![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 6
![]() இதழ் 6 [ ஜனவரி 15 - ஃபிப்ரவரி 14, 2005 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
என்னைக் கேட்டால் திருவையாறுக்கு அருகில் இருப்பவர்கள் பாக்கியசாலிகள் என்பேன். அதிக சிரமமில்லாமல் தியாகராஜ உத்சவத்தில் அவர்கள் கலந்து கொள்ளலாம் என்பதால் இதைச் சொல்லவில்லை. வெளியூரிலிருந்து விடுப்பெடுத்துக் கொண்டு நாள் முழுவதும் காவிரிக் கரையிலமர்ந்து அங்கொலிக்கும் பாட்டைக் கேட்பவர்களைப் போலல்லாமல், காலை வேளையில் வழக்கம் போல வேலைக்குச் சென்று, கச்சேரிப் பந்தலுக்குச் சாயங்காலத்தில் மட்டும் வந்தால் போதுமே! 'மட்டும்' என்கிற வார்த்தை கொஞ்சம் குழப்புகிறதல்லவா? விஷயம் இதுதான். சாயங்கால வேளையில் பாடப் பிரபலமான பாடகர்களுக்கு ஸ்லாட் ஒதுக்கப் படுகிறது. காலை வேளையில் இன்னார்தான் பாடுவார் என்று சொல்வதற்கில்லை. உத்சவத்துக்குப் பல வாரங்கள் முன்பே உத்சவக் கமிட்டியிடம் பதிவு செய்து விண்ணப்பித்தால் ஐந்து நிமிடமோ பத்து நிமிடமோ பாட வாய்ப்பளிக்கப்படும். எதை அடிப்படையாகக் கொண்டு பாட வாய்ப்பளிக்கிறார்கள் என்பதை நானறியேன். பாடுபவர்களின் தரத்தை வைத்துப் பார்க்கும் பொழுது விண்ணப்பம் செய்யும் அத்தனை பேருக்கும் வாய்ப்புக் கிடைத்துவிடும் என்றுதான் தோன்றுகிறது. இதைத் தவிர ஸ்பாட்- எண்ட்ரியாக மேடையேறும் மஹானுபாவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். விளையாட்டாகச் சொல்லவில்லை, நிஜமாகவே பந்தலில் இரசிகர்கள் அமரும் இடத்தை விட மேடையிலேதான் கூட்டம் அதிகமிருக்கும். தியாகராஜர் பிரபலமானவருக்கு மட்டும் உரியவரில்லை. சங்கீதம் கற்கும் அனைவருக்கும் குரு ஸ்தானத்தில் வைத்துக் கருதப்படுபவர். அவருக்கு நிகழும் ஆராதனையில் பலர், குறிப்பாகப் பல சிறுவர் சிறுமியர், பள்ளிக்கு விடுப்பெடுத்துக் கொண்டு பாட வருவது சந்தோஷமளிக்கக் கூடிய விஷயம்தான். ஆனால் அவர்கள் தியாகராஜருக்குச் செலுத்தும் அஞ்சலி திருவையாற்றிற்கு வருவதாலேயே பூர்த்தியாகி விடுகிறதா? அவரது கீர்த்தனையை ஒழுங்காகப் பாடுவது மட்டும்தான் அவருக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலியாகும். ஒழுங்காகப் பாடுவதென்றால், வார்த்தைகளைச் சரியாகப் பிரித்து, பாடலின் பாவம் கெடாமல் பாடுவது என்றெல்லாம் நான் கூறவில்லை. அப்படியெல்லாம் பல தேர்ந்த வித்வான்களே பாடுவதில்லை. 'சீதம்ம மாயம்மாவில்' பராசரர் படும் பாட்டைப் பற்றி அனைவருக்கும் தெரியும். ஒழுங்காகப் பாடுவது என்று நான் குறிப்பிட்டது சங்கீதத்தின் அன்னையான ஸ்ருதியிலிருந்து விலகாமல், தந்தையான லயத்தின் பிடியை விட்டுவிடாமல் பாடுவதேயாகும். சங்கீதம் கற்கும் பலர் இதைக் கூடவா செய்வதில்லை என்று கேட்டால், அதற்கான பதில் 'இல்லை' என்பதே. பெற்றோர்களுக்கு வேண்டுமானால் தம் மக்களின் குரல் யாழையும் குழலையும் விட இனிமையாகக் கேட்கலாம். ஆனால் மற்றவருக்கெல்லாம் ஸ்ருதியின்றித் தாளமின்றி அரங்கேறும் பாடல்கள் நாராசமாகத்தான் கேட்கும். சேஷகோபாலன் சாயங்காலம் பாடிய மேடையில் என் மகன் காலையில் பாடினான் என்று சொல்லிக் கொள்வது பெருமைதான். அப்பெருமைக்கு ஆசைப்படுவதில் ஒன்றும் தவறல்ல. மேடை என்கிற பீடத்திலிருந்து பாடும் பொழுது கீழே அமர்ந்து கேட்பவனை நினைத்துப் பார்ப்பதுதான் தர்மம். எவன் காது சங்கடப்பட்டால் எனக்கென்ன என்ற மனோநிலையில் மேடையேறுதல் பாவத்திலும் பெரிய பாவமாகும். 'நான் பெருமையடித்துக் கொள்ள மேடையேறவில்லை, என் அஞ்சலியைச் செலுத்தத்தான் பாடுகிறேன்' என்று சொல்பவர்கள் எல்லாம், மதிய வேளையில் ஆளரவமின்றியிருக்கும் சமாதிக்குச் சென்று உங்கள் அஞ்சலியைச் செலுத்திக் கொள்ளுங்கள். மேடையில் main artiste-ஆக இருக்கத்தான் போட்டி. பக்க வாத்தியம் வாசிப்பவர்கள், குறைந்த பட்சம் அரை மணியாவது வாசித்தபின்தான் மேடையை விட்டு இறங்குவார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், முதலில் 2 கட்டை ஸ்ருதியில் ஒரு இளைஞர் பாடுவார். அடுத்து ஐந்து கட்டை ஸ்ருதியில் ஒரு பெண்மணி பாடுவார். இருவருக்கும் ஒரே மிருதங்கத்தை வைத்துக் கொண்டு ஒரே வித்வானே வாசிப்பார். (ஒரு வேளை அவரது மிருதங்கம் இரண்டு ஸ்ருதிக்கும் இடைப்பட்ட ஸ்ருதியில் அமைந்திருக்கலாம்.) இதில் வேடிக்கை என்னவென்றால், ஆராதனையில் பெரும்பாலும் பலர் 'சோபில்லு சப்தஸ்வர', 'நாதோபாசனா', 'சொகசுகா மிருதங்க தாளமு' போன்ற இசையுடன் தொடர்புடைய பாடல்களையே கொலை செய்து கொண்டிருப்பார்கள். 'சன் டிவியில்' வரும் 'சப்த ஸ்வரங்கள்' நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கான தேர்வில் கலந்து கொள்ளப் பலர் வருகிறார்கள். அவர்கள் எல்லோரையும் பாட அனுமதித்து விடுகிறார்களா? ஸ்ருதி, தாளம், குரலினிமை எல்லாவற்றிலும் சிறந்திருந்தால்தானே பாட அனுமதிக்கிறார்கள்? வருடம் முழுவதும் நடக்கும் சப்த ஸ்வர நிகழ்ச்சிக்கே இத்தனை தேர்வு இருக்கும் பொழுது வருடம் ஒருமுறை நடக்கும் தியாகராஜர் உத்சவத்தில் இம்முறையை ஏன் நாம் பின்பற்ற இயலாது? இதெல்லாம் நடக்கவேண்டுமெனில், உத்சவக் கமிட்டியில் உள்ளவர்கள் காலை வேளையிலும் சற்றுப் பந்தல் பக்கம் வந்து அங்கு நடைபெறும் கேலிக்கூத்தைக் காண வேண்டும். சாதாரண இரசிகர்களுக்கே இரத்தக் கொதிப்பு ஏற்படும் பொழுது, சங்கீத வித்வான்களான உத்சவக் கமிட்டி உறுப்பினர்கள் இதை நிச்சயம் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். வளரும் கலைஞர்களான இளைஞர்களும் ஒன்றுமறியாச் சிறுவர் சிறுமியரையும் கூட நான் மன்னித்து விட்டுவிடலாம். 40 வயதைக் கடந்திருக்கும் சிலர் மேடையேறி விழாவையே அலங்கோலப்படுத்துவது சற்றும் சகிக்க முடியாக் கொடுமையாகும். திருவையாற்றில் நடக்கும் கச்சேரிகளைப் பற்றி விவரிக்கும் போன தலைமுறையைச் சேர்ந்த 'எல்லார்வி' தனது 'அரியக்குடி' புத்தகத்தில், திருவையாறு இரசிகர்களின் மேன்மையைப் பற்றிச் சிலாகித்து எழுதுகிறர். அக்காலத் திருவையாறு இரசிகர்கள் எப்படியெல்லாம் நல்ல சங்கீதத்தை உற்சாகப்படுத்தினார்கள் என்றும் முதல் தரத்திலிருந்து சற்றே குறையும் சங்கீதத்தை எப்படியெல்லாம் கூச்சலிட்டும் கையறைந்தும் மேடையை விட்டு விலக்கினார்கள் என்றும் எழுதுகிறார். இன்றைய நிலையில் அந்த இரசிகர்களின் இரைச்சல் எல்லாம் பலனளிக்காமல் போய் அவர்கள் மேடைப்பக்கமே தலை வைத்துப் படுக்காத நிலையில் உள்ளார்கள். நானும் இந்த வருடம் ஆராதனையில் சாயங்கால வேளையில் பாட்டுக் கேட்கப் போனால் போதுமென்று முடிவெடுத்து விட்டேன். காலை வேளையை எப்படிக் கழிப்பாய் என்றுதானே கேட்கிறீர்கள்? இருக்கவே இருக்கிறது கல்வெட்டுகளும் சிற்பங்களும் நிறைந்த, அப்பருக்குக் கைலாயக் காட்சி கிடைத்த இடமான, ஐயாறப்பன் கோயில். காலை வேளையைக் கோயிலில் ஓட்டிவிட முடியாதா என்ன? this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |