப்பு வேறுபாடற்ற நான்முகமாகவே உள்ளன. மூவரை வென்றானில் இடைத்தூண்கள் நான்முகமாக இருந்தபோதும் திருப்பத்தூண்கள் சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பில் உள்ளன. பாறைக்குளத்தில் நிறைவடையாத நிலையில் உள்ள போதும் தூண்களில் சதுரம், கட்டு, சதுரம் என்ற பிரிப்பைப் பார்க்கமுடிகிறது.



வீரசிகாமணியில் கருவறை முன்சுவர் அணைவுத்தூண்கள் நான்குமே முச்சதுர, இருகட்டினவாய் உள்ளமை குறிப்பிடத்தக்கது. கோளக்குடியிலும் நாமக்கல் நரசிம்மர் குடைவரையிலும் இத்தகு தூண்களைக் காணமுடிகிறது. சொக்கம்பட்டிக் கருவறைத் தூண்கள் தானம், தாமரைக்கட்டு நீங்கலாக ஏனைய அனைத்து உறுப்புகளும் பெற்ற நான்முகங்களாக இருப்பதுடன், சட்டத்தலையும் கொண்டுள்ளமை சிறப்பாகும். திருநந்திக்கரையில் நிறைவடையாத நிலையில் சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பைப் பார்க்கமுடிகிறது. புதுப்பட்டிக் கருவறை முன்சுவர் தூண்களின்றிக் காட்டப்பட்டுள்ளது.



அணைவுத்தூண்களால் கருவறை முன்சுவரில் ஏற்படும் வாயிலடுத்த பிரிவுகளில் காவலர் அல்லது அடியவர் சிற்பங்கள் அமைப்பது குடைவரைக் கலை மரபாக இருந்துவருகிறது. தென்மாவட்டக் குடைவரைகள் சிலவற்றில் இப்பிரிவுகள் சிற்பங்களின்றி வெறுமையாக விடப்பட்டுள்ளன. மூவரைவென்றான், திருநந்திக்கரை, தங்கல், கழுகுமலை, புதுப்பட்டி, ஆண்டிச்சிப் பாறைக் குடைவரைகள் இவ்வகையின.



மலையடிக்குறிச்சியில் உள்ள சுவர்க்கோட்டங்களை அணைத்துள்ள மெல்லிய நான்முக அரைத்தூண்கள் உறுப்பு வேறுபாடு அற்றனவாய்க் கம்பின் மீதிருந்து எழுந்து போதிகையற்ற நிலையில் கூரையுறுப்புகளைத் தாங்கி, கபோதமும் பூமிதேசமும் பெற்று, அக்கோட்டங்களைத் தனிச் சிறப்பிற்கு உரியனவாக்கியுள்ளன. இத்தகு அலங்கரிப்புப் பெற்ற கோட்டங்கள் வேறு தென்மாவட்டக் குடைவரைகளில் இடம்பெறாமை குறிப்பிடத்தக்கது.



திருமலையில் கோட்டங்களின் கீழ்ப்பகுதியில் அளவில் சிறியனவாய்க் காணப்படும் பூதக் காவலர்கள் தமிழ்நாட்டுக் குடைவரைகள் எவற்றிலும் காணமுடியாத அதிசயங்கள். விழிஞத்தில் வாயிலின் வடபுறத்துள்ள கோட்டம் சிவபெருமானைக் கொள்ள, இடக்கோட்டத்தில் காவலராகவோ, அடியவராகவோ கொள்ளவியலாத இரண்டு வடிவங்கள் உள்ளமையும் மரபு விலக்கமாக எண்ணத்தக்கன.



செவல்பட்டி, வீரசிகாமணி, திருமலைப்புரம், ஆனையூர், சொக்கம்பட்டி ஆகிய குடைவரைகளின் கருவறைச் சுவர்க் கோட்டங்களில் காணப்படும் சிற்பங்களுள் சில, சிவபெருமானின் கருவிகளுக்குத் தரப்பட்ட மானுடவடிவங்களாக உள்ளன. வீரசிகாமணியில் வலக்காவலர் சூலத்தேவராகவும் இடக்காவலர் மழுவடியாராகவும் சித்திரிக்கப்பட்டுள்ளனர். சொக்கம்பட்டியில் மேற்குக் கருவறையின் வடக்குக் காவலர் சூலத்தேவராகக் காட்டப்பட்டுள்ளார். செவல்பட்டியின் தென்கோட்டக் காவலர் இடக்கையில் மழுவை உயர்த்திப் பிடித்திருப்பதும் அக்கருவறையின் இரண்டு காவலர்களுமே இடுப்பில் இருந்து சரிந்து வளைந்திறங்கும் மணிச்சரம் கொண்டிருப்பதும் பாண்டியர் பகுதியின் மாறுபட்ட படப்பிடிப்புகள்.



கருவறை முன்சுவர்த் தூண்கள் மேலுள்ள போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகளாக உத்திரம், வாஜனம், கூரை இவை அமைவதே பொதுவான மரபாக இருக்கையில், தென்மாவட்டக் குடைவரைகள் சிலவற்றில் மாறுபட்ட உருவாக்கங்களையும் காணமுடிகிறது. தங்கலிலும் பாறைக்குளத்திலும் சுவர்த் தூண்கள் போதிகையின்றிக் கூரையுறுப்புகளைத் தாங்குகின்றன. மலையடிக்குறிச்சியில் வாஜனத்தை அடுத்து வெறுமையான வலபி வளைமுகமாகக் காட்டப்பட்டுள்ளது. சொக்கம்பட்டியின் இரண்டு கருவறைகளிலும் வலபி இடம்பெற்றுள்ளமையுடன், பூதவரியும் கொண்டுள்ளமை பெருஞ் சிறப்புக்குரியதாகும். கூரை யின் இறக்கமாகக் கூடுவளைவுகளுடன் கபோதமும் மேலே பூமிதேசமும் காட்டப்பட்டுள்ளமை சொக்கம்பட்டியின் கூடுதல் சிறப்பு. தென்மாவட்டக் குடைவரைகளில் பூதவரி வலபியும் கூடுவளைவுகளுடன் கபோதமும் பெற்றுள்ள கருவறைகள் சொக்கம்பட்டியில் மட்டுமே உள்ளன.

கருவறை வாயிலின் மேல் அழகிய மகரதோரணம் பெற்றிருக்கும் ஒரே தென்மாவட்டக் குடைவரையாக மலையடிக்குறிச்சியைக் குறிப்பிடலாம். இது கோளக்குடியில் காணப்படும் மகரதோரணத்தைவிடப் பல மடங்கு செழுமையானதாகும். தாய்ப்பாறையிலான இலிங்கத்திருமேனிகள் உள்ள கருவறைகளில் முழுக்காட்டு நீர் வாங்கப் பள்ளமும் அந்நீர் வெளியேற வடிகாலமைப்பும் உள்ளன. செய்லிங்கம் உள்ள கருவறைகளில் மூவரைவென்றான் தவிர பிறவற்றில் வடிகால்களை மட்டுமே காணமுடிகிறது. விழிஞம், புதுப்பட்டி, சொக்கம்பட்டி, குறத்தியறைக் கருவறைகளில் பள்ளங்களோ, வடிகால்களோ காணுமாறு இல்லை.

கருவறைக் கூரையை வாஜனம் அணைப்பது பெரும்பாலான குடைவரைகளில் காணப்படும் அமைப்பாகும். அது போலவே முகமண்டபக் கூரையை உத்திரம், வாஜனம் இரண்டும் இணைந்த நிலையிலோ அல்லது வாஜனம் மட்டுமே தனித்த நிலையிலோ அணைவு செய்துள்ளமையையும் காணமுடிகிறது. சில குடைவரைகளில் மண்டபப் பின்சுவர் பக்கச் சுவர்களைத் தொடுமிடத்திலும் சில குடைவரைகளில் பக்கச் சுவர்கள் முகப்பைத் தழுவுமிடத்திலும் உறுப்பு வேறுபாடற்ற நான்முக அரைத்தூண்களைப் பெற்றுள்ளன.

கல்வெட்டுகள்

திருமலை, வீரசிகாமணி, திருமலைப்புரம், திருநந்திக்கரை, மலையடிக்குறிச்சி ஆகிய ஐந்து குடைவரைகளிலும் கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. எனினும், குடைவரையை உருவாக்கிய பெருமகனாரை அடையாளப்படுத்தும் கல்வெட்டு மலையடிக் குறிச்சியில் மட்டுமே கிடைத்துள்ளது. கல்வெட்டுகளே இல்லாத குடைவரை வளாகங்களாகக் குறத்தியறை, விழிஞம், சிவகிரி, பாறைக்குளம், புதுப்பட்டி, வலசு, சொக்கம்பட்டி, ஆனையூர், செவல்பட்டி, ஆண்டிச்சிப்பாறை இவற்றைக் குறிக்கலாம். தங்கலிலும் மூவரைவென்றானிலும் கழுகுமலையிலும் குடைவரை தவிர்த்த பிற இடங்களில் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

குடைவரைகளின் காலம்

கல்வெட்டுகள் இல்லாத நிலையில் சிற்பங்களும் கட்டமைப்புக் கூறுகளும் மட்டுமே குடைவரைகளின் காலத்தை முடிவு செய்ய உதவ முடியும். இந்நூலில் ஆராயப்பட்டுள்ள பத்தொன்பது குடைவரைகளுள் வலசு, புதுப்பட்டி, திருமலைப்புரம் (இரண்டாம் குடைவரை), சிவகிரி இவற்றில் உள்ள குடைவரைகளில் சிற்பங்களோ, கட்டமைப்புக் கூறுகளோ இடம்பெறாமையின் காலத்தை உய்த்துணர வாய்ப்பில்லை. எஞ்சிய பதினைந்தில், மலையடிக்குறிச்சிக் குடைவரையின் காலம் அங்குள்ள கல்வெட்டின் அடிப்படையில் பொ. கா. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியாக (பொ. கா. 637) உறுதி செய்யப்பட்டுள்ளது.

வீரசிகாமணி, செவல்பட்டி, திருமலைப்புரம், விழிஞம், குறத்தியறை, ஆண்டிச்சிப்பாறைக் குடைவரைகள் ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தனவாகலாம். மூவரைவென்றான், பாறைக்குளம், கழுகுமலை, திருநந்திக்கரைக் குடைவரைகளை எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதிக் குடைவரைகளாகக் கருதமுடியும். திருமலை, ஆனையூர், திருத்தங்கல், சொக்கம்பட்டிக் குடைவரைகளை எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே இருத்த முடிகிறது. இந்தக் காலவகைப்பாட்டிற்குப் பல்லவர் குடைவரைகள், தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள், புதுக்கோட்டை மாவட்டக் குடைவரைகள், மதுரை மாவட்டக் குடைவரைகள் தொடர்பான தரவுகள் பெருந்துணையாயின.

முடிவுரை

இந்நூலில் இடம்பெற்றுள்ள பத்தொன்பது குடைவரைகளில் திருமலைக் குடைவரை உள்ள மலையில் மட்டுமே வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட ஓவியங்களையும் பழந்தமிழ்க் கல்வெட்டுகளையும் குகைத்தளப் படுக்கைகளையும் காணமுடிகிறது. சமண முனிவர்கள் வாழ்ந்த இம்மலையில் பொ. கா. எட்டாம் நூற்றாண்டளவில் சைவத்தை நிலைநிறுத்தும் பணி முழுவீச்சில் இருந்தமைக்கான அடையாளமாகவே மலைக்கொழுந்தீசுவரர் குடைவரை காட்சிதருகிறது.

வீரசிகாமணி மலையில் குகைத்தளங்களும் படுக்கைகளும் இருந்தபோதும் பழந்தமிழ்க் கல்வெட்டுகள் இதுகாறும் கிடைத்தில. படுக்கைகளின் அமைப்பு வீரசிகாமணியும் சமண முனிவர்களின் வாழிடமாக இருந்தமையை உறுதிப்படுத்துகிறது. கழுகுமலையில் படுக்கைகளோ, பழந்தமிழ்க் கல்வெட்டுகளோ இல்லாதபோதும், சமணச் சிற்பங்களும் அவை தொடர்பான வட்டெழுத்துக் கல்வெட்டுகளும் பலவாகக் கிடைத்துள்ளன. சில நூற்றாண்டுகளேனும் கழுகுமலை சமணரிடம் இருந்தமையை இக்கல்வெட்டுகளும் சிற்பங்களும் நிறுவினாலும், ஏறத்தாழ அதே காலகட்டத்தில் அங்குச் சைவமும் எழுச்சியுடன் விளங்கியமையை வெட்டுவான்கோயில் நிறுவுகிறது. கழுகுமலைக் குடைவரையின் எப்பகுதியிலும் சிற்பங்கள் இருந்து அழிந்தமைக் கான தடயங்கள் இன்மையின் அக்குடைவரை எச்சமயத்தவரால் அகழப்பட்டது என்பதை உறுதி செய்யக்கூடவில்லை.

மலையடிக்குறிச்சிக் குடைவரை உள்ள குன்றில் இதுநாள்வரை படுக்கைகளோ, பழந் தமிழ்க் கல்வெட்டுகளோ கிடைத்தில. குடைவரை வளாகத்திலுள்ள கல்வெட்டும் ‘கல்திருக்கோயில்’ என்று குடைவரையைக் குறிப்பிடுகிறதே தவிர, எந்த இறைக்காக அது எடுக்கப்பட்டது என்பதைப் புகலவில்லை. முகமண்டபப் பின்சுவர், கருவறை முன்சுவர் இவற்றில் இருந்த சிற்பங்கள் சிதைத்து அகற்றப்பட்டுள்ளன. கருவறையில் செய்லிங்கம் உள்ளது. இங்கு இருக்கும் சான்றுகள் மட்டுமே கொண்டு, இக்குடைவரையின் சமய மூலத்தை உறுதிபட அறியமுடியவில்லை. எனினும், கருவறை முன்சுவரிலுள்ள காவலர் சுவடுகள் இக்குடைவரையை சிவபெருமான் குடைவரையாகக் கொள்ளத் தூண்டுவதையும் மறுக்கமுடியாது. மூவரைவென்றான், வலசு இவ்விரண்டு இடங்களிலும் இதுகாறும் சமணர் வாழிடங்கள் அறியப்படவில்லை.

இந்நிலையில், தென்மாவட்டங்களில் பரவலாக இடம்பெற்றுள்ள இக்குடைவரைகள் பொ. கா. ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளில் சைவம் இங்குத் தழைத்திருந்தமையையும் வைணவம் வடதமிழ்நாடு போலவே சுருங்கிய அளவில் புரக்கப்பட்டமையையும் தெளிவுற எடுத்துரைக்கின்றன.

பழந் தமிழ்க் கல்வெட்டுகள் கிடைக்காத நிலையிலும் படுக்கைகளின் இருப்பால் வீரசிகாமணியையும் திருமலைக்கு இணையாகப் பழஞ் சமணர் வாழிடமாகவே கொண்டோமாயினும் சமணத்தின் செல்வாக்கு மிகச் சுருங்கிய அளவிலேயே தென்மாவட்டங்களில் திகழ்ந்தமை வெளிப்படுகிறது. சமணம் எழுச்சியுற்றிருந்த இடைக்காலத்தில் கழுகுமலையில் சைவமும் இணையான செல்வாக்குடன் இருந்தமையை அங்குள்ள குடைவரையும் ஒருகல் தளியும் உணர்த்துகின்றன.

பிற குடைவரைகள் போலன்றி முற்றிலும் சுண்ணாம்புப் பாறையில் உருவாகியிருப்பதால் புதுப்பட்டிக் குடைவரை தனித்துவம் பெறுகிறது. கோளக்குடி, குன்றக்குடி, கோகர்ணம் போல் நந்திக்கரையில் குடைவரைக்குக் கிழக்கில் மலைச்சரிவின் கீழ்ப் பகுதியில் தனிக்கோட்ட இலிங்கம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. வேறெந்தக் குடைவரை வளாகத்திலும் இத்தகு அமைப்பு இல்லை. வீரசிகாமணியில் மலைக்கு மேலுள்ள குகைத்தளம் ஒன்றில் சகஜானந்தரின் பாதங்கள் வெட்டப்பட்டுள்ளன.

இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.