http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 180

இதழ் 180
[ ஆகஸ்ட் 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

இரண்டு கோயில்கள் இரண்டு கல்வெட்டுகள்
Sharda Temple- Kashmir
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் சமுதாயம் - 2
தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 2
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் – 2
ஜப்பானியப் பழங்குறுநூறு - 86 (அழச்சொன்னாயோ நிலவே?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 85 (உள்ளத்தில் உள்ளேனா?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 84 (இன்றுபோல் நாளை இல்லை!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 83 (துயரறுத்தலே துயரமோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 82 (கண்ணீரே வாழ்வாக!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 81 (குயிலிசை போதுமே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 80 (மைக்குழற் செறிவன்ன காதல்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 79 (முகிலிடை ஒளிக்கசிவு)
சங்கப்பாடல்களில் பெண் தொழில்முனைவோர்- 5
இதழ் எண். 180 > கலைக்கோவன் பக்கம்
இரண்டு கோயில்கள் இரண்டு கல்வெட்டுகள்
இரா. கலைக்கோவன்

புதுக்கோட்டை மாவட்டம் விளாங்குடித் திருவன்னி உடையார் கோயில் கல்வெட்டொன்றும் கீரனூர் உத்தமநாதர் கோயில் கல்வெட்டொன்றும் இரண்டு சிறப்பான செய்திகளை நம் முன் வைக்கின்றன.

பொதுவாகக் கோயில்களின் வாழ்க்கை அவற்றிற்கு அளிக்கப்பட்டிருக்கும் நிலங்களின் வருவாய் சார்ந்தே அமையும். பொன்னும் காசுமாய்த் தரப்பட்ட கொடைகளும் நில முதல்களாகவே மாறிக் கோயில்களுக்கு நெல்லளந்தன. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் அந்நாளில் கோயில் பொருளாதாரம் நெல் பொருளாதாரமாகவே இருந்தது. அன்றாட வழிபாடு, படையல், விளக்குகள், விழாக்கள், கோயில் ஊழியர் ஊதியம் என எல்லாமே நெல் மதிப்பில்தான் நிவந்தங்களாய் நீடித்தன.

கோயில் சார்ந்த ஏதாவது ஒரு செயற்பாட்டிற்கு வழங்கப்பட்ட நிலம் விளையாது போனாலும் அந்தக் குறிப்பிட்ட செயற்பாடு நிற்குமளவிற்கு நிலைமை சீர்குன்றும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் விளாங்குடியில் அப்படியொரு நிலை உண்டாயிற்று.

சோழர் காலத்தில் இறையான்குடியாக அறியப்பட்ட விளாங்குடிக் கோயிலுக்கு நூற்றுவேலி என்றழைக்கப்பட்ட நிலமொன்று கொடையாகத் தரப்பட்டது. அந்நிலத்திற்கு நீரளித்த குளத்தின் கரைகள் உடைந்து, நீரற்றுப் போனதால் குளம் வறண்டது. கோயிலார் முயற்சிக்கு மீறிய பணியாய்க் கைவிடப்பட்ட நிலையில் குளத்தைச் சுற்றிலும் புதர்மண்டிக் காடாய்ச் செடிகளும்கொடிகளும் சிறுமரங்களும் செறிந்தன. நூற்றுவேலியால் தழுவப்பட்ட கோயில் ஊழியர் குடும்பங்கள் விளைச்சலின்மையால் வரவிழந்து வாடின.

செய்வதறியாது திகைத்த கோயிலார் ஊராட்சியின் உதவியை நாடினர். நூற்று வேலி விக்கிரமகேசரி சதுர்வேதிமங்கல ஆட்சியாளர் கீழ் இருந்தமையால், கோயிலார் துன்பம் நீக்க ஊராட்சி கூடியது. எந்தக் குளம் காடாய் மாறியதோ அதன் கரையிலேயே கூட்டம் அமைந்தது. உண்மை நிலையறியக் காட்சிகள் கூட்டத்தார் கண்ணெதிரே.

சோழப் பேரரசின் படைத்தலைவர் முடிகொண்ட சோழ விழுப்பரையர் குளத்தைச் சீர்மை செய்யும் பொறுப்பேற்றார். ஊரார், உழைப்பார் துணையுடன் குளம் சீரமைக்கப்பட்டது. காடு முற்றிலுமாய் அகற்றப்பட்டு நிலம் நேரானது. நீரும் நெல்லுமாய்க் குளமும் வயலும் செழித்தன. அது நூற்றுவேலிக்கு மறு பிறப்பானது. செயல் முடித்த படைத்தலைவருக்கு நன்றி பாராட்டிய ஊராட்சி, அவர் தாயின் பெயரை அப்பகுதிக்கு வழங்க, நூற்றுவேலி பாசூர்நங்கை நல்லூராகப் பெயர் மாற்றம் கண்டது.

பொதுக்காலம் 11ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த இந்த நற்பணிக்கும் கீரனூரில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் ஒப்பந்தத்திற்கும் இடையில் ஒரு நூற்றாண்டு இடைவெளி. சீர்குலைந்த சுற்றுப்புறத்தைக் கோயில் வேண்ட, ஊராட்சி கூடிப்பேச, அரசு அலுவலர் சீரமைத்த வரலாறு விளாங்குடியில். கீரனூர் அப்படி இல்லை. அங்கு நிகழ்ந்தது அறிவார்ந்த மக்களின் முன்னெச்சரிக்கை ஒப்பந்தம்.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிகழ்ந்த அழிவுகள் உறுத்தியோ அல்லது அப்படியெதுவும் நடந்துவிடக்கூடாது என்ற நோக்கிலோ கீரனூர் மக்கள் கூடினர்; கலந்துரையாடினர். மழைக்கு மரங்கள் வேண்டும். மழைநீர் சேமிக்க நீர்நிலைகள் வேண்டும். இந்த இரண்டிற்கும் எந்தத் தீங்கும் நேரக்கூடாதென்று அவர்கள் நினைத்தனர்.

பொதுவாகத் தீங்குகள் பகை முன்னிட்டே நேர்வதாலும் பகை எப்போது வேண்டுமானாலும் யார் இடையிலும் நிகழும் என்பதாலும் ஒப்பந்தம் இப்படி எழுதப்பட்டது. ஊர் மக்களாகிய எங்களில் யார் யார்மீது பகைகொள்ள நேர்ந்தாலும் அப்பகை எவ்வளவு காலம் நீடித்தாலும் பகையாளியின் குளம், கிணறு முதலிய நீர்நிலைகளுக்கோ, அவற்றைச் சுற்றியும் அல்லது அவற்றின் கரைகளில் வளரும் அவருக்குச் சொந்தமான மரங்களுக்கோ எந்தத் தீங்கும் எக்காலத்தும் செய்யமாட்டோம்.

யாரேனும் இந்த ஒப்பந்தம் மீறினால் அவர் செய்யும் அழிவுக்கேற்ப அவர் நிலத்தைக் கோயிலுக்குத் தரவேண்டும். மரம் வெட்டினால் அரைக்காணி நிலம், ஏற்றத்திற்கான மரமழித்தால் காணி நிலம், கிணறு என்றால் அரைமாச்செய் எனத் தண்டனையின் அளவு இடத்திற்கேற்ப அமைந்தது.

இந்த ஒப்பந்தம் கீரனூர் எல்லைக்குள் மட்டுமன்று. கீரனூர் மக்கள் எங்குச் சென்று வாழ்ந்தாலும் இந்த ஒப்பந்தத்திற்குக் கட்டுப்படுவர். ‘நாம் புகுந்த எல்லா இடங்களிலும்’ இந்த ஒழுங்கு பின்பற்றப்படும் என்கிறது கல்வெட்டு.

விளாங்குடியில் கோயில் வேண்டியது. ஊரவை கூடியது. உயர் அலுவலர் உதவினார். கீரனூரில் காட்சியே வேறு. ஊர் வாழ் மக்கள் கூடினர். உரையாடல் வழி இழப்புகள் தவிர்த்தனர். ஊரே கூடி ஒழுங்குபட்டதால் நீரும் மரமும் பிழைத்தன. எவ்வழி நல்லவர் மக்கள் அவ்வழி பிழைத்தன நிலமும் நீரும்.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.