http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 155

இதழ் 155
[ ஜூன் 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

திருவாசி மாற்றுரை வரதீசுவரர் - 1
மதங்கேசுவரம் - 1
மயிலைத்திண்டனும் மூன்று ஊர்களும்
புள்ளமங்கை ஆலந்துறையார் முகமண்டபம் - 2
பதாமி சாளுக்கியரின் குடைவரைக் கோயில்களும், கட்டுமானக் கோயில்களும் (தொடர்ச்சி)
பத்துப்பாட்டு ஆராய்ச்சி - அரசியல் - 2
இதழ் எண். 155 > கலையும் ஆய்வும்
மதங்கேசுவரம் - 1
இரா.கலைக்கோவன், மு.நளினி

காஞ்சிபுரத்திலுள்ள பல்லவக் கற்றளிகளுள் மதேங்கேசுவரம் குறிப்பிடத்தக்கது. இம்மணற்கல் தளி மேற்கு நோக்கிய முத்தளக் கலப்பு வேசர விமானமும் முகமண்டபமும் கொண்ட கட்டுமானமாகும்.



தாங்குதளம்

சற்றே உயரமான துணைத்தளத்தின் மேல் உபானத்துடனான பாதபந்தத் தாங்குதளம் கொண்டெழும் இதன் துணைத்தளக் கண்டம் நாற்றிசைத் திருப்பங்களிலும் யானைமுகங்கள் கொள்ள, உபானமும் பெருவாஜனமும் தாங்குதளப் பட்டிகையும் கருங்கல்லால் அமைந்துள்ளன. இக்கோயிலின் சுவர்களும் ஆரம் உள்ளிட்ட மேலுறுப்புகளும் சிற்பங்களும் பெரிதும் சிதைந்துள்ள போதும் இருப்பன கொண்டு இதன் கட்டமைப்பை அறியமுடிகிறது.

சுவர்கள்

விமானச் சுவர்களின் நான்கு திருப்பங்களிலும் வீரர் அமர் தாவுயாளித் தூண்கள். இத்தூண்களுக்கு இடைப்பட்ட சுவர்கள் பாதம் பெற்ற ஆறு நான்முக அரைத்தூண்களால் ஏழு பிரிவுகளாக்கப் பட்டுள்ளன. இத்தூண்களின் பாலி உள்ளிட்ட தலையுறுப்புகள் எண்முகமாக உள்ளன. மூன்றாம், ஐந்தாம் பிரிவுகளின் நடுப்பகுதியில் சட்டத்தலை நான்முக அரைத்தூண்கள் தழுவிய கோட்டங்கள். அவற்றின் இருபுறத்தும் உள்ள சுவர்த்துண்டுகளில் கோட்டத் தெய்வத் தொடர்புடைய சிற்பங்கள். கோட்டத் தலைப்பாக உத்திரம், வாஜனம் அமைய, மேலே மகரதோரணம். அணைவுத் தூண்களின் பலகைகளோடு தலைப்புறுப்புகள் இணைந்துள்ளன. இத்தலைப்புறுப்புகளை இடத்தில் பொருத்துமாறு போலத் தோரணத்தொங்கல்.

கூரையுறுப்புகள்

சுவர்த்தூண்களின் மேலுள்ள பட்டை பெற்ற வளைமுகத் தரங்கப் போதிகைகள் வெறுமையான வலபி உள்ளிட்ட கூரையுறுப்புகள் தாங்க, மேலே மண்வெட்டியொத்த தலைப்புடன் திசைதோறும் எட்டுக் கூடுவளைவுகளுடன் கபோதம். கூடுகளில் கந்தருவத்தலைகள். மேலே பூமிதேசம், வேதிகை.

கீழ்த்தள ஆரம்

கீழ்த்தளக் கூரையின் மேல் கர்ணகூடங்கள், இருசாலைகள், அவற்றை இணைக்கும் ஆரச்சுவர் என அமைந்துள்ள ஆரம் ஆறங்கம் பெறுள்ளது. ஆரச்சுவரில் ஆரஉறுப்புகளுக்கு இடைப் பட்டனவாய் ஆறங்கக் குறுநாசிகைகள். சாலை, கர்ணகூடங்களின் சுவர்த்திருப்ப நான்முக அரைத் தூண்கள் குந்து சிம்மமாக வடிவம் பெற, சுவர்ப்பகுதியில் மேலுமிரு உறுப்புவேறுபாடற்ற நான்முக அரைத்தூண்கள். அவற்றின் மேலுள்ள கூரையுறுப்புகளை அடுத்து இரு கூடு வளைவுகளுடன் கபோதம். மேலே பூமிதேசம், வேதிகை, ஆரஉறுப்புகளின் கிரீவசுவரிலும் உறுப்புவேறுபாடற்ற நான்முக அரைத்தூண்கள். மேலே கூரையுறுப்புகள், சிகரம். ஆரஉறுப்பு களின் தலைப்புப் பெற்ற சிறு நாசிகைகளிலும் ஆரச்சுவரின் குறுநாசிகைகளிலும் கந்தருவத்தலைகள்.

இரண்டாம் தளம், ஆரம்

கீழ்த்தள ஆறங்க ஆரத்தின் பின்னெழும் விமானத்தின் இரண்டாம் தளக் கர்ண, சாலைப்பத்திகள் தாய்ச்சுவரினும் சற்று முன்தள்ளி அமைந்து, நான்முக அரைத்தூண்களின் தழுவலைப் பெற்றுள்ளன. இத்தூண்களின் மேலுள்ள பட்டை பெற்ற தரங்கப் போதிகைகள் பூதவரி பெற்ற வலபி உள்ளிட்ட கூரையுறுப்புகள் தாங்க, கந்தருவத்தலைகள் பெற்ற இரு கூடுவளைவுகளுடன் கபோதம். வளைவுகள் மண்வெட்டி ஒத்த தலைப்பு கொண்டுள்ளன. மேலே பூமிதேசம், வேதிகை.

கீழ்த்தளம் போலன்றி இரண்டாம் தள ஆரம் இயல்பான ஆரமாகக் கர்ணகூடங்கள், சாலை, அவற்றை இணைக்கும் ஆரச் சுவர் என அமைந்துள்ளது. ஆரச்சுவரில் பக்கத்திற்கிரு குறுநாசிகைகள். நாசிகைத் தலைப்புகள் கந்தருவத்தலைகள் பெற்றுள்ளன.

மூன்றாம் தளம், கிரீவம், சிகரம்

திருப்பங்களில் நான்முக அரைத்தூண்களால் அணைக்கப்பட்டுள்ள மூன்றாம் தளச்சுவர் நடுப்பகுதியில் மேலுமிரு நான்முக அரைத்தூண்களைப் பெற்று மூன்று பிரிவுகளாகியுள்ளது. நடுப்பகுதியின் இருபுறத்துள்ள சுவர்ப்பகுதிகள் தளப்பஞ்சரங் கள் கொள்ள, தூண்களின் மேலுள்ள தரங்கப் போதிகைகள் அன்னவரி வலபி உள்ளிட்ட கூரையுறுப்புகள் தாங்குகின்றன. மேலே தளப்பஞ்சரங்களுக்கான சிகரமென அமைந்த இரு கூடுவளைவுகளுடன் கபோதம். தளப்பஞ்சரத்தின் தூணுடலில் பக்கத்திற்கொரு காவலர். தளத்தின் மேற்கு முகத்தில் பஞ்சரங்களுக்கு இடைப்பட்ட சுவர்ப்பகுதியில் பக்கத்திற்கொரு அடியவர் உருவம் காட்டப்பட்டுள்ளது. இருவருமே தலைக்கு மேல் கையுயர்த்தி வணங்கியவாறு உள்ளனர்.

மேலே பூமிதேசம், வேதிகை. வேதிகை மீதமர்ந்த நிலையில் நான்கு மூலைகளிலும் நந்திகள். வேதிகையின் மீதெழும் வேசர கிரீவத்தின் சுவரை நான்முக அரைத்தூண்கள் தழுவியுள்ளன. கிரீவசுவரில் முதன்மைத் திசைகளைப் பார்த்தவாறு சுதையுருவங்கள் பெற்ற கோட்டங்கள். மேலே உத்திரம், வாஜனம், பூதவலபி. கிரீவத்தின் மேலுள்ள வேசர சிகரத்தின் விளிம்பு நான்கு முதன்மைத் திசைகளிலும் கிரீவ கோட்டங்களுக்கான கீர்த்திமுகத் தலைப்பு கொண்டுள்ளது. மேலே வேசர தூபி.

விமானச் சுவர்ச் சிற்பங்கள்

நான்முக அரைத்தூண்களால் ஏழு பிரிவுகளாக்கப்பட்டுள்ள விமானச் சுவர்களில் தென்புறம் சிற்பங்கள் ஏதுமில்லை. அது போலவே கிழக்குச் சுவரின் தென்கோடிப் பிரிவுகள் இரண்டும் சிற்பங்களின்றி உள்ளன. அதே சுவரின் தென்பகுதிக் கோட்ட வலச்சுவர்த் துண்டும் சிற்பமற்று உள்ளது. இச்சுவரின் பிற பிரிவுகளில் சிற்பங்கள் இருந்தபோதும் அவற்றுள் பெரும்பாலன சிதைந்துள்ளன. ஒரு சிற்பம்கூட முழுமையாக இல்லாதபோதும், எஞ்சியிருக்கும் பகுதிகள் அவற்றை இனங்காண உதவுகின்றன.



வடசுவர்

மேற்கிலிருந்து கிழக்காக வடசுவரின் முதற்பிரிவில் கங்கையேற்றவர். சடைமகுடம், மகர, பனையோலைக் குண்டலங்கள், முப்புரிநூல், தோள், கை வளைகள், இடைக்கட்டுடனான சிற்றாடையுடன் தம் இட முன் கையால் சடைப்புரியொன்றை நீட்டிப் பிடித்துள்ள சிவபெருமானின் வல முன் கை கடகத்திலுள்ளது. பின்கைகளுள் இடக்கை இடப்புறம் நிற்கும் இறைவியை அணைக்க, வலக்கை சிதைந்துள்ளது. இறைவனின் சடைக்கு மேல் வந்திறங்குமாறு காட்டப்பட்டுள்ள கங்கை கேசபந்தம், பனையோலைக் குண்டலங்களுடன் இரு கைகளையும் இடுப்பருகே குவித்த நிலையில். சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், இடைச்சிற்றாடையுடன் உள்ள உமையின் இடக்கை வயிற்றருகே அமைய, வலக்கை சிதைந்துள்ளது.



கங்கையேற்றவரின் வலப்புறம் பின் கைகளில் அக்கமாலை, குண்டிகையுடன் தொடையளவாக உள்ள சிவபெருமானின் வல முன் கை சிதைந்துள்ளது. சடைமகுடம், நிவீதமுப்புரிநூல், உதரபந்தம், இடைக்கட்டு கொண்டுள்ள அவரது இட முன் கை தொடையில். அடுத்துள்ள கோட்டத்தில் சென்னிசூழ் மகுடத்துடன், பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள், சன்னவீரம், இடைக்கட்டுடனான பட்டாடை கொண்டு நிற்கும் முருகனின் பின் கைகள் அக்கமாலை, குண்டிகை கொள்ள, முன் கைகளில் வலப்புறம் காக்கும் குறிப்பு, இட முன் கை தொடையில்.

முருகன் கோட்டத்தின் மேலுள்ள மகரதோரண வளைவின் கீழ் அர்த்தபத்மாசனத்திலுள்ள அடியவரின் வலக்கை கடகத்தில் அமைய, இடக்கை தொடையில். இம்மகரதோரணம் சிதைந்திருந்தபோதும் மகரத்தின் தோகைகள் கோட்டத்தின் இரு புறத்துள்ள சுவர்த்துண்டுகளின் மீது பரவுவதைக் காணமுடிகிறது. கோட்டத்துக்காய் ஒருக்கணித்த நிலையில் முருகனின் வல, இடப்புறத்துள்ள அடியவர்கள் கரண்டமகுடம், சடைக்கற்றைகள், பனையோலைக் குண்டலங்கள், முப்புரிநூல், தோள், கை வளைகள், இடைக்கட்டுடனான சிற்றாடையுடன் இருகைகளையும் மார்பருகே கடகத்தில் இருத்திக் காட்சிதருகின்றனர்.

முருகனின் வலப்புறச் சுவர்த்துண்டில் ஜலந்தரவதமூர்த்தியாகச் சிவபெருமான் யோகபட்டத்துடன், யோகாசனத்திலுள்ளார். வல முன் கை காக்கும் குறிப்பு காட்ட, இட முன் கை முழங்கால் தொட்டு நெகிழ்ந்துள்ளது. சடைமகுடம், நிவீதமுப்புரிநூல், பட்டாடையுடன் திகழும் இறைவனின் பின் கைகளில் மழு, முத்தலைஈட்டி. முழுவதுமாய்ச் சிதைந்துள்ள ஜலந்தரரின் சக்கரம் மட்டும் எஞ்சியுள்ளது.

அடுத்துள்ள கோட்டத்தில் வலப்பாதத்தை அக்ரதலசஞ்சாரத்திலும் இடப்பாதத்தைச் சமத்திலும் இருத்தி, சடைப்பாரம், நீள்செவிகள், சரப்பளி, முப்புரிநூல், தோள், கை வளைகள், இடைச்சிற்றாடையுடன் காட்சிதரும் சிவபெருமானின் செவிகள் நீள்வெறுஞ் செவிகளாக, அவரது இட முன் கை தொடையில். பின் கையில் குண்டிகை. வல முன் கை கடகம் காட்ட, வலப் பின் கை சிதைந்துள்ளது. சிவபெருமானுக்காய் ஒருக்கணித்துள்ள கோட்டத்தின் வலப்புற அடியவர் நீள்வெறுஞ்செவியர். சடைமகுடம், இடைச்சிற்றாடையுடன் இறைவனுக்காய் முகம் நிமிர்த்தியுள்ள அவரது வலக்கையில் மலர். இடக்கை வயிற்றருகே. அதே அமைப்பிலுள்ள இடப்புற அடியவரின் வலக்கையில் மலர். இடுப்பிற்குக் கீழ் சிதைந்துள்ள அவரது இடக்கை கடகத்தில் மார்பருகே.

இக்கோட்டத்தை அடுத்துள்ளவரை அவரது தலைக்குப் பின்னுள்ள ஒளிவட்டம் கொண்டு கதிரவனாகக் கருதலாம். தோள், கை வளைகள், முப்புரிநூல், இடைக்கட்டுடனான சிற்றாடையுடன் வலக்கையை இடுப்பிலிருத்தி, இடக்கையைக் கடகத்தில் கொண்டுள்ள அவர் கோட்டத்துக்காய் ஒருக் கணித்துள்ளார். சடைமகுடம், சடைக்கற்றைகள், இடைக்கட்டுட னான இடைச் சிற்றாடையுடன் வலக்காலை உயர்த்தி அருகிலுள்ள உருள்பெருந்தடி மேல் இருத்தியவாறு வடசுவரின் கிழக்குக் கோடியில் உள்ள சூலத்தேவரின் இடக்கை தடிமேல். அவரது வலக்கை சிம்மமுக முத்திரை காட்ட, சடைவளையங்கள் நெகிழ்திருக்கும் தலையின் வலப்புறத்தே படமெடுத்த பாம்பு.

கிழக்குச்சுவர்

கிழக்குச் சுவரின் இரு கோட்டங்களிலும் பெண்தெய்வங் கள். வடகோட்டத்தில் சடைமகுடம், பனையோலைக் குண்டலங் கள், தோள், கை வளைகள், முத்து அரைக்கச்சும் இடைக்கட்டும் பெற்ற சிற்றாடையுடன் நிற்கும் பெண்தெய்வத்தின் வலக்கை சிதைந்துள்ளது. முகம் இடத்திருப்பமாய் உள்ள அம்மையின் இடக்கைப் பொருளை அறியமுடியவில்லை. இக்கோட்டத்தின் வடபுற அடியவர் வலஒருக்கணிப்பில் உள்ளார். சடைக்கற்றைகளுடனான சடைமகுடம், தோள், கை வளைகள், சிற்றாடையுடனான இடைக்கட்டு பெற்றுள்ள அவரது இடக்கை இடுப்பிலிருக்க, வலக்கை சிதைந்துள்ளது.







கோட்டத்தின் தென்புறம் வலஒருக்கணிப்பிலுள்ள விஷ்ணு அஞ்சலியிலிருப்பதாகக் கொள்ளலாம். அவரது பின் கைகளில் சங்கு, சக்கரம். விஷ்ணுவின் வலப்புறச் சுவர்ப்பகுதியில் பின் கைகளில் முத்தலைஈட்டி, மழுவுடன் லிங்கோத்பவர். வல முன் கை காக்கும் குறிப்பு காட்ட, இட முன் கையை இடுப்பிலிருத்தி, சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், நிவீத முப்புரிநூல், உதரபந்தம், இடைக்கட்டுடனான சிற்றாடை பெற்றுள்ள அவரது வலப்புறமுள்ள தெற்குக் கோட்டத்தின் இடச்சுவர்த்துண்டில் இடஒருக்கணிப்பில் அஞ்சலியில் உள்ளவர் நான்முகனாகலாம். அவரது வலப் பின் கை இடுப்பிலிருக்க, இடப் பின் கை சிதைந்துள்ளது.

கிழக்குச் சுவரின் தெற்குக் கோட்டத்தில் இடுப்பளவாக உள்ள பெண்தெய்வம் கேசபந்தம், பனையோலைக் குண்டலங் கள், தோள், கை வளைகள், இடைக்கட்டுடனான இடைச்சிற்றாடை பெற்றவராய் மார்புக்கச்சுடன் காட்சிதருகிறார். வல முன் கை கடகம் காட்ட, இட முன் கையைத் தொடையில் இருத்தியுள்ள அவரது பின் கைப் பொருள்கள் மலர்களாகலாம். எனில், இப்பெண்தெய்வத்தைத் திருமகளாகக் கொள்ளலாம்.

கிழக்குச் சுவரின் வடக்குக் கோடிக் கோட்டத்தில் சடைமகுடம், சடைக்கற்றைகள், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், இடைக்கட்டுடனான சிற்றாடையுடன் வலப்பாதத்தைப் பார்சுவத்திலும் இடப்பாதத்தை சமத்திலும் இருத்தி, லேசான வலஒருக்கணிப்பிலுள்ள அடியவரின் வலக்கை போற்ற, இடக்கை இடுப்பில். அவரது வலப்புறம் நேர்ப்பார்வையிலுள்ள அடியவர் சடைமகுடம், முப்புரிநூல், தோள், கை வளைகள், இடைக்கட்டுடனான சிற்றாடையுடன் வலக்கையைக் கடகத்திலிருத்தி, இடக்கையை இடுப்பில் வைத்துள்ளார். அவரது இரு பாதங்களும் கோட்டத்திற்காய்த் திரும்பியுள்ளன.

முகமண்டபம்

முகமண்டபச் சுவர் தென், வட திருப்பங்களில் வீரர்கள் அமர் தாவுயாளி நான்முக அரைத்தூண்களால் அணைக்கப் பட்டுள்ளது. இத்தூண்களின் பாலி உள்ளிட்ட மேலுறுப்புகள் எண்முகமாக உள்ளன. சுவரைப் பாதம் பெற்ற மூன்று நான்முக அரைத்தூண்கள் நான்கு பகுதிகளாகப் பிரித்துள்ளன. மேற்கி லிருந்து மூன்றாம் பிரிவு சட்டத்தலை நான்முக அரைத்தூண் களால் தழுவப்பட்ட கோட்டமும் கோட்டத்தின் இருபுறத்துமான சுவர்த்துண்டுகளும் கொண்டுள்ளது. வடதிசையில் நான்கு பிரிவுகளும் சிற்பம் கொள்ள, முகமண்டபத் தென்சுவர் முற்றிலுமாய்ச் சிற்பங்களை இழந்துள்ளது.





ஆரம்

சுவர்த்தூண்களின் வளைமுகத் தரங்கப்போதிகைகள் கூரையுறுப்புகள் தாங்க, கூரை நீட்சியாக மேற்கில் எட்டுக் கூடுவளைவுகளும் தெற்கிலும் வடக்கிலும் நான்கு கூடுவளைவுகளும் கொண்ட கபோதம். கூடுகளில் கந்தருவத்தலைகள். மேலே பூமிதேசம், வேதிகை, ஆரம். மேற்கு ஆரம் இரண்டு கர்ணகூடங்களும் அவற்றிற்கு இடைப்பட்டு இரண்டு சாலைகளும் அவற்றை இணைக்கும் ஆரச்சுவரும் பெற்றுள்ளது. ஆரச்சுவரில் நான்கு குறுநாசிகைகள். இக்குறுநாசிகைகளின் கீழ்ப்பட்டி இடையில் இடைவெளியுள்ள இரு சிறு தூண்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து நாசிகைத் தலைப்புகளும் வெறுமையாக உள்ளன. தெற்கிலும் வடக்கிலும் முகமண்டபத்தின் மேற்குக் கர்ணகூடங்களுடனும் விமானத்தின் மேற்குக் கர்ணகூடங்களுடனும் இணைக்கப்பட்ட நிலையில் ஆரச்சுவருடன் பக்கத்திற்கொரு சாலை. ஆரச்சுவரில் உறுப்பு களுக்கு இடைப்பட்டு பக்கத்திற்கிரு குறுநாசிகைகள்.

கோட்டச் சிற்பங்கள்

வடசுவர்க் கோட்டத்தில் சமபாதத்திலுள்ள கொற்றவையின் வல முன் கை காக்கும் குறிப்பிலிருக்க, இட முன் கை இடுப்பில். கேசபந்தம், பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள், இடைக்கட்டுடனான சிற்றாடை பெற்றுள்ள அம்மையின் பின்கைகளில் சங்கு, சக்கரம். கோட்டத்தின் இருபுறச் சுவர்த்துண்டுகளிலும் அம்மைக்காய் ஒருக்கணித்த அவரது காவற்பெண்டுகள். வலப்புற வீராங்கனை, வலக்கையில் கொடுவாள் ஏந்தி, இடக்கையைக் கேடயத்தின்மீது தாங்கலாக நிறுத்த, இடப்பெண்டு வலக்கையில் வில்லேந்தியுள்ளார். இருவருமே தோள், கை வளைகள் இடைக்கட்டுடனான சிற்றாடை பெற்றுள்ளனர்.

கொற்றவையின் வலப்புறச் சுவர்ப்பகுதியில் சண்டேசுவர அருள்மூர்த்தி. இருக்கை ஒன்றில் சுகாசனத்திலுள்ள சிவபெருமானின் வலக்கால் கீழிறக்கப்பட்டுள்ளது. சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், இடைக்கட்டுடனான சிற்றாடையுடன் இடஒருக்கணிப்பிலுள்ள அவரது முன்கைகள் அருகில் நிற்கும் சண்டேசுவரரின் தலையருகே உள்ளன. இருகைகளையும் பத்திமையுடன் குறுக்கீடு செய்து இறைவனின் இடப்புறம் நிற்கும் சண்டேசுவரர் இடைச்சிற்றாடை பெற்றுள்ளார். சிற்பத்தொகுதியின் இருபுறத்தும் மேலே போற்றும் வானவர்கள்.

கொற்றவையின் இடப்புறச் சுவர்ப்பகுதியில் சிவபெருமா னின் அர்த்தசுவஸ்திகக் கரணம். இறைவனின் கீழிருக்குமாறு அவரது வலப்புறத்தே குடமுழவு வாசிக்கும் கலைஞரும் அவருக்கருகில் சிதைந்த நிலையில் மற்றொரு கருவிக்கலைஞரும் காட்டப்பட்டுள்ளனர். இலேசான வலஒருக்கணிப்பிலுள்ள சிவ பெருமானின் தலை வலச்சாய்வாக உள்ளது. சடைமகுடம், சரப்பளி, மகரகுண்டலங்கள், தோள், கை வளைகள், முப்புரிநூல், உதரபந்தம், இடைக்கட்டுடான சிற்றாடை பெற்றுள்ள இறைவனின் வலப்பாதம் அக்ரதலசஞ்சாரத்தில் அமைய, வலக்காலின் பின் குறுக்கீடு செய்யப்பட்டுள்ள இடக்காலின் பாதம் சூசியில். இறைவனின் வல முன் கை காக்கும் குறிப்பு காட்ட, இட முன் கை வேழமுத்திரையில். இடப்பின்கைகள் இரண்டு முத்தலைஈட்டி, நெருப்பு கொள்ள, ஒரு கை அர்த்தரேசிதமாக உள்ளது. வலக்கைகளுள் இரண்டு மழு, உடுக்கை கொள்ள, ஒன்று நெகிழ்ந்துள்ளது.

வடசுவரின் திருப்பத்தூணை ஒட்டிய இறுதிப்பிரிவில் முகமண்டப வாயிலுக்காய் ஒருக்கணித்துள்ள காவலரின் வலக்கை அருகிலுள்ள உருள்பெருந்தடிமீது இருத்தப்பட்டுள்ளது. அவரது ஒருபாதம் தரையில் ஊன்ற, மற்றொரு பாதம் அக்ரதலசஞ்சாரத்தில்.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.