http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 148

இதழ் 148
[ மார்ச் 2020 ]


இந்த இதழில்..
In this Issue..

முப்புரம் எரித்தவர்
உடையாளூர் உண்மைகள் - 1
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 1
உறையூர்த் தான்தோன்றீசுவரம் கல்வெட்டுகள்
மதுரை சோமு – காட்சிப் பிழைகளும் கவன ஈர்ப்புகளும்
இதழ் எண். 148 > கலைக்கோவன் பக்கம்
முப்புரம் எரித்தவர்
இரா. கலைக்கோவன்
தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தில் (பெரிய கோயில்) புராணக் கதைகளின் படவிளக்கங்கள் போலமைந்த சிற்பத்தொகுதிகள் பலவாக உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது முப்புரம் எரித்த வரலாறு. இராஜராஜீசுவரத்தை எழுப்பிய முதல் இராஜராஜருக்கு இந்த வரலாற்றில் இணையற்ற ஈடுபாடு போலும். அதனால்தானோ, என்னவோ இந்த வரலாற்றை இரண்டு இடங்களில் சிற்பத் தொடர்களாகவும் கருவறையின் அகச்சுவரில் ஓவியக்காட்சியாகவும் பதிவு செய்திருக்கிறார்.

கோயிலின் இரண்டாம் கோபுரமான இராஜராஜன் திருவாயிலின் தென்மேற்குச் சுவரிலும் விமானம், முகமண்டபம் இவற்றை இணைக்கும் இடைநாழிப் படித்தொடரின் கிழக்கு முகத்திலும் முப்புரம் எரித்த வரலாறு படக்கதை போலச் சிற்பக்காட்சிகளால் விளக்கப்பட்டுள்ளது. கருவறை அகச்சுவர் ஓவியக்காட்சியைப் பொதுமக்கள் காணவேண்டும் என்பதற்காகவே இந்தியத் தொல்லியல்துறை ஒளிப்படப் பதிவாக்கி வளாகக் காட்சியகத்தில் வைத்துள்ளது.

இம்மூன்று பதிவுகளுமே சிவபெருமான் முப்புரம் எரித்த கதையைப் படம்பிடித்தபோதும் இடத்திற்கு இடம் காட்சிப்படுத்தலில் வேறுபாடுகள் உள்ளமை சிறப்பாகக் குறிக்கத்தக்கதாகும். கோபுரக் காட்சியில் மேலும் கீழுமாகப் பக்கவாட்டில் தொடரும் கதை, படிப்பகுதியில் நேர்க் கோட்டில் நகர்கிறது. ஓவியப்பதிவோ மேலிருந்து கீழாகக் கதை நிகழ்வுகளைக் கண்களில் நிறுத்துகிறது. மூன்று படப்பிடிப்புகளிலும் பொதுவான கதையோட்டம் ஒன்று போல் இருந்தபோதும் நிகழ்வுகளைத் தேர்ந்து முதன்மைப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க விலக்கங்களைக் காணமுடிகிறது.

இராஜராஜர் காலப் பதிவுகளில் ஆழ்வதற்கு முன் முப்புர வரலாற்றின் கதையோட்டம் அறிவது நல்லது. சிவபெருமான் முப்புரம் எரித்தமை அப்பர், சம்பந்தர், சுந்தரர் பதிகங்களில் பரவலாகப் பேசப்பட்டிருந்தபோதும் அந்தக் கதையைக் கந்தபுராணமும் காஞ்சிப்புராணமுமே விரிவாகக் கூறுகின்றன. தருமையாதீனத்தின் வெளியீடாக வந்துள்ள ஏழாம் திருமுறை (1964) 'புராண வரலாற்றுக் குறிப்புகள்' என்ற பகுதியில் 'திரிபுரத்தை எரித்தது' என்ற தலைப்பின் கீழ் இக்கதையை முழுமையாகத் தந்துள்ளது.

பொன், வெள்ளி, இரும்பு இவற்றாலாகிய மூன்று கோட்டைகளையுடைய அசுரர்களே முப்புரத்தார் எனும் பெயருடன் விளங்கினர். சிவ ஈடுபாட்டுடன் சைவப் பத்திமையாளர்களாக விளங்கியபோதும், அசுரர்களானமையின் அவர்களால் தேவருலகத்திற்குப் பேரிழப்பு நிகழ்ந்தது. துன்பம் தாங்கமுடியாத நிலையில் நான்முகனும் தேவர்களும் திருமாலிடம் முறையிட, அனைவருமாய் வேள்வி இயற்றி அதனின்றும் பூதங்களை உண்டாக்கி முப்புரத்தார் மேல் ஏவினர்.

அப்பூதங்கள் தோல்வியுற்றமையால், சிவபெருமானைச் சார்ந்த முப்புரத்தாரை தம்மால் அழிக்க இயலாது, சிவபெருமானே அது செய்ய வல்லவர், அச்செயல் நிகழ வேண்டுமெனில், முப்புர அசுரர்கள் சைவத்தினின்றும் விலகவேண்டும் என்பதுணர்ந்த திருமால், தமது அம்சத்தில் ஆதிபுத்தரைப் படைத்து நாரதமுனிவருடன் சென்று முப்புர சைவ சமயிகளை சிவநெறியினின்று நீக்குமாறு கூறினார்.



நாரதரும் ஆதிபுத்தரும் முப்புரம் அடைந்து, சைவத்திற்கு மாறுபட்ட கருத்துக்களைப் பரப்பினர். அக்கருத்துரைகளில் மயங்கிய முப்புரத்தார் சைவத்தை நீத்தனர். இது அறிந்த திருமால் தேவர்களுடன் கயிலை அடைந்து முப்புரத்தாரால் தேவர்கள் அடைந்த துன்பத்தையும் அவர்கள் இப்போது வேறு சமயிகளாக மாறியதையும் சிவபெருமானிடம் எடுத்துரைத்து முப்புரத்தையழித்துத் தேவர்களைக் காப்பாற்றுமாறு வேண்டினார்.



புவி தேர்த்தட்டாகவும் கதிரும் நிலவும் சக்கரங்களாகவும் மறைகள் குதிரைகளாகவும் நான்முகன் தேரோட்டியாகவும் மேருமலை வில்லாகவும் வாசுகிப் பாம்பு அதன் நாணாகவும் திருமால் அம்பாகவும் அமைய, தேவர்கள் அவரவர் ஊர்திகள் மேல் உரிய படைக் கலன்களுடன் பின்பற்ற சிவபெருமான் போர்க்கோலம் பூண்டார். ஓரம்பால் அவர் முப்புரம் எரித்ததாகச் சில பதிகங்களும் வில்வளைத்து நாணேற்றிக் கணை பூட்டித் தேரில் நின்ற நிலையில் ஒரு புன்னகை வாயிலாகவே முப்புரம் அழித்ததாக வேறு சில பதிகங்களும் முப்புரம் எரிந்த கதை சொல்கின்றன.



முப்புரவாசிகளில் மூவர் மட்டும் ஆதிபுத்தர், நாரதர் கருத்துரைகளில் மயங்காது இறுதிவரை சைவநெறியிலேயே நின்றனர். முப்புரம் எரிந்த நிலையில் எஞ்சி நின்ற அந்த மூவரும் சிவனருள் வேண்டினர். இருவரைத் தம் வாயில் காவலராய்க் கொண்ட இறைவன், மூன்றாமவருக்குத் தம் ஆடலின்போது முழவு இயக்கும் வாய்ப்பளித்தார். சுந்தரர் பதிகம் இதை உறுதிப்படுத்துகிறது.

இராஜராஜீசுவர முப்புரக் காட்சிகளில் மூன்றிடங்களிலுமே ஆதிபுத்தராகத் திருமாலும் உடன்சென்ற நாரதருமே கதையைத் தொடங்குகின்றனர். ஓவியப்பதிவிலும் கோபுரத் தொடரிலும் சிதைவுகளிருப்பதால் நிகழ்வுகளைப் படித்தொடருடன் பின்பற்றலாம். முதல் காட்சியில் ஆதிபுத்தர் அர்த்தபத்மாசனத்தில் இருகால்களையும் மடக்கி இருகைகளையும் தியான முத்திரையில் இருத்தித் தவக்கோலத்தில் அமர்ந்திருக்கிறார். அவர் பின்னால் போதிமரம். அவருக்கு வலப்புறம் மூவரும் இடப்புறம் எண்மரும் உள்ளனர். வலப்புறத்தாரில் இருவர் வாளுடன் நிற்க, ஒருவர் அமர்ந்துள்ளார். இடப்புறம் நிற்பவர்களில் இருவர் நேர்ப் பார்வையுடன் இருக்க, அறுவர் புத்தரின் உரை கேட்க விரும்பாதவர் போல் முகம் திருப்பியுள்ளனர்.

இரண்டாம் காட்சியில் வேறு வகை மரத்தினருகே (அசோகமரம்?) தோள் தழுவிக் கணுக்கால்வரை நீளும் ஆடை அணிந்தவராய் மாறுபட்ட தோற்றத்திலுள்ள நாரதர் வலக்கையை மரத்தின்மீது தாங்கலாக நிறுத்தி, இடக்கையில் ஏதோ பொருளைக் கொண்டுள்ளார். மரத்தின் இருபுறத்தும் நின்றவாறும் மண்டியிட்டு அமர்ந்தவாறும் அவர் கருத்துக்களைச் செவிமடுக்கும் முப்புரவாசிகள் சமயம் மாறிவிட்டதை அவர்தம் வணங்கிய கைகளே தெளிவாக்குகின்றன.

மூன்றாம் காட்சி இக்கருத்து மாற்றத்தால் முப்புரங்களிலும் நிகழும் குழப்பமான சூழ்நிலையைப் படம்பிடிக்கிறது. குழப்பத்தின் விளைவைப் பசுக்கள் சிதறி ஓடுவதிலும் மக்கள் நிலைகுலைந்திருப்பதிலும் காணமுடிகிறது. அனைவருமே சமயம் மாறிய நிலையில் மூவர் மட்டும் சைவத்தினின்று நீங்க விரும்பாதவர்களாய்த் தலையிலும் தோளிலும் இலிங்கத் திருமேனியைச் சுமந்துகொண்டு ஓடுகின்றனர். மூன்று புரங்களும் எப்படியிருந்தன என்பதையும் சோழச் சிற்பிகளின் உளிச் செதுக்கல் இக்காட்சியில் படம்பிடித்துள்ளது.



அடுத்திருக்கும் இரண்டு நிகழ்வுகளும் முப்புரப் போரையும் கருத்து மாறாத மூவர் சிவனருள் பெற்றதையும் படம்பிடிக்கின்றன. சிவபெருமானின் தேர் கண்கொள்ளாக் காட்சியாக விளங்குகிறது. தேரின் ஒருபகுதியே பார்வையில் பதிவானாலும் அதன் சக்கரங்களும் தேரிழுக்கும் குதிரையும் அவற்றை இயக்கும் நான்முகனின் தோற்றமும் தேரின் பெருமையையும் முழுமையையும் பன்மடங்காக்கிக் கண்முன் விரிக்கின்றன. தேருக்குள் இருபுறமும் பூதங்கள் நிற்க, நடுவில் கைகளில் வில்லும் அம்புமாய் சிவபெருமான்.

ஓவியக்காட்சியில் சினம் கொப்பளிக்கப் புருவங்களை நெறித்து வில் வளைத்து நிற்கும் சிவபெருமான், இங்குப் போர் முடித்த அமைதியில் தேர் நோக்கி நிற்கும் சைவநெறிக் காவலர் மூவரை எதிர்கொள்பவராய்க் காட்சிதருகிறார். அமைதியும் அருளுமாய் விரியும் இந்தப் படப்பிடிப்புக்கு நேர்மாறாகப் போரின் உச்சம் காட்டி, அதன் நிகழ்வுகள் விரித்துச் சோழர் காலப் போர் நெறிகளைக் கண்முன் வைக்கிறது ஓவியப்பதிவு.

வலப்புறம் எழுச்சியுடன் தேவர்களின் படை முன்னேறுவதையும் இடப்புறம் அசுரப்படை சினமும் வெறியுமாய்த் தாக்குவதையும் உரிய வண்ணங்களில் உரிய உணர்வுகள் வெளிப்படுமாறு சோழத் தூரிகைகள் காட்சிப்படுத்தியிருக்கும் பாங்கு கண்டு இரசிக்கத்தக்கது. இந்த அழுத்தமும் வீரியமும் இல்லையென்றாலும், கோபுரச் செதுக்கலிலும் போர்ப் பார்வையே முதன்மை பெற்றுள்ளது. படிப் படப்பிடிப்பு இவற்றினின்று மாறுபட்டுப் போர் முடிவையும் சைவ நெறி மாறாத மூவர் இறையருள் பெற்றதையும் செதுக்கல்களாய்க் கொண்டுள்ளது.

சிவபெருமான் முப்புரம் எரித்த இந்த வரலாற்றின் விரிவான பின்புலம் அறியாத நிலையில், ஆய்வாளர் சிலர், படிப்பகுதி ஆதிபுத்தரை மட்டும் பார்த்து, அதற்கேற்ப சில தரவுகள் சேர்த்துப் பல்வேறு கதைகளைப் புனைந்து எழுதியுள்ளமை உண்மைகள் எப்படியெல்லாம் மாற்றப்படுகின்றன என்பதையும் வரலாறு எப்படியெல்லாம் சிதைக்கப்படுகிறது என்பதையும் தெளிவுபடுத்தும்.

இராஜராஜரின் இந்த முப்புரப் படப்பிடிப்புகள் மூன்றுமே சோழர் காலத்துக் கலை வல்லுநர்களின் வெளிப்பாட்டுத் திறனுக்கும் ஒரே நிகழ்வின் செயற்பாடுகளை இடத்திற்கேற்ப முதன்மைப்படுத்திச் சுவைகூட்டுவதில் அவர்களுக்கிருந்த பேராற்றலுக்குப் பொருத்தமான சான்றுகளாய் விளைந்துள்ளன.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.