http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 30

இதழ் 30
[ டிசம்பர் 16, 2006 - ஜனவரி 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

உரிமைகளும் கடமைகளும்
பழுவூர் - 12
திரும்பிப் பார்க்கிறோம் - 2
சொக்கம்பட்டிக் குடைவரை
எத்தனை கோடி இன்பம்
நக்கன் : ஒரு சொல்லாய்வு
சங்கச்சாரல் - 13
இதழ் எண். 30 > கலைக்கோவன் பக்கம்
தேவனார் என்ற சொல் இறைவனைக் குறிக்கிறது என்பது மிகத்தெளிவான நிலையில், அவனி கந்தர்ப்ப ஈசுவர கிரகத்துத் தேவனார் அரசரல்ல என்பதும் அவரை இடைப்பட்ட காலத்துப் பழுவூர் மன்னராய் டாக்டர் பாலாம்பாள் காட்டுவது எவ்விதத்தாலும் பொருந்தாது என்பதும் தானே விளங்கும். இக்கருத்துக்கு மேலும் வலிமை சேர்க்கும் இன்னும் சில கல்வெட்டுகளையும் பார்ப்போம்.

அ) திருப்பழனத்திலுள்ள கல்வெட்டொன்று இத்தளி தேவனார் மகன் நக்கன் மதமாளியை அடையாளம் காட்டுகிறது.

ஆ) திருச்சோற்றுத்துறையிலுள்ள கல்வெட்டுகள் கற்பகதானிபுரத்து இராசகேசரி ஈசுவர கிரகத்துத் தெவனார் மகன் நக்கன் அரைய பெருமானையும், ஆயிரத்தளி தேவனார் மகள் நக்கன் கலங்கா சுடரையும் அறிமுகப்படுத்துகின்றன.

இ) திருவேதி குடியிலுள்ள வேதபுரீசுவரர் கோயில் கல்வெட்டு ராசகேசரி ஈசுவர கிரகத்துத் தேவனார் மகள் ஒருவரை வெளிப்படுத்துகிறது.

ஈ) திருச்சோற்றுத்துறைத் தேவனார் மகன் நக்கன் கணவதியக்கனைத் திருப்பழனத்துக் கல்வெட்டொன்று வெளிச்சத்திற்குக் கொணர்கிறது.

உ) திருநெய்த்தானத்துக் கல்வெட்டு, இவ்வூர்த் தேவனார் மகன் நக்கன் கலங்கா சுடரைக் காட்டுகிறது.

திருச்சோற்றுத்துறைக் கல்வெட்டொன்று இவ்வூர்த் தேவனார் மகள் நக்கன் கவடியக்கனையும் இவள் தங்கை நக்கன் விச்சியக்கனையும் வெளிப்படுத்துகிறது.

இக்கல்வெட்டுகள் காட்டும் தேவனார்கள் அனைவருமே அந்தந்த ஊர்க்கோயில்களில் உறைந்திருந்த தெய்வங்கள்தாம். டாக்டர் பாலாம்பாள் கருத்துப்படி பார்த்தால் திருப்பழனத்தை ஒரு தேவனாரும், திருநெய்த்தானத்தை ஒரு தேவனாரும், திருச்சோற்றுத் துறையை ஒரு தேவனாரும், திருவேதிகுடியை ஒரு தேவனாரும், ஆயிரத்தளியை ஒரு தேவனாரும், அவனி கந்தர்ப்பபுரத்தை ஒரு தேவனாரும், பகைவிடை ஈசுவரத்தை இரண்டு தேவனார்களும் அவனிகந்தர்வ ஈசுவரகிரகத்தைச் சில தேவனார்களும் ஆண்டு வந்ததாகி விடும்.

டாக்டர் பாலாம்பாள் போலவே கல்வெட்டறிக்கையும் இத்தேவனார்களை மனிதர்களாகக் கண்டும், மையல் மிக்கக்கொண்டு, மெல்ல அவர்களுக்குள் உறவு முடிச்சுகளையும் போட்டு வைத்துள்ளது. ஓரிடத்தில் இந்தத் தேவனாரும், அந்தத் தேவனாரும் ஒருவரே என்று வேறு கற்பனைப் பந்தலை விரித்துப் பார்க்கிறது.

கல்வெட்டறிஞர் சுந்தரேசனார் ஒரு படி மேலே போய்,

அ) "அவனிகந்தர்வ ஈசுவர கிரகத்து வடவாயில் ஸ்ரீகோயில், தென்வாயில் ஸ்ரீகோயில் இவைகளைக் கட்டியவர் தேவனார் ஆவார்!" என்கிறார். பாவம் இறைவன்! தன் கோயில்களைத் தானே கட்டிக் கொண்டாராம்.

ஆ) "இத்தேவ்கனார் பழுவேட்டரையரைச் சேர்ந்தவர், 'இந்நாட்டுப் பழுவூர் பகைவிடை ஈசுவரத்துத் தேவனார் மகன் நக்கன் பூதி பழுவேட்டரையன் குமரன் கண்டன் பிரசாதத்தினால்' என்றும் கல்வெட்டுப் பகுதியே இதற்குச் சான்றாகும்." திரு சுந்தரேசனாரின் இந்த வரிகளில் எத்தனை குழப்பம் பாருங்கள். இறைவனைப் பழுவேட்டரையராக்கியிருக்கிறார். நக்கன் பூதியைக் குமரன் கண்டனுடன் இணைத்திருக்கிறார். இவைகளைச் சான்றாய்க் கொண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு வேறு காணுகிறார்.

இ) 'இத்தேவனார் மகளார் அக்கார நங்கையார், பிள்ளையார் சேரமானார் தேவியென்று இந்த அவனி கந்தர்வபுரத்துக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. ஆகையால் இப்பழுவேட்டரையர் சேரர் குலத்தினர் அகார் என்பது உறுதி.' என்று பழுவேட்டரையர்கள் கேரள வழியினர் அல்லர் என்பதற்கான சான்றாகவும் இத்'தேவனார்' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் திரு. சுந்தரேசனார். பொருளே பொருந்தாத ஒரு சொல்லை வைத்துக்கொண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினைக்கு இப்பெரியார் தீர்வு கண்டுள்ள விதம் விந்தையாகவே உள்ளது.

தனித்தேவனாரும் ஈசுவரத்துத் தேவனாரும் இறைவந்தான் என்பதை எப்படி இப்பெருமக்கள் கருத்தில் கொள்ளாமல் போனார்கள் என்பது பெரும் வியப்பாகவே உள்ளது. இந்தத் தவற்றால் வரலாறு எப்படி எப்படியெல்லாம் குழப்பப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது துன்பமாகவும் இருக்கிறது. டாக்டர் பாலாம்பாள் சுட்டும் வனிகந்தர்வ ஈசுவரகிரகத்துத் தேவனார் அக்கோயில் இறைவன் என்றான நிலையில், அவருக்கும் கண்டன் அமுதனுக்கும் இடையிலுள்ள உறவை விளங்கிக்கொள்ள முடியவில்லையே என்று டாக்டர் பாலாம்பாள் ஆதங்கப்படுவதும், திருச்சோற்றுத்துறைத் தேவனாருடன் இத்தேவனாருக்குள்ள தொடர்பு எத்தகையது என்று திகைப்பதும் பொருளற்றதாகிறது.

இதே கோயிலில் இத்தளி தேவனார் மகள்களாக நக்கன் மெரிய அரங்கபிரான், நக்கன் குமரக்கன், நக்கன் மானதிரி, நக்கன் கண்டபிராட்டி ஆகியோர் பல்வேறு மன்னர்களின் ஆட்சிக்காலங்களில் வருகின்றனரே, இவர்தம் தந்தையார்களையெல்லாம் டாக்டர் பாலாம்பாள் ஏன் விட்டுவிட்டார் தெரியுமா? கல்வெட்டறிக்கையோ, கல்வெட்டுத் தொகுதியோ இவர்களைக் குறித்துக் காட்டவில்லை. டாக்டர் பாலாம்பாள் அவனிகந்தர்வ ஈசுவர கிரகத்துக் கோயில் கல்வெட்டுகளை நேரிடையாகச் சென்று படித்திருப்பாரேயானால் தேவனாரை அரசாக்கியிருக்கமாட்டார். ஆடலழகி நக்கன் குமரக்கனைப் பழுவேட்டரையாராக்கியிருக்க மாட்டார். இந்த வேடிக்கையைப் பின்னால் விபரமாகப் பார்ப்போம்.this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.