http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 12

இதழ் 12
[ ஜூன் 16 - ஜூலை 15, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

இன்னல்களைக் களைவோம்
மூதூரும் முதுமக்கள் தாழியும்
பகவதஜ்ஜுகம் - 3
ஆந்தையும் உண்டுதான் படித்த ஞான்றே!
திருமணல்மேடு பஞ்சநதீசுவரர் திருக்கோயில்
மங்களாவூர் மத்யார்ச்சுனேசுவரர் கோயிலும் கல்வெட்டுகளும்
கோயில்களை நோக்கி - 1
தட்டுவார் திறனுக்கேற்பத் திறக்கும் கதவுகள்!
கல்வெட்டாய்வு -10
ஸ்ரீனிவாசநல்லூர் பயணம்
சங்கச்சாரல் - 11
குடமுழா (பஞ்சமுக வாத்தியம்)
இதழ் எண். 12 > கலையும் ஆய்வும்
கல்வெட்டாய்வு -10
மா. இலாவண்யா
என்ன நண்பர்களே/தோழிகளே. சென்ற இதழில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடைகள் தெரிந்ததா? ஏப்ரல் மாத இதழில் வெளிவந்த கல்வெட்டு புகைப்படத்தில் இருந்த கல்வெட்டு எந்த மன்னருடையது என்று கேட்டிருந்தேன். அக்கல்வெட்டு மூன்றாம் இராஜராஜருடையது. காலம் கி.பி. 1230. எப்படிக் கண்டுபிடிப்பது. சரி இப்பொழுது மூன்றாம் இதழில் வெளியான முதலாம் இராஜராஜருடைய கல்வெட்டையும், இக்கல்வெட்டையும் அச்சு எடுத்துக்கொள்ளுங்கள். இவ்விரண்டு கல்வெட்டு எழுத்துகளிலும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. குறைந்தது ஐந்து வித்தியாசங்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். சரி உங்களுக்காக இதோ ஐந்து வித்தியாசங்கள்.

1) இரண்டிலும் "த" என்ற எழுத்தைப் பார்த்தாலே வித்தியாசம் தெரியும். முதலாம் இராஜராஜர் கல்வெட்டில் கேள்விக்குறி போல் வளைந்த கோடும் அதன் கீழே ஒரு சுழியும் உள்ளது. ஆனால் மூன்றாம் இராஜராஜர் கல்வெட்டில் உள்ள "த" ஏறக்குறைய இப்பொழுது எழுதுவது போலவே, மேலே போடும் கோடு நன்றாக நீட்டிக்கொண்டிருக்க அதன் கீழே ஒரு செங்குத்துக் கோடு சுழியுடன் காணப்படுகிறது.

2) "ர" வும் முதலாம் இராஜராஜர் கல்வெட்டில் வெறும் கேள்விக்குறி போல் வளைந்த ஒரு கோடு மட்டுமே கொண்டுள்ளது. மூன்றாம் இராஜராஜர் கல்வெட்டில் மேலே சாய்வுக்கோடு ஒன்று அதன் கீழ் செங்குத்துக் கோடு ஒன்று என்று பிரித்துக் காணும் வகையில் அமைந்துள்ளது.
Kalvettu letters comparison
3) "ண" என்ற எழுத்தில் சுழிகள் மூன்றாம் இராஜராஜர் கல்வெட்டில் மிகவும் தெளிவாக இருக்கின்றன. முதலாம் இராஜராஜர் கல்வெட்டில் முதல் சுழியை அடுத்து சுழிகளுக்கு பதில் வளைவுகள் மட்டுமே இருக்கின்றது.

4) "க" என்ற எழுத்தை மட்டும் பார்த்தே காலத்தை தெரிந்து கொண்டு விடலாம். முதலாம் இராஜராஜர் கல்வெட்டில் மேலே வளைக்கப்பட்ட ஒரு கோடு அதன் நடுவில் + போல் வருமாறு மிகவும் லேசாக வளைந்த ஒரு கோடுடன் உள்ள "க" மூன்றாம் இராஜராஜர் காலத்தில் வளர்ந்து மேலே ஒரு கோடு, அதன் கீழ் ஒரு செங்குத்துக் கோடு அதற்கு இருபக்கமும் நன்றாக வளைந்த கோடுகள் என உருமாறியிருக்கிறது.

5) "ட" என்ற எழுத்தும் முதலாம் இராஜராஜர் காலத்தில் மெல்லிய கோடும் தொடர்ந்து சற்றே சாய்வான கோடும் கொண்டிருக்கிறது. மூன்றாம் இராஜராஜர் காலத்தில் இப்பொழுது எழுதும் "ட" வைப் போலவே உள்ளது. இந்த எழுத்துக்களை வலப்பக்கம் உள்ள படத்தில் கொடுத்துள்ளேன். பார்க்கவும்.

இதைப் போல ஆராய்ந்து பார்த்தால் இன்னும் பல வித்தியாசங்கள் புலப்படும். கோயில்களுக்கு செல்லும்பொழுது அங்குள்ள கல்வெட்டுகளை படித்துப் பார்க்க முயலவும். நாளாக ஆக உங்களுக்கு கல்வெட்டுக் காலத்தை நன்றாகவே அறிய முடியும். கல்வெட்டுகளையும் நன்றாக படிக்க முடியும்.

சென்ற முறை நான் முனைவர். கலைக்கோவன் அவர்களை சந்தித்து உரையாடும் பொழுது அவர் கூறியது என்னை சற்றே நிதானித்து சிந்திக்கச் செய்தது. ஆமாம், "கல்வெட்டுகள் படிப்பது என்பது மிகவும் எளிது. கல்வெட்டினைப் படிக்கப் பலர் உள்ளனர். ஆனால் படித்து வரலாற்றுச் செய்தியினைத் தெரிந்து கொள்வதே கடினம். கல்வெட்டுகளைப் படிப்பதோடு கல்வெட்டினை ஆராய்ந்து வரலாற்றுச் செய்திகளைத் தெரிந்துகொள்ள முயல வேண்டும்" என்றார். ஆமாம் கல்வெட்டிலிருந்து நாம் தெரிந்து கொள்ளும் வரலாற்று செய்திகள் தான் மிகவும் முக்கியமானது.

சென்ற இதழில் கொடுக்கப்பட்டிருந்த கல்வெட்டுகள் கூறும் செய்தியினைத் தெரிந்து கொண்டீர்களா. நீங்கள் தெரிந்துகொண்டதை சரி பார்த்துக்கொள்ளவும்.

கோவிராஜராஜகேஸரி கல்வெட்டு - முதலாம் இராஜராஜரின் மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு கூறும் செய்தி:

உறையூர் கூற்றத்தில் உள்ள வயலூர் ஊர் சபையோர், சிற்றம்பர் எனும் ஊரில் உள்ள விண்ணகர்ப்புரத்து வியாபாரி ஒருவர், பெருமான்விடங்கன் என்றழைக்கப்படும் இறைவனுக்கு இந்த ஊரில் மண்டபம் ஒன்று எடுப்பித்தார். அவர் கட்டிய மண்டபத்தின் பெயர் ஐஞ்ஞூற்றுவன். அந்த மண்டபத்தில் விளக்குப்புறமாக, அதாவது விளக்கெரிப்பதற்காக, நல்ல நீர் நிலமாக விற்றுக்குடுத்தனர். நீர் நிலம் என்றால் அரிசி முதலிய தானியங்கள் விளைவிப்பதற்கு ஏற்ற நிலம். அந்த நிலத்தின் எல்லைகள் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேற்க்கும், வடமேற்க்கும் வாய்க்கால்கள் எல்லையாகவும், எட்டி என்பரின் தோட்டமும், மன்றன் அரங்கன் என்பவரின் துடவை அதாவது உழவுக்கொல்லை அல்லது பூந்தோட்டமும் கிழக்கு வடக்கினுக்கு எல்லையாகவும், பறையர் பேற்று செய் அதாவது பறையரின் நிலம் தெற்கு எல்லையாகவும் குறிக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு எல்லைக்குள் அகப்பட்ட நிலம் உண்ணிலமொழிவின்றி அதாவது எந்த ஒரு நிலத்துண்டும் விடுபடாது எல்லோருக்கும் இசைவான விலைப்பொருள் கொடுக்கப்பட விற்கப்பட்டிருக்கிறது. எம்மிலிசைந்த விலைப்பொருள் கைய்யிலே எடுப்பிச்சுக்கொண்டு என்பது நிலத்துக்கு ஈடான தொகை குறிக்கப்பட்டு அது எல்லோருக்கும் அவ்விலை சம்மதமாக இருப்பதைத் தெரிவிக்கிறது. கல்வெட்டு நிலத்தின் விலை என்ன என்றும் நிலத்தின் அளவையும் குறிப்பிடவில்லை. மேலும் நிலத்துக்கான வரிகளை (இறை, எச்சோறு) இந்த ஊர் சபையோர்கள் குறித்துக் கொடுப்பார்கள் எனவும், இவ்வாறெல்லாம் சம்மதித்து (இசைந்து) விற்றுக்குடுத்து, அவ்வாறு விற்றுக்குடுத்ததை கல்மேல் வெட்டினார்கள் எனவும் கல்வெட்டிலேயே குறிப்பிட்டிருக்கிறார்கள்.

துடவை என்பது குறிஞ்சி சார்ந்த நிலமாக குறுந்தொகையில் (குறுந். 105) இடம்பெறுகிறது. தமிழ் அகராதி துடவைக்கு உழவுக்கொல்லை எனவும், பூந்தோட்டம் எனவும் பொருள் தருகிறது.

இராஜகேசரிவர்மரின் ஏழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு கூறும் செய்தி:

உறையூர் கூற்றத்தில் உள்ள வயலூர் ஊர் சபையோர், அவர்களுடைய ஊரில் உள்ள திருக்கற்றளியில் அதாவது கருங்கற்களால் ஆன கோயிலில் உள்ள இறைவன் பெருமானடிகளுடைய மேலைத் திருச்சுற்றாலை, அதாவது மேற்குப்புறமிருக்கும் சுற்றுப்பாதையருகில் உள்ள திருநந்தவனமும், கோயிலின் வடபக்கமுள்ள திருநந்தவனமும், மேலும் திருப்பொரிதேவன்குடி என்ற கோயிலில் மேற்கில் இருக்கும் திருநந்தவனமும், இத்திருநந்தவனங்களைத் திருத்துவார்க்கு அதாவது அத்திருநந்தவனங்களில் தோட்டக்காரராக இருப்பவர்களுக்கு தேவதானமாக நிலத்தை நிவந்தமாக விற்றுக்கொடுக்கிறார்கள். அதற்காக முக்கழஞ்சரை அதாவது மூன்றரை கழஞ்சு பொன் விலையாகக் கொண்டு விற்றுக்கொடுப்பவர் பக்க நக்கன் என்பரின் மகன் நக்கன் கருப்பாலை. அந்த நிலம் திருப்பொரித்தேவன்குடி கோயிலின் கிழக்குப்பக்கமாக இருக்கும் கணவதி என்ற பெயர் கொண்ட வாய்க்காலுக்கு கிழக்கிலும், சூரன்சேந்தி என்பரின் நிலத்துக்கு வடக்கு விரிவு நிலமாகவும் இருக்கும் நிலம். நில அளவு ஒருமாவரை அதை குழியாக நூற்றைம்பது (150) என்று கணக்கிட்டிருக்கிறார்கள். அந்த 150 குழியையும் திருப்பொரித்தேவன்குடி கோயிலுக்கு முக்காணி அதாவது 75 குழியும், திருக்கற்றளி பெருமான் நந்தவனத்துக்கு 75 குழியுமாக பிரித்துக்கொடுத்திருக்கிறார்கள். தோட்டக்காரர்கள் இந்நிலத்திலிருந்து வரும் பூக்களை (பள்ளித்தாமம்) பறித்து தொடுக்க வேண்டுமென்றும் கட்டளையிட்டு, மேலும் இந்நிலத்திற்கு உண்டான இறை அதாவது வரியினை நீக்கி இறையிலி நிலமாக தேவதானமாக விற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.