http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 110

இதழ் 110
[ ஆகஸ்ட் 2014 ] பத்தாம் ஆண்டு நிறைவு மலர்


இந்த இதழில்..
In this Issue..

பத்தாம் ஆண்டு நிறைவு
கதை 13 - எருக்காட்டூர் பெருந்தச்சன்
தோழி
Kudumiyanmalai - 4
இராஜேந்திரசோழன் போற்றிய எசாலம் இராமநாதீசுவரர் திருக்கோயில்
திருக்கற்குடி விழுமியதேவர் கோயில்
மாமண்டூர் நரசமங்கலக் குடைவரைகள் - 02
சிக்கல் மாடக்கோயில்
தேடலில் தெறித்தவை - 15
ஆத்தி சூடிய சோழ வீரமே!
இதழ் எண். 110 > கலையும் ஆய்வும்
திருக்கற்குடி விழுமியதேவர் கோயில்
ச. கமலக்கண்ணன்
திருச்சிராப்பள்ளியிலிருந்து சோமரசம்பேட்டை செல்லும் சாலையில் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருக்கற்குடி விழுமியதேவர் கோயில். இந்நாளில் இது உய்யக்கொண்டான் திருமலை என்றும் இங்குள்ள இறைவன் உஜ்ஜீவநாதர் என்றும் அழைக்கப்படுகின்றார். கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை நோக்கில் இக்கோயிலின் முதன்மை விமானத்தையும் முகமண்டபத்தையும் ஆய்வு செய்தபோது பின்வரும் தரவுகள் பெறப்பட்டன.

விமானம்

இரண்டு திருச்சுற்றுக்களைக் கொண்டு மலைமேல் அமைந்திருக்கும் இக்கோயில் விமானத்தையும் முகமண்டபத்தையும் கொண்டுள்ளது. மையக்கோயிலை அடைய உதவும் இரண்டு திருச்சுற்றுக்களின் வாயில்களும் தெற்கு நோக்கி அமைந்துள்ளன. மையக்கோயிலின் விமானம் மேற்கு நோக்கிய ஒருதளத் தூய நாகர விமானமாகும். தாங்குதளத்திலிருந்து பூமிதேசம் வரையிலான கருங்கற் கட்டுமானம் பிற்காலத் திருப்பணிகளின்போது அவ்வளவாக மாற்றம் பெறாமலிருந்தாலும், பூமிதேசத்திற்கு மேலுள்ள அமைப்பு சுதையால் அமைக்கப்பெற்றுத் தற்காலத்திய வண்ணப்பூச்சுடன் திகழ்கிறது.

தாங்குதளம்

தற்காலத்தியத் தரையமைப்புக்கு நடுவில் அமைந்துள்ள விமானத்தின் தாங்குதளமானது உபானம், ஜகதி, எண்பட்டைக் குமுதம், கண்டம், பட்டிகை ஆகியவற்றைக் கொண்டு எளிய பாதபந்தத் தாங்குதளமாக அமைந்துள்ளது. கண்டமானது மேலும் கீழும் கம்புகளைப் பெற்றுத் தூண்களின் பாதங்களைப் பெற்றுள்ளது. கண்டபாதத்தில் சிற்றுருவச் சிற்பங்கள் ஏதுமில்லை. பட்டிகையின்மேல் உபரிகம்பு இடம்பெற்றுள்ளது.

சுவர்

விமானத்தின் சுவர்கள் மூன்று பத்திகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சாலைப்பத்திகள் கோட்டங்கள் பெற்றுத் தெற்கில் ஆலமர் அண்ணலையும் கிழக்கில் அம்மையப்பரையும் வடக்கில் நான்முகனையும் பெற்றுள்ளன. பத்திகளைப் பிரிக்கும் அரைத்தூண்கள் எண்முகமாக அமைந்து, கோட்ட அணைவுத்தூண்கள் உருள்வடிவத்தில் அமைந்துள்ளன. இவ்விருவகைத் தூண்களுமே அடிப்பகுதியில் நான்முகமாக அமைந்த பாதத்தைக் கொண்டுள்ளன. பத்திப்பிரிப்புத் தூண்கள் மாலைத்தொங்கல், தாமரைக்கட்டு, கலசம், தாடி, கும்பம், பாலி ஆகியவற்றைக் கொடிக்கருக்கு அலங்கரிப்புடன் எண்பட்டையாகப் பெற்றுப் பலகையை நான்முகமாகப் பெற்றுள்ளது. இவ்வரைத்தூண்களின் வீரகண்டத்திற்கு மேல் பட்டையுடன் கூடிய குளத் தரங்கப்போதிகை அமைந்துள்ளது. கோட்ட அணைவுத் தூண்களிலும் கீழ்நோக்கிய தாமரை இதழ்களாக வளர்ச்சி பெற்றுள்ள பாலி வரை உள்ள கொடிக்கருக்குகளால் அலங்கரிக்கப்பட்ட உறுப்புகள் அனைத்தும் உருளையாக அமைந்து பலகையும் வீரகண்டமும் நான்முகமாக அமைந்துள்ளன. வீரகண்டத்திற்கு மேல் கோட்டம் முடியும் விதமாகக் கூரை அமைக்கப்பட்டு அதற்கு மேலே மகரதோரணங்கள் இடம்பெற்றுள்ளன.

கூரை உறுப்புகள்

சுவருக்கு மேல் உத்தரம் அமைந்து அதற்கு மேல் வாஜனம், பூதவரியுடன் கூடிய வலபி, சந்திரமண்டலத்துடன் கூடிய கபோதம், யாளிவரிகளற்ற பூமிதேசம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பூமிதேசத்திற்கு மேல் கிரீவம், சிகரம், ஸ்தூபி ஆகியவை அமைந்துள்ளன.

முகமண்டபம்

கருவறையைப் போன்றே எளிய பாதபந்தத் தாங்குதளத்தைக் கொண்டுள்ள முகமண்டபத்தின் மேற்புற வாயிலை இருபுறங்களிலும் வாயிற்காவலர்கள் அலங்கரிக்க, தென்புறச் சுவரில் பிச்சையேற்கும் அண்ணலும் வடபுறச் சுவரில் கொற்றவையும் இடம்பெற்றுள்ளனர். பத்திப்பிரிப்புத் தூண்களும் கோட்ட அணைவுத்தூண்களும் எவ்வித வேறுபாடுமின்றி நான்முகமாகவே அமைந்துள்ளன.

சிற்பங்கள்

ஆலமர் அண்ணல்



விமானத்தின் தென்புறச் சாலைப்பத்தியின் கோட்டத்தில் ஆலமரத்தின் அடியில் வீராசனத்தில் அமர்ந்திருக்கும் நிலையில் அண்ணலின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. சடைமுடியுடன் தலையில் பிறையையும் நெற்றிக்கண்ணையும் கொண்டுள்ள இவரது செவிகளை வலப்புறம் மகரகுண்டலமும் இடப்புறம் பனையோலைக்குண்டலமும் அலங்கரிக்கின்றன. கழுத்தில் சரப்பளியையும் முத்துமாலையையும் பெற்றுள்ள இவரது வஸ்திர முப்புரிநூல் உபவீதமாக அமைந்துள்ளது. உதரபந்தமும் இடைக்கட்டும் பெற்றுள்ளார். இவரது வலமுன்கை சின்முத்திரையில் அமைந்து வலப்பின்கை அக்கமாலையைப் பெற்றுள்ளது. இடது கைகள் கடக முத்திரையில் இருக்க, முன்கையில் ஓலைச்சுவடியும் பின்கையில் பாம்பும் இடம்பெற்றுள்ளன. இரு கால்களிலும் காற்சலங்கைகள் இருக்க, வலதுகால் முயலகன் மேல் இருத்தப்பட்டுள்ளது.

அம்மையப்பர்



விமானத்தின் கீழ்ப்புறச் சாலைப்பத்தியின் கோட்டத்தில் காளையுடன் நிற்கும் அம்மையப்பரின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. சடைமுடியுடன் நெற்றிக்கண்ணைக் கொண்டுள்ள இவரது செவிகளை வலப்புறம் மகரகுண்டலமும் இடப்புறம் பனையோலைக்குண்டலமும் அலங்கரிக்கின்றன. கழுத்தில் சவடியையும் முத்துமாலையையும் பெற்றுள்ள இவரது வஸ்திர முப்புரிநூல் உபவீதமாக அமைந்துள்ளது. உதரபந்தமும் இடைக்கட்டும் பெற்றுள்ளார். வலமுன்கை காளையின் தலைமீது ஊன்றப்பட்டிருக்க, பின்கை மழுவைக் கொண்டுள்ளது. இடதுகை நீலோத்பல மலரைக் கொண்டுள்ளது. இருகைகளிலும் கேயூரம் இடம்பெற்றுள்ளது. ஆண்பாகத்திலும் பெண்பாகத்திலும் ஆடை வேறுபடுத்திக் காட்டப்பட்டிருக்கிறது. வலப்புறம் தோலாடையும் இடப்புறம் பட்டாடையும் உள்ளது. தாமரைப்பீடத்தின்மீது இருத்தப்பட்டுள்ள வலதுகால் சமத்திலும் இடதுகால் திரயச்ரத்திலும் அமைந்துள்ளது.

நான்முகன்



விமானத்தில் வடப்புறச் சாலைப்பத்தியின் கோட்டத்தில் நான்முகன் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. சடைமுடியுடன் இருக்கும் இவரது இரு செவிகளையும் பூட்டுக் குண்டலங்கள் அலங்கரிக்கின்றன. சரப்பளிக்கு மேலும் கீழும் முத்துமாலைகள் கழுத்தணிகளாக அமைந்துள்ளன. வஸ்திர முப்புரிநூல் உபவீதமாக இருக்கிறது. உதரபந்தத்தையும் இடைக்கட்டையும் சிற்றாடையையும் கொண்டுள்ள இவரது தொடைகளைக் குறங்குசெறிகள் அலங்கரிக்கின்றன. வலமுன்கை காக்கும் குறிப்பிலும் பின்கை அக்கமாலையைக் கொண்டும் இடமுன்கை கடியவலம்பிதத்திலும் பின்கை கமண்டலத்தைக் கொண்டும் அமைந்துள்ளன. பட்டாடை உடுத்தி, தாமரைப்பீடத்தின்மீது இருத்தப்பட்டுள்ள இவரது கால்கள் சமத்தில் உள்ளன.

கொற்றவை



முகமண்டபத்தின் வடபுறச் சுவரில் உள்ள கோட்டத்தில் முன்புறம் பதக்கத்துடன் கூடிய சடைமகுடத்தையும் நெற்றிக்கண்ணையும் கொண்ட கொற்றவையின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இக்கோட்டத்தின் மேலுள்ள மகரதோரணத்திற்கு இருபுறமும் கவரியும் குடையும் காட்டப்பட்டுள்ளன. இவரது இரு செவிகளையும் பூட்டுக்குண்டலங்களும் செவிப்பூக்களும் அலங்கரிக்கின்றன. கழுத்தில் சரப்பளியையும் மார்பில் கச்சையும் வீரசங்கிலியையும் கொண்டுள்ளார். வலமுன்கை காக்கும் குறிப்பிலும் பின்கை எறிநிலைச் சக்கரத்தைக் கொண்டும் இடமுன்கை கடியவலம்பிதத்திலும் பின்கை சங்கைக் கொண்டும் அமைந்துள்ளன. இடையில் இடைக்கட்டும் சிற்றாடையும் இடம்பெற்றுள்ளன. தாமரைப்பீடத்தின்மீது இருத்தப்பட்டுள்ள இவரது கால்கள் சமத்தில் உள்ளன.

வலது வாயிற்காவலர்



முகமண்டப வாயிலுக்கு வடப்புறம் அமைந்துள்ள வாயிற்காவலர் கருவறையை நோக்கி இடப்புறமாக ஒருக்களித்து நின்று சடைமகுடத்தையும் நெற்றிக்கண்ணையும் கோரைப்பற்களையும் கொண்டுள்ளார். இவரது இரண்டு செவிகளையும் பனையோலைக்குண்டலங்கள் அலங்கரிக்கின்றன. சரப்பளியும் முத்துமாலையும் கழுத்தணிகளாக அமைந்து வஸ்திர முப்புரிநூல் உபவீதமாக அமைந்துள்ளது. உதரபந்தமும் இடையில் இடைக்கட்டும் அரைக்கச்சு இருத்தும் தோலாடையும் காணப்படுகின்றன. கைகளில் கேயூரமும் மணிக்கட்டில் வளைகளையும் கொண்டுள்ள இவரது இடதுகை எச்சரிக்கைக் குறிப்பிலும் வலதுகை தரையில் இருத்தப்பட்ட மழுவின்மேல் ஊன்றப்பட்டும் இருக்கின்றன. சலங்கை அணிந்துள்ள இவரது வலதுகால் மழுவின்மீது இருத்தப்பட்டு, இடதுகால் பீடத்தின்மீது பார்சுவத்தில் இருக்கிறது.

இடது வாயிற்காவலர்



முகமண்டப வாயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள வாயிற்காவலர் கருவறையை நோக்கி வலப்புறமாக ஒருக்களித்து நின்று சடைமகுடத்தையும் நெற்றிக்கண்ணையும் கோரைப்பற்களையும் கொண்டுள்ளார். இவரது இரண்டு செவிகளையும் பனையோலைக்குண்டலங்கள் அலங்கரிக்கின்றன. சவடியும் முத்துமாலையும் கழுத்தணிகளாக அமைந்து வஸ்திர முப்புரிநூல் உபவீதமாக அமைந்துள்ளது. உதரபந்தமும் இடையில் இடைக்கட்டும் அரைக்கச்சு இருத்தும் தோலாடையும் காணப்படுகின்றன. கைகளில் கேயூரமும் மணிக்கட்டில் வளைகளையும் கொண்டுள்ள இவரது இடதுகை ஆச்சரியக் குறிப்பிலும் வலதுகை தரையில் இருத்தப்பட்ட பாம்பு சுற்றிய மரக்கிளையின்மேல் ஊன்றப்பட்டும் இருக்கின்றன. மரக்கிளையைச் சுற்றியுள்ள பாம்பு, கிளையிலுள்ள பொந்தில் நுழைய முயற்சிக்கும் விலங்கைக் கவ்விக்கொண்டிருக்கிறது. தாள்செறி அணிந்துள்ள இவரது இடதுகால் மரக்கிளையின்மீது இருத்தப்பட்டு, வலதுகால் பீடத்தின்மீது பார்சுவத்தில் இருக்கிறது.

பிச்சையேற்கும் அண்ணல்



முகமண்டபத்தின் தென்புறச் சுவரில் உள்ள கோட்டத்தில் சடைமுடியுடனும் நெற்றிக்கண்ணுடனும் உள்ள பிச்சையேற்கும் அண்ணலின் சிற்பம் இடம்பெற்றுள்ளது. இவரது வலச்செவியை மகரகுண்டலமும் இடச்செவியைப் பனையோலைக் குண்டலமும் அலங்கரிக்கின்றன. கழுத்தில் சவடியும் முத்துமாலையும் அமைந்து வஸ்திர முப்புரிநூல் உபவீதமாக அமைந்துள்ளது. ஆடையற்ற இடையை அரைஞாணாகப் பாம்பு சுற்றியிருக்கிறது. வலமுன்கை மானுக்குப் புல்லை உணவாகக் கொடுத்துக்கொண்டிருக்க, பின்கை உடுக்கையைக் கொண்டும் இடமுன்கை திருவோட்டைக் கொண்டும் பின்கை கவரியைக் கொண்டும் அமைந்துள்ளன. செருப்பணிந்த கால்கள் நடக்கும் நிலையிலிருக்க, தலைமேல் திருவோட்டை ஏந்திய பூதம் உடன் நடந்து வருவதுபோல் காட்டப்பட்டுள்ளது.

கல்வெட்டுகள்

இக்கோயிலிலிருந்து மைய அரசின் கல்வெட்டுத் துறையினர் 71 கல்வெட்டுகளையும் திருச்சிராப்பள்ளி டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினர் 13 கல்வெட்டுகளையும் படியெடுத்துள்ளனர். உய்யக்கொண்டார் என்பது முதலாம் இராஜராஜரின் விருதுப் பெயர்களில் ஒன்று. ஆனால் கி.பி 1443ம் ஆண்டைச் சேர்ந்த தேவராய மகாராயர் கல்வெட்டில்தான் முதன்முதலாக இக்கோயில் உய்யக்கொண்டார் திருமலை என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலிலுள்ள காலத்தால் மிகவும் முற்பட்ட கல்வெட்டு முதலாம் பராந்தகருடையதாக இருந்தாலும், முதலாம் இராஜேந்திர சோழரின் கல்வெட்டுக்களே இங்கு மிகுதியாகக் காணப்படுகின்றன(1).

இக்கோயிலின் காலம்

அம்மையப்பர், நான்முகன் போன்ற சில சிற்பங்கள் பிற்காலத்தனவாக இருந்தாலும், பிச்சையேற்கும் அண்ணல், கொற்றவை போன்ற காலத்தால் முற்பட்ட சிற்பங்களின் நேர்த்தியையும் குளவுத் தரங்கப்போதிகை போன்ற கட்டடக்கலை உறுப்புகளையும் விமானத்தில் அமைந்துள்ள காலத்தால் மிகவும் முற்பட்ட கல்வெட்டையும் கொண்டு நோக்கும்போது இவ்வெளிய விமானம் உத்தமச்சோழர் காலத்தில் எடுப்பிக்கப்பட்டது எனக் கூறலாம்.

அடிக்குறிப்புகள் :-
1. வரலாறு-1 : பக். 41, வரலாறு-2 : பக். 31, வரலாறு-7 : பக். 23, டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், திருச்சிராப்பள்ளி.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.