![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 119
![]() இதழ் 119 [ மே 2015 ] டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையச் சிறப்பிதழ் ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
முசிறியிலிருந்து 10 கி. மீ. தொலைவிலுள்ள வெள்ளூர் பழைமையான ஊராகும்.
திருக்காமீசுவரம் என்றழைக்கப்படும் இவ்வூர் சிவன் கோயிலைக் கல்லூரி வரலாற்றுத் துறை முதுகலை மாணவர் வீ. நிர்மலா தம்முடைய ஆய்வேட்டிற்காகத் தேர்ந்திருந்தார். பிரதிபந்தத் தாங்குதளத்தின் மீதமைந்த முத்தளக் கலப்பு வேசரமாக முதன்மை விமானம் அமைய, அதன் இருதள ஆரங்களும் ஆறங்கம் பெற்று உயர்ந்துள்ளன. விமானம், முகமண்டபம், பெருமண்டபம், முன்மண்டபம், சுற்றாலைக் கோயில்கள், அம்மன் திருமுன் பெற்றுள்ள காமீசுவர வளாகத்திலிருந்து குலோத்துங்கர், மூன்றாம் இராஜராஜர், குலசேகரர், வீரராமநாதர் காலத்திற்குரிய ஏழு கல்வெட்டுகள் நடுவணரசால் படியெடுக்கப்பட்டு அவற்றின் சுருக்கங்கள் ஆண்டறிக்கையில் (தெ. க. தொ. 1968 - 69, 305-311) பதிவாகியுள்ளன. ![]() வெள்ளூர் திருக்காமீசுவரம் திருக்கோயில் கோயிலின் கட்டமைப்பு, சிற்பம், கல்வெட்டு ஆகியவற்றை ஆய்வு செய்தபோது பெருமண்டப வாயில் முகப்பு மேல்நிலையில் அடர்த்தியான சுண்ணப்பூச்சில் மறைந்திருந்த சடையவர்மர் சுந்தரபாண்டியரின் இரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு கண்டறியப்பட்டது. ![]() பெருமண்டப வாயில் முகப்பு கல்வெட்டு மாணவர்களின் உதவியுடன் சுண்ணப்பூச்சை அகற்றிப் படித்த நிலையில் அக்கோயிலிலுள்ள இறைத்திருமேனிகளை முழுக்காட்டும் நீராட்டு மண்டபமும் ஆடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிருத்த மண்டபமும் சிங்கமங்கலத்தைச் சேர்ந்த வணிகரும் சீலைச் செட்டியார்களுள் ஒருவருமான பஞ்சநதிவாணன் ஏகநாயகன் இராஜநாராயணன் என்பவர் எழுப்பிய கட்டுமானங்கள் என்பதை அறியமுடிந்தது. முன்மண்டபத் தூண் ஒன்றின் கீழ்ச் சதுரத்தில் கண்டறியப்பட்ட 19ஆம் நூற்றாண்டினதாகக் கொள்ளத்தக்க தமிழ்க் கல்வெட்டு உலகக் கடம்பன் எனும் பெயரைத் தந்தது. இக்கடம்பன் முன்மண்டபத்தை உருவாக்கிய கொடையாளியாகலாம். ![]() திருமேற்கோயில் பற்றிக் குறிப்பிடும் கற்பலகைக் கல்வெட்டு வரலாற்றுத்துறை மாணவர்களுள் ஒருவரான ச. இலட்சுமி நாராயணனால் அடையாளப்படுத்தப்பட்ட வெள்ளூர் மேலத்தெரு பிள்ளையார் கோயிலை ஒட்டியுள்ள மணல் மேட்டில் புதைந்திருந்த கற்பலகையை ஊர் மக்கள் உதவியோடு அகழ்ந்தோம். 1.09 மீ. உயரம், 34 செ. மீ. அகலம் கொண்டுள்ள அக்கற்பலகையின் முன்புறத்தே 20 வரிகளிலும் பக்கவாட்டில் 14 வரிகளிலும் தமிழ்க் கல்வெட்டு பதிவாகியிருந்தது. சடையவர்மர் சுந்தர பாண்டியரின் 18ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்த அக்கல்வெட்டுப் பதிவால், வெள்ளூரில் உள்ள பெருமாள் கோயில் திருமேற்கோயில் என்றழைக்கப்பட்டதை அறியமுடிந்ததுடன், கோயில் முதன்மைத் தெய்வங்களான அழகிய பெருமாள், அவரது நாச்சியார் இருவர் உட்படப் பிற தெய்வத் திருமேனிகளுக்கான காவல், உணவுக் கலங்கள், பெருமை மிகு சின்னங்கள் ஆகியவற்றிற்கான பொறுப்பு கோதண்டராமபுரம் கைக்கோள முதலியான அபிமானபூசணரைச் சேரும் என்ற அரிய தகவலையும் பெறமுடிந்தது. ![]() கற்பலகைக் கல்வெட்டு படிப்பு கல்வெட்டுக் குறிப்பிடும் கோதண்டராமபுரம் என்ற பெயரின் பின்னொட்டு (புரம்) கொண்டு வெள்ளூர் பழங்காலத்தே வணிக ஊராக விளங்கியிருக்க வேண்டும் என்றறியலாம். இதைக் காமீசுவரர் கோயிலில் படியெடுக்கப்பட்ட குலோத்துங்கர் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. கல்வெட்டுச் சுட்டும் திருமேற்கோயில் தற்போது ஓட்டைப் பெருமாள் கோயில் என்றழைக்கப்படுகிறது. காமீசுவரத்திலுள்ள மூன்றாம் இராஜராஜர் காலக் கல்வெட்டுக் குறிப்பிடும் கோதண்டராம விண்ணகரே சுந்தரபாண்டியர் காலத்தில் திருமேற்கோயிலாகப் பெயர்மாற்றம் பெற்றுத் தற்போதுள்ள சிதைவு நிலையால் ஓட்டைப் பெருமாள் கோயிலாக அழைக்கப் பெறுகிறது போலும். ![]() வெள்ளூர் திருமேற்கோயில் வயற்காட்டின் நடுவே புதர்கள் சூழச் சுற்றிவர முடியாதபடி மக்களால் கைவிடப்பட்ட நிலையில் உள்ள இந்த ஒருதளப் பெருமாள் கோயில் சிதிலமடைந்து காணப்படுகிறது. தாங்குதளத்தின் பெரும்பகுதி நிலத்தில் புதைந்துள்ள நிலையில் பட்டிகை, வேதிகைத் தொகுதி, சுவர், கூரை மட்டுமே காட்சிக்குக் கிடைக்கின்றன. மேலுறுப்புகள் சிதறியுள்ள இக்கோயில் முகமண்டப முன்சுவரில் கண்டறியப்பட்ட மூன்று வரிக் கல்வெட்டு, பிலவ ஆண்டு, தைத்திங்கள் அப்பகுதியில் நிகழ்ந்த பேரழிவைச் சுட்டுகிறது. எழுத்தமைதி கொண்டு கல்வெட்டை 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியினதாகக் கொள்ளலாம். ![]() வெள்ளூர் திருமேற்கோயில் கல்வெட்டு படிப்பு இக்கண்டுபிடிப்புகளின் வழிச் சிராப்பள்ளி முசிறிச் சாலையிலுள்ள அனைத்துக் கோயில்களையும் ஆய்வு செய்யும் எண்ணம் பிறந்துள்ளது. இப்பகுதியிலுள்ள பல கோயில்கள் வெள்ளூர்த் திருக்காமீசுவரம் போல ஏற்கனவே ஆய்வுகளுக்கு உட்பட்டிருந்தபோதும் தேடலைப் பொறுத்துப் புதியன பெறலாம் என்ற நம்பிக்கையைத் தொடர்ந்து கிடைக்கும் வரலாற்றுப் புதையல்கள் முன்வைக்கின்றன. களஆய்வுகளுக்குத் துணைநின்ற டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவனுக்கும் மதிப்புறு இணை இயக்குநர் பேராசிரியர் மு.நளினிக்கும் உழுவல் நன்றி உரியது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |