![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 58
![]() இதழ் 58 [ ஏப்ரல் 26 - மே 20, 2009 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
வாசகர்களுக்கு வணக்கம். http://www.thehindu.com/2009/04/06/stories/2009040653550400.htm http://news.oneindia.in/2008/04/15/18-panchaloha-idols-stolen-from-temple-1208246587.html மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகள் என்னவென்று சொல்வதற்கு முன்னால் கீழே உள்ள படங்களைப் பாருங்கள். எத்தனை அழகு!! இவை போன்று அழகு வாய்ந்த பழைமையான சிற்பங்கள் எங்கே இருக்கின்றன என்று கேட்டால், மியூசியங்களில் இருக்கின்றன, பழமை வாய்ந்த பல கோயில்களில் இருக்கின்றன என்று சொல்லலாம். ஆனால், கொடுமை என்னவெனில், இவை போன்ற எல்லோராலும் பார்த்து இரசிக்கப்படவேண்டிய அரிய அற்புதமான சிலைகளும், பழமையான தெய்வத்திருமேனிகளும் திருடர்களிடமும் இருக்கின்றன. அவர்கள் வாயிலாகப் பல வெளிநாட்டினரின் அறைகளையும் அலங்கரிக்கின்றன என்றும் சொல்ல வேண்டியிருப்பதுதான். ![]() ![]() மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகள் இதைப்போலச் சிற்பத்திருட்டைப் பற்றிய செய்திகளைத் தருகின்றன. இதுபோன்ற செய்திகள் தினசரிகளில் அடிக்கடி தென்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் பலரும் இச்செய்திகளைக் கண்டுகொள்வதில்லை, கண்டுகொண்டாலும் அதனுடைய முக்கியத்துவத்தை உணர்வதில்லை. சாமானிய மக்களைப் பற்றிச் சொல்வானேன்? இதைப்போலச் செய்திகளை வெளியிடும் போலீஸ் துறையினரும், கோயில் அதிகாரிகளும், செய்தித்தாள்களும் கூட, அத்தெய்வத்திருமேனிகள் லட்ச ரூபாய் மதிப்பு பெறும், கோடி ரூபாய் மதிப்பு பெறும் என்று விலை கூறுகிறார்கள். உண்மையில் விலை மதிப்பிடக்கூடிய சிலைகளா அவை? அச்சிலைகள் எவ்வளவு பழமை வாய்ந்தவை, விலை மதிப்பில்லாத நம்முடைய பாரம்பரியக் கலைச்சொத்து என்பதைப் பலரும் உணருவதேயில்லை. இதில் சிறிது ஆறுதல் தரும் செய்திகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. திருடுபோன மகாவிஷ்ணுவின் சிலையொன்று பல நாடுகளுக்கும் சென்று கடைசியாக அமெரிக்கப் போலீஸாரால் இந்தியாவுக்கே அனுப்பி வைக்கப்பட்ட செய்தி மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதை ஒப்படைத்த அமெரிக்கக் காவலதிகாரி, இதுபோன்ற கலைப்பொக்கிஷங்கள் திருடப்பட்டால், அந்த நாடு தன் அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் இழக்கிறது என்று சொல்லியிருக்கிறார். அதுபோல இந்தியக் காவல்துறையினரும் சில திருட்டுப்போன சிலைகளை மீட்டு உரிய கோயில்களிடம் சேர்ப்பித்திருக்கின்றனர். ஆனாலும் இந்திய அரசும், தொல்லியல் துறைகளும், காவல் துறையினரும் சேர்ந்து இக்கலைப்பொக்கிஷங்களைப் பாதுகாக்கத் திட்டம் வகுத்து ஆவன செய்தால் நன்றாக இருக்கும். http://www.indianexpress.com/news/stolen-vishnu-idol-returned-to-india/2749/ http://www.hindu.com/2009/04/16/stories/2009041654330400.htm கோயிலைச்சேர்ந்த தங்க வெள்ளி ஆபரணங்கள் திருடு போவது ஒன்றும் புதிய செய்தியல்ல. இத்தகைய திருட்டைப்பற்றிய செய்திகள் தாங்கிய கல்வெட்டுகள்கூடக் கிடைக்கின்றன. ஆனால் அதே கல்வெட்டுகள் அக்காலத்தில் கோயில் சொத்துக்களைக் காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் கொடுக்கின்றன. இராஜராஜீஸ்வரத்துக் கல்வெட்டுகளில் இராஜராஜர் ஒரு குறிப்பிட்ட திட்டத்தின்படி, பக்கத்தில் இருக்கும் கிராமங்களிலிருந்து கோயில் சொத்துகளைப் பாதுகாக்கப் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டுமென ஆணையிட்ட கல்வெட்டு இருக்கின்றது. இதன்படி ஒவ்வொரு கிராமமும் பாதுகாவல் உள்ளிட்ட கோயில் வேலைகளுக்குக் கிராம மக்களை அனுப்பி வைத்த விவரம் கிடைக்கிறது. அதேபோலப் பல கல்வெட்டுகளிலும் கோயிலில் வேலை செய்வோர் பட்டியலில் கோயில் காப்பாளர்களும் இடம் பெறுகின்றனர். பாடிகாவல் என்று அழைக்கப்படும் காப்பாளர்களைப் பற்றிய தகவல்களும் கல்வெட்டுகளில் கிடைக்கின்றன. திருடனாகப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுதான். ஆனாலும் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தால் ஓரளவு திருட்டு நடக்காமல் தடுக்கவாவது முடியுமல்லவா? இப்படிப் பழமையான விலைமதிப்பில்லாத சிற்பங்கள் இருக்கும் பெரும்பான்மையான கோயில்கள் இவற்றைப் பாதுகாக்க இரும்புக்கதவுகளையும் பூட்டுகளையுமே நம்பியிருக்கின்றன. அக்காலத்திலே கோயிற்கதவுகளும், பாதுகாவலர்களும் திருட்டு நடக்காமல் தடுக்கப் போதுமான ஏற்பாடாக இருந்திருக்கும். ஆனால் விஞ்ஞானம் வெகுவாக முன்னேறிவிட்ட இக்காலத்தில், புகைப்படக்கருவியும் ஆள்நடமாட்டத்தை உணரும் 'sensors' கருவிகளையும் இணைத்து, ஆள்நடமாட்டம் இருந்தால் காவல்நிலையத்திலோ அல்லது கோயிலிலேயே மிகவும் சத்தமாகவோ அலாரம் அடிக்கும்படி செய்யும் 'security system' எனப்படும் பாதுகாவல் ஏற்பாடு செய்வது மிகவும் எளிதானதுதானே? ஆனால் அதற்குப் பணச்செலவு ஆகும். நல்ல வருமானமுடைய கோயில்கள் இத்தகைய பாதுகாவல் ஏற்பாடுகளைக் கட்டாயம் செய்துதானாக வேண்டும். செல்வந்தர்களோ அல்லது கோயில் இருக்கும் கிராமம் அல்லது ஊரைச் சேர்ந்தவர்களோ சேர்ந்து வருமானம் அதிகமில்லாத பழங்கோயில்களின் பாதுகாவல் ஏற்பாடுகளைக் கவனிக்கலாம். திருப்பணி செய்வோரும் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்காக வைப்பு நிதியாக வைக்கலாம். முக்கியமாக அந்தந்த ஊர்க் கோயில்களில் இருக்கும் சிலைகள், கல்வெட்டுகள் இவற்றைப் பற்றிய செய்திகளையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் அந்தந்த ஊர்மக்கள் உணரும்படி செய்யவேண்டும். இதைச் செய்தாலே மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பார்கள். பல திருட்டுக்களும் இதனால் தடுக்கப்படலாம். முக்கியமாகக் கிராமங்களில் உள்ள இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருந்தால், அவர்கள் கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் அழியாமல் பாதுகாக்கவும், சிலைகள் மற்றும் கோயிற்சொத்துகள் திருடுபோகாமல் இருக்கவும் தக்க ஏற்பாடுகள் செய்ய முன்வரலாம். வரலாறு.காம் ஆசிரியர் குழுவிற்கு வரும் மடல்களிலிருந்து, பலர், முக்கியமாக இளைஞர்கள் பலரும் வரலாற்று ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இத்தகைய ஆர்வம் வளர வேண்டும், கோயில்களில் இருக்கும் நம் நாட்டின் கலைப்பொக்கிஷங்கள் நாடு கடத்தப்படாமல் இருக்கவேண்டும். ஆவன செய்வார்களா தொடர்புடையவர்கள்? அன்புடன் ஆசிரியர் குழு this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |