http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[184 Issues]
[1822 Articles]
Home About US Temples Facebook
Issue No. 184

இதழ் 184
[ மே 2025 ]


இந்த இதழில்..
In this Issue..

Sanjusangen-do – Kyoto, Japan
Shinto (神道) – Japan’s Indigenous Religion
Buddhism in Japan
தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் – ஒப்பீடு 2
வடகுடிப் பஞ்சநதீசுவரர் கோயில் -2
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் - 6
ஜப்பானியப் பழங்குறுநூறு - 100 (மீண்டு(ம்) வருமோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 99 (துயர்சூழ் உலகில் தனிமை)
இதழ் எண். 184 > கலையும் ஆய்வும்
வடகுடிப் பஞ்சநதீசுவரர் கோயில் -2
அர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன்

விமானம்

தாங்குதளம்

பிரதிபந்தத் தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், பட்டையும் குளவும் பெற்ற தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், கபோதம், பூமிதேசம் என விளங்கும் பஞ்சநதீசுவரரின் இருதள வேசர விமானம் தாங்குதளத்திலிருந்தே சாலைப்பத்தி முன்தள்ளல் பெற்றுள்ளது. பிரதிவரியில் சிம்மயாளிகளுடன் வேழயாளிகளும் ஆங்காங்கே தென்படுவதுடன், மேற்கிலும் கிழக்கிலும் அழகிய யானைகளின் நடை. பிரதிவரித் திருப்பங்களிலுள்ள மகரவாய்களில் கத்தி, கேடயத்துடன் வெளிப்படும் வீரர்கள். சாலைப்பத்தியின் தாங்குதள ஜகதி கர்ணபத்திகளின் ஜகதியிலிருந்து வேறுபட்டுத் தாமரை வடிப்பாய் மலர்ந்துள்ளது. இந்த ஓர் உறுப்பு வேறுபாடு விமானத்தின் சாலைப்பத்திக்குத் தனியழகு தருகிறது.

சுவர்

விமானத்தின் நான்கு திசைச் சாலைப்பத்திகளுமே நான்முக அரைத்தூண்களால் தழுவப்பட்டுள்ளன. அனைத்துறுப்புகளும் பெற்ற இத்தூண்களில் ஒன்று தொங்கலில் ஆடல் சிற்பங்கள் கொள்ள, மற்றொன்றின் கட்டில் அழகிய யானைகள். பாலி, பலகை, வீரகண்டம் என முடியும் அணைவு, சுவர்த்தூண்களின் மேலுள்ள போதிகைகள் விரிகோணத்திலமைய, வலபியில் பூதவரி. பிற சோழர் கோயில்கள் போலவே வலபி மடிப்புகளில் வாஜனத்தில் கையிருத்தி எட்டிப்பார்க்கும் பூதங்களும் பிறபகுதிகளில் ஆடல், இசைக்கலைஞர்களாய்க் காட்சிதரும் பூதங்களும் அமைய, தெற்கு, மேற்கு, வடக்குச் சாலைப்பத்திகள் சட்டத்தலை நான்முகத் தூண்களின் தழுவலில் ஆழமான கோட்டங்கள் பெற்றுள்ளன. தூண்களின் மேலுள்ள கூரையுறுப்புகளையடுத் துள்ள தோரணம் சிதைந்துள்ளது.

கோட்டச் சிற்பங்கள்

தெற்குக் கோட்டம்

இக்கோட்டங்களில் தெற்கில் சோழர் கால ஆலமர்அண்ணல். மேற்கில் ஓவியவடிவில் விஷ்ணு. வடகோட்டம் வெறுமையாக உள்ளது. ஆலமர்அண்ணல் கோட்டத்திற்கு முன் பின்னாளில் உருவான செங்கல் கட்டமைப்பின் மேல் சுதையாலான ஆலமர்அண்ணல் தொகுதி. மலை மேல் வீராசனத்திலுள்ள அண்ணலின் வலப்பாதம் கீழே குப்புறப் படுத்துள்ள முயலகன் மேல். பின்கைகளில் பாம்பும் தீச்சுடரும் கொண்டுள்ள இறைவனின் தலைக்குப் பின் மரக்கிளைகள். அண்ணலின் வல முன் கை சின்முத்திரையில் இருக்க, இட முன் கையில் சுவடி. அவரது இருபுறத்துமுள்ள நான்கு முனிவர்களில் இருவர் கைக்கூப்பியிருக்க, ஒருவர் தலைக்கு மேல் கையுயர்த்தி வணங்குகிறார். மற்றொருவர் ஒரு கையைப் பதாகத்தில் கொண்டு ஒரு கையை முழங்கால் மீது இருத்தியுள்ளார். நால்வருள் இருவர் அர்த்தபத்மாசனத்திலும் மற்றவர் முழங்கால் மடித்தமர்ந்த நிலையிலும் உள்ளனர்.



தெற்குக் கோட்டத்தில் சோழச் செதுக்கலாய் இருக்கையில் இடப்புறம் திரும்பிய நிலையிலும் வலஒருக்கணிப்பில் வீராசனத்திலுள்ள ஆலமர்அண்ணலின் வலப்பாதம் தளத்தின் மீதிருக்க, இடக்கால் வலத்தொடை மேல். சடைப்பாரம், மகர, பனையோலைக் குண்டலங்கள், சவடி, சரப்பளி, முத்துமாலை, முப்புரிநூல், தோள், கை வளைகள், இடைச் சிற்றாடை பெற்றுள்ள அவரது வல முன் கை சின்முத்திரை காட்ட, இட முன் கையில் சுவடி. வலப் பின் கை சிதைந்திருக்க, இடப் பின் கை கடகத்தில். மரக்கிளைகளில் பொக்கணம், அக்கமாலைகள், கவரி. மரப்பொந்தில் எட்டிப் பார்க்கும் ஆந்தை.

இறைவன் கோட்ட இருபுறச் சுவர்த்துண்டுகளிலும் மேலே சிம்மம், புலி அமைய, இடைப்பகுதியில் வலப்புறம் கிம்புருடர்களும் இடப்புறம் இசைக்கலைஞர்களும் உள்ளனர். கலைஞர்களுள் முன்னவர் புல்லாங்குழல் இசைக்க, பின்னவர் கையில் தாளம். கீழ்ப்பகுதியில் இருபுறத்தும் முழங்கால் மடித்து அமர்ந்துள்ள முனிவர்கள். வலப்புறத்தாரின் வலக்கை தொடைமீதிருக்க, இடக்கை சிதைந்துள்ளது. இடப்புறத்தாரின் வலக்கை போற்ற, இடக்கை தொடையில். வண்ணப்பூச்சால் அண்ணலின் இருபுறச் சிற்பத்தொகுதிகளும் பொலிவிழந்துள்ளன.

மேற்குக் கோட்டம்

மேற்குக் கோட்டத்தின் இருபுறத்துமுள்ள ஆடவர் சிற்பங்களில் இரு கால்களையும் குறுக்கீடு செய்து சம்மணத்தில் உள்ள வடக்கர் சடைமகுடராய் நீள்செவிகளுடன் உள்ளார். கோட்டம் நோக்கி நிமிர்த்திய தலையரான அவர் கைகளிலுள்ள பொருளை இனங்காணக்கூடவில்லை. சமபங்கத்தில் நிற்கும் தெற்கரும் சடைமகுடரே. நீள்செவிகளுடன் பட்டாடை அணிந்து இடக்கையைக் கடியவலம்பிதமாகக் கொண்டுள்ள அவரது வலக்கை சிதைந்துள்ளது. அவரின் இடப்புறம் கீழே சிதைந்த வடிவம்.

வடக்குக் கோட்டம்

இது போலவே வடக்குக் கோட்ட இருபுறத்தும் சோழர் கால ஆடவர் சிற்பங்கள். இலலிதாசனமொத்த அமர்வில் சடைமகுடம், நீள்செவிகள், வலஞ்சாய்த்த முகம், அழகிய புன்னகை எனக் காட்சிதரும் கிழக்கர் பேரழகர். வலக்கையை இடத்தொடையில் இருத்தியுள்ள அவரது இடக்கை சிதைந்துள்ளது. எதிர்ப்புறம் பனையோலைக் குண்டலங்களுடன் இருகால்களையும் நீட்டி அமர்ந்துள்ள சடைமகுட ஆடவரின் கைகள் வணங்கிய நிலையில்.

கூரையுறுப்புகள்

வண்ணப்பூச்சுடனுள்ள கபோதம் சாலைப்பத்தியில் இரண்டும் கர்ணபத்திகளில் பத்திக்கு இரண்டுமெனச் சிம்மத்தலை கூடுவளைவுகள் பெற்றுள்ளது. அவற்றின் வளைவுகளில் அழகிய கொடிக்கருக்கு அலங்கரிப்பு, கூடுகள் சிலவற்றில் கந்தருவ, விலங்குத் தலைகள். கோண, நடுப்பட்டங்களும் சந்திரமண்டலமும் கபோதத்துக்கு கம்பீரத் தோற்றம் தருகின்றன. மேலே பூமிதேசம் வண்ணப்பூச்சுடன்.

கீழ்த்தள ஆரம்

பூமிதேசத்தையடுத்து வேதிகையும் அதன் மேல் கீழ்த்தள ஆரமும் உள்ளன. ஆரச்சாலை ஆறங்கம் கொள்ள, கர்ணகூடங்கள் இயல்பான அளவில் விளங்குகின்றன. ஆரச்சுவரில் பக்கத்திற்கு ஒரு குறுநாசிகை.

சாலைச் சிற்பங்கள்

ஆறங்கச்சாலையின் சுவர்க் கோட்டங்களில் கிழக்கில் முருகனும் மேற்கில் விஷ்ணுவும் வடக்கில் நான்முகனும் முன்கைகளைக் காக்கும், அருட்குறிப்புகளில் இருத்தித் தேவியருடன் சுகாசனத்தில் விளங்கத் தெற்கில் பக்கத்திற்கிரு முனிவர்களுடன் ஆலமர்அண்ணல். முருகனின் பின்கைகளில் சக்தி, வஜ்ரம் அமைய, விஷ்ணுவின் பின்கைகளில் சங்கு, சக்கரம். நான்முகன் அக்கமாலை, குண்டிகை ஏந்தியுள்ளார். முருகனின் தேவியர் ஒரு கையில் மலருடன் ஒரு கையைத் தொடையிலிருத்த, திருமகள் வலக்கையில் காக்கும் குறிப்புக் காட்டி, இடக்கையில் மலர் கொண்டுள்ளார். நிலமகள் ஒரு கையில் மலருடன் மற்றொரு கையைத் தொடையில் அமர்த்தியுள்ளார். நான்முகன் தேவியர் ஒரு கையில் அருட் குறிப்புக் காட்டி, மறுகையில் மலர் கொண்டுள்ளனர்.

சடைப்பாரத்துடன் மலைமீது வீராசனத்திலுள்ள ஆலமர்அண்ணலின் வல முன் கை சின் முத்திரையிலமைய, இட முன் கையில் சுவடி. மகர, பனையோலைக் குண்டலங்களுடன் பின்கைகளில் பாம்பு, தீச்சுடர் ஏந்தியுள்ள அவரின் இருபுறத்தும் பக்கத்திற்கு ஒருவராய் ஒரு கையைச் சின்முத்திரையிலும் மற்றொரு கையைத் தொடையிலுமிருத்திய அர்த்தபத்மாசன முனிவர்கள். கிழக்குச் சாலையில் மட்டும் இருபுறத்தும் அதன் சிகரத்தை ஒரு கை உயர்த்தித் தாங்குமாறு வானவர்கள். நான்கு சாலைகளின் பக்க நாசிகைகளுமே தலைப்பில் ஒருபுறம் பெண் மறுபுறம் ஆண் தலைகளைப் பெற்றுள்ளன.

கர்ணகூடச் சிற்பங்கள்

ஆரக் கர்ணகூடங்களின் சிறு நாசிகைகளிலும் ஆரச்சுவரின் குறுநாசிகைகளிலுமுள்ள வானவப் பெண்கள், ஆடவர், முனிவர் ஆகியோருள் பெரும்பாலோர் மகாராஜலீலாசனத்தில் காட்சிதர, மிகச் சிலரே இலலிதாசனம் அல்லது அர்த்தபத்மாசனத்தில் உள்ளனர். சிலர் ஏதேனும் ஒரு திசை நோக்கி முழு ஒருக்கணிப்புக் கொள்ள, பிறர் இலேசான ஒருக்கணிப்பிலோ, நேர்ப் பார்வையிலோ அமர்ந்துள்ளனர். கிழக்குக் கர்ணகூட முனிவர்களில் வடக்கர் வலக்கையை முழங்கால் மீதிருத்தி இடக்கையை நெகிழ்த்த, முழு ஒருக்கணிப்பிலுள்ள தெற்கரின் இடக்கை தொடையில்.

தெற்குக் கர்ணகூட வானவர்களில் கிழக்கர் வலக்கையால் போற்றியவாறு இடக்கையைத் தொடையிலிருத்த, மேற்கிலுள்ள விரிசடை வானவர் வலக்கையைக் கடகத்தில் கொண்டு இடக்கையை முழங்கால் மீது வைத்துள்ளார். மேற்குக் கர்ணகூடங்களில் வடபுறம் இலலிதாசனத்திலுள்ள வானவப்பெண் இடஒருக்கணிப்பில் வலக்கையைக் கடகத்திலிருத்தி, இடக்கையை உயர்த்தியுள்ளார். தென்புற ஆடவரின் இடக்கை கடகத்தில். வலக்கை தொடையில். வடக்குக் கர்ணகூடங்களில் கிழக்கு ஆடவர் இடது கையை மடியிலிருத்தி வலக்கையால் போற்ற, மேற்கு ஆடவர் வலக்கையை முழங்கால் மீதிருத்தி, இடக்கையில் மலர் கொண்டுள்ளார்.

குறுநாசிகைச் சிற்பங்கள்

கிழக்கு ஆரச்சுவர்க் குறுநாசிகைகளில் வடபுறம் அர்த்தபத்மாசனத்தில் உள்ள ஆடவர் வலக்கையைப் பதாகத்திலிருத்தி, இடக்கையைத் தொடையில் வைத்துள்ளார். வலக்கையில் மலருடனுள்ள தென்புற வானவப்பெண் இடக்கையை தொடையில் வைத்துள்ளார். தெற்குக் குறுநாசிகைகளில் கிழக்கு வானவப் பெண் தலையை இடஞ்சாய்த்தவாறு இடக்கையை மார்பருகே கொண்டு, வலக்கையைத் தொடையிலிருத்த, மேற்கு வானவர் இடக்கையை இடக்கால் மீதிருத்தி, வலக்கையை வல முழங்கால் மேல் கடகமாக்கியுள்ளார்.

மேற்குக் குறுநாசிகைகளில் வடபுற வானவப்பெண் ஒரு கையில் மலர் கொண்டு, ஒரு கையைத் தொடையிலிருத்த, தெற்கு ஆடவர் முழு வடஒருக்கணிப்பில் இடக்கையைத் தொடையில் இருத்தியுள்ளார். வலக்கையைக் காணக்கூடவில்லை. வடக்குக் குறுநாசிகைகளில் மேற்கர் கால்கள் மடக்கி அவற்றினிடையே நிறுத்தியுள்ள உருள்பெருந்தடியில் கைகளிருத்தித் தலை சாய்த்துள்ளார். கிழக்கர் வலப்பாதம் முழங்கால் மேலிருக்குமாறு இடக்காலை மடக்கி அமர்ந்தவாறு இடக்கையைத் தளத்திலிருத்தி, வலக்கையால் போற்றுகிறார்.

இரண்டாம் தளம்

கீழ்த்தளம் போலவே சாலை முன்தள்ளலுடனுள்ள இரண்டாம் தளத்தின் திருப்பங்களையும் சுவரையும் நான்முக அரைத்தூண்கள் தழுவியுள்ளன. அவற்றின் மேலுள்ள விரிகோணப் போதிகைகள் ஓவியத் தொங்கல்களால் அலங்கரிக்கப்பட்ட உத்திரம், வாஜனம், வண்ணப்பூச்சுப் பெற்ற பூதவலபி தாங்க, மேலே திசைக்கு நான்கு கூடுவளைவுகளுடன் கபோதம். தளத்தின் சாலைப்பத்தியின் முன் கீழ்த்தள ஆறங்கச் சாலையின் கிரீவம், சிகரம், தூபி காட்டப்பட்டிருப்பதால் சாலைப்பத்தி பார்வைக்கு மறைந்துள்ளது.

கிரீவம், சிகரம்

கபோதத்தின் மேல் பூமிதேசமும் வேதிகையும் அமைய, வேசர கிரீவசுவரில் எண்திசைக் காவலர்களின் சுதையுருவங்கள். கிரீவப் பெருநாசிகைகளில் கிழக்கில் முருகனும் மேற்கில் விஷ்ணுவும் வடக்கில் நான்முகனும் தேவியருடன் அமைய, தெற்கில் முனிவர்களுடன் ஆலமர்அண்ணல். கிரீவ கோணத்திசை நாசிகைகளில் ஒரு கை நெகிழ்த்தி ஒரு கையில் காக்கும் குறிப்புடன் நிற்கும் முனிவர்கள். வேதிகையின் நான்கு மூலைகளிலும் இரட்டை நந்திகளுக்கிடையில் வணங்கிய பூதம். சிகரம் உரிய அலங்கரிப்புகளுடன் தூபி பெற்றுள்ளது.

கிழக்கில் சுகாசனத்திலுள்ள முருகனின் பின்கைகளில் சக்தி, வஜ்ரம். முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில். அவரது இருபுறத்தும் சுகாசனத்திலுள்ள தேவியர் ஒரு கையில் மலர் கொண்டு, ஒரு கையால் அருள் செய்கின்றனர். தெற்கு கிரீவகோட்ட ஆலமர்அண்ணல் கையில் பாம்புடன் படுத்துள்ள முயலகன் முதுகின் மேல் வலப்பாதமிருத்தி வீராசனத்திலுள்ளார். முன்கைகளில் சின்முத்திரை, சுவடி. பின்கைகளில் பாம்பு, தீச்சுடர். பக்கத்திற்கு ஒருவராய் அர்த்தபத்மாசனத்திலுள்ள முனிவர்களின் ஒரு கை சின் முத்திரை காட்ட, மற்றொரு கை தொடையில். முருகன் போலவே அமர்ந்துள்ள மேற்கு விஷ்ணுவின் பின்கைகளில் சங்கு, சக்கரம். இருபுறத்துமுள்ள தேவியர் முருகன் தேவியர் போலவே அமர்ந்துள்ளனர். வடக்கு நான்முகன் முன்னவர் போலவே அமர்வும் முன்கைகளும் கொண்டு, பின்கைகளில் அக்கமாலை, குண்டிகை பெற்றுள்ளார். அவர் தேவியரும் முருகன், விஷ்ணு தேவியர் போலவே காட்டப்பட்டுள்ளனர்.

முகமண்டபம்

விமானத்தின் முன்னுள்ள முகமண்டபம் விமானச் சாலைப்பத்திக் கட்டமைப்பில் முன்தள்ளல், கோட்டங்களின்றி அமைந்துள்ளது. அதன் தென்சுவரை மூன்று நான்முக அரைத்தூண்கள் தழுவ, வடசுவரில் நான்கு தூண்கள். வடசுவரில் மகிடாசுரமர்த்தினியின் ஓவியம். முகமண்டபத் தாங்குதளத்தின் கிழக்குப் பிரதிவரியில் அதன் வாயிலின் இருபுறத்தும் விமானத் தாங்குதளத்தில் உள்ளாற் போலவே யானைகளின் நடை. அதன் தென்பிரதிவரியில் தமிழ்நாட்டுக் கோயில்களில் இந்நூலாசிரியர்கள் இதுநாள்வரை பார்த்திராத இரு புலிக்குட்டிகளின் விளையாட்டு. ஒன்று, கால்கள் மடக்கி அமர்ந்திருக்க, மற்றொன்று அதன் மேல் தாவியேறும் மெய்ப்பாட்டில், ஒரு காலைப் படுத்திருக்கும் குட்டியின் கழுத்திலும் மற்றொரு காலை அதன் முதுகிலும் இருத்தியுள்ளது. கண்களைக் கவர்ந்து கருத்தில் நிறையும் இவ்வழகுச் செதுக்கல் வடகுடியாரின் தனிச் சிறப்பாகும்.

இடைநாழிகை

அடுத்து விரியும் பின்னாளைய இணைப்பான இடை நாழிகை வடபுறம் உறுப்பு வேறுபாடற்ற துணைத்தளம் பெற்றிருந்தபோதும் அதன் தெற்கு, மேற்கு முகங்களில் அத்தகு அமைப்பு இல்லை. இருதிசைச் சுவர்களுமே தூண்களின் தழுவலின்றி வெற்றுச்சுவராக வளர்ந்து கூரையுறுப்புகளற்ற நிலையில் மேலோட்டமான கூடுவளைவுகளுடன் பின்னாளைய கபோதம் பெற்றுள்ளன. மேலே வேதிகை. வேதிகையின் மீது தெற்கிலும் வடக்கிலும் மேற்குப் பார்வையாகச் சுதை நந்திகள். இடைநாழிகையின் தென்புறமுள்ள அடைபட்ட வாயிலைச் சதுரபாதம், எண்முக-பன்முக உடல், தொங்கல், கட்டு, தாமரைக்கட்டு, பாலி-பலகை தவிர்த்த மேலுறுப்புகள் கொண்ட இரு தூண்கள் பக்கங்களில் தரங்க அமைப்புக் கொண்ட பூமொட்டுப் போதிகைகளுடன் தழுவியுள்ளன. வாயில் நிலைக்கால்களில் பாம்புப்படத்துடன் வளரும் தாமரைவரி, மேல் நிலையிலும் படர்ந்துள்ளது.

பெருமண்டபம்

இடைநாழிகையால் முகமண்டபத்துடன் இணைப்புப் பெற்றுள்ள பெருமண்டபம், முகமண்டபமொத்த தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர் பெற்றிருந்தாலும் கூரையுறுப்புகளில் வலபி வெறுமையாக உள்ளது. தூண்களின் கும்பம், பாலியில் அழகிய கருக்கணிகள். கபோதக் கூடுகளும் பூமிதேசமும் விமானம், முகமண்டப அமைப்பிலிருந்து மாறுபட்டுள்ளன. மண்டப வட, தென்சுவர்களில் பக்கத்திற்கு மூன்று உயரக் குறைவான ஆழமான கோட்டங்கள். தென்புற நடுக்கோட்டம் திருப்பணியின்போது சாளரமாகியுள்ளது. அதன் நிலைக்கால்கள் பாம்புப் படமும் அதையொட்டி வளரும் தாமரைவரியும் கொண்டுள்ளன. மேல்நிலையிலும் தாமரைவரி தொடர்கிறது. மகரதோரணத் தலைப்புடன் திகழும் வடகோட்டங்களும் தென்புற முதற் கோட்டமும் வெறுமையாக அமைய, இறுதிக் கோட்டத்தில் நின்ற கோலத்தில் நெடிய திருமேனியராய் இருபுறத்தும் பரவிய சடைப்புரிகளுடனான சடைமகுடம், மகரகுண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், தோள், கை வளைகள், இடைக்கட்டுடனான சிற்றாடையுடன் விளங்கும் சிவபெருமான். அவரது வல முன் கையில் காக்கும் குறிப்பு. இட முன் கையில் தலையோடு. பின்கைகளில் மழு, அக்கமாலை.



இக்கோட்டங்களின் கீழ்ப்பகுதியிலுள்ள செவ்வக அமைப்பிலான தளத்தில் கம்பு இடையிட்ட செதுக்கலாய் மேல், கீழ் நோக்கிய பெருந்தாமரை. அவற்றின் இருபுறத்தும் வளையத் தொங்கலுடன் பூச்சரம். ஆவுடையார் போல வடிவமைக்கப்பட்டுள்ள இத்தளங்கள் சிராப்பள்ளியிலுள்ள பிற முற்சோழர் கோயில்களில் இடம்பெறாமை குறிப்பிடத்தக்கது.





கட்டப்பட்ட காலத்தில் அல்லூர்ப் பசுபதீசுவரர் பெருமண்டபம் போலவே தனிக் கட்டுமானமாய் விளங்கிய இம்மண்டபம், பின்னாளில் ஏதோ ஒரு காரணத்தால் முகமண்டபத்துடன் இடைநாழிகையால் இணைக்கப்பட்டுள்ளது. பெருமண்டபத்தின் தென், வடதாங்குதளக் கிழக்குத் திருப்பங்களும் அவற்றிலுள்ள கல்வெட்டுகளும் பெருமண்டபத்தின் உட்புறத்தே அதன் தென், வடசுவர்களின் மேற்குத் திருப்பத்தில் காணப்படும் முற்சோழர் கல்வெட்டுகளும் இக்கருத்தை வலியுறுத்துகின்றன. தென்புறத்தில் பார்வைக்குக் காட்சியாகும் பெருமண்டபத்தின் மேற்குச் சுவர் வடபுறத்தில், அங்கு உருவாகியுள்ள பாதுகாப்பு அறைக் கட்டுமானத்தில் அடைக்கலமாகியுள்ளது. அதன் முன்னரே பாலமுருகன் மேடை கட்டப்பட்டுள்ளது. அப்பகுதியின் உட்புறத்திருந்த தூண்களே தற்போது அடைபட்டுள்ள தென்வாயிலின் அணைவுத் தூண்களாகியுள்ளன. இடைநாழிகையின் வடகட்டுமான அறையில்தான் ஆடவல்லான், உமை செப்புத்திருமேனிகள் உள்ளன.

முன்மண்டபம்

பெருமண்டபத்தையடுத்து நீளும் முன்மண்டபத்தின் தென், வடசுவர்கள் வெறுமையாக உள்ளன. வடசுவரின் கீழ்த் துணைத்தளமும் தென்சுவரின் கீழ்ப் பிரதிபந்தத் தாங்குதளத்தின் உருள்குமுதம், பிரதிவரி ஆகியவையும் தெரிகின்றன. இருபுறத்தும் சுவரின் மேல் கூரையுறுப்புகள். வடபுறம் முன்மண்டபத்துடன் இணைக்கப்பட்டுள்ள அம்மன் திருமுன் விமானமும் அதன் இடப்புறம் இருதளக் காரைக் கட்டுமானமாய் ஆடவல்லான் திருமுன்னும் உள்ளன.





- வளரும்
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.