http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 177

இதழ் 177
[ மே 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் - 4
திருவிளையாட்டம் மாடக்கோயில் - 1
கீழ்வேளூர் மாடக்கோயில் - 3
சங்கப் பாடல்களில் பெண் தொழில்முனைவோர் - 2
ஜப்பானியப் பழங்குறுநூறு - 70 (உள்ளும் புறத்தும் தனிமையே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 69 (கரையோர மேப்பிள்கள்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 68 (விழியிலிருந்து நினைவுக்கு)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 67 (அலர்கூட்டும் வசந்தகாலக் கனவு)
இதழ் எண். 177 > கலையும் ஆய்வும்
திருவிளையாட்டம் மாடக்கோயில் - 1
இரா.கலைக்கோவன், மு.நளினி

நாகபட்டினம் மாவட்டத் தரங்கம்பாடி வட்டச் சிற்றூரான திருவிளையாட்டத்தில் கிழக்குப் பார்வையில் அமைந்துள்ள முளைத்தெழுந்த நாயனார் மாடக்கோயில்1 சோழர் காலக் கல்வெட்டுகளையும் கிருஷ்ணதேவராயர் கல்வெட்டையும் கொண்டுள்ள ஒருதளத் தூங்கானை மாடமாகும். வளாக வாயிலுக்கு முன்னால் பாதபந்தக் கட்டமைப்புடனான பலித்தளமும் நாகர மண்டபத்தில் நந்தியும் உள்ளன. பாதபந்தத் தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் கொண்டுள்ள ஒருதளச் சாலை நுழைவாயில் இருபுறத்தும் சுதையாலான நெடிய தாவுயாளிகளைக் கொண்டுள்ளது. கூரை மீது உள்ள சாலையில் விடையேறிய அண்ணலும் அம்மையும் காட்சிதருகின்றனர். தெற்கு ஆரநாசிகையில் மூஞ்சுறு மேல் பிள்ளையாரும் வடக்கு நாசிகையில் மயில்மீது முருகனும் சுகாசனத்தில் அமைய, முருகனின் இருபுறத்தும் நின்றகோலத்தில் வள்ளியும் தெய்வானையும் காட்சிதருகின்றனர்.

வெளிச்சுற்று

வாயிலை அடுத்து விரியும் சுற்றுவெளியில் நடுநாயகமாக சோமாஸ்கந்தர், முளைத்தெழுந்த நாயனார் இவர்களுக்கான மாடக்கோயிலும் அதன் வடபுறத்தே அம்மன் கோயிலும் அமைய, தென்மேற்கில் உள்ள ஒருதளத் திராவிட விமானத்தில் சித்திவிநாயகரும் மேற்கிலுள்ள ஒருதள வேசர விமானத்தில் தேவியருடன் முருகனும் வடமேற்கிலுள்ள ஒருதள வேசர விமானத்தில் அண்மைக் கால யானைத்திருமகளும் இடம் பெற்றுள்ளனர். விநாயகர் வழக்கமான இலலிதாசனத்தில் கரண்ட மகுடத்துடன் பின்கைகளில் அங்குசம், பாசம் கொண்டு, முன்கைகளில் தந்தம், மோதகம் விளங்கக் காட்சிதருகிறார். இடம்புரித் துளைக்கை இடக்கை மோதகத்தைச் சுவைக்க, வலத்தந்தம் உடைந்துள்ளது.



கரண்டமகுடம், சரப்பளி, பனையோலைக் குண்டலங்கள், முப்புரிநூல், உதரபந்தம், பட்டாடை அணிந்து காட்சிதரும் முருகனின் பின்கைகளில் வக்ஷரமும் சக்தியும் அமைய, முன் கைகளில் வலக்கை காக்கும் குறிப்பிலும் இடக்கை கடியவலம் பிதத்திலும் உள்ளன. கரண்டமகுடம், பட்டாடை இவற்றுடன் முருகனின் இருபுறத்தும் நிற்கும் தேவியர் வெளிக்கைகளை நெகிழ்த்தி, உட்கைகளில் மலரேந்தியுள்ளனர். மார்புக்கச்சு அணிந்துள்ள தெய்வானை பனையோலைக் குண்டலங்கள் கொள்ள, அதுவற்ற வள்ளி மகரகுண்டலங்களுடன் காட்சி தருகிறார். முருகன் திருமுன்னுக்கு வெளியில் கல்மேடையில் மயிலின் சிற்பம் உள்ளது.

மேற்குச் சுற்றில் மாடம் போன்ற சிறு மண்டபத்தில் வலப்புறம் நந்திகேசுவரரும் இடப்புறம் அக்னிமாதாவும் சூழச் சேட்டைத்தேவி இடம்பெற்றுள்ளார். கரண்டமகுடம், சரப்பளி, தோள், கை வளைகள், ஸ்வர்ணவைகாக்ஷம், பட்டாடை அணிந்து கால்களைக் கீழிறக்கி அமர்ந்துள்ள சேட்டைத்தேவியின் நீள்செவிகள் வெறுமையாக உள்ளன. வலக்கையில் மலர் மொட்டுக் கொண்டு இடக்கையை முழங்கால் மேல் கடகத்தில் இருத்தியுள்ள அம்மையின் மார்பகங்கள் இளமை நலத்துடன் உள்ளன. இடப்புறம் காகக்கொடி காட்டப்பட்டுள்ளது. நீள் வெறுஞ்செவிகளுடன் கரண்டமகுடம், ஸ்வர்ணவைகாக்ஷம், பட்டாடை அணிந்து சுகாசனத்தில் உள்ள அக்னிமாதா வலக்கையில் நீலோத்பலம் ஏந்தியுள்ளார். இடக்கை முழங்கால் மீது கடகமாய் இருத்தப்பட்டுள்ளது. கரண்டமகுடம், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், இடைக்கட்டுடனான பட்டாடை, தோள், கை வளைகள் இவற்றுடன் வலப்புறம் சுகாசனத்தில் உள்ள நந்திகேசுவரரின் வலக்கையில் தடி. இடக்கை கடகத்தில் முழங்காலின்மீது உள்ளது.

வடகிழக்கில் உள்ள மண்டபத்தில் கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், இடைக்கட்டுடனான சிற்றாடை இவற்றுடன் காட்சிதரும் சூரியனின் கைகளில் தாமரைகள். சுடர்முடி, மகர, பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், இடைக் கயிறாய்ப் பாம்பு கொண்டு நாயுடன் நிற்கும் பைரவரின் முன் கைகளில் முத்தலைஈட்டியும் தலையோடும் விளங்க, பின்கைப் பொருட்களை அடையாளம் காணக்கூடவில்லை. அண்மைக் காலச் சிற்பமாக சÜசுவரனும் இங்கு இடம்பெற்றுள்ளார். வடபுறத்துள்ள ஒருதள நாகர விமானத்தில் சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சிற்றாடையுடன் சுகாசனத்தில் உள்ள சண்டேசுவரரின் வலக்கையில் மழு. இடக்கை தொடை மேல் கடகத்தில் உள்ளது.

அம்மன் கோயில்

விமானம், முகமண்டபம், முன்மண்டபம் என அமைந் துள்ள அம்மன் கோயிலின் பெருமண்டபமும் அதன் தெற்கில் உள்ள வாகன மண்டபமும் ஒரே கட்டமைப்பிலான செங்கற்பணிகள். வண்டிக்கூடு கூரை பெற்றுள்ள இம்மண்டபங்களுள் வாகன மண்டபம் இரண்டு பிரிவுகளாக அமைந்துள்ளது. தென்புறம் உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், கூரையுறுப்புகள் பெற்றுள்ள பெருமண்டபக் கூரையில் எட்டு இலட்சுமிகளும் ஓவியங்களாக இடம்பெற்றுள்ளனர். மண்டபத்தின் வடக்குச் சுவர் பாதபந்தத் தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், கூரை உறுப்புகள் பெற்றுள்ளது.

பலித்தளமும் நந்தியும் உள்ள இம்மண்டபத்தை அடுத்து உள்ள முன்மண்டபத்தின் தெற்கிலும் வடக்கிலும் கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்கள் உள்ளன. பாதபந்தத் தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், கூரை உறுப்புகள் பெற்றுள்ள அதன் புறச்சுவர்க் கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. முன்மண்டபத்தை அடுத்த முகமண்டப வாயிலின் தென்புறத்தே பிள்ளையார் இடம்பெற்றுள்ளார். கருவறையில் முல்லைவனநாயகி என்ற பெயருடன் சமபங்கத்தில் உள்ள தேவியின் முன்கைகளில் வலக்கை காக்கும் குறிப்புக் காட்ட, இடக்கை கடியவலம்பிதத்தில் உள்ளது. சடைமகுடம், மகரகுண்டலங்கள், சரப்பளி, தோள், கை வளைகள், பட்டாடை அணிந்துள்ள இறைவியின் பின்கைகளில் வலப்புறம் அக்க மாலை, இடப்புறம் தாமரை.

பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, எண்முக அரைத் தூண்கள் தழுவிய சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் என ஒருதள வேசரமாக விளங்கும் இறைவி விமானத்தின் கிரீவகோட்டங்களில் தேவியின் சுதை வடிவங்கள் உள்ளன. நான்முக அரைத்தூண்களால் அணைக்கப்பட்டுள்ள சுவர்க் கோட்டங்களும் விமானக் கட்டமைப்பிலேயே உள்ள முகமண்டபக் கோட்டங்களும் வெறுமையாக உள்ளன.

சோமாஸ்கந்தர் விமான வெற்றுத்தளம்

இறைவன் விமானத்தின் தென்புறமுள்ள சோமாஸ்கந்தர் விமானத்தின் வெற்றுத்தளம் உபானம், கம்பு, பத்மஜகதி, கம்பு, பட்டிகை, மேற்கம்பு இவற்றாலான துணைத்தளம், நீளமான நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் உத்திரம், வாஜனம் இவற்றைக் கருங் கல்லாலும் வலபி, கபோதம், பூமிதேசம் இவற்றைச் செங்கல் லாலும் கொண்ட கட்டுமானமாக உள்ளது. அதன் தெற்கு, மேற்குச் சுவர்களில் கோட்டங்கள் இல்லை.

கிழக்கில் வெற்றுத்தளத்தை ஊடறுத்து விமானத்திற்கான படிக்கட்டுகள் அமைந்துள்ளன. தெற்கிலும் வடக்கிலும் பிடிச் சுவருடன் திசைக்கு ஐந்து படிகள் கொண்டுள்ள முதற் படி வரிசை முடியும் தளத்தின் கிழக்கு முகத்தில் ஜகதி, பிரதிவரி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், உத்திரம், பூப்பதக்கங்கள் கொண்ட ஆழமற்ற கூடுகளுடனான கபோதம், பூமிதேசம் இவை காட்டப்பட்டுள்ளன. பூமிதேசத்தின் மேற்பகுதியே தளமாகியுள்ளது.

நடைமண்டபம்

இத்தளத்திலிருந்து மேற்கு நோக்கித் தொடரும் பத்துப் படிகள் சோமாஸ்கந்தர் விமானமும் முகமண்டபமும் அமைந் துள்ள நடைமண்டபத்தில் முடிகின்றன. நடைமண்டபத்தின் தொடக்கத்திலுள்ள வடவாயில் இறைவன் விமானத்தின் முன் உள்ள பெருமண்டபத்திற்கு வழிவிடுகிறது. உறுப்பு வேறுபாடற்ற துணைத்தளம், நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், கபோதம் இவற்றுடன் வண்டிக்கூடு கூரை பெற்றுள்ள நடைமண்டபத்தின் தென்சுவரில் சிறு சாளரம் ஒன்றும் காட்டப்பட்டுள்ளது.

சோமாஸ்கந்தர் விமானம்

வெற்றுத்தளத்தின் மீதமைந்த உயரமான வேதிகையை அடுத்து, சோமாஸ்கந்தர் விமானத்தின் ஜகதி, எண்பட்டைக் குமுதம், பிரதிவரி அடங்கிய பிரதிபந்தத் தாங்குதளம் தொடங்கு கிறது. கோட்டங்களற்ற சுவரை நான்முக அரைத்தூண்கள் தழுவ, கூரையுறுப்புகளை வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்குகின் றன. பூப்பதக்கக் கூடுகள் கொண்ட கபோதம் வரை கருங்கல்லால் ஆன இவ்விமானத்தின் நாகர கிரீவமும் சிகரமும் செங்கல் கட்டுமானமாய் உள்ளன. முன்னுள்ள சிறு முகமண்டபம் விமானக் கட்டமைப்பிலேயே உள்ளது. அதன் வாயில் நான்முகத் தூண்களால் அலங்கரிக்கப்பட்டுக் கூரையுறுப்புகள் கொண்டுள்ளது. முகமண்டபம், கருவறை இரண்டும் வெறுமையாக உள்ளன.

விமானத்தின் கிரீவகோட்டங்களில் தெற்கில் வீராசனத்தில் ஆலமர்அண்ணலும் மேற்கில் சுகாசனத்தில் பரமபதநாதரும் வடக்கில் அர்த்தபத்மாசனத்தில் நான்முகனும் காட்சிதர, கிழக்குக் கோட்டம் வெறுமையாக உள்ளது. சடைப்பாரம், மகர, பனையோலைக் குண்டலங்கள், சிற்றாடை அணிந்து பின் கைகளில் பாம்பு சுற்றிய உடுக்கையும் தீச்சுடரும் கொண்டுள்ள தென்திசைக்கடவுளின் வல முன் கை சின் முத்திரையில் அமைய, இட முன் கையில் சுவடி. தலைக்குப் பின்னால் மரம் காட்டப்பட்டுள்ளது. பின்கைகள் கடகத்தில் அமைய, வல முன் கையில் அருட்குறிப்புக் காட்டும் பரமபதநாதரின் இட முன் கை கதைமீது உள்ளது. வலப் பின் கையில் சக்கரம். பின் கைகளில் அக்கமாலையும் குண்டிகையும் கொண்டு சடை மகுடம், பட்டாடை இவற்றுடன் உள்ள நான்முகனின் முன்கைகள் காத்து அருள் செய்கின்றன.

பெருமண்டபம், சுற்று இவற்றின் வெற்றுத்தளம்

இறைவன் விமானத்தின் முன்னுள்ள பெருமண்டபம் அதன் வழித்தொடரும் சுற்று இவற்றிற்கான வெற்றுத்தளம் கிழக்கில் உபானம், உபஉபானம், ஜகதி, எண்பட்டைக்குமுதம், பிரதிவரி, மாலைத்தொங்கல் பெற்ற எண்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் கொண்டு அமைந்துள்ளது. வடக்கில் நான்முக அரைத்தூண் கள் உள்ளன. வடக்குச் சுவரில் காணப்படும் நான்முக அரைத் தூண்களால் அணைக்கப்பட்டு, மகரதோரணத் தலைப்புக் கொண்டுள்ள இரண்டு கோட்டங்களும் வெறுமையாக உள்ளன.

பெருமண்டபக் கிழக்கு வெற்றுத்தளச் சுவரொட்டி மேடை மேல் அமைந்துள்ள ஒருதள நாகர விமானத்தில் கரண்டமகுடத் துடன் இலலிதாசனத்தில் உள்ள இடம்புரிப் பிள்ளையாரின் இட முன் கையில் மோதகம் இடம்பெற்றுள்ளது. பிற கைப் பொருட்களை அடையாளம் காணக்கூடவில்லை. இவ்விமான சிகரத்தின் கிழக்குமுக வளைவில் சுகாசனத்தில் பிள்ளையாரும் அவரின் வலப்புறம் இறைவியும் இடப்புறம் வீணை வாசிப்பவ ராய்க் கலைமகளும் சுதைவடிவங்களாகக் காட்டப்பட்டுள்ளனர்.

பெருமண்டபம்

வண்டிக்கூடு கூரை பெற்றுள்ள பெருமண்டபத்தின் வட புறத்தே உள்ள இரண்டு அறைகளும் வெறுமையாக உள்ளன. அவற்றுள் ஓர் அறையின் மேல் நாகர கிரீவமும் சிகரமும் காட்டப்பட்டுள்ளன. மண்டபத்தின் தென்சுவர் உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளத்தின் மீது நான்முக அரைத்தூண்களின் தழுவலில் எழுகிறது. கூரையுறுப்புகளை வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்குகின்றன. கிழக்கு, வடக்குச் சுவர்கள் பாத பந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண் கள் தழுவிய சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கபோதத்துடனான கூரையுறுப்புகள் கொண்டுள்ளன. கிழக்குச் சுவரின் நடுப்பகுதியில் காணப்படும் திறப்பு நான்முக அரைத் தூண்களால் அணைக்கப்பட்டுள்ளது.

மண்டபத்தின் மேற்கிலுள்ள வாயில் திருச்சுற்றுக்கு வழி விடுகிறது. இவ்வாயிலுக்கருகே தெற்கில் கரண்டமகுடத்துடன் இலலிதாசனத்தில் உள்ள இடம்புரி விநாயகரின் இடப் பின் கையில் மோதகம். முன்கைகள் கால்களின் மேல் அமர, வலப் பின் கை வெறுமையாக உள்ளது.

குறிப்பு
1. இக்கோயிலை அறிமுகப்படுத்தியவர் திரு. பால. பத்மநாபன். ஆய்வு நாட்கள் 26. 9. 2009, 21. 1. 2010. ஆய்வுக்குத் துணைநின்ற அறங்காவலர் திரு. இரா. ஜெய்சங்கருக்கும் அவர் குடும்பத் தாருக்கும் நன்றி.

- வளரும்
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.