![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [187 Issues] [1839 Articles] |
|
Issue No. 187
இந்த இதழில்.. In this Issue..
|
திருச்சிராப்பள்ளி திருக்காட்டுப்பள்ளிச் சாலையில் 24 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது கோயிலடி.1 காவிரியின் வடகரை ஊராக விளங்கும் இதன் பழம் பெயர் திருப்பேர்நகர். பெருமாளுக்கொன்றும் சிவபெருமானுக்கொன்றுமாய் இவ்வூரில் இரண்டு கோயில்கள் உள்ளன. சிவன்கோயில் கல்வெட்டுகளில் பெரியஸ்ரீகோயில் என்றும் திருவாய்மொழிப்புறமாக நிலம் பெற்றிருந்த பள்ளிகொண்டருளிய பெருமானடிகள் கோயில் என்றும் பெருமையுடன் பேசப்படும்2 பெருமாள் கோயில் பாடல் பெற்ற3 மாடக்கோயிலாய் அமைந்துள்ளது. சுற்றிலும் மதிலால் சூழப்பட்டுள்ள கோயில் வளாகத்தின் ஒரே வாயிலாய் மேற்குக் கோபுரம் அமைந்துள்ளது. முத்தளக் கட்டுமானமாய் அமைந்துள்ள இக்கோபுரத்தின் கீழ்த்தளம் பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்றுக் கருங்கல் பணியாக உள்ளது. மேற்றளங்களும் கிரீவம், சிகரம் இவையும் செங்கல் கட்டுமானங்களாக உள்ளன. கீழ்த்தளக் கிழக்குக் கபோதத்தில் இறைவனை வணங்கியவாறு கருடன் அமர்ந்துள்ளார். வாயிலின் இருபுறத்தும் உள்ள கோட்டப் பஞ்சரங்கள் மேற்கிலும் கிழக்கிலும் வெறுமையாக உள்ளன. வெளிச்சுற்றின் வடமேற்கில் மண்டபம் அமைய, தென் மேற்கில் ஒருதள நாகர விமானத்தில் பிள்ளையார் இடம்பெற்றுள்ளார். கரண்டமகுடம், சிற்றாடை, உதரபந்தம் அணிந்து இடம்புரியாக உள்ள பிள்ளையாரின் வலத்தந்தம் உடைந்துள்ளது. பின் கைகளில் அங்குசமும் பாசமும் ஏந்தி, அர்த்தபத்மாசனத்தில் உள்ள அவரது வலக்கையில் உடைந்த தந்தம். இடக்கை தொடைமீது உள்ளது. சுற்றின் தென்கிழக்கில் மதிலை ஒட்டி உள்ள மாளிகையின் அறைகள் வெறுமையாக உள்ளன. மாடக்கோயிலின் வாயில் வெற்றுத்தளம் வளாகத்தின் நடுவிலுள்ள பள்ளிகொண்ட பெருமாளின் விமானம், முகமண்டபம், பெருமண்டபம், மண்டபச் சுற்று, முதல் மண்டபம் இவை அனைத்தும் 2. 35 மீ. உயரமுள்ள வெற்றுத்தளத்தின் மீது அமைந்துள்ளன. வெற்றுத்தளம் சுவர், கூரையுறுப்புகள் பெற்று அனைத்துத் திசைகளிலும் ஒன்று போல் அமைந்துள்ளது. முதல் மண்டபத்திற்கான படிகள் வெற்றுத்தளத்தின் வடமேற்குப் பகுதியில் இரண்டு நிலைகளாக அமைந்து, இருபுறத்தும் பிடிச்சுவர் கொண்டுள்ளன. இருபத்திரண்டு படிகள் உள்ள இந்தப் படித்தொடரின் முதல் நிலை மேடையில் கொடிமரமும் பலித்தளமும் உள்ளன. கொடிமரத்தில் மேற்குப் பார்வையாக அரங்கநாதரும் கிழக்குப் பார்வையாக அர்த்தபத்மாசனத்தில் கருடனும் அமைய, தெற்கிலும் வடக்கிலும் முறையே சங்கும் சக்கரமும் காட்டப்பட்டுள்ளன. முதல் மண்டபம் வாயிலின் மேல் சாலை சிகரம் பெற்றுள்ள முதல் மண்டபத்தின் கூரையை முச்சதுர, இருகட்டு உடல் தூண்கள் வெட்டுப் போதிகைகளுடன் தாங்குகின்றன. இத்தூண்களின் கீழ்ச்சதுரங்கள் நாகபந்தம் பெற்றுள்ளன. சில சதுர முகங்களில் தாமரைப் பதக்கங்களும் சிலவற்றில் வேணுகோபாலர் முதலிய சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன. வடபுறம் பள்ளியறையும் மேடையெhன்றும் உள்ளன. மேடையில் சிறிய அளவிலான அனுமார் சிற்பமும் விஷ்வக்சேனரின் பெரிய அளவிலான சிற்பமும் உள்ளன. பின் கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி சுகாசனத் தில் உள்ள விஷ்வக்சேனரின் வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை விரல்கள் மடங்கிய நிலையில் தொடை மீது வைக்கப்பட்டுள்ளது. கிரீடமகுடம், மகரகுண்டலங்கள், தோள், கை வளைகள், சரப்பளி, பட்டாடை அணிந்துள்ள இவருடைய மார்பில் முப்புரிநூல் இல்லை. மண்டபத்தின் நடுப்பகுதியில் பெருமாள் திருமுன்னை நோக்கி வணங்கியவாறு கிழக்குப் பார்வையாக இலலிதாசனத்தில் அமர்ந்துள்ள கருடன் கரண்டமகுடம் அணிந்துள்ளார். விஷ்வக்சேனர் தாயார் திருமுன் மண்டபத்தின் தென்புறத்தில் கமலவல்லித்தாயாரின் இரு தள வேசர விமானம், முகமண்டபம் இவை கிழக்குப் பார்வையாக அமைந்துள்ளன. முறையான தாங்குதளம், அரைத்தூண்கள் அற்ற நிலையில் இவ்விமானத்தின் கீழ்த்தளமும் முகமண்டபமும் சுவர், கூரையுறுப்புகள் மட்டுமே பெற்றுள்ளன. முகமண்டபம் வெறுமையாக அமைய, கருவறையில் இறைவி மூலவராகவும் உற்சவராகவும் இடம்பெற்றுள்ளார். அர்த்தபத்மாசனத்தில் உள்ள மூலவர் பின் கைகளில் மலர் மொட்டுக்களும் முன்கை களில் காக்கும், அருட்குறிப்பும் கொண்டு பட்டாடையுடன் திகழ, உற்சவர் மூலவரை ஒத்த கோலத்தில் விளங்குகிறார். தாயார் திருமுன்னுக்கு எதிரில் நடையாகத் தொடரும் முதல் மண்டபம் கீழ்ச்சுற்றுக்கு இறங்கும் படிக்கட்டுகளில் முடிகிறது. முதல் வரிசைப் படிகள் நாகர அமைப்பிலான வண்டிக்கூடு கூரை பெற, எஞ்சிய படிகள் தகரக்கூரை பெற்றுள் ளன. கீழ்ச்சுற்றுவெளியின் வடகிழக்குப் பகுதியில் படிகள் முடியுமிடத்து, நாயக்கர் கலைமுறையில் அமைந்த வளைவுக் கூரை பெற்ற நான்கு பேருருளைத் தூண்கள் உள்ளன. மண்டபச் சுற்று முதல் மண்டபத்தின் கிழக்கில் அமைந்துள்ள வாயில் மண்டபச் சுற்றுக்கு வழிவிடுகிறது. மேற்கில் உருளைத் தூண்கள் தாங்கும் மண்டபமாகத் தொடங்கி வடக்கு, கிழக்கு, தெற்கு முப்புறத்தும் துணைத்தளம் தாங்கும் மாளிகைச் சுற்றாக வளரும் இதில் சிற்பங்கள் ஏதுமில்லை. வடபுறத்தே உள்ள வாயில் சொர்க்க வாயிலாக அமைந்து, கீழ்ச்சுற்றுக்குப் படித்தொடர் வழி அழைத்துச் செல்கிறது. மாளிகையின் பெரும்பகுதியை உருளைத் தூண்களும் கிழக்குப்பகுதியை முச்சதுர, இருகட்டுத் தூண்களும் தரங்க வெட்டுப் போதிகைகளின் துணையுடன் தாங்குகின்றன. பெருமண்டபம் பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், தரங்க வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்று அமைந்துள்ள பெருமண்டபத்தின் வடக்கு, தெற்குச் சுவர்களில் பக்கத்திற்கு மூன்று கோட்டப்பஞ்சரங்கள் வெறுமையாக உள்ளன. முகமண்டபம் பெருமண்டபத்தின் கட்டமைப்பை ஒத்துள்ள முகமண்டபம் அளவில் சிறியது. அதன் வடக்கு, தெற்குச் சுவர்களிலுள்ள கோட்டப் பஞ்சரங்கள் வெறுமையாக உள்ளன. விமானம் இருதளச் சாலையாக அமைந்துள்ள இறைவன் விமானத்தின் கீழ்த்தளம் முகமண்டபம் ஒத்த கட்டமைப்பில் விளங்கியபோதும் பல மாற்றங்களைக் காணமுடிகிறது. தென்வடலாக 8 மீ. நீளமும் கிழக்கு மேற்காக 6. 33 மீ. அகலமும் பெற்றுள்ள இந்தத் தளத்தின் கர்ணபத்திகள் மகரதோரணத் தலைப்பிட்ட கோட்டங்கள் கொள்ள, சாலைகளில் கோட்டப்பஞ்சரங்கள் காணப்படுகின்றன. வடக்குச் சாலைக் கோட்டத்தில் மட்டும் பரமபதநாதர் காட்சிதருகிறார். பிற கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. சுவர்த் தூண்களின் மாலைத் தொங்கல்களில் குடக்கூத்து உள்ளிட்ட பல சிற்றுருவச் சிற்பங்களைக் காணமுடிகிறது. விமானத்தின் ஆரச்சாலைகளில் வடக்கில் பூவராகரும் கிழக்கில் சுகாசனப் பெருமாளும் தெற்கில் நரசிம்மரும் உள்ளனர். மூவருமே தேவியின் துணையுடன் உள்ளமை குறிப்பிடத்தக்கது. மேற்கு ஆரச்சாலை வெறுமையாக உள்ளது. கிரீவகோட்டங்களில் வடக்கில் விஷ்ணுவும் கிழக்கில் பூவராகரும் மேற்கில் விஷ்ணுவும் தேவியருடன் அமைய, வடக்கில் வணங்கிய கைகளுடன் அனுமார். பெருமண்டப வாயிலின் இருபுறத்தும் பக்கத்திற்கு கொருவராகக் காவலர்களைப் பெற்றுள்ள கோட்டங்கள் மேற்பகுதியில் வளைமுகத் தலைப்புப் பெற்றுள்ளன. இவற்றை அடுத்து, பக்கத்திற்கொரு கோட்டப்பஞ்சரமும் உள்ளது. தெற்குக் காவலர் வலக்கையை உருள் தடிமேல் இருத்தி, இடக்கையால் அச்சுறுத்த, வடக்குக் காவலர் இடக்கையை உருள்தடிமேல் இருத்தி, வலக்கையைhல் அச்சுறுத்துகிறார். சமபங்கத்தில் நிற்கும் இருவருமே கிரீடமகுடம், பட்டாடை அணிந்துள்ளனர். பெருமண்டபத்தின் கூரையை முச்சதுர, இருகட்டுத் தூண்கள் பெருமொட்டுப் போதிகைகளின் உதவியுடன் தாங்குகின்றன. தூண்களின் கீழ்ச்சதுரங்கள் பேரளவு நாகபந்தம் பெற்றுள்ளன. தூணொன்றின் இடைச்சதுரத்தில் தாமரையில் அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்த இலட்சுமியின் அழகிய சிற்பம் இடம்பெற்றுள்ளது. பின் கைகளில் மலர்மொட்டுகளும் முன் கைகளில் காக்கும், அருட்குறிப்புகளும் கொண்டுள்ள தேவியின் தலையில் கரண்டமகுடம். இடையில் பட்டாடை. செவிகளில் பனையோலைக் குண்டலங்கள். மண்டபத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அறை ஆழ்வார் பெருமக்களின் செப்புத்திரு மேனிகளைக் கொண்டுள்ளது. பெருமண்டபத்தை அடுத்துள்ள முகமண்டபம் சிறிய அளவிலானது. வெறுமையாக உள்ள இதை அடுத்து இறைவன் கருவறை அமைந்துள்ளது. கருவறை அப்பக்குடத்தான் திருமுன் என்றழைக்கப்படும் இந்தக் கருவறையில் ஆதிசேடனின் கட்டுடல் மீது வடக்கில் தலை வைத்து தெற்கில் திருவடி நீட்டிப் படுத்திருக்கும் பள்ளிகொண்ட பெருமாளின் இடக்கை வயிற்றருகே உயர்ந்து கடகத்தில் உள்ளது. வலக்கை மேலுயர்த்தப்பட்டு படுக்கையைவிட்டு நீங்கிய நிலையில் தரைக்காய்த் தாழ்ந்துள்ளது. இறைவனின் மார்புக்கு மேற்பட்ட பகுதி வலஒருக்கணிப்புக் கொண்டு மேற்குப் பார்வையில் அமைய, கிரீடமணிந்த தலை இரண்டு தலையணைகளின் மீது சற்றே தூக்கலாகவும் வலப்புறம் திரும்பிய நிலையிலும் உள்ளது. திரயச்ரத்தில் உள்ள திருவடிகள் தலையணை ஒன்றைத் தொட்டவாறுள்ளன. செவிகளில் மகரகுண்டலங்கள். மார்பில் திருமறு. பெருமாளின் நீட்டிய வலக் கைக்குக் கீழிருக்குமாறு கருவறையின் வடபுறத்தே கருடாசனத் தில் வணங்கிய நிலையில் மார்க்கண்டேயர் காணப்படுகிறார். அப்பக்குடம் மார்க்கண்டேயரின் பின்புறம் கருவறையின் வடசுவரை ஒட்டியவாறு உள்ள வெள்ளிக் குடம் இறைவனுக்கான அப்பமிடும் குடமாகக் கூறப்படுகிறது. இது கொண்டே இறைவன் அப்பக்குடத்தான் என்றழைக்கப்படுகிறார். கருவறையின் தென்புறத்தே அர்த்தபத்மாசனத்தில் இறைவனை வணங்கிய நிலையில் நிலமகள் உள்ளார். அப்பால் ரங்கன் என்றழைக்கப்படும் உற்சவர் நின்றகோலத்தில் வலக்கையில் காக்கும் குறிப்புக் காட்டி, இடக்கையை உருள்பெருந்தடிமேல் இருத்தியுள்ளார். பின்கைகளில் சங்கு, சக்கரம். வலப்புறமுள்ள திருமகள் வலக்கையை நெகிழ்த்தி, இடக்கையில் மலர் கொண்டுள்ளார். இடப்புறமுள்ள நிலமகள் வலக்கையில் மலர் கொண்டு, இடக்கையை நெகிழ்த்தியுள்ளார். இருவரும் கரண்டமகுடம் அணிந்துள்ளனர். இவர்கள் தவிர தீர்த்தபேரர், சந்தான கோபாலகிருஷ்ணன் திருமேனிகளும் உள்ளன. வளாகத்தின் புறச்சுவர் வெற்றுத்தளத்தின் மேலுள்ள மொத்தக் கட்டமைப்பின் புறச்சுவர்கள் ஒன்று போலத் தூண்களற்ற சுவரும் கூரை யுறுப்புகளும் பெற்றுள்ளன. பெருமண்டபப் புறச்சுவர் வடக்கு, தெற்கு இருபுறத்தும் சாளரங்கள் பெற்றுள்ளது. கல்வெட்டுகள் இக்கோயிலில் இருந்து படியெடுக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுகளுமே4 விஜய நகர அரசர் காலத்தவை. பொ. கா. 1521ல் வெட்டப்பட்டுள்ள கிருஷ்ணதேவராயரின் கல்வெட்டு, தையலார் பிள்ளை திருப்பேர்நகரக் கோயில் சேனாபதி பண்டாரத்துக்களித்த வல்லநாட்டுப் பொக்கரசன்பேட்டை நீர் நிலம் இரண்டு வேலியை, மன்னரின் வாசலான மல்லப்ப நாயக்கரின் மகன் திம்மப்பநாயக்கர் சர்வமானியம் ஆக அறிவித்தமையைத் தெரிவிக்கிறது. சதாசிவராயரின் பொ. கா. 1569ம் ஆண்டுக் கல்வெட்டு ஆளியராமைய்யதேவ மகாராஜாவின் பெயரைத் தருவதுடன் வேப்பம்பட்டைச் சேர்ந்த நாயக்கர் சிலரின் பெயரையும் கிராம சாசனம் பற்றிய குறிப்புகளையும் தருகிறது. கல்வெட்டுப் பெரிதும் சிதைந்திருப்பதால் முழுத் தகவல்களையும் பெறக்கூடவில்லை. இவை தவிர, களஆய்வில் கண்டறியப்பட்ட பொ. கா. 17ஆம் நூற்றாண்டினதாகக் கொள்ளத்தக்க கல்வெட்டு, ‘திருப்பேர்நகரன் அடிமை’ என்ற பொறிப்பைக் கொண்டுள்ளது. திருப்பேர்நகரன் அடிமை குறிப்புகள் 1. ஆய்விற்குத் துணைநின்ற நா. சீனிவாச பட்டாச்சாரியார், சு.சேகர் ஆகியோருக்கு நன்றி. 2. SII 7: 497, 498. 3. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் 173, 205, 1428-1437, 1851, 1857, 2048, 2050, 2059, 2060, 2079, 2673, 2674, 2417, 3744-3754. ‘திருப்பேர்க் கிடந்த’, ‘குன்றென்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான்’ எனும் பாசுர அடிகள் குறிப்பிடத்தக்கன. 4. ARE 1968-69: 273- 274. |
சிறப்பிதழ்கள் Special Issues
புகைப்படத் தொகுப்பு Photo Gallery
|
| (C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. | ||