![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 12
![]() இதழ் 12 [ ஜூன் 16 - ஜூலை 15, 2005 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
சங்கச்சாரல்
வியப்பில் முடிந்த சூள்
தாம் செய்யவிருக்கும் ஒரு செயலில் தமக்குள்ள உறுதிப்பாட்டைக் கேட்போருக்குத் தெரிவித்து நம்பிக்கையூட்டச் சூளுரைப்பதென்பது சங்ககாலத்திலிருந்து தொடர்ந்து வரும் சமூக வழக்கமாகும். சங்ககாலத்தில் இத்தகு சூள்கள் பெரும்பாலும் காதல்களத்திலும், ஓரளவிற்குப் போர் நோக்கிலும் விளைந்தமையைப் பாடல்கள் வழி அறியலாம். சூளுரைப்பார் அதை நிறைவேற்றலும் உண்டு, பொய்த்தலும் உண்டு. என்றாலும் நற்றிணைப் பாடலொன்று (386) சூள் பொய்த்தலே பெருவழக்கு எனுமாறு போல் அமைந்துள்ளது. "தலைவன் உன்னிடம் வந்து, 'உன்னை மணக்க உரியாருடன் வருவேன், இதற்கு அணங்குடை அருஞ்சூள் தருவேன்', எனக்கூறிச் சென்றான். அச்சூளின் உண்மைத்தன்மையில் நமக்கு ஐயமிருந்தது. திடீரென ஒருநாள் அவன் நம் சிறுகுடி பொலியத் திருமணம் செய்துகொள்வேன் என வந்துநின்றபோது அந்தச் சூள் உண்மையானமை கண்டு நான் வியந்துபோனேன்" என்று குறிஞ்சித் தோழியொருத்தி தலைவியிடம் தன் மனநிலை பகிர்ந்துகொள்ளும் காட்சி, சங்கச் சூள்கள் பெரும்பாலும் நம் சமகாலத் தலைவர்களின் தேர்தல் கால உறுதிமொழிகளைப் போலவே இருந்தமைக்குச் சான்றாவது காண்க. பிச்சை சூழ் பெருங்களிறு இன்றைக்கு யானைப்பாகர்கள் சிலர் தம் யானைகளை நகர்ப்புறத்துத் தெருக்களில் நடத்திவந்து ஆங்குள்ள கடைக்காரர்களிடம் பிச்சையெடுக்கவைப்பது நாளும் நாம் பார்ப்பதே. இந்தப் பழக்கம் எப்போது எப்படித் தொடங்கியது? வரலாற்றுக்கவிஞர் பரணர் தம் மருதநிலப் பாடலொன்றில் (நற். 300) இந்தப் பழக்கத்தின் சங்கமூலம் காட்டுகிறார். 'தலைவன் ஒருவன் இங்குவந்தான். எனக்கு விலை தன் தேரென்று கருதி அதை இங்கு நிறுத்திவிட்டுச் சென்றான். நீயும் அதுபோல் தேரோடு வந்த தேரை நிறுத்திச் செல்வது விடுத்து, போரில் பெற்ற விழுப்புண்களால் தழும்பன் என்று பெயரேற்ற வள்ளலின் ஊரான ஊணூரிலுள்ள உணவுச்சாலையின் முன் பிச்சைக்கு வந்த பெருங்களிறு ஒன்று நின்றார் போல, என் வீட்டுச் சமையலறைக் கூரையின் பனையோலையைப் பற்றியவாறு நிற்கிறாயே, இதென்ன?' என, வீட்டு முன் நின்றான் ஒருவனைப் பார்த்துப் பெண்ணொருத்தி கேட்குமாறமைந்த இப்பாடல், இன்றைய சூழலுக்கும் ஓரடி தருகிறது. 'கோமகள் சினந்தென அதனெதிர் மடத்தகை ஆயம் கைதொழுதாங்கு'. புரிகிறதா? முருகு புணர்ந்த வள்ளி தமிழ்நாட்டுத் தொன்மங்களுள் முருகன் தொடர்பான பல கதைகள் சங்கப் பழமையன. முருகன் வள்ளியை மணந்ததும் சங்கத் தரவாக நற்றிணையில் காணக்கிடைக்கிறது. தன் சிறுகுடிக்குத் தலைவி தன்னோடு வருதலை விழைந்த குறிஞ்சித் தலைவன் ஒருவன், முருகனைக் கலந்து உடன்சென்ற வள்ளிநாச்சி போலத் தலைவி தன்னுடன் வருவாளோ என்று வினவுமாறு பாடலமைந்துள்ளது. "என்னுள் வருதியோ நல்நடைக் கொடிச்சி முருகுபுணர்ந்து இயன்ற வள்ளி போல" (நற். 82) தகவல்: வரலாறு ஆய்விதழ் 9, 10 this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |