![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 161
![]() இதழ் 161 [ ஜனவரி 2022 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராபதி அழகப்பெருமாள் விண்ணவர் எம்பெருமான் (சுந்தரராஜப் பெருமாள்) கோயிலிலுள்ள பொ. கா. 1453ஆம் ஆண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டு அக்காலத்து நிகழ்வொன்றைக் கதை போலச் சொல்கிறது. மல்லாயி வறுமை காரணமாகத் தன் மகள்கள் உள்ளிட்ட குடும்பத்தாருடன், வாழ்ந்த ஊரை நீங்கிப் பொன்னமராபதி வந்தார். சிறுசிறு வேலைகள் செய்து பிழைப்பு நடத்திக்கொண்டிருந்த அவருக்குக் கடன்சுமை மிகுந்தது. உதவி செய்வார் யாருமில்லா நிலையில் வரவுக்கும் செலவுக்கும் இடையில் வாழ்க்கை சிதைந்து கொண்டிருந்தது. கடன்காரர் தொல்லை நிம்மதியைக் குலைத்தது. பெருமாளிடம் அளவற்ற பத்திமையும் நம்பிக்கையும் வைத்திருந்த மல்லாயி, துன்பங்களைத் தவிர்க்க இறைவனிடம் சரணடைவதே வழியென்று கருதினார். வெளியூரிலிருந்து பரதேசியாகப் பொன்னமராபதியில் குடிபுகுந்த அவ்வம்மைக்கு அதனினும் சிறந்தவழி வேறேதும் தெரியாமையின், கோயிலை நிருவகித்த பண்டாரத்துப் பெருமக்களிடம் தன் துன்பங்களைப் பகிர்ந்துகொண்டு, தன்னையும் தன் குடும்பத்தாரையும் எம்பெருமான் அடிமைகளாக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினார். மல்லாயியின் குடும்பச் சூழல்களை நன்கறிந்திருந்த கோயில் பண்டாரத்தார் பொன்னமராபதி ஊர்ப் பொறுப்பிலிருந்த பெரியவர்களிடம் இது குறித்துப் பேசினர். மல்லாயி உற்ற துன்பங்களையும் அவரது கடன்தொல்லைகளையும் உணர்ந்திருந்த ஊரவர், வாழ்வதற்காகத் தங்கள் ஊரைத் தேடிவந்த அவ்வம்மைக்கு அடைக்கலமளிக்கப் பண்டாரத்தாருடன் துணைநிற்பதாக உறுதியளித்தனர். சில சுற்றுப் பேச்சுகளுக்குப் பிறகு மல்லாயியின் குடும்பத்தாரைக் கோயில் தேவடிமைகளாகக் கொள்வதென முடிவாயிற்று. ஒரு நல்ல நாளில் ஊரவரும் பண்டாரத்தாரும் இணைந்து அதற்கான உறுதிமொழி ஆவணத்தைக் கோயில் கணக்கரைக் கொண்டு எழுதச்செய்தனர். அந்த ஆவணத்தில் மல்லாயி குடும்பத்தாருள் யார்யாருக்கு ஊரவரும் பண்டாரத்தாரும் பொறுப்பு, தேவடிமைகளாகக் கோயிலுள் நுழையும் அவர்களுக்கான பணி, ஊதியம், தங்குமிடம் என அனைத்தும் விரிவாகப் பதிவுசெய்யப்பட்டன. ஆவணத்தில் கோயிலாரும் ஊரவரும் கையெழுத்திட்டனர். மல்லாயி மகள் உலகுடைநாச்சிக்கு ஊரவர் பொறுப்பேற்றனர். மல்லாயிக்கும் பிறருக்கும் பண்டாரத்தார் பொறுப்பேற்றனர். அனைவரையும் எம்பெருமான் அடிமைகளாக அதற்குரிய அடையாளமிட்டு (திருஇலச்சினை) அவர்தம் துன்பங்கள் தீருமாறு கோயிற்பணியில் அமர்த்தினர். ஊரவர் பொறுப்பேற்ற உலகுடைநாச்சிக்குக் கோயிலில் இரண்டாம் அடைவுப் பணி தந்து கோயில் குடியிருப்பில் மனையும் இறைவன் பெயரில் விளங்கிய புதுவூர் வயலில் ஒரு மா அளவு வரிநீக்கிய நிலமும் தந்தனர். நிலவிளைவு அவ்வம்மைக்கு ஊதியமானது. மல்லாயி, அவரது மற்றொரு மகள் அழகப்பெருமாள், மகன் வேங்கடம் ஆகியோர் மூன்றாம் அடைவுப் பணி பெற்றனர். அவர்களுக்கு இரண்டு மனைகளும் இறைவன் பெயரிலிருந்த வயலில் ஒரு மா அளவு வரிநீக்கிய நிலமும் வாழ்வூதியமாக அளிக்கப்பட்டது. அக்குடும்பத்தைச் சேர்ந்த பொன்னன், தாயுமான் ஆகிய இருவருக்கும் கோயிலில் திருவேளைக்காறர் பணி தந்த பண்டாரத்தார், அவர்கள் வாழ வாய்ப்பாக இரண்டு மனைகளும் ஆளுக்கு அரை மா வரிநீக்கிய நிலமும் வழங்கினர். ஊரார் ஒருவருக்குப் பொறுப்பேற்ற நிலையில் கோயில் பண்டாரத்தார் இரண்டு பெண்களுக்கும் மூன்று ஆண்களுக்குமாய் வாழ்வளித்தனர். பிறந்த ஊரில் வாழமுடியாமல் வாழ்க்கை தேடிப் பரதேசிகளாகப் பொன்னமராபதி வந்த மல்லாயி குடும்பம், அங்கும் விரும்பியவாறு வாழமுடியாது கடன் தொல்லைகளில் வாழ்க்கையைத் தொலைத்து நின்றபோது, கோயிலும் ஊரும் அவர்களுக்கு அடைக்கலமளித்துத் தழுவிக்கொண்ட வரலாற்றைப் பகிர்ந்துகொள்ளும் இந்தக் கல்வெட்டு இறைவன் திருமுன்னின் வடக்குச் சுவரில் பதிவாகியுள்ளது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |