http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 144

இதழ் 144
[ ஜனவரி 2019 ]


இந்த இதழில்..
In this Issue..

அவரும் நானும்
செய்திகள் வாசிப்பது வரலாறு டாட் காம் - 3
பாச்சில் அவனீசுவரம்
மாமல்லபுரக் குடைவரைகள் - 3
போய் வாருங்கள் தாத்தா!
ஐராவதம் மகாதேவன் – இதயத்திலிருந்து நேராக
தாராசுரம் - தேவநாயகி (அ) பெரியநாயகி அம்மன் ஆலயம்
நாதமும் நாதனும் நாட்காட்டியும்
இதழ் எண். 144 > இதரவை
தாராசுரம் - தேவநாயகி (அ) பெரியநாயகி அம்மன் ஆலயம்
சு.சீதாராமன்
ஆலயக் கட்டுமானத்தில் நம் முன்னோர்களின் பல்நோக்குத்திறம் மற்றும் புதியன படைத்தல் ஆகியவை நம்மை மிகுந்த வியப்பில்ஆழ்த்துகின்றன.

ஆம்! அத்தைகைய முற்றிலும் புதிய கோணத்திலும் புதுமையான விதத்திலும் உருவாக்கப்பட்ட ஓர் அற்புதமான ஆலயத்தின் அமைப்பை இக்கட்டுரையில் காண்போம்.

கோயில் கட்டுமானக்கலையின் எழுச்சியும் வளர்ச்சியும் காவிரி டெல்டா பகுதியில் சோழர்காலத்தில் முதலாம் ஆதித்த சோழர் காலத்தில் தொடங்கி மூன்றாம் குலோத்துங்கன் காலம் வரை சிறந்த முறையில் கோலோச்சியது என்பது எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதே!

அத்தகைய நீண்ட நெடிய சோழர்களின் கலைப்பயணத்தில் தாராசுரம் ஒரு மிகச்சிறந்த படைப்பாகக் காலம் கடந்து நம் கண் முன் கம்பீரமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே "ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே" பகுதியில் கிரீவத்தில் நந்தியும் கர்ணகூடுகளும் என்ற தலைப்பில் தாராசுரம் ஐராவதேஸ்வரர் ஆலயத்தின் தனித்தன்மை வாய்ந்த கட்டுமானக் கூறுகளில் ஒன்றான கீரீவப் பகுதியில் நந்திகளும் கர்ணகூடுகளும் அமைந்த விதத்தைப் பார்த்தோம்! இக்கட்டுரையில் அதே வளாகத்திலமைந்த அம்மன் ஆலயத்தின் அதிசயமான கட்டுமானக்கூறுகளைக் காண்போம்.

தேவநாயகி அம்மன் என்றும் பெரிய நாயகி அம்மன் என்றும் அழைக்கப்படும் இவ்வம்மன் ஆலயம் அன்றைய காலகட்டத்தில் அம்மனுக்கு என்று பிரத்யேகமாக அமைக்கப்பட்ட தனி ஆலயங்களில் முதலாவதாக எழுப்பப்பட்ட தனி ஆலயமாகும்! இவ்வாலய உருவாக்கத்திற்கு முன்பு வரை சிவனுக்கு மட்டுமே தனி ஆலயங்கள் எழுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

காவேரி டெல்டா பகுதியில் முதன் முதலாக எழுப்பப்பட்ட இவ்வம்மன் ஆலயம் இன்றுவரை இது போல ஒரு அமைப்பில் வேறு ஒரு ஆலயம் அமைக்கப்படாத வரலாறுப் பெருமையையும் கொண்டுள்ளது. பொதுவான கட்டமைப்புகளை விவரிக்காமல் இக்கட்டுரையில் இவ்வாலயத்தின் சிறப்பம்சங்களை மட்டும் சுருக்கமாகக் காண்போம்.

நன்கு அலங்கரிக்கப்பட்ட உப பீடத்தின் மேல் எழும் ஆலயக் கட்டுமானம் பத்ம உபானம், ஜகதி, எண்பட்டைக் குமுதம், கண்டம், பட்டிகை, வேதிகை பெற்ற பாதபந்தத் தாங்குதளம் பெற்ற இவ்விமானம் மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. அதிஷ்டானம் சாலைப்பகுதியில் பாதபந்தமாகவும் கர்ணப்பகுதியில் பத்ம பந்தமும் பெற்று வர்க்கபேதம் பெறுவது கவனிக்கத்தக்கது. வேதி பாதங்களனைத்தும் தாமரை இதழ்கள் பெறுகின்றன. வேதி பாதத்தின் மேலெழும் தூண்கள் (கோட்ட அணைவுத்தூண்கள் தவிர)அனைத்தும் யாளியின் மேல் எழும்புவது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும். இத்தூண்கள் கர்ணப் பகுதியில் விஷ்ணுகாந்தமாகவும், சாலைப்பகுதியில் இந்திர காந்தமாகவும் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கர்ணப்பகுதிக்கும், சாலைப்பகுதிக்கும் இடையில் அமைந்த சுவற்றில் பக்கத்திற்கிரண்டாகக் கருங்கல் பலகணிகள் அமைந்திருப்பது விமானத்தின் அழகிற்கு எழிலூட்டுவதுடன் கருவறைக்கு வெளிச்சமும் காற்றும் அளிப்பது என்று பாங்குடன் அமைக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கதாகும். வழக்கமாக வலபியில் இடம்பெறும் பூத கணங்கள் இங்கு வேதிகண்டப் பகுதியில் கண்டங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்றிருப்பது பொதுவாக வேறெங்கும் காணமுடியாத தனிக்காட்சியாகும்.

மேலும் பொதுவாக விமானத்தின் கருவறை பத்திப்பிரிப்பில் சாலைப்பகுதி முன்னிழுக்கப்பட்டு வடிவமைக்கப்படும் வழக்கத்தைக் கண்டிருக்கிறோம். இவ்வாலயத்தில் ஒட்டுமொத்த விமானமும் உள்ளும் புறமும் முன்னிழுக்கப்பட்டு, முன்னிழுக்கப்பட்ட விமானம், கர்ணப்பகுதி, சாலைப்பகுதி, கர்ணப்பகுதி என்ற அமைப்பில் நான்கு புறமும் அமைந்து நான்கு விமானங்களை ஒட்டியது போன்ற அமைப்பும் எங்கும் காணக்கிடைக்காத அற்புதமான காட்சியாகும்.

பொதுவாக இவ்வாலயக் கட்டுமானத்திற்கு முன்பாக உருவாக்கப்பட்ட ஆலயங்களில் கிரீவப்பகுதிகளில் பக்கத்திற்கு இரண்டாக எட்டு நந்திகளைச் சில ஆலயங்களில் பார்த்திருக்கலாம். ஆனால் இவ்வாலயத்தில் பக்கத்திற்கிரண்டாக எட்டுக் கர்ணகூடுகளையும் காணலாம். ஆனால் சாலை பக்கத்திற்கொன்றாக நான்கு மட்டுமே அமைந்து காணப்படுவது புதுவகை முயற்சியின் உச்சம் என்று கூறினால் அது மிகையாகாது.

மேலும் கோட்டங்களனைத்தும் பெண் தெய்வங்கள் பெறுவதும் கர்ணகூடு சாலைப் பகுதிகளில் அமைந்த அத்தனை சிற்பங்களும் பெண் சிற்பமாக இடம் பெற்றாலும் கிரீவத்தில் அமைந்த நந்திகள் நாங்கள் அப்பனுக்கு மட்டும் வாகனம் இல்லை, அம்மைக்கும்தான் என்று தங்களை அம்மையப்பரின் வாகனங்கள் என்று எண்திசையும் நோக்கி எண்மர் இப்பகுதியில் இடம்பெற்றதும் இவ்வாலய தனிச்சிறப்புகளில் ஒன்று.

மேலும் இக்கட்டுரையில் விமானத்தின் கழுகுப்பார்வைக்காட்சி இணைக்கப்பட்டிருக்கிறது. இக்காட்சி இவ்விமானம் எவ்வளவு அழகுடனும் நேர்த்தியுடனும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காலத்தை வென்று நமக்கு உணர்த்திக்கொண்டிருக்கிறது!.










இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.