http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 110

இதழ் 110
[ ஆகஸ்ட் 2014 ] பத்தாம் ஆண்டு நிறைவு மலர்


இந்த இதழில்..
In this Issue..

பத்தாம் ஆண்டு நிறைவு
கதை 13 - எருக்காட்டூர் பெருந்தச்சன்
தோழி
Kudumiyanmalai - 4
இராஜேந்திரசோழன் போற்றிய எசாலம் இராமநாதீசுவரர் திருக்கோயில்
திருக்கற்குடி விழுமியதேவர் கோயில்
மாமண்டூர் நரசமங்கலக் குடைவரைகள் - 02
சிக்கல் மாடக்கோயில்
தேடலில் தெறித்தவை - 15
ஆத்தி சூடிய சோழ வீரமே!
இதழ் எண். 110 > கலையும் ஆய்வும்
மாமண்டூர் நரசமங்கலக் குடைவரைகள் - 02
ச.சுந்தரேசன்
நரசமங்கலக் குடைவரை - I. b. முற்றுப் பெறாத பெரிய குடைவரை


மாமண்டூர் நரசமங்கலக் குடைவரை மஞ்சரியில் உள்ள நான்கு குடைவரைகளுள் என்னை மிகவும் ஈர்த்தது இக்குடைவரை எனலாம். காண்போரை ஒரு பார்வையிலேயே கவர்ந்து விடும் இக்குடைவரை வழக்கமான குடைவரையின் அமைப்பிலிருந்து மாறுபட்டுள்ளது. அதன் அழகிய முப்பரிமாணத் தோற்றத்திற்கு இப்புதுமையான அமைப்பும் ஒரு காரணமாகலாம். தமிழகத்தில் அமைந்துள்ள பெரிய குடைவரைகளுள் இதுவும் ஒன்று!



குன்றின் அடிவாரத்திலிருந்து குடைவரையைச் சென்றடைய அமைக்கப்பட்டுள்ள படிகளினூடே கடந்து செல்கையில் இருமருங்கிலும் பச்சைப்பசேலென்று செழித்திருந்த மஞ்சம்புல்லின் இயற்கையான மணம் மனதை அள்ளியது. (வேலூர் மாவட்டத்தில் இப்புல்லினைக் கொண்டு வீட்டிற்கு கூரை அமைத்திருப்பதைக் காணலாம்.) படிகள் முடிவடையும் இடத்தில் குடைவரை நம் கண் முன்னே விரிகிறது. குடைவரையின் முகப்பிற்கு முன்னால் பரந்த பாறையினாலான தரைப்பகுதி தென்படுகிறது.



குடைவரையின் அமைப்பு

உயர்ந்த குன்று அல்லது மலையின் சரிவு தரைப்பகுதியைத் தொடும் இடத்தில் குடைவரையை அகழ்வது வழக்கமாக நாம் காணக் கிடைப்பது. அகழ்ந்தெடுக்கப்பட்ட பாறையின் ஒருபுறத்தில் மட்டிலுமே செதுக்கப்பட்ட வடிவங்களை நாம் காண இயலும். இதிலிருந்து மாறுபட்டு இக்குடைவரையின் கிழக்கு மற்றும் தெற்கு ஆகிய இரண்டு முகங்களிலும் குடையப்பட்டுள்ளது. கிழக்கு முகத்தில் குடைவுப்பணி முடிவடைந்த நிலையில் தென்முகப்பணி முழுமையடையாமல் உள்ளது.



இக்குடைவரை அமைந்துள்ள குன்றின் உச்சிக்குச் செல்லும் படிக்கட்டுகள் முடிவடையும் இடத்தில் ஒரு கற்றளியும், அதன் தென்புறத்தே சிறிது மேலே மற்றொரு கற்றளியும் அமைந்துள்ளன. மலையுச்சியிலுள்ள கோயில் பாதபந்த தாங்குதளத்துடன் முக மண்டபமும், கருவரையும் கொண்டு கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்னால் கொடித்தளம், பலித்தளம் மற்றும் நந்தி காணக் கிடைக்கின்றன. சம்புவராயர் கல்வெட்டொன்று இக்கோயிலை மாந்தீசுவரர் கோயிலென்று அழைக்கிறது. இக்கோயிலின் தென்புறத்தே தாழ்வான பகுதியிலுள்ள கற்றளி முகமண்டபம், அர்த்தமண்டபம், கருவறையுடன் பாதபந்த தாங்குதளத்துடன் கிழக்குப் பார்வையாய் அமைந்துள்ளது.



கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்குடைவரை, முகப்பில் ஐந்து முழுத்தூண்களையும், முகப்பின் வட,தென் மூலைகளில் அரைத்தூண்களையும் கொண்டமைந்துள்ளது. வடபுறத்திலுள்ள அரைதூண் நான்முகமாகக் காட்டப்பட்டுள்ளது. இவ்வரைத்தூணையடுத்து அமைந்துள்ள முழுத்தூண் சதுரம், கட்டு, சதுரம் அமைப்பைக் கொண்டுள்ளது. இதனையடுத்து ஒரு முழுத்தூண் சதுரம், கட்டு, சதுரம் அமைப்புகள் முழுமையடையாத நிலையில் உள்ளது. இதனையடுத்து அமைந்துள்ள மூன்று முழுத்தூண்களுள் இரண்டு நன்கு முழுமை பெற்றும், மற்றொன்று சதுரம், கட்டு, சதுரம் அமைப்புகளின்றி நான்முகமாக விடப்பட்டுள்ளது. தென்புறத்திலுள்ள நான்முக அரைத்தூண் இக்குடைவரையின் கிழக்கு முகத்திற்கு தென் எல்லையாகவும், தெற்கு முகத்திற்கு கிழக்கு எல்லையாகவும் செதுக்கப்பட்டுள்ளது. முகப்புத்தூண்கள் உத்திரத்தைத் தாங்கி நிற்கின்றன. உத்திரத்தின் மேல் வாஜனம் வட மூலையில் தொடங்கி தென்புற இரண்டாவது தூண் வரை நீள்கின்றது.

முகமண்டபம்

குடைவரையின் முகப்பிற்கும், முகப்பின் உட்புறத்தில் அமைந்துள்ள தூண் வரிசைக்கும் இடையே முகமண்டபம் காணப்படுகிறது. கூரையை ஒட்டி மண்டபத்தின் முழு நீளத்திற்கும் கிழக்கு மேற்காக வாஜனம் அமைந்துள்ளது. முகமண்டபத்தின் தரைப்பகுதி நன்றாக சமன் செய்யப்பட்டுள்ளது. முகமண்டபத்தின் தெற்கு, வடக்கு சுவர்களில் குடையப்பட்டுள்ள கருவறைகள் கடவுள் உருவங்கள் ஏதுமின்றி வெறுமையாக உள்ளன. வடபுறக் கருவறை, முகமண்டப, அர்த்தமண்டப அரைத்தூண்களுக்கிடையே குடையப்பட்டுள்ளது. கருவறையின் முகப்பில் கபோதக வளைவு செதுக்கப்பட்டுள்ளது. வெறுமையான சுவர்களும், கூரையுடன் காணப்படும் இக்கருவறையின் பின்சுவரையொட்டி கடவுள் சிலைக்கான குழியொன்று வெட்டப்பட்டுள்ளது.



தென்புறக்கருவறையின் முன் சந்திரக்கல் காணப்படுகிறது. கருவறையின் சுவர்ப்பகுதியை ஒட்டி கடவுள் சிலையினை பொருத்த ஏதுவாக குழி வெட்டப்பட்டுள்ளது. கபோதம் முழுமையான அமைப்பைப் பெறவில்லை.

அர்த்தமண்டபம்

அர்த்தமண்டபம், கருவறை பகுதிக்கும், முகமண்டபத்தை அடுத்த வரிசைத் தூண்களுக்குமிடையே அமைந்துள்ளது. தூண்வரிசையின் மையப்பகுதியில் நான்கு முழுத்தூண்களும், பக்கவாட்டில் பக்கத்திற்கொன்றாக இரண்டு அரைதூண்களும் உள்ளன. அர்த்தமண்டபத்தின் தரைப்பகுதி செவ்வனே சமன் செய்யப்பட்டுள்ளது.

அர்த்தமண்டபத்தின் பின்சுவரில் ஐந்து கருவறைகளும், பக்கச்சுவர்களில் இரண்டு கருவறைகளும் குடையப்பட்டுள்ளன. மையப்பகுதியிலுள்ள நான்கு தூண்களும் சதுரம், கட்டு, சதுரம் என்னும் அமைப்பில் உள்ளன. இத்தூண்களின் போதிகைகள் வளைந்து உயர்ந்து உத்திரம் தாங்குகின்றன. உத்திரத்தின் மேல் கிழக்கு, மேற்காக வாஜனம் செல்கிறது.

கருவறைகள்

அர்த்தமண்டபத்தின் வடசுவர்க் கருவறை வாயிலின் இருபக்கத்திலும் நிலைகள் காட்டப்பட்டுள்ளன. கருவறையின் கூரை சிறு உத்திரம் போன்று இழுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் கபோதக வளைவு வடிக்கப்பட்டுள்ளது. சுவர்களும், கூரையும் வெறுமையாக அமைந்திருக்கும் இக் கருவறையில் கடவுள் சிலையமைக்க ஏதுவாக ஆழமான குழியொன்று வெட்டப்பட்டுள்ளது. தென்சுவர்க் கருவறையின் முன் ஒரு படி காட்டப்பட்டுள்ளது.

பின்புறச்சுவர்க் கருவறைகள் பாதபந்த தங்குதளம் கொண்டமைந்துள்ளன. கருவறை வாயில்களுக்கு இடைப்பட்ட சுவரின் கீழ் மட்டும் இத்தாங்குதளம் காட்டப்பட்டுள்ளது. உத்திரம் தெற்கு வடக்காக கருவறையின் முகப்புகளை அலங்கரித்துச் செல்கிறது. உத்திரத்தின் மேலே கபோதம் நன்கு வளைக்கப்பட்டு கீழிறக்கப்பட்டுள்ளது.

முதல் மற்றும் மூன்றாம் கருவறை வாயில்களின் முன்னால் சந்திரக்கல்லும், மேலே ஒரு படியும் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற மூன்று கருவறை வாயில்களுக்கும் சந்திரக்கல்லும், மேலே இரண்டு படிகளும் அமைக்கப்பட்டுள்ளன. படிக்கட்டுகளின் இருபுறங்களையும் அணைத்தவாறு யானையின் துதிக்கை போன்ற சுருட்டலுடன் சந்திரக்கல்லின் இருபுறமும் அமைந்துள்ளது. இக்கருவறைகள் ஐந்தும் உட்புறத்தில் வெறுமையாக காணப்படுகிறது. கருவறைகளின் பின்சுவருக்கு அருகில் நீளமான குழியொன்று வெட்டப்பட்டுள்ளது.

இக்குடைவரையின் மேற்பரப்பு முழுவதும் சுதையெழுதி வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்க வேண்டும். காலப்போக்கில் அவை மறைந்து போனதால் ஆங்காங்கே அதன் எச்சங்கள் குடைவரையில் காணப்படுகின்றது. this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.