![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 57
![]() இதழ் 57 [ மார்ச் 24 - ஏப்ரல் 15, 2009 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
பண்டைய நாட்களில் தானமாக வெளியிடப்படும் அரசாவணங்களை வெளியிடுவதற்கு பெரும்பாலும் செப்பேடுகளும் கல்வெட்டுக்களுமே பயன்பட்டன. எல்லோரும் அறியும்படி ஆவணமாக்கப் பட்டவை கல்வெட்டுக்களாகும். தானம் பெறுபவரின் ஆவணமாகச் செப்பேட்டுகள் வெளியிடப்பட்டன. இத்தகைய செப்பேடுகள் பண்டைய காலம் தொட்டே வழங்கப்பட்டு வந்துள்ளன. இவற்றை வெளியிடும் விதம் பற்றி பழைய தர்மசாஸ்திர நூல்கள் தெரிவிக்கின்றன. தர்மசாஸ்திரங்கள் ஸ்ம்ருதி என்று வடமொழியில் வழங்கப்படுகின்றன. மனு முதலியவர்களால் ஸ்ம்ருதிகள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றை எழுதியவர்களின் பெயரிலேயே அந்த ஸ்ம்ருதி நூல்கள் வழங்கப்படும். அத்தகைய ஸ்ம்ருதி நூல்களில் ஒன்று யாஜ்ஞவல்கிய ஸ்ம்ருதி ஆகும். இதனை இயற்றியவர் யாஜ்ஞவல்கியர் ஆவார். இந்த நூலுக்கு பலவகையான உரைகள் உள்ளன. இவற்றில் ஸ்ரீ சுரேச்வராசார்யரால் எழுதப்பட்ட பாலகிரீடை என்னும் உரையே மிகப் பழையது. (இந்த உரையில் அவர் அர்த்த சாஸ்திரத்தை மேற்கோள் காட்டும் இடங்களில் கௌடல்யரின் அர்த்த சாஸ்திரத்தை காட்டவில்லை. மாறாக அதனைக்காட்டிலும் பழையதான சுக்ரநீதிஸாரம் போன்றவற்றைக் காட்டுகிறார். இந்த ஆதாரத்தைக் கொண்டு இந்த ஸ்ம்ருதி அர்த்த சாஸ்திரத்திற்கு முற்ப்பட்டது என்று கொள்ள வாய்ப்பிருக்கிறது.)
இந்த நூலின் முதல் அத்தியாயம் ஆசார அத்தியாயம் எனப்படுகிறது. மக்கள், துறவிகள், அரசர்கள் போன்றோரின் நெறிகளை - ஆசாரங்களை எடுத்துரைப்பதால் இது ஆசார அத்தியாயம் எனப்படுகிறது. அந்த அத்தியாயத்தில் அரசர்களின் நெறியை குறிப்பிடும் பகுதி ராஜதர்மம் எனப்படுகிறது. அரசதர்மங்களில் ஒன்றாகத் தானம் கூறப்பட்டுள்ளது. ஆசார அத்தியாயத்தின் 316ம் செய்யுள் அரசன் பொருளீட்டவேண்டிய முறையையும் அதனை வினியோகிக்கும் முறையையும் குறிப்பிடுகிறது. “அறவழியில் அரசன் பொருளீட்ட வேண்டும். ஈட்டிய பொருளை முயற்சி செய்து காக்க வேண்டும். காத்த பொருளை பெருக்க வேண்டும். பெருக்கிய பொருளை தகுந்த இடத்தில் வினியோகிக்க வேண்டும்” என்று இந்த காரிகை தெரிவிக்கிறது. இந்த காரிகை அப்படி வினியோகிக்க வேண்டிய இடங்களில் முதலாவதாக அந்தணர் முதலானவருக்குத் தானமாக அளிக்கும் முறையை குறிப்பிடுகிறது. தானமளித்த பிறகு நிவந்தம் செய்து எழுதி ஆவணம் செய்ய வேண்டும் என்று அடுத்த காரிகை தெரிவிக்கிறது. நிவந்தம் செய்வது என்பதற்கு “இந்தப் பொருளுக்கு இத்தனை பணம் என்று நிர்ணயிப்பது” என்ற பொருளை மிதாக்ஷரா என்னும் உரை தெரிவிக்கிறது. இப்படி ஆவணமாக்க வேண்டிய அவசியத்தைக் காரிகையின் இரண்டாம் பகுதி விளக்குகிறது. பின்னர் வரும் அறவழியான மன்னர்கள் தானம் கொடுத்த்தை அறிவதற்காக எழுத்தாவணம் செய்யப்பட வேண்டும் என அந்தப் பகுதி தெரிவிக்கிறது. பின்னர் வரும் மன்னன் அறத்தைப் போற்றுபவனாக இருந்தால் முன்னர் கொடுத்தத் தானத்தை மாற்றாமல் இருப்பான். அதற்கு ஆவணமாக எழுத்தாவணம் முக்கியமானதாகிறது என்பது பொருள். இரண்டாம் பகுதியின் இறுதியில் மன்னன் அளிக்க வேண்டும் என்று உள்ளது. இதன் உரையில் மன்னன் என்று குறிப்பிடப் பட்டிருப்பதால் மன்னனாலேயே நிவந்தமும் ஆணையும் செய்யப் படவேண்டும். தானத்தைப் பெறுபவன் ஆவணம் செய்வதற்கு அதிகாரமற்றவன் என்ற பொருள் கூறப் பட்டுள்ளது. அதற்கு அடுத்த காரிகை எழுத வேண்டிய முறையைத் தெரிவிக்கிறது. துணியில் அல்லது தாமிரப் பட்டயத்தில் தன் இலச்சினையைப் பொறித்து எழுதவேண்டும் எனக்குறிப்பிடுகிறது. இதன் பிறகு வரும் காரிகை அரசனுடைய மரபினரைப் பற்றியும் தன்னைப் பற்றியும் பற்றிக் குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கிறது. இதன் மிதாக்ஷரா உரை இங்கு பன்மையில் மரபினர் என்று தெரிவித்திருப்பதால் தன் மரபினரின் கல்வி, குணம் வீரம் போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும் எனத் தெரிவிக்கிறது. அதன் பிறகுள்ள காரிகையின் பகுதி தானம் பெறும் அளவையும் தானப்பகுதியின் எல்லைகளையும் எழுதச் சொல்லிக் குறிப்பிடுகிறது. இதன் உரையில் தான எல்லைகள் என்பதற்கு இன்ன நதியின் கிழக்கில் அல்லது இன்ன கிராமத்தின் மேற்கில் அல்லது இன்னார் நிலத்தின் இன்ன திசையில் ன்று குறிப்பிடச் சொல்கிறது. அதன் பின்னர் இன்ந பெயருடைய அரசனால் வெளியிடப் பட்டது என்னும் குறிப்போடும் சகம் முதலான ஆண்டுக் கணக்கோடும் வெளியிட வேண்டும் என்றும் காரிகை தெரிவிக்கிறது. இப்படி நிலையான சாஸனத்தை வெளியிட வேண்டும் எனக் காரிகையின் இறுதிப் பகுதி தெரிவிக்கிறது. இதன் உரை தானத்தைக் காட்டிலும் முன்பு கொடுத்தத் தானத்தப் பாதுகாப்பது சிறந்த்து போன்ற சொற்றொடர்களோடு கூடிய சாஸனம் என்று பொருள் கூறுகிறது. இதனை அரச எழுத்தர்களைக் கொண்டு எழுதுவிக்க வேண்டும் என்றும் அதன் உரை தெரிவிக்கிறது. அரச எழுத்தர்கள் வடமொழியில் கரணிகர், காயஸ்தர், ராஜலேக்கர், ராஜலிபிகரர் என்று ழைக்கப் பட்டனர். இவர்களால் எழுதப் பட்ட ஆவணங்களைப் பாதுகாக்கும் அதிகாரி அக்ஷபாடலிகர் எனப்பட்டார். அரச எழுத்தர்களின் தகுதியைக் கௌடல்யரின் அர்த்த சாஸ்திரம் பின்வருமாறு விளக்குகிறது. அமைச்சருக்குண்டான குணங்களோடு கூடியவர். எல்லா நெறிகளையும் அறிந்தவர், விரைவில் நூல்களை நினைவிறுத்துபவர், அழகிய எழுத்துடையவர் எழுதுவதிலும் படிப்பதிலும் தேர்ந்தவர் அரச எழுத்தராவார் என்று அர்த்த சாஸ்திரத்தின் இரண்டாம் அதிகரணத்தின் ஒன்பதாம் அத்தியாயம் குறிப்பிடுகிறது. ராஜசேகரன் என்னும் கவிஞர் தனது காவியமீமாம்ஸை என்னும் நூலில் அழகிய எழுத்து பல லிபிகளின் அறிவு என்னும் இரண்டையும் எழுத்தருக்குரிய தகுதிகளாகக் குறிப்பிடுகிறார். வியாஸஸ்ம்ருதியும் அரசசாஸனத்தைத் தாமிரப்பட்டயத்தில் எழுதும் முறையைக் குறிப்பிடுகிறார். வீரமித்ரோதயமும் மற்றைய சில ஸ்ம்ருதிகளிலும் இப்படி எழுதும் விதமும் அவற்றில் தவறோ அல்லது பிற்காலத்தில் மாற்றமோ ஏற்பட்டால் அதனைச் சரிசெய்யும் விதமும் குறிப்பிடப்படுகிறது. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |