http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 181

இதழ் 181
[ செப்டம்பர் 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

இராஜராஜர் தேவியின் தளிகளும் மகள்களும்
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் சமுதாயம் - 3
நாங்கூர் மாடக்கோயில்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 90 (ரத்தக்கண்ணீர்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 89 (ரகசியமானது காதல்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 88 (குறுங்கூடலின் நெடுநினைவு)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 87 (தூவானமும் வெண்வானமும்)
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர்- 3
சங்கப் பாடல்களில் பெண் தொழில் முனைவோர் - 6
கம்பர் காட்டும் நல்லடக்கம்
இதழ் எண். 181 > கலையும் ஆய்வும்
நாங்கூர் மாடக்கோயில்
அர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன்

சீர்காழிக்கு அருகில் நாங்கூரில் உள்ள நாராயண பெருமாள் மணிமாடக்கோயில் மங்கையாழ்வார் பாடல் பெற்றுள்ளது.1 கபோதபந்தத் துணைத்தளம், தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், கூரையுறுப்புகள் பெற்றுச் செங்கல் கட்டுமானமாய் விளங்கும் ஐந்துதளக் கோபுரம் வாயிலின் இருபுறத்துமுள்ள கோட்டப்பஞ்சரங்களில் சுதையுருவங்களாக வடக்கில் கருடனையும் தெற்கில் காவலரையும் மேற்குப் பார்வையாகக் கொண்டுள்ளது. திருச்சுற்றின் கிழக்கில் மணி மாடக்கோயிலின்2 முன்னிருக்குமாறு அமைந்துள்ள ஒருதள வேசர விமானத்தில் கருடன் அர்த்தபத்மாசனத்தில் மேற்குப் பார்வையாகக் காட்சியளிக்கிறார். தென்கிழக்கில் மடைப்பள்ளி. தென்மேற்கில் கிழக்குப் பார்வையாக இருதள வேசர விமானத்தில் புண்டரீகவல்லித் தாயார். சுற்றின் வடபுறம் ஒருதள நாகரமாய் அமைந்த திருக்கோட்டியூர் நம்பி திருமுன்னில் ஆழ்வார்களும் ஆச்சாரியார்களும் சிற்ப வடிவில் எழுந்தருளியுள்ளனர்.

தாயார் திருமுன்

விமானம், முகமண்டபம், பெருமண்டபம் என அமைந்துள்ள தாயார் திருமுன் வண்ணப்பூச்சில் பளபளக்கிறது. உறுப்புகளற்ற துணைத்தளம், தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், மகரதோரணத் தலைப்பிட்ட வெற்றுக் கோட்டங்கள், கூரையுறுப்புகள் பெற்று விளங்கும் விமானத்தின் ஆரச்சாலைகளும் இரண்டாம் தளத்தை அடுத்து அமைந்த கிரீவகோட்டங்களும் அம்மன் தொடர்பான சுதையுருவங்களைப் பெற்றுள்ளன. விமானம் ஒத்த கட்டமைப்பில் விளங்கும் முகமண்டபத்தில் கோட்டங்கள் இல்லை. முன்னால் உள்ள பெருமண்டபம் முகமண்டபத்தை ஒத்த கட்டுமானத்துடன் முன்னால் முன்றில் பெற்றுள்ளது. கருவறையில் தாயார் சுகாசனத்தில் பின்கைகளில் மலர்கள் கொண்டு முன்கைகளைக் காக்கும் குறிப்பிலும் அருட்குறிப்பிலும் வைத்துள்ளார். அர்த்தபத்மாசனத்தில் உள்ள உற்சவர் மூலவர் போலவே பின்கைகளில் மலர்களுடன் முன்கைகளால் காத்தும் அருள் செய்தும் திகழ்கிறார்.

மாடக்கோயில்

வளாகத்தின் நடுவில் மாடக்கோயில் விமானம், முகமண்டபம், மண்டபச் சுற்று, பெருமண்டபம் பெற்று விளங்குகிறது. அதன் முன்னுள்ள தரையளவிலான முதல் மண்டபம் முப்புறத்தும் திறந்துள்ளது. முச்சதுர, இருகட்டு உடல் பெற்ற தூண்கள் தாங்கும் இம்மண்டபத்தை அடுத்தே வெற்றுத்தளம் எழுகிறது. தூண்களின் சதுரங்களில் தாமரைப் பதக்கங்கள்.

வெற்றுத்தளம்

மாடக்கோயிலைத் தாங்கும் 2. 81 மீ. உயரமுள்ள வெற்றுத் தளம் நெடுகச் செங்கல் கட்டுமானமாய் உள்ளது. முறையான தாங்குதளமற்ற அதன் சுவரை நான்முக அரைத்தூண்கள் தழுவி யுள்ளன. வெட்டுப் போதிகைகள் கூரையுறுப்புகள் தாங்க, கபோத மும் பூமிதேசமும் காட்டப்பட்டுள்ளன. மேற்கிலும் வடக்கிலும் மகரதோரணத் தலைப்புடன் காணப்படும் கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. தெற்கில் கோட்டம் இல்லை.



பெருமண்டபம்

வெற்றுத்தளத்தின் மீதமைந்த முதல் கட்டுமானமாய் விளங்கும் பெருமண்டபத்தை அடைய கிழக்கிலுள்ள ஏழுபடிகள் உதவுகின்றன. முச்சதுர, இருகட்டுத் தூண்கள் வெட்டுப் போதிகைகளுடன் தாங்கும் கூரை பெற்ற இம்மண்டபத்தில் வாகனங்கள் வைக்கப்பட்டுள்ளன. தூண்களில் காணப்படும் அடியவர்கள் மண்டபத்தை எழுப்பியவர்களாகலாம். மண்டபத் தென்சுவரில் மூன்று சாளரங்கள் உள்ளன.

பெருமண்டபத்தின் மேற்கில் நான்கு படிகளுடன் அமைந்த வாயில் மண்டபச் சுற்றிற்கு வழிவிடுகிறது. வாயிலை அணைத் துள்ள நான்முக அரைத்தூண்கள் கூரையுறுப்புகளும் கபோதமும் பெற்றுள்ளன. இவ்வாயிலின் இருபுறத்தும் பக்கத்திற்கு ஒருவராகக் காவலர்கள் உள்ளனர். தென்காவலர் வல முன் கையால் அச்சுறுத்தி, இட முன் கையை உருள்பெருந்தடி மேல் இருத்தியுள்ளார். வல முன் கையை உருள்பெருந்தடிமீது இருத்தியுள்ள வடக்கர் இட முன் கையைக் கடகமாகக் கொண்டுள்ளார். இருவர் பின்கைகளிலும் சங்கு, சக்கரம். பெருமண்டபப் புறச்சுவர் அதைத் தாங்கும் வெற்றுத்தளத்தின் கட்டமைப்பிலேயே உள்ளது.

சுற்று

இறைவன் விமானம், முகமண்டபம் இவற்றின் முன் கிழக்கில் சிறு மண்டபம் போல் அமைந்து தெற்கு, மேற்கு, வடக்கு முத்திசைகளிலும் உள்சுற்றாக விரியும் மண்டபச் சுற்று துணைத்தளம் தாங்கும் மாளிகை பெற்றுள்ளது. முச்சதுர, இரு கட்டு உடல் பெற்ற தூண்கள் வெட்டுப் போதிகைகளுடன் இம்மாளிகையின் கூரையைத் தாங்குகின்றன. சுற்றின் மேற்கில் அர்த்தபத்மாசனத்தில் வணக்க முத்திரையுடன் பின்கொண்டையும் பட்டாடையுமாய்க் காணப்படும் ஆண் வடிவம் அடியவராகலாம்.

சுற்றின் வடபுறமுள்ள திண்ணையில் திருக்கோட்டியூர் நம்பி, மணவாள மாமுனிகள், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், இராமாநுஜர் இவர்கள் இடம்பெற்றுள்ளனர். வடமேற்கில் விஷ்வக்சேனரான சேனைமுதலியார் சுகாசனத்தில் பின்கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, வல முன் கையில் காக்கும் குறிப்புக் காட்டி, இட முன் கையை உருள்பெருந்தடியின்மேல் இருத்திக் காட்சிதருகிறார். மண்டபச் சுற்றின் புறச்சுவர் அது நிற்கும் வெற்றுத்தளத்தை ஒத்துள்ளது.

விமானம்

இருதள வேசரமாக அமைந்துள்ள விமானத்தின் கீழ்த் தளம் கிழக்கு மேற்காக 6. 51 மீ. நீளமும் தென்வடலாக 6. 23 மீ. அகலமும் கொண்டு அமைந்துள்ளது. பாதபந்தத் தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், கூடுவளைவுகளுடனான கபோதம் பெற்றுள்ள கீழ்த்தளத்தின் சாலைப்பத்திகள் சற்றே புறந்தள்ளியுள்ளன. எண்முக அரைத்தூண்களால் அணைக்கப் பட்டுள்ள அப்பத்திகளின் வெறுமையான கோட்டப்பஞ்சரங்களை உருளை அரைத்தூண்கள் அணைத்துள்ளன. ஆரஉறுப்புகளும் இரண்டாம் தளமும் கிரீவ, சிகர அமைவும் செங்கல் கட்டுமானமாக அமைந்துள்ளன.

சாலைகளில் தென்புறம் வீராசனத்தில் ஆலமர்அண்ணலும் மேற்கில் கிருஷ்ணரும் வடக்கில் நான்முகனும் கிழக்கில் விஷ்ணுவும் உள்ளனர். கிரீவகோட்டங்களில் தெற்கில் தேவியு டன் நரசிம்மரும் மேற்கில் தேவியருடன் விஷ்ணுவும் வடக்கில் தேவியுடன் பரமபதநாதரும் கிழக்கில் தேவியுடன் பூவராகரும் இடம்பெற்றுள்ளனர். விமானத்தை அடுத்துள்ள முகமண்டபம் சாலைப்புறந்தள்ளல் இன்றி விமானக் கட்டுமானம் ஒத்துச் சுவரில் சாளரம் பெற்று அமைந்துள்ளது. விமானம், முகமண்டபம் இவற்றிற்கு இடைப்பட்ட ஒடுக்கங்களில் குடப்பஞ்சரங்கள் காணப்படுகின்றன.

கருவறை

பத்ரி நாராயணராக அறியப்படும் மூலவர் சுகாசனத்தில் மேடையில் அமர்ந்துள்ளார். பின்கைகளில் சங்கு, சக்கரம். முன்கைகளில் வலக்கை காக்கும் குறிப்பில் இருக்க, இடக்கை உருள்பெருந்தடிமேல் இருத்தப்பட்டுள்ளது. வலப்புறமுள்ள திருமகள் வலக்கையில் அருட்குறிப்புக் காட்டி, இடக்கையில் மலரேந்தியுள்ளார். இடப்புறத்துள்ள நிலமகள் வலக்கையில் மலர் பற்றி இடக்கையால் அருளுகிறார். நாராயணர் என்ற பெயருடன் உள்ள உற்சவர் திருமகள், நிலமகள் சூழ எழுந்தருளியுள்ளார். அளத்தற்கரியவர் என்ற பெயரில் நிலமகள், திருமகள் துணையுடன் மற்றொரு திருமேனியும் இடம்பெற்றுள்ளது.

கல்வெட்டுகள்

இக்கோயிலிலிருந்து மூன்று கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.3 அவற்றுள் பரகேசரிவர்மரின் இரண்டாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ள இரண்டு தமிழ்க் கல்வெட்டுகளும் சோமன் தத்தனால் இக்கோயில் இறைவனுக்கு வழங்கப்பட்ட கொடைகளைக் குறிக்கின்றன. நாற்பது காசுக்குத் தத்தனால் வாங்கப்பட்ட நிலம் திருமணிமாடக்கோயிலில் நந்தாவிளக்கொன்று எரிப்பதற்காகக் கொடையளிக்கப்பட்டது. இதே பெருமகன் திருமணிமாடக்கோயில் பெருமாளுக்கு நள்ளிரவுப் படையல் வழங்கப் பத்துச் செய் நிலம் நாற்பது காசுகளுக்கு வாங்கிக் கோயிலுக்களித்தார். தெலுங்கு மொழியிலுள்ள கல்வெட்டு கடிவேதியரப்பா என்ற பெயரைத் தருகிறது.

குறிப்புகள்
1. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் 1218 - 1227, 1850, 2674.
2. ஆய்வு நாள் 25. 9. 2009.
3. ARE: 1951-52: 153- 155.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.