![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 177
![]() இதழ் 177 [ மே 2024 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
மூலப்பாடம்: கான்ஜி எழுத்துருக்களில் あらし吹く み室の山の もみぢ葉は 竜田の川の 錦なりけり கனா எழுத்துருக்களில் あらしふく みむろのやまの もみぢばは たつたのかはの にしきなりけり ஆசிரியர் குறிப்பு: பெயர்: மதகுரு நோஇன் காலம்: கி.பி. 988-1050. இவரது இயற்பெயர் நகாயசு. அரச குடும்பத்தினர் கல்வி கற்பதற்காக நடத்தப்பட்டு வந்த பல்கலைக்கழகத்தில் இலக்கியம் பயின்ற இவர் தனது 26வது வயதிலேயே புத்த மதகுருவாக மாறிவிட்டார். தற்போதைய ஓசகா மாகாணத்தின் செட்சு நகரில் வாழ்ந்து வந்தவர். சமகாலத்திய புலவர்களின் பாடல்களில் இடம்பெற்ற இடங்களுக்குச் சென்று அப்பாடல்களைத் தன்னுரையுடன் தொகுத்திருக்கிறார். இது தவிர, ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 65 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. காலத்தால் அழியாத 36 புலவர்களின் பிற்காலப் பட்டியலில் இடம்பெற்றவர். பாடுபொருள்: இலையுதிர்கால ஆற்றின் அழகு. பாடலின் பொருள்: மிமுரோ மலையிலிருந்து வீழும் தட்சுதா ஆற்றின் இருமருங்கிலும் உதிர்ந்து கிடக்கும் செந்நிற மேப்பிள் இலைகள் ஆற்றுக்குக் கரை வரைந்ததுபோல் அழகூட்டுகின்றன. இயற்கையை வர்ணிக்கும் இன்னோர் எளிய பாடல். ஜப்பானில் இலையுதிர்காலத்தில் மேப்பிள் மர இலைகள் பழுத்து அடர்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இத்தொடரின் 40வது பாடலில் (காதல் மறைத்தாலும் மறையாதது) விளக்கியதுபோல் இடைக்கால ஜப்பானிய வரலாற்றில் அரசவைகளில் அவ்வப்போது பாடல் புனையும் போட்டிகள் நடப்பதுண்டு. கவிஞர்களை இரு வரிசைகளில் எதிரெதிரே அமர்த்தி இருவர் இருவராகக் கவிதைகள் புனைந்து சிறந்த கவிதையைத் தேர்ந்தெடுக்கும் முறை இருந்தது. கவிஞர் யுய்யே எழுதிய பாடலுக்குப் போட்டியாகப் புனையப்பட்ட இப்பாடல் பரிசை வென்றது. இரு பாடல்களும் உதிர்ந்து கிடக்கும் செந்நிற மேப்பிள் இலைகள் அவ்விடத்தை அழகுபடுத்துவதாகப் புனையப்பட்டவைதான். ஒரேயொரு வேறுபாடு யுய்யே மலையடிவாரக் கிராமத்தின் தரை அழகாக இருக்கிறது என்று பாடியிருக்கிறார். இவர் தட்சுதா ஆற்றின் இருமருங்கும் ஜரிகை வைத்ததுபோல் இருக்கிறது என்று கவித்துவம் கூட்டியதால் பரிசை வென்றிருக்கலாம். வெண்பா: வரையினில் வீழ்ந்திடும் தீம்புனல்நீள் ஆற்றின் கரையினில் வீழ்ந்திடும் செம்மை - கரையென நீண்டிடச் செந்தண் இலையவை கூட்டுமே தட்சுதா ஆற்றின் அழகு (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |