http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 110

இதழ் 110
[ ஆகஸ்ட் 2014 ] பத்தாம் ஆண்டு நிறைவு மலர்


இந்த இதழில்..
In this Issue..

பத்தாம் ஆண்டு நிறைவு
கதை 13 - எருக்காட்டூர் பெருந்தச்சன்
தோழி
Kudumiyanmalai - 4
இராஜேந்திரசோழன் போற்றிய எசாலம் இராமநாதீசுவரர் திருக்கோயில்
திருக்கற்குடி விழுமியதேவர் கோயில்
மாமண்டூர் நரசமங்கலக் குடைவரைகள் - 02
சிக்கல் மாடக்கோயில்
தேடலில் தெறித்தவை - 15
ஆத்தி சூடிய சோழ வீரமே!
இதழ் எண். 110 > கலையும் ஆய்வும்
சிக்கல் மாடக்கோயில்
இரா.கலைக்கோவன், மு.நளினி
நாகபட்டினம் கீழ்வேளூர்ச் சாலையில் 5 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது சிக்கல்.[1] பாடல் பெற்ற சிவபெருமான் கோயிலாக [2] அமைந்திருந்தபோதும் சுற்றாலைத் தெய்வமான முருகன் முதன்மை பெற்றதால் சிங்காரவேலவர் கோயிலாகப் பெயர் மாறியிருக்கும் இம்மாடக்கோயில் ஏழு தளங்களுடன் அமைந்த முதற் கோபுரத்தையும் மூன்று தளங்களுடன் அமைந்த இரண்டாம் கோபுரத்தையும் பெற்றுள்ளது. இரண்டு கோபுரங்களுமே சுதையுருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த வாளகத்திற்குள்ளேயே கோலவாமனப் பெருமாளின் திருமுன்னும் அமைந்திருப்பதால் அதற்கெனக் கிழக்கில் ஒரு வாயில் காணப்படுகிறது.



முதற் கோபுரத்திற்கும் இரண்டாம் கோபுரத்திற்கும் இடையிலுள்ள நடைப்பகுதியை முச்சதுர, இருகட்டுத் தூண்கள் வெட்டுத் தரங்கப் போதிகைகளின் துணையோடு தாங்குகின்றன. தூண்களின் கீழ்ச்சதுரங்களில் நாகபந்தங்கள். இரண்டாம் கோபுர வாயிலருகே வடக்கில் முருகனும் தெற்கில் பிள்ளையாரும் உள்ளனர். கோபுர வாயிலை அடுத்த மண்டபச் சுற்று கிழக்கில் மண்டபமாக விரிந்து தெற்கு, மேற்கு, வடக்கு முத்திசைகளிலும் மாடக்கோயிலின் சுற்றாக வளர்கிறது. அதன் மண்டபக் கூரையை இருசதுரம், இருகட்டு என்ற அமைப்பில் தாய்த் தூணும் நான்முகமாக துணைத்தூணும் இணைந்த ஒட்டுத்தூண்கள் பூமொட்டுப் போதிகைகள் உதவியுடன் தாங்குகின்றன.

தூண்களின் கீழ்ச்சதுரங்கள் சிலவற்றுள் சிற்பங்கள் காணப்படுகின்றன. மண்டபத்தின் வடபுறத்தே உள்ள இருதள நாகர விமானத்தில் வேல்நெடுங்கண்ணி என்ற திருப்பெயருடன் இறைவி எழுந்தருளியுள்ளார். அடுத்துள்ள திருமுன் பள்ளியறையாக்கப்பட்டுள்ளது.

அம்மன் கோயில்

துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் கொண்டு இருதள நாகரமாக அமைந்துள்ள அம்மன் விமானச் சாலைப்பத்திகள் வெறுமையான கோட்டப் பஞ்சரங்களுடன் புறந்தள்ளியுள்ளன. இப்பகுதியில் பத்மஜகதியும் உருள்குமுதமும் பட்டிகைக்கு மாற்றாகக் கபோதமும் இடம்பெற்றுள்ளன. விமானத்தின் முன் அதே கட்டமைப்பிலான முகமண்டபமும் அடுத்துப் பெருமண்டபமும் உள்ளன.
பெருமண்டபத் தூண்களில் காணப்படும் கருமுத்து அழகப்ப செட்டியாரும் சின்னம்மை ஆச்சியும் அம்மண்டபத்தை எடுத்த பெருமக்களாவர். உருளை அரைத்தூண்கள் தாங்கும் முகமண்டபத்தின் வாயிலில் காவற்பெண்டுகள் உள்ளனர். கருவறையில் இறைவி சடைமகுடம், பட்டாடை அணிந்து பின்கைகளில் அக்கமாலை, நீலோத்பலம் கொண்டு, முன்கைகளைக் காக்கும் குறிப்பிலும் கடியவலம்பிதத்திலும் அமைத்து சமபங்கத்தில் உள்ளார்.

பெருமண்டபம்

மண்டபத்தின் மேற்கில் வெற்றுத்தளம் தாங்கும் பெருமண்டபம் உள்ளது. இம்மண்டபத்தை அடையத் தென்கிழக்கில் பன்னிரண்டு படிகள் உள்ளன. மண்டபச் சுற்றின் வடகிழக்கில் இருந்தும் பெருமண்டபத்தை அடையுமாறு எட்டு மரப்படிகளுடன் வாயில் அமைந்துள்ளது. அடைக்கப்பட்டிருக்கும் இவ்வாயிலின் இருபுறத்தும் சுதைக்காவலர்கள். வாயில்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சுந்தர கணபதி இடம்பெற்றுள்ளார்.

சிங்காரவேலவர் திருமுன்

‘சிங்காரவேலவர்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள தென்மேற்கு நுழைவாயில் நிலையமைப்புப் பெற்றுள்ளது. நிலைகளில் மகரங்களின் மேல் நிற்கும் கொடிப்பெண்களின் கொடிகளில் இருந்து தொடரும் வளைவுகளில் உள்ள சிற்பங்கள் வண்ணப்பூச்சில் களையிழந்துள்ளன. நிலைகளின் முன்னுள்ள பக்கச்சுவர்த் தூண்களில் சிற்பங்கள் உள்ளன. பெருமண்டபத்தின் வடபுறத்தே தென்பார்வையாகச் சிங்காரவேலவரின் செப்புத் திருமேனி இடம்பெற்றுள்ளது. பாதபந்தத் தாங்குதளம், நாகபந்தம் பெற்ற தூண்கள், கூரையுறுப்புகள், கபோதம் இவற்றுடன் மண்டப அமைப்பில் அலங்கரிக்கப்பட்டு, வெள்ளித் தகடுகள் போர்த்தப்பட்டிருக்கும் திருமுன்னில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் காட்சிதருகிறார்.

பின்கைகளில் அக்கமாலை, வ{ரம் கொண்டு, முன்கைகளில் காக்கும் குறிப்பும் அருட் குறிப்பும் காட்டும் முருகனின் இருபுறத்துள்ள தெய்வானையும் வள்ளியும் ஒரு கையில் மலரேந்தி, மறு கையை நெகிழ்த்தியுள்ளனர். மண்டபத்தின் தென்மேற்கில் தியாகராஜர் விமானம், முகமண்டபத்துடன் அமைய, மேற்கில் பால்வெண்ணெய் நாயனார் என்றழைக்கப்படும் இறைவன் விமானம் மண்டபங்களுடன் விளங்குகிறது.

தியாகராஜர் திருமுன்

தியாகராஜர் திருமுன் விமானம், முகமண்டபம் இவற்றையும் இவற்றின் முன்னாலுள்ள பெருமண்டபத்தையும் தாங்கி நிற்கும் 2. 29 உயர வெற்றுத்தளம் உபானம், பத்மஜகதி, பெருவாஜனம் இவற்றாலான துணைத்தளம், நான்முக அரைத்தூண்கள் சூழ்ந்த சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்றுத் திகழ்கிறது.

பிரதிபந்தத் தாங்குதளம் வேதிகைத் தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் ஏந்தும் கூரையுறுப்புகள் பெற்றுள்ள விமானக் கீழ்த்தளத்தைப் போலவே முகமண்டபமும் பெருமண்டபமும் அமைந்துள்ளன.
பெருமண்டபத் தென்சுவரில் நிலையமைப்புடன் வாயிலும் இருபுறத்தும் சாளரங்களும் உள்ளன. முகமண்டபத் தென்சுவரிலும் சாளரம் உள்ளது. ஒருதளத் திராவிடமாக உள்ள விமானத்தின் தென்சுவரிலும் சாளரம் உள்ளது. தியாகராஜர் விமானத்திலோ, முகமண்டபத்திலோ, அவற்றைத் தாங்கும் வெற்றுத்தளத்திலோ கோட்டங்கள் இல்லை. விமானத்தின் கிரீவ, சிகரக் கோட்டங்களில் சிவபெருமான் தொடர்பான சுதைவடிவங்கள் உள்ளன. முகமண்டபம், பெருமண்டபம் இவற்றின் கூரைகளிலும் பலவாய்ச் சுதையுருவங்கள் உள்ளன.

இறைவன் விமான வெற்றுத்தளம்

இறைவன் விமானம், அதன் முன்னுள்ள மண்டபங்கள், பெருமண்டபம் இவற்றைத் தாங்கி நிற்கும் வெற்றுத்தளம் தியாகராஜர் திருமுன் தாங்கும் அமைப்பிலேயே உள்ளது. அதன் விமானப்பகுதியில் தெற்கிலும் மேற்கிலும் வடக்கிலும் கோட்டங்கள் உள்ளன. தெற்குக் கோட்டத்தில் ஆலமர்அண்ணலும் மேற்குக் கோட்டத்தில் இலிங்கோத்பவரும் உள்ளனர். வடக்குக் கோட்டம் வெறுமையாக உள்ளது. தெற்கு, மேற்குக் கோட்டங்களின் முன் முன்றிலும் தெற்கு முன்றிலின் மேல் திராவிட கிரீவமும் சிகரமும் காட்டப்பட்டுள்ளன.

வீராசனத்தில் உள்ள ஆலமர்அண்ணலின் பின்கைகளில் வலப்புறம் அக்கமாலையும் பாம்பும் அமைய, இடப்புறம் தீச்சுடர். சடைமகுடம், மகர, பனையோலைக் குண்டலங்கள், சவடி, முத்துமாலை, முப்புரிநூல், கைவளைகள், சிற்றாடை அணிந்து மலைமேல் அமர்ந்துள்ள இறைவனின் வல முன் கை சின் முத்திரை காட்ட, இட முன் கையில் சுவடி. மலையின் வலப்புறம் புற்றிலிருந்து பாம்பொன்று படமெடுக்க, அடியவர் ஒருவர் வணங்கிய நிலையில் காட்சிதருகிறார். இடப்புறம் உள்ள மூவரில் ஒருவர் தலைக்கு மேல் கையுயர்த்தி வணங்கிய நிலையில் உள்ளார். வலப்புறம் அமர்ந்துள்ள நந்தியின் கழுத்தின் மீது இறைவனது வலக்கை இருத்தப்பட்டுள்ளது.
சடைமகுடம், மகர, பனையோலைக் குண்டலங்கள், பட்டாடை அணிந்துள்ள இலிங்கோத்பவர் பின்கைகளில் மானும் மழுவும் கொண்டு, வல முன் கையைக் காக்கும் குறிப்பிலும் இட முன் கையைக் கடியவலம்பிதத்திலும் கொண்டுள்ளார்.

இறைவன் விமானம்

5. 57 மீ. பக்கமுடைய சதுரமாக உள்ள இறைவன் விமானக் கீழ்த்தளம் பிரதிபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, எண்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்று, இருதள வேசரமாக அமைந்துள்ளது. வலபியில் பூதவரி. தளத்தின் மூன்று பத்திகளும் புறந்தள்ளியுள்ள போதும் சாலைப்பத்தி கர்ணபத்திகளினும் கூடுதலாக முன்வந்துள்ளது. சாலைப்பத்தியின் தாங்குதளம் உறுப்பு வேறுபாடுகளுடன் கபோதபந்தமாக அமைந்துள்ளது. வேதிகைக்கு மாற்றாகப் பெருவாஜனம் உள்ளது.

பத்திகளுக்கு இடைப்பட்ட ஒடுக்கங்களில் குடப்பஞ்சரங்கள். சாலைப்பத்திகளை இந்திரகாந்த அரைத்தூண்கள் அணைக்க, அவற்றிலுள்ள கோட்டப் பஞ்சரங்களை உருளை அரைத்தூண்கள் தழுவியுள்ளன. சுவர், பத்தி அணைவுத்தூண்களின் பலகைகள் மேல் காட்டப்பட்டுள்ள தாவுயாளிகளின் தலை வலபியில் பொருந்தியுள்ளது. ஆலமர்அண்ணல் அமர்ந்துள்ள தெற்குக் கோட்டப்பஞ்சரத்தின் முன் முன்றில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்குக் கோட்டத்தில் இலிங்கோத்பவரும் வடக்கில் நான்முகனும் உள்ளனர்.

வலப்பாதத்தை முயலகன் மேல் இருத்தி, வீராசனத்தில் உள்ள ஆலமர்அண்ணலின் பின்கைகளில் வலப்புறம் அக்கமாலை, இடப்புறம் பாம்பு. சடைப்பாரம், மகர, பனையோலைக் குண்டலங்கள், முப்புரிநூல், உதரபந்தம், உருத்திராக்கமாலை, சவடி, தோள்மாலை, சிற்றாடை அணிந்துள்ள இறைவனின் வல முன் கை சின் முத்திரையில் அமைய, இட முன் கை தொடைமீது சுவடி ஏந்தியுள்ளது. பின் கைகளில் மான், மழுவுடன் சமபங்கத்தில் உள்ள இலிங்கோத்பவர் சிற்றாடை அணிந்துள்ளார். வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை கடியவலம்பிதமாக உள்ளது. இருபுறத்தும் நான்முகனும் விஷ்ணுவும் வணக்கமுத்திரையில் உள்ளனர். இலிங்கத்தின் மேலே அன்னமும் கீழே பன்றியும் காட்டப்பட்டுள்ளன. சடைமகுடம், பட்டாடை கொண்டுள்ள வடகோட்ட நான்முகனின் பின்கைகளில் அக்கமாலை, குண்டிகை. வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை அருட்குறிப்பில் உள்ளது.

விமானத்தின் ஆரஉறுப்புகள் ஆறங்கம் பெற்றுள்ளன. முதல் தள ஆரச்சாலைகளில் தெற்கில் உத்குடியில் ஆலமர் அண்ணலும் மேற்கில் முன்னிரு கைகளை முழங்கால்களின் மேல் வைத்த நிலையில் வீராசனத்தில் தேவியருடன் விஷ்ணுவும் வடக்கில் வீராசனத்தில் நான்முகன் தேவியருடனும் உள்ளனர். உயரக்குறைவான இரண்டாம் தளத்தையடுத்து வேசர கிரீவமும் சிகரமும் உள்ளன. கிரீவகோட்டங்களில் தெற்கில் வீராசனத்தில் ஆலமர்அண்ணலும் மேற்கில் தேவியருடன் சுகாசனத்தில் விஷ்ணுவும் வடக்கில் தேவியருடன் தாமரையில் அர்த்தபத்மாசனத்தில் நான்முகனும் உள்ளனர். ஆலமர்அண்ணலின் பின்கைகளுள் ஒன்று உடுக்கை ஏந்தியுள்ளது.

முகமண்டபம்

பிரதிபந்தத் தாங்குதளம் பெற்றுள்ள முகமண்டபம், விமானக் கீழ்த்தளம் போல் பத்திப் பிரிப்புக் கொள்ளாமல், எண்முக அரைத்தூண்கள் அணைத்த சுவருடன் பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகளுடன் தெற்கிலும் வடக்கிலும் மகரதோரணத் தலைப்பிட்ட கோட்டங்கள் பெற்றுப் பொலிகிறது. தென்கோட்டத்தில் சாளரமும் மேலுள்ள மகரதோரண வளைவில் பிள்ளையாரும் அமைய, வடகோட்டத்தில் மகிடாசுரமர்த்தனி உள்ளார். மேலே ஆரம் இடம்பெற்றுள்ளது.

முன்மண்டபம்

முகமண்டபம் ஒத்த வெற்றுத்தளம், மேற்றளம் பெற்றுள்ள முன்மண்டபம், மேற்றள வடக்குச் சுவரில் இரண்டு சாளரங்களும் கூரையின் மேல் சுதையுருவங்கள் பெற்ற ஆரஉறுப்புகளும் கொண்டுள்ளது. இதன் தெற்கு வெற்றுத்தளச் சுவரில் முனிவர்களின் சிற்பத்தொகுதி இடம்பெற்றுள்ளது. கிரந்தக் கல்வெட்டுடன் காணப்படும் இத்தொகுதியில் சடைமகுடம், தாடி, மீசை, நீள்செவிகள், இடைக்கட்டுடனான பட்டாடை இவற்றுடன் வணங்கிய நிலையில் ஆறு முனிவர்கள் நிற்க, மற்றொருவர் அமர்ந்து வணங்குகிறார். அவர் முன்னால் நந்தி அமர்ந்துள்ளது. அதற்கு முன்னால் இரண்டு மரங்கள் உள்ளன. மரங்களின் பின்னே சிவலிங்கம் காட்டப்பட்டுள்ளது.

பெருமண்டபம்

முகமண்டபம் ஒத்த வெற்றுத்தளம், மேற்றளம் பெற்றுள்ள பெருமண்டப மேற்றள மேற்குச் சுவரில் ஒரு சாளரம் உள்ளது. கூரையின்மீது மூன்று சிகரங்கள் உள்ளன. இச்சிகரங்கள் பெருமண்டபத்துள் மேற்கிலிருந்து கிழக்காக அமைந்துள்ள ஆடவல்லான் திருமுன், சிங்காரவேலவர் திருமுன், மற்றொரு திருமுன் இவற்றிற்கு உரியன. முன்மண்டப வெற்றுத்தளம் பெருமண்டபத்திற்கான தாங்கலாக விரியும் இடத்தில் சண்டேசுவரர் திருமுன் ஒருதள வேசரமாக அமைந்துள்ளது.

சுற்றுத் திருமுன்கள்

சுற்றின் தென்புறம் நாயன்மார் மண்டபம் அமைய, தென்மேற்கிலுள்ள ஒருதள வேசரவிமானத்தில் பிள்ளையாரும் மேற்கிலுள்ள இருதளத் திராவிட விமானத்தில் முருகனும் வடமேற்கு மூலையிலுள்ள ஒருதள வேசர விமானத்தில் யானைத்திருமகளும் எழுந்தருளியுள்ளனர். வெளிச்சுற்றில் வடபுறத்தே கோலவாமனப் பெருமாளின் இருதளத் திராவிடத் திருமுன்னும் சரசுவதியின் திருமுன்னும் உள்ளன.

கருவறை

கருவறை வாயில் மேனிலை முகப்பில் எண்மங்கலச் சின்னங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இருபுறமும் குத்துவிளக்குகளும் இடையில் நிறைகுடம், குடை முதலானவும் உள்ளன. வாயிலை இந்திரகாந்த அரைத்தூண்கள் அணைக்க, அடுத்துக் குடப்பஞ்சரங்கள் அமைந்துள்ளன. கருவறையில் இறைவன் சதுர ஆவுடையாரின் மீது உருளைப் பாணத்துடன் இலிங்கத்திருமேனியராய் எழுந்தருளியுள்ளார்.

முகமண்டபத்தில் இன்பவல்லி அன்னை இடம்பெற்றுள்ளார். முச்சதுர, இருகட்டுத் தூண்கள் பூமொட்டுப் போதிகைகளுடன் கூரை தாங்கும் இடைமண்டபத்தில் நந்தி, சூரியபிரபை அமைய, தூண்களின் மேற்சதுரங்களில் மலர்ப்பதக்கங்களும் நடுச்சதுரங்களில் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. முன்மண்டபத்தின் வடபுறம் உள்ள மேடையில் செப்புத்திருமேனிகள் காணப்படுகின்றன.

இறைவன் வளாகத்தின் முன் உள்ள பெருமண்டபத்தின் கூரை ஓவியங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளது. சிங்காரவேலவர் இடம்பெற்றுள்ள இம்மண்டபத்தைப் பெருந்தூண்கள் அலங்கரிக்கின்றன. அவற்றின் மேல் அமர்யாளிகளும் பூமொட்டுப் போதிகைகளும் உள்ளன. அடுக்குத்தூண் அமைப்பில் காணப்படும் அகலத்தூண்கள் மாறுதலான காட்சியாகும். இரண்டு தூண்களின் கீழ்ப்பகுதியில் ஊர்த்வதாண்டவரும் ஆடற் போட்டிக் காளியும் சிற்பங்களாக உள்ளனர்.

இப்பெருமண்டபத்தின் தென்புறமுள்ள சோமாஸ்கந்தர் திருமுன் முகமண்டப வாயிலின் இருபுறத்தும் காவலர் ஓவியங்கள். முகமண்டபம் வெற்றறையாக உள்ளது. கருவறையில் சோமாஸ்கந்தர் தொகுதி தியாகராஜர் என்ற பெயரில் செப்புத்திருமேனிகளாக இடம்பெற்றுள்ளது.

கல்வெட்டுகள்

கோலவாமனப் பெருமாள் கோயிலில் இருந்து இரண்டு கல்வெட்டுகளும்3 பால்வெண்ணெய் நாயனார் கோயிலில் இருந்து ஆறு கல்வெட்டுகளும் [4] படியெடுக்கப்பட்டுள்ளன.

கி. பி. 1644ல் வெட்டப்பட்டுள்ள இலக்கண்ண தண்டநாயகரின் கல்வெட்டு, கோலவாமனப் பெருமாளுக்குக் கொடையளிக்கப்பட்டிருந்த சீயராயநல்லூர் நிலங்கள் தொலைவில் இருந்தமையால் அதற்கு மாற்றாகக் கேயமாணிக்க வளநாட்டைச் சேர்ந்த சிக்கலில் நிலமளிக்கப்பட்ட தகவலைத் தருகிறது. பெருமாள் கோயில் மேற்குத் தளத்தில் உள்ள கல்வெட்டு மங்கலத்தைச் சேர்ந்த ஆயப்பிள்ளை அக்கற்றளியை எழுப்பியதாகக் கூறுகிறது.

பால்வெண்ணெய் நாயனார் கோயில் கல்வெட்டுகளுள் காலத்தால் முற்பட்ட சடையவர்மர் வீரபாண்டியரின் பதினான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு கோயிலுக்களிக்கப்பட்ட பணக்கொடை பற்றிப் பேசுகிறது. கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ள தலச்சிறப்புப் பற்றி ஒரு கல்வெட்டுப் பேச, மற்றொரு கல்வெட்டு பால்வெண்ணெய் நாயனாரை வழிபட்ட முனிவர்கள், குளம், மரங்களின் பெயர்களைத் தருகிறது. சதாசிவதேவராயரின் கி. பி. 1560ம் ஆண்டுக் கல்வெட்டு, ஆளிய இராமராசய்யர் மகன் கிருஷ்ணமராசய்யன் கட்டளைப்படி சிக்கல், வடகுடி, ஓதச்சேரிக் கோயில்களுக்குத் திருவாரூரைச் சேர்ந்த ஞானப்பிரகாசப் பண்டாரம் மேலாளராக நியமிக்கப்பட்ட தகவலைத் தருகிறது. அச்சுததேவ மகாராயரின் கல்வெட்டு, பால்வெண்ணெய் நாயனார் கோயிலில் உள்ள குமாரசாமிக் கடவுளுக்கான விளக்குகளுக்கும் விழாக்களுக்குமாக நிலக்கொடை அளிக்கப்பட்டதாகக் கூறுகிறது. மன்னர் பெயர் அறியமுடியாத விஜயநகர அரசர் காலக் கல்வெட்டு, அரங்கப்பராஜராலும் ஊர்மக்களாலும் கந்தசாமிப்பேட்டைக் கோயிலுக்குக் கொடையளிக்கப்பட்டதாகக் கூறுகிறது.

காலம்

கட்டமைப்பு, கல்வெட்டுகளின் அடிப்படையில் பால்வெண்ணெய் நாயனார் வளாகத்தைப் பொதுக்காலம் 13 அல்லது 14ஆம்நூற்றாண்டினதாகக் கொள்ளலாம். சுற்று வளாகங்கள் பல்வேறு காலகட்டங்களில் பெருகியுள்ளமையை அவற்றின் கட்டமைப்புக் கூறுகள் முன்னிருத்துகின்றன.

குறிப்புகள்

1. ஆய்வு நாட்கள் 8. 7. 1982, 28. 9. 2008. ஆய்வுக்குத் துணைநின்றவர் திரு பால. பத்மநாபன்.
2. 2: 37.
3. ARE 1911 : 100 - 101.
4. ARE 1911 : 102 - 107.this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.