http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 4

இதழ் 4
[ நவம்பர் 15 - டிஸம்பர் 14, 2004 ]


இந்த இதழில்..
In this Issue..

தரவுகளைத் தொகுப்போம்
மத்தவிலாச அங்கதம் - 2
கதை 3 - கண்டன்
தட்டப்படாத கதவுகள் திறப்பதில்லை
கல்வெட்டாய்வு - 3
ஆத்மாவின் அடையாளங்கள்
கட்டடக்கலை ஆய்வு - 4
இராஜசிம்மன் இரதம்
Rare Karana Sculptures from Thirumalapadi
இராகமாலிகை - 3
சங்கச்சாரல் - 4
கோச்செங்கணான் யார் - 2
இதழ் எண். 4 > கதைநேரம்
(அப்பொழுது கபாலி தனது நங்கையுடன் வருகிறான்)

<கபாலி> : (குடிபோதையில்) அன்பே தேவசோமா, தவங்களின் மூலம் ஒருவன் தான் விரும்பிய வடிவத்தை அடையலாம் என்பது உண்மை. நீயோ ஒரு நொடியில் வியக்கத்தக்க புதுவடிவத்தை உன்னுடைய மிகப்பெரிய விரதத்தால் பெற்றுவிட்டாய். உன்னையே பார்:

முத்தென வியர்வை சொரிந்திடும் எழில் முகம்
முழுவதும் அழகுற நெளிந்திடும் புருவம்
மத்த நடை ஒரு பொருளற்ற முறுவல்
முறையறு அசையொடு முழங்கிய வாய்மொழி
மருங்கினில் தொங்கியே சுழல் இருவிழிகள்
மேல் இளஞ்சாயச் செந்நிறத் தேமல்
நறுமலர் மாலை ஊடறுந் தளர்ந்திட
தடந்தோள் விளிம்பினில் விழுந்திடும் குழைகள்.

<தேவசோமா> : ஆண்டவனே, நான் குடித்திருப்பது போலவும், குடித்திருக்கிற என்னிடம் பேசுவது போலவும் பேசுகிறீர்கள்.

<கபாலி> : என்ன சொல்லுகிறாய் அன்பே?

<தேவசோமா> : நான் ஒன்றும் சொல்லவில்லை.

<கபாலி> : என்ன? நான் குடித்திருக்கிறேனா?

<தேவசோமா> : ஆண்டவனே, உலகம் சுற்றிச் சுற்றி வருகிறது. நான் விழுகிறேன் போல் இருக்கிறது. என்னைப் பிடியுங்கள்.

<கபாலி> : நல்லது அன்பே. (அவளைத் தாங்க முயலுகிறான். ஆனால், தானே கீழே விழுகிறான்.) அன்பே சோமதேவா, நான் தாங்க முயலும் போது விலகிக் கொள்கிறாயே, கோபமா?

<தேவசோமா> : ஆமாம், சோமதேவா கோபமாக இருக்கிறாள். நீர் தலைகுனிந்து வரும்படியாக கெஞ்சியும் விலகிக் கொள்கிறாள்.

<கபாலி> : நீ சோமதேவாதானே? (சிந்தித்து) இல்லை, இல்லை. தேவசோமா!

<தேவசோமா> : ஆண்டவனே, சோமதேவா உங்களுக்கு அவ்வளவு பிடித்தம். அதனால்தான் பெயரைச் சொல்லிக் கூட என்னை அழைக்க முடியவில்லை!

<கபாலி> : அன்பினும் அன்பே, அது நாப்பிசகு. எனது போதை மயக்கம்தான் உண்மையான குற்றவாளி.

<தேவசோமா> : நல்லவேளை நீங்கள் இல்லை.

<கபாலி> : இந்த கெட்ட குடிப்பழக்கம் என்னை எவ்வளவு பாதிக்கிறது! சரி, சரி, இந்த நொடி முதல் நான் குடிப்பதை நிறுத்துகிறேன்.

<தேவசோமா> : ஆண்டவனே, வேண்டாம். எனக்காக உங்கள் சபதத்தை முறித்து உங்கள் தவத்தைக் குலைக்கவேண்டாம். (அவனுடைய காலில் விழ)

<கபாலி> : (மகிழ்ச்சிப் பெருக்கில் அவளைத் தூக்கித் தழுவிக்கொள்கிறாள்) பலே, பலே! சிவபெருமானுக்குப் புகழுண்டாகட்டும். அன்பினும் அன்பே:

மதுவைக்குடி காதல் முகத்தை ரசி
தன்னுணர்வின்றியே திகிலுடை தரி
முத்திப் பாதையை இப்படி விதித்த
சூலப் படைச்சிவன் அளுக என்றும்.

<தேவசோமா> : ஆண்டவனே, அப்படிப் பேசிவிடாதீர்கள். முத்திப் பாதையை சமணர்கள் வேறுவிதமாக விளக்கஞ் செய்கிறார்கள்.

<கபாலி> : அன்பே, அவர்களெல்லாம் நாத்திகர்கள். ஏனென்றால்:

தருக்கக் காரணங் கொண்டது நிருவியே
காரண காரியம் வடிவினில் ஒன்றென
களிப்பது என்பது வேதனை விளைவெனும்
கொள்கைச் சதியினில் நலிந்த நீசர்கள்.

<தேவசோமா> : நிறுத்துங்கள். இப்படிப் பேசுவதே பாவம். நிறுத்துங்கள்.

<கபாலி> : ஆம், ஆம். நிறுத்துங்கள், இப்படிப்பட்ட பாவத்தை நிறுத்துங்கள். அந்தக் கேடுகெட்ட நீசர்கள் நிந்தனைக்குக்கூட இலாயக்கற்றவர்கள். துறவறங்கொண்டு முடி கொய்து, அசுத்தங்கொண்டு உண்ணும் நேரத்திற்கும் கட்டு விதித்து, கந்தை தரித்து இப்படியாக மக்கள் வாழ்வைக் கெடுக்கிறார்கள். அதனால் நாத்திகர்களைப் புகழ்ந்த எனது வாயை மதுவால் நான் கழுவிக்கொள்ள வேண்டும்.

<தேவசோமா> : அப்படியானால் நாம் வேறொரு மதுக்கடைக்குப் போவோம்.

<கபாலி> : ஆகட்டும் கண்ணே. (அவர்கள் நடக்கிறார்கள்)

<கபாலி> : ஆ! காஞ்சிபுரத்தின் மிகுந்த வளம்; கோவில் விமான உச்சியில் தங்குகிற மேகங்களின் முழக்கத்தோடு கலந்து குழம்புகிற மிருதங்க ஒலி. வசந்தமே உருவாகக் காரணம்போல் விளங்குகின்ற பூமாலைக் கடைகள். எழிலுடைய இளம் பெண்களின் ஒலி செய்யும் மணிக்கச்சைகள், மலரம்புக் கடவுளின் வெற்றியை ஓதுகின்றன.

இன்னும்:

மெய்வழிக் காட்சியில் முனிவர்கள் உறுகிற
இணையறு நிலைபெறு ஓவாக் களிப்பு
இவனுண்டு பொதுவில்; இதனுள்ளும் வியப்பு
நேயப் பிராணிகள் இவைதமை இங்கு
ஈண்டிய மோகத் திளைப்பால் பெற்றன.

<தேவசோமா> : ஆண்டவனே, காஞ்சி இந்த தெய்வீக மதுவைப் போலவே அப்பழுக்கற்றுச் சுவைக்கிறது.

<கபாலி> : அன்பே, பார்! பார்! இந்த மதுக்கடை வேள்விக் கூடத்தை ஒத்து விளங்குகிறது. இங்கிருக்கும் அடையாளக் கொடிக் கம்பத்தைப் பார். அதுதான் வேள்விக் குண்டத்துக் கம்பம். மதுதான் சோமரசம். ஜாடிகள் புண்ணியப் பாத்திரங்கள். பொரித்த கறியும் மற்ற பொருட்களும் சுவைக்கும் நைவேத்தியங்கள். போதைப் பிதற்றல்கள் யஜூர்வேத மந்திரங்கள். பாடல்கள் சாம வேத கீதங்கள். தோல் பைதான் வேள்வி அகப்பை. தவிப்பே தீ. கடைக்காரர்கள் வேள்வி நேர்ந்தவர்கள்.

<தேவசோமா> : நமது பிச்சை உருத்திரனுக்கு ஒதுக்கிவைத்துள்ள வேள்விப்பங்கு.

<கபாலி> : ஆ! போதை வெறியாட்டம் என்னே அழகு! மத்தள தாளத்துக்கு இசையே அங்க அசைவு, குரலசைவு கண் இமைப்பு. இப்பொழுது மேலாடையைச் சரிப்படுத்த ஒரு கை உயர்த்தி கழுத்தணியை விலகவிட்டு பின் கீழாடையைச் சரிப்படுத்தும்பொழுது தாளத்தை இழக்கிறது.

<தேவசோமா> : ஆஹா! ஆண்டவர் பொல்லாத ரசிகர்.

<கபாலி> : இந்த தெய்வீக மதுவைக் கிண்ணத்தில் ஊற்று. ஆடை ஆபரணங்கள் நீங்கட்டும். ஊடிய காதலர் ஒன்றுவர். இளைஞர்கள் வெட்கம் நீங்கி வீரர் ஆவர். வாழ்க்கை முழுவதும் காதல் பெருகும். இனி என்ன பேச்சு இருக்கிறது?

முன்னர் அரனார் மூன்றாங்கண் தீ
மதனனைச் சுட்டது எனுமொழி பொய்மொழி
மன்மதன் தானே நீராய் உருகிட
மாண்புறு நேயக் கொழுந்து எரிந்தது;
அதுவே நம்மைச் சுடுகுது;
நம் மனங்களையும் பொசுக்குது.

<தேவசோமா> : இருக்கலாம். ஆனால் உலகின் நன்மைக்காக செயல்படுகிற இறைவன் உலகினை அழிக்கமாட்டார்.

(இருவரும் கன்னத்தில் போட்டுக்கொள்கிறார்கள்)

<கபாலி> : கும்பிடுகிறேன், தயவுசெய்து தானம் கொடுங்கள்.

<அசரீரி> : (பெண் குரல் - அரங்கத்தின் உள்ளிருந்து) ஆண்டவனே, இதோ தானம். எடுத்துக்கொள்ளும்.

<கபாலி> : ஏற்றுக்கொள்கிறேன். அன்பே! என்னுடைய கபாலவோடு எங்கே?

<தேவசோமா> : நானும் அதைக் காணவில்லை.

<கபாலி> : (சிந்தித்து) ஆ! அந்த மதுக்கடையிலே மறந்துவிட்டிருக்கவேண்டும். மறுபடியும் போய்ப் பார்ப்போம்.

<தேவசோமா> : ஆண்டவனே, மரியாதையோடு தரப்படுகிற தானத்தை ஏற்றுக்கொள்ளாமலிருப்பது பாவம். நாம் இப்பொழுது என்ன செய்யலாம்?

<கபாலி> : அன்பே அவசர விதியினை உபயோகித்து பசுவின் கொம்பில் அதை வாங்கிக் கொள்ளலாம்.

<தேவசோமா> : நல்லது ஆண்டவனே.

(அவள் அதைப் பெற்றுக்கொள்கிறாள்)

(இருவரும் சுற்றி வந்து தேடுகிறார்கள்)

<கபாலி> : என்ன? இங்கே எங்கும் அதைக் காணவில்லை. (நம்பிக்கை இழந்து) ஆ! ஆ! மகேசுவரர்களே, மகேசுவரர்களே, எனது பிச்சைப் பாத்திரத்தைக் கண்டீர்களா? என்ன சொல்லிகிறீர்கள்? பார்க்கவில்லை என்று சொல்லுகிறீர்களா? நான் தொலைந்தேன். என் தவப்பயன்களெல்லாம் அழிந்தது. நான் இனி எப்படி ஒரு கபாலியாக இருக்க முடியும்? ஆ! என்ன கஷ்டம்.

வெகு வெள்ளையொடு மிகு சுத்தம்
பெருந்துணை யானருந்த உண்ண உறங்க
அதன் இழப்பு பெரும் அழிவு இனி எனக்கு.

(அவன் கீழே விழுந்து தலையில் அடித்துக் கொள்கிறான்)

இருக்கட்டும். இதெல்லாம் ஓர் அடையாளம். கபாலிப் பட்டம் இல்லாததாலே நான் ஒன்றும் கெட்டுவிடவில்லை.

(எழும்புகிறான்)

<தேவசோமா> : ஆண்டவனே, யார்தான் கபாலவோட்டை எடுத்திருக்கக்கூடும்?

<கபாலி> : அன்பே அதிலே பொரித்த கறி இருந்தது, ஒரு நாயாவது, ஒரு புத்த துறவியாவது எடுத்திருக்க வேண்டும்.

<தேவசோமா> : அப்படியானால் காஞ்சிபுரம் முழுவதும் சுற்றி அதைத் தேடுவோம்.

<கபாலி> : அப்படியே செய்வோம் அன்பே!

(சுற்றி வருகிறார்கள்)

(புத்த துறவி ஒருவர் திருவோட்டை ஏந்தியவண்ணம் நுழைகிறார்)

(தொடரும்)



'Mattavilasa Angatham' ('Mattavilasa Prahasanam') A Translation into Tamil by E. John Asirvatham Of King Mahendravarman's Sanskrit Farce Published by The Christian Literature Society (copyright 1981 by Michael Lockwood), which, in turn, was Based on the Edition and Translation in English Of Mahendravarman's original Sanskrit Text By Michael Lockwood and A. Vishnu Bhat Published by The CLS (copyright 1981 by Michael Lockwood)this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.