http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 30

இதழ் 30
[ டிசம்பர் 16, 2006 - ஜனவரி 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

உரிமைகளும் கடமைகளும்
பழுவூர் - 12
திரும்பிப் பார்க்கிறோம் - 2
சொக்கம்பட்டிக் குடைவரை
எத்தனை கோடி இன்பம்
நக்கன் : ஒரு சொல்லாய்வு
சங்கச்சாரல் - 13
இதழ் எண். 30 > இலக்கியச் சுவை
சங்கச்சாரல் - 13
வரலாறு ஒரு நூலிழை போல ...

'சங்க இலக்கியங்களில் வரலாறே இல்லை, புலவர்களின் மிகைப்படுத்தப்பட்ட பாடல் தொகுதிகளே அவை' என்று 'அறியாமல்' பேசும் அறிஞர்களுக்கு ஒரு சொல். மகளை அடித்தாள் தாய். திதியனின் புன்னையை வெட்டினார் அன்னி. தடுத்த எவ்வியின் ஊர்வளம் பேசப் பாண்மகள் வந்தார். அந்தப் பாண்மகள் பெற்ற மீன் வளம் காட்டக் காவிரி பாய்ந்தது. ஒன்றிலிருந்து ஒன்றாய் எத்தனை இழைகள். இவை அனைத்தும் இரண்டே அகப்பாடல்களில். இதோ விளக்கங்கள் கீழே.




தடுத்தும் கேளாமல் ....

அந்தப் புன்னை மரம் பொன்னைப் போலப் பூத்திருந்தது. திதியனின் காவல் மரம் அது. அதை வெட்டித் திதியனை அவமானப்படுத்தித் தம் வீரம் காட்ட விழைந்தார் அன்னி. 'வேண்டாம், சரியன்று; தவிர்த்திடுக' என்று 'நயம்புரி நன்மொழி' கூறி அன்னியின் மரம் வெட்டும் செயலுக்குத் தடை போட்டுத் தவிர்க்க முயன்றார் மற்றொரு சிற்றரசரான எவ்வி. கேட்கவில்லை அன்னி. குறுக்கைப் பறந்தலையில் புன்னையை வெட்டிச் சாய்த்தார். காரணமின்றி மரம் வெட்டியதற்குத் தண்டனை கிடைத்தது. தான் வெட்டிய மரத்தோடு தானும் மடிந்து சாய்ந்தார் அன்னி.

பாடல் : அகநானூறு - 126




யார் இந்த எவ்வி?

'மரத்தை வெட்டாதே' என்று அன்னியைத் தடுத்த எவ்வி யார்? வளமான பல ஊர்களை உடையவர்; சிற்றரசர். அந்த ஊர்களின் வளம் எத்தகையது? இந்த இடத்தில்தான் நக்கீரர் சமூகப் படப்பிடிப்பாளராகிறார். கடலைக் குறைத்துக் காட்டும் காவிரியின் வெள்ளத்தில் இரவில் சென்று பிடித்த மீன்களைக் கருக்கலில் கரைசேர்த்த தமையன்மார்களின் தங்கை அந்தப் பாண்மகள். வளைந்த உந்தியும் தேர்ந்தெடுத்த சொற்களும் உடையவள். திரண்ட கோடுகளை உடைய வாளை மீன்களைத் தன் கூடையில் வைத்துக் கொண்டு நீண்ட கொடிகள் அசையும் கள்மலிந்த கடைத்தெரு நோக்கி விற்பனைக்குப் புறப்பட்டாள். மீனுக்கு மாற்றாக பழைய நெல் தருவதாக வாங்க விழைந்தோர் கூறினர். அவளோ நெல்லுக்கு மயங்கவில்லை.

பெரிய முத்துக்கள் பொருந்திய அணிகலன்கள் தந்தால் மட்டுமே மீனென்று சொல்லிக் கேட்டதைப் பெற்றுக் கொணர்ந்ததைத் தந்தாள். விலை மீனுக்கா அன்று அவள் சொல்லுக்கா? எது எப்படியோ மீனுக்கு விலையாய் முத்துமாலை தருமளவிற்கு வளமுடையதாய் இருந்தது எவ்வியின் ஊர். இருந்ததால்தானே அவளாலும் கேட்க முடிந்தது.

பாடல் : அகநானூறு - 126




காவிரி! காவிரி!

கேட்கவே மகிழ்ச்சிப் பெருக்கெடுக்கிறது! இன்று பார்க்கக்கூட முடியாமல் போன நதியல்லவா. இந்தக் காவிரி சங்க காலத்தில் எப்படியிருந்தது? ஒரு மருதப் படப்பிடிப்பாய்க் காட்டுகிறார் நக்கீரர்.

மலைகளிலிருந்து தொடர்பறாது விழும் அளவற்ற அருவி வெள்ளம் வந்து சேர்வதால் பூத்த புதுமலர்களையுடைய துறை. கடற்கரையைக் கரைத்திடும் அளவிற்கு அத்துறை தழுவும் பேராறாய்க் காவிரி. அதன் கரையில் கருமணல். இந்தக் காவிரியின் நீரைக் கிழித்தபடி நள்ளிரவு மீன் பிடிக்க ஓடும் தோணிகள். அந்தத் தோணிகளில் ஆற்றல் மிக்க இளைஞர் கூட்டம் பிடித்த மீன்களைக் காவிரித் துறையில் கருக்கலில் சேர்க்கின்றனர். எடுத்துச் சென்று விற்க அவர்தம் தங்கையர் கூட்டம். கனவு போல் இருக்கிறதா? வறண்டு போன இன்றைய காவிரி, இந்தப் பாடலைக் கனவுக் காட்சியென்றுதான் நினைக்கத் தூண்டும். ஆனால் நக்கீரர் பாடியது மெய்.

பாடல் : அகநானூறு - 126




பெண்களை அடிக்கலாமா?

பெண்களை மட்டுமல்ல, யாரையுமே அடிக்கக்கூடாதுதான். அடித்துத் திருத்துவதினும் சொல்லித் திருத்துவதுதான் முறையானது. ஆனால், சங்க காலத்தில் அடித்துத் திருத்தும் பழக்கமும் இருந்திருக்கிறது. தன் அன்பு மகளின் கூந்தலை ஒரு கையால் பற்றியபடி, மறு கையில் உள்ள கோலால், அக்கோல் சிதையுமளவும் மகளின் முதுகில் அடித்துத் துன்புறுத்திய தாயைப் படம்பிடிக்கும் கயமனார், தன் செயலுக்காக அத்தாய் வருந்துவதையும் காட்டுகிறார். அடிக்கும்போது 'இது என் முதுகு, நீ யார் அடிக்க?' என்று எதிர்க்காமல், தான் தந்ததையெல்லாம் பெற்றுக்கொண்ட அந்த மகளள அடித்த கை பெருந்துன்பம் அடைவதாக என்று தாயே தனக்குத் தண்டனை வேண்டும் காட்சி சமூக வாழ்க்கையின் ஒரு துளியாய் மின்னுகிறது.

பாடல் : அகநானூறு - 145




மரம் வெட்டலாமா?

கூடாது, கூடவே கூடாது. கயமனார் காட்டும் தாயின் கூக்குரல்தான் இது. மகளைக் கோலால் அடித்துத் துன்புறுத்திய தாய், அந்தத் தவறான செயலைச் செய்த தன் கை பெருந்துன்பம் அடையவேண்டும், அதுவே தனக்குச் சரியான தண்டனை என்று கருதுகிறாள். அந்தத் துன்பம் எப்படிப்பட்டதாய் அமையவேண்டும் என்பதைப் புலப்படுத்த முனைகையில் குறுக்கைப் பறந்தலைப் போர்க்களக் காட்சிதான் அவள் நினைவுக்கு வருகிறது.

அன்னியும் திதியனும் சிற்றரசர்கள். இருவருக்கும் இடையே போர் மூண்டது. திதியனின் காவல் மரமான புன்னையை அது பூத்திருப்பதுகூடக் கருதாமல் வெட்டிச் சாய்க்கிறார் அன்னி. வெட்டப்பட்ட அந்தப் புன்னை என்ன பாடுபட்டிருக்கும்? எப்படியெல்லாம் துடித்திருக்கும்? அதுபோல் துன்பத்தை, மகளை அடித்த என் கையும் பெற்று அலமரட்டும் என்று தனக்குத் தானே தண்டனை வழங்கிக் கொள்ளும் அந்தத் தாயின் சொற்களில், சங்க மக்கள் மரங்களை எப்படியெல்லாம் நேசித்தனர் என்பதுவும் எத்தனை அழகாக வெளிப்பட்டு விடுகிறது?

பாடல் : அகநானூறு - 145




நன்றி : வரலாறு ஆய்விதழ் தொகுதிகள் 12, 13.



this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.