![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 46
![]() இதழ் 46 [ ஏப்ரல் 21, 2008 ] இரா.கலைக்கோவன் மணிவிழா சிறப்பிதழ் ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தனித்திருக்கிறாள் தலைவி. தொழத்தக்க கடவுள் தன்மை நிரம்பிய செயலொன்றைச் செய்வதற்காக ('கல்வி கற்க' என்கிறார் உரையாசிரியர்) அவனைப் பிரிந்து சென்றுள்ளான் தலைவன். வாடை வீசுகிறது. அதன் வீச்சில், ஈங்கை மரம் ஆலங்கட்டி போன்ற தன் வெள்ளிய பூக்களைச் சிந்துகிறது. மரத்திலோடும் கரிய வாலையுடைய ஓந்தியின் (ஓணான்) கரிய தாடி போலமைந்த மகரந்தம் நிரம்பிய குவளை மொட்டுகளின் இதழ்கள் அந்த வாடை தாங்காது நெகிழ்கின்றன. உறங்காக் கண்களும் பரந்த பாதங்களும் பெரிய வாயினையும் உடைய மதம் நீங்கிய யானைகள் போல, நீரினைப் பெய்து வறுமை எய்திய மேகங்கள் வானில் உலவுகின்றன. பனி நிரம்பிய நடு இரவில் தனித்திருந்தவர்களின் துன்பத்தின் அளவு புரியாதது போல், காலையிலும் வீசும் வாடை, அதை வெறுக்கும்படியான உள்ளத்தை உண்டாக்கியதால் சினந்த தலைவி, 'வாட்டும் வடையே, என் தலைவன் மட்டும் விரைந்து வரின் நீ ஓடவேண்டியிருக்கும்' என்று எச்சரிக்கிறாள். இங்குதான் பரணருக்கு, ஒருவரை எதிர்த்துத் தோற்றோடிய ஒன்பது பேரின் நினைவு வருகிறது. 'சிறந்த குதிரைப்படையும் பகைவர்க்கு அச்சந்தரும் காலாட்படையும் கொண்டு தாம் விரும்பும் இடத்தை வென்று கொள்ளும் பெரும் வளத்தையுடன் கரிகால் வளவன் முன் நிற்க முடியாமல், வாகைப்பறந்தலை என்னும் போர்க்களத்தில், நல்லதொரு பகல் நேரத்தில் தமது ஒன்பது வெண்கொற்றக்குடைகளையும் நழுவவிட்டு ஓடிப் பெருமை இழந்த ஒன்பது மன்னர்களைப் போல வாட்டும் வாடையே நீயும் ஓடுவாய், என் இனிய தலைவர் இங்கு வரின்' என்று வரலாற்றுத் தகவலை வாடைக்குச் சொல்லிச் சினமாற்றும் தலைவி பரணரின் பாங்கான படப்பிடிப்பு. (அகம். 125) அகம் 125. திணை : பாலை ஆசிரியர் : பரணர் அரம் போழ் அவ் வளை தோள் நிலை நெகிழ, நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி இரங் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை ஆலி அன்ன வால் வீ தாஅய், வை வால் ஓதி மைஅணல் ஏய்ப்பத் தாது உறு குவளைப்போது பிணி அவிழ, படாஅப் பைங் கண் பா அடிக் கய வாய்க் கடாஅம் மாறிய யானை போல, பெய்து வறிது ஆகிய பொங்கு செலற் கொண்மூ மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர, பனி அடூஉ நின்ற பானாட் கங்குல் தனியோர் மதுகை தூக்காய், தண்ணென, முனிய அலைத்தி, முரண் இல் காலை; கைதொழு மரபின் கடவுள் சான்ற செய்வினை மருங்கின் சென்றோர் வல் வரின் விரிஉளைப் பொலிந்த பரியுடை நல் மான் வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த பெரு வளக் கரிகால் முன்னிலைச் செல்லார், சூடா வாகைப் பறந்தலை, ஆடு பெற ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த பீடு இல் மன்னர் போல, ஓடுவை மன்னால் வாடை! நீ எமக்கே. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |