![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 13
![]() இதழ் 13 [ ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2005 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
கோயில்களை நாடி மனிதர்கள் வருவது அதிகரித்திருந்தாலும் அந்தப் பேறு சில கோயில்களுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது. யாரும், எப்போதும், எதற்காகவும் வாராதிருக்கும் காரணத்தால் பூட்டியே கிடக்கும் கோயில்கள் நுற்றுக்கணக்கில் உள்ளன. ஒரு வேளை பூசைக்கு மட்டும் உலகத் தொடர்பு கொண்டு பின் ஓயாத இருளுக்குள் அலை மோதிக் கிடக்கும் கோயில்கள்தான் எண்ணிக்கையில் அதிகம். தேடிவரும் நெஞ்சங்கள் இல்லாமல் போனதால் வாடிக்கிடக்கும் கோயில்களில் ஆடுமாடுகள் மேய்கின்றன. தப்பித்தவறிக் கோயில்களுக்கு வருபவர்களும் கோயிலை இரசிப்பதில்லை. அதற்கு அவர்களுக்கு நேரமும் இருப்பதில்லை. நேரம் இருப்பவர்களுக்கும் கோயில்களில் அமர்ந்து அவரவர் கதைகளையும் அடுத்த வீட்டுக் கதைகளையும் பேசித் தீர்க்க விரும்புகிறார்களே தவிர கோயிலை விளங்கிக் கொள்ள முயற்சிப்பதில்லை. புகழ் பெற்ற கோயில்களைச் சுற்றுலாவாகக் காண வருபவர்களும் அந்தக் கோயில்களைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல், வந்த பிறகும் ஒரு சுற்றுச் சுற்றுவதை மட்டுமே குறிகோளாய்க் கொண்டு, பார்த்த கோயிலைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமலேயே பார்த்துவிட்டோம் என்ற மகிழ்வுடன் போய்விடுகிறார்கள். அவர்களைப் பொருட்த்தமட்டில் அவர்கள் பார்க்கவேண்டிய இடங்களாய்க் கருதியவற்றுள் ஒன்றைப் பார்த்தாகிவிட்டது, அவ்வளவுதான்.
கடமைக்காகவும் மரபுக்காகவும் பெருமைக்காகவும் வேறு போக்கிடம் இல்லாமலும்தான் பலர் கோயில்களுக்கு வருகிறார்கள். 'இது என் சமய நெறியின் மூல முதல் குடியிருக்கும் இடம், இதை உருவாக்கிய கைகள் என் அப்பன் பாட்டன் பரம்பரை, இங்கு இருக்கும் அனைத்துக் கலைச் செல்வங்களும் என் தாய் நாட்டின் பண்பாட்டுப் புதையல்கள்' என்று நினைத்துக் கொண்டு கோயில் நிலைவாயிலில் திருவடி பதிப்பவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? கோயில்கள் வெறும் செங்கல், கருங்கல் கட்டடங்கள் அல்ல. அவை நம் முன்னோரின் மூச்சுக் காற்றைச் சுமந்து கொண்டிருக்கும் திருத்தலங்கள். அவற்றில் பார்க்கவும் படிக்கவும் தெரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் இரசிக்கவும் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. சிறிய கோயிலாக இருந்தாலும் சரி, பெரிய கோயிலாக இருந்தாலும் சரி அது சொல்லக் காத்திருக்கும் சுந்தரச் செய்திகள் ஒன்றிரண்டல்ல. கேட்க வேண்டும் என்ற ஆசையோடு செல்பவர்களுக்கும் பார்க்கவேண்டும் என்ற தாகத்தோடு வருபவர்களுக்கும் கோயில்கள்தான் எத்தனை எத்தனை அநுபவப் பாடங்களை முன்வைக்கின்றன. வாழ்க்கை அவசரங்களுக்குள் வடிவத்தையே தொலைத்துவிட்டு நிற்கும் முகந்தெரியாத இன்றைய சூழல்களில் வாழ்க்கையின் பொருளார்ந்த பின்னல்களைக் கோயில்களைத் தவிர வேறெங்கு விளங்கிக் கொள்ளமுடியும்? காஞ்சிபுரத்துக் கயிலாசநாதர் கோயில், படையெடுத்துப் பல்லவ நட்டையே அழிக்க வந்த சாளுக்கிய விக்கிரமாதித்தன் கூடப் பார்த்து வியந்து, பாதுகாக்கப்படவேண்டிய கலைப்படைப்பு என்று பொன்னையும் பொருளையும் கொடையாக அள்ளித் தந்து போற்றிக் கொண்டாடிய புனிதக் கோயில். அத்யந்தகாமன் என்றும் சிவசூடாமணி என்றும் கல்வெட்டுகள் காதலோடு அழைக்கும் இராஜசிம்ம பல்லவர் பரிவோடு எழுப்பிய திருக்கோயில். இந்தக் கோயிலை ஒரு நிமிடத்திலும் பார்க்கலாம். ஒரு வாரம் முழுவதும் நாள்தோறும் வந்து பார்த்துப் பார்த்து மகிழலாம். தெற்கு ஆசியாவிலேயே இப்படி ஒரு கோயில் இதுநாள் வரையிலும் கட்டப்படவில்லை. இனி கட்டப்படப்போவதுமில்லை. இக்கோயில் வளாகம் எட்டாம் நூற்றாண்டுக் கலை அற்புதங்களின் கனிவான படப்பிடிப்பு. சிறிய கோபுரத்துடன் எதிர்கொள்ளும் மையக் கோயில் திருச்சுற்றில் ஐம்பத்திட்டுச் சிறு கோயில்கள். இவை ஒவ்வொன்றின் முகப்பிலும் இந்த மண்ணில் விளைந்த வீரக் கதைகளின் படப்பிடிப்புகள். உட்புறத்தோ பல்லவ ஓவியர்களின் தூரிகை வீச்சுக்கள் வித்தகம் செய்திருக்கும் வண்ணச் சீறல்கள்- ஓவியங்களாய். ஒவ்வொரு தெவகுலத்தையும் ஒரு மணி நேரம் பார்க்கலாம். இதில் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது என்று நினைப்பவர்கள் தங்கள் முகவரிகளை மறந்தவர்கள். இந்த மண்ணின் வாசனையைப் புரிந்து கொள்ளாதவர்கள். பாரம்பரியச் சுவடுகளை அடையாளம்கான மறுப்பவர்கள். என் பாட்டன் வரலாறு எனக்கு வேண்டாம் என்று ஒதுக்குபவர்கள். வேறெந்த நாட்டிலும் இல்லாத கொடுமை இந்த நாட்டில் வேரூன்றி வருகிறது. வரலாறு இங்கு மதிக்கப்படுவதிலை. அது தேவைப்படாத குப்பையென தூக்கி எறியப்பட்டுள்ளது. வரலாற்றைச் சொல்பவர்கள்கூட வரலாற்றில் நம்பிக்கையில்லாமல் போனதால்தான் கோயில்களில் கூட்டம் குறைந்துவிட்டது. அறிவியலின் உச்சாணிக் கிளைகளில் இருப்பவர்கள்தான் இன்று ஆயிரமாயிரம் மைல்கள் விமானப் பயணம் செய்து, கயிலாசநாதர் கோயிலைக் காணக் கூட்டம் கூட்டமாய் வருகிறார்கள். கற்றுக் கொள்ளவும் கண்டு இரசிக்கவும் ஓடிவரும் இந்த வெளிநாட்டுப் பயணிகளுக்கு உரியனவற்றைச் சொல்லி விளக்கக் கூட நம் நட்டுப் புராணங்களும் வரலாறுகளும் நமக்குத் தெரியாது. நாம் வணங்கும் கடவுள் வடிவங்கள் எதைக் குறிக்கின்றன? எந்தப் பின்புலங்களைக் கொண்டு இந்த வடிவங்கள் உருவாக்கப்பட்டன? இவை யார் யாரை வெளிப்படுத்துகின்றன? ஒவ்வோர் இரையும் ஒவ்வொரு கோலத்தில் உள்ளதே ஏன்? அருள்கோலம், வீரக்கோலம், காதற்கோலம் என்று விதம்விதமாக விளங்கும் இந்த இறைவடிவங்கள் வெறும் அலங்காரப் பதுமைகளல்ல. அவை வாழ்க்கைப் பாடங்கள். அந்தகாசுரவதம், கஜசம்காரம், சூரசம்காரம் என்பன வன்முறையை எந்தக் காலத்தும் எதிர்த்த வீர நெஞ்சங்களின் விளக்க வார்ப்புகள். இன்றைக்குப் பெருகிவரும் வன்முறைக் கலாச்சாரத்தைப் பார்க்கும்போது இந்த சிற்ப வடிப்புகள் ஏன் செயப்பட்டன என்பதும் புலரும்பொழுதைப் போல சட்டென்று புரிந்துவிடுகிறது. முயலகன் மேல் ஆடும் கடவுள் ஆடி அடங்கும் வாழ்க்கையையும், ஆணவம் மிதித்து அழிக்கப்படும் என்ற உண்மையையும் உலகத்தில் அமைதிக்கும் ஆனந்ததிற்கும் கலையே நுழைவாயில் என்ற வழிகாட்டலையும் எத்தனை எளிதாக விளக்கிவிடுகிறது. சிச்ங்கத்தின் மீது காலூன்றிச் சிறுமைகளை நோக்கிக் கனல் கக்கும் பல்லவக் கொற்றவை அனைத்து மகளிர் காவல் நிலையங்களின் ஆதார சுருதியல்லவா? ஆணும் பெண்ணும் சமம் என்னும் அம்மையப்பரும், ஒன்றுக்குமேல் எப்போதும் வேண்டாம் என்ற இன்றைய தத்துவத்தை அன்றே விளக்கி ஒரு குழந்தை ஒரு தந்தை தாய் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்று பாடம் புகட்டும் சோமாச்கந்தரும் நாம் வாழும் தலைமுறைக்கு வாழ்ந்த தலைமுறைகள் வடித்துத் தந்திருக்கும் வேதங்களல்லவா? கோபுரங்கள் நிமிர்ந்து நடக்கவும் கருவறை வாயில்கள் பணிவு புகட்டவும் திருச்சுற்றுக்கள் நடப்பதின் பெருமை சுட்டவும் தூண்வரிசைகள் ஒற்றுமையுணர்த்தவும் கோயில்களில் இடம்பெற்றன. திறந்த கண்களும் கூர்மையான செவிகளும் பசித்த மனமுமாய் ஒரு கோயிலை வலம் வாருங்கள். உங்களை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். எது எதற்கோ நேரம் ஒதுக்கும் வாழ்க்கையில் கோயிலுக்குச் செல்லவும் கொஞ்சம் காலம் ஒதுக்குங்கள். கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களை நீங்கள் கேட்காமலேயே கொயில்கள் கற்றுத்தரும்.this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |