http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 6

இதழ் 6
[ ஜனவரி 15 - ஃபிப்ரவரி 14, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

சுனாமி
சுனாமி
கதை 4 - கபிலன்
தஞ்சையில் முப்பெரும் வரலாற்றுப் பெருவிழா - ஒரு அறிவிப்பு
மத்தவிலாசப் பிரகசனம் - 4
மன்றத்துப் புன்னையும் மாமனிதர் அப்பரும்
தமிழ்மொழி வளர்ச்சியில் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் பங்களிப்பு
கல்வெட்டாய்வு - 5
கட்டடக்கலை ஆய்வு - 6
இராஜசிம்மன் இரதம்
Architectural traditions and innovations of Tamils
திருவையாறு தியாகராஜ உத்சவம்
சங்கச்சாரல் - 6
இதழ் எண். 6 > இலக்கியச் சுவை
சங்கச்சாரல் - 6
வில்லரின் விரல் பழக்கம்


சங்ககால மறவர்களின் பழக்கவழக்கங்கள் ஆய்வுக்குரியன. இவை இலக்கியப் பாடல்களின் காதலடிகளுக்குள் கரைந்து கிடக்கின்றன. தேடி அகழ்ந்தால் . . . ! இதோ ஒரு முத்து (அகம் 215)! படிப்பறிவற்ற ஆனால் அனுபவ அறிவுடைய மறவர்கள் வில்லேந்தியவர்கள்; வடித்த கூரம்புகளைக் கொண்டவர்கள்; வழிப்போக்கர்களைக் கொன்று தம் வாழ்க்கையை வளர்ப்பவர்கள்; கொடுந்தொழில்தான் என்றாலும் கொன்றவர்களைக் கற்பதுக்கையிலிட்டு மூடிய கருணையாளர்கள். இவர்களிடம் ஒரு விசித்திரப் பழக்கம் இருந்தது! யாரையேனும் அல்லது எதையேனும் குறிபார்த்து வில்லை வளைத்து அம்பினைத் தொடுத்து எய்யும்போது, ஒரு வேளை குறித்த இலக்குத் தப்பிவிடுமாயின், அதாவது, குறி தவறிப்போகுமாயின் இம்மறவர்கள் மிக வருந்தி அம்பினைத் தொடுத்த கை விரலை வாயால் கவ்விக் கொள்வாராம். இது வெட்கத்தால் விளைந்த வேதனைப் பழக்கம் போலும். இன்றும் வாயில் விரல் வைத்துக்கொண்டு வெட்கப்படுபவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்!




பறவைக்காவலர்


விலங்குகளையும் பறவைகளையும் காப்பாற்ற இன்று நாடு தழுவிய அளவில் பல அமைப்புகள் உள்ளன. இந்தக் கருணையுணர்வும், காப்புச் சிந்தனையும் சங்ககாலத்தில் தனி மனிதர்களிடம் நிரம்பியிருந்ததை அகநானூற்றுப் பாடல்கள் நான்கு (142, 148, 181, 208) தெளிவாக்குகின்றன. வெளியன் வேண்மான் ஆய் எயினன் பறவைகளின் பாதுகாவலராக வாழ்ந்தவர். நன்னன் புன்னாட்டின் மீது படையெடுத்தபோது, 'அஞ்சலிர்' என்று அந்நாட்டவர்க்குத் துணை நின்ற இவ்வேந்தர், பாழியில் நடந்த போரில் தம் சொல்லைக் காப்பாற்றி நன்னனுக்குத் துணைவந்த பெரும்படை மிஞிலியிடம் முருகனையொப்பப் போரிட்டுத் தம் இன்னுயிரை இழந்தவர். நண்பகல் போரில் பொருது வீழ்ந்த பறவைக் காவலராம் எயினர் உடலை ஞாயிற்றின் கதிர்கள் சுடுதலை விரும்பாத புள்ளினங்கள், அவலப் பேரொலியுடன் வானில் ஒன்றிணைந்து பறந்தவாறு தம் சிறகுகளால் பந்தலிட்டு நிழல் தந்தன. பகலில் கண் தெரியாத காரணத்தால் இந்தத் திருப்பணியில் கலந்துகொள்ள முடியாத ஆந்தையொன்று தன் ஆற்றாமைக்கு நாணுற்றுத் துன்புற்றது.

வெள்ளம் போல் படையுடைய அதிகன் பறவைக் காவலராக வாழ்ந்த மற்றொரு சங்க மனிதர். இவரையும் மிஞிலி போர்க்களத்தில் கொன்றொழித்தார். அதிகனும் எயினனும் இருவரல்லர் ஒருவரே எனுமாறு உரையாசிரியர்கள் எழுதுவது சரியல்ல எனத் தோன்றுகிறது. உண்மையை அய்யத்திற்கிடமின்றி அறிஞர்கள் விளக்கினால் அனைவரும் அறிந்து கொள்ளலாம்.




உறையூர்க் குதிரைகள்


தித்தனின் நல்லாட்சியில் திளைத்திருந்த உறையூரைச் சுற்றி வேலியிட்டாற் போல் மதில் சூழ்ந்திருந்தது. மதிலுக்கு வெளியே கற்கள் நிறைந்த காவற் புறங்காடு இருந்தது. தித்தனின் குதிரைப்படை பாய்ந்து செல்லும் நேரோட்டம் (ஆதிகதி) உடையது; படைக்குதிரைகளின் கால்களில் பரல்கள் இணைத்த சதங்கைகள் அணிவிக்கப்பட்டிருந்ததால், ஓட்டத்தின்போது இன்னிசை நாதம் எங்கும் எழுந்தது. அகம் (122) தரும் இச்செய்தியால் சங்ககாலத்திலேயே விலங்குகளும் அணிமணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தமையை அறியமுடிகிறது. இராஜராஜீசுவரத்து சுந்தரர் ஓவியக் காட்சியில் காணப்படும் சேரமானின் குதிரைக்குச் செய்யப்பட்டிருக்கும் அலங்காரங்கள் இங்குக் கருதத்தக்கன. பல்லவர் காலச் சிற்பங்களில் இடம்பெற்றுள்ள பல விலங்குகள் இது போல அலங்கரிப்புகளைக் கொண்டிருப்பதும் ஒப்புநோக்கத்தக்கது. இத்தகு அழகூட்டல்கள் பாசத்தின் விளைவா அல்லது பெருந்தன வெளிப்பாடா?




தகவல் : வரலாறு ஆய்விதழ் 8
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.